நிர்மால்யம்

 


சமீபத்தில் எம்.டி.வாசுதேவன் நாயரின் நிர்மால்யம் திரைப்படம் பார்த்தேன். அவரின் முதல் படம். எத்தகைய தேர்ந்த இயக்குனராக அதில் மிளிர்ந்திருக்கிறார். அவருக்கு சினிமா குறித்த முழுமையான புரிதல் முதல் படத்தின் போதே இருந்திருக்கிறது. காட்சி கோணங்கள், சட்டகங்கள், ஒளியமைப்பு, படத்தொகுப்பு, இசை என்று அனைத்து துறைகளிலும் தேர்ந்த படம். கலைகள் , இசை , இலக்கியம் போன்றவற்றை போஷித்துவந்த நிலப்பிரபுத்துவ சமூகம் சோஷியலிச சமூகம் தோன்றும் போது தன் அக்கறைகளை மாற்றிக் கொள்கிறது. அப்போது அந்தக் கலைகளை மட்டுமே சார்ந்து இயங்கி வந்த மனிதர்கள் , அவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், விழுமியங்களின் வீழ்ச்சி ஆகியவற்றை நிர்மால்யம் முன்வைக்கிறது.

இந்தத் திரைப்படம் ஒரு காலகட்டத்தின் மாற்றத்தை பதிவு செய்திருக்கிறது. ஒரு குடும்பம் முழுதாக சிதைந்து போவதை பாவனைகள் அற்று காண்பிக்கிறது.ராமசந்திர பாபு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.அவரின் முதல் படம் என்று நினைக்கிறேன். அவரது சகோதரர் தான் ரவி.கே.சந்திரன் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.
தமிழில் ஜானி திரைப்படத்தின் ஒளிப்பதிவை பார்த்து வியந்திருக்கிறேன்.அதிலும் வித்யாசாகரும் , ஜானியும் சந்தித்து கொள்ளும் இரவு நேர முதல் காட்சி.அந்தக் காட்சியின் ஒளியமைப்பு வசீகரிக்கக்கூடியதாக இருந்தது.அதே போல அரவிந்தனின் சில திரைப்படங்களின் ஒளிப்பதிவு.மணி கெளல் இயக்கிய நஸர் திரைப்படத்தின் ஒளிப்பதிவும் நன்றாக இருக்கும்.இந்த வரிசையில் நிர்மால்யமும் இருக்கிறது.
ஓர் எழுத்தாளர் தன் முதல் திரைப்படத்தையே இத்தகைய ஆளுமைத்திறனுடன் இயக்கியிருக்கிறார் என்பது நம்மை ஆச்சரியம் கொள்ளச் செய்கிறது.



No comments: