2022

 

இந்த வருடம் பெரும்பாலும் பெங்களூரில் இருந்தேன்.ஒரு மாதம் மட்டும் சென்னையில் தங்கினேன்.இரண்டு வருடங்களுக்குப் பிறகு அலுவலகம் சென்றேன்.பிள்ளைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள்.அவர் பள்ளி முடிந்து வீடு திரும்பும் காட்சி எப்போதும் நெகிழ்ச்சி அடையச் செய்யக்கூடியதாகவே இருக்கிறது.வாழ்க்கை அதன் இயல்புக்கு இந்த வருடத்தில் திரும்பியிருக்கிறது.இது தொடர வேண்டும்.தந்தை அடிக்கடி நினைவுக்கு வருகிறார்.நண்பன் நேதாஜியின் மரணத்தை இன்று வரை என்னால் ஏற்க இயலவில்லை.

கடந்த ஆண்டு சிறுகதைகள் எழுதவில்லை.இந்த வருடம் மூன்று சிறுகதைகள் எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.இரண்டு கதைகள் எழுதியிருக்கிறேன்.முதல் கதை வனம் இணைய இதழில் வெளிவந்தது.இரண்டாவது கதை மணல் வீடு இதழில் வெளியாகும்.வரும் வருடத்தில் நிறைய கதைகளை எழுத வேண்டும்.எழுத முடியும் என்று நினைக்கிறேன்.எப்போதும் ஒரு கதையை எழுதிக்கொண்டிருக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.ஒரு கதையை முடித்தவுடன் அடுத்தக் கதையை தொடங்கி விட வேண்டும்.அதை முடிக்க வெகுகாலம் எடுத்துக்கொள்ளலாம் , ஆனால் தொடங்கி விட வேண்டும்.மனம் அதைச்சுற்றி சிந்தித்துக்கொண்டிருந்தால் போதுமானது.சிறுகதைகளில் சட்டகங்களை வைத்துக்கொள்ளாமல் எழுத வேண்டும்.நாவல் , குறுநாவல் போன்ற வடிவங்கள் பற்றி இப்போதைக்கு எந்தத் திட்டமும் இல்லை.இரண்டாவது சிறுகதைத் தொகுப்பை 2024 அல்லது 2025யில் கொண்டு வருவேன்.அதன் பின் குறுநாவல்கள் எழுத முடியும் என்று நினைக்கிறேன்.

பக்தீன் பற்றி எழுதிய கட்டுரைக்கு நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது.அது ஒரு நல்ல அனுபவம்.நான் இதுவரை எழுதிய வற்றில் பெரிய கட்டுரை அது தான்.இந்த வருடம் அதிகம் வாசிக்கவில்லை என்று படித்த நூல் பட்டியலை பார்க்கும் போது அறிய முடிகிறது.வாசித்தவரையில் கீதா ராமசாமியின் Land Guns Caste Woman நூலும் ஆனந்த் டெல்டும்டேவின் Republic of Caste நூலும் முக்கியமானவையாக இருந்தன.கீதா ராமாசியின் நூல் பற்றி எழுதிய கட்டுரை தளம் இதழில் வெளியாகி உள்ளது.வாசிப்பிலும் எழுத்திலும் ஒரு தொடர்ச்சியை வைத்துக்கொள்ள வேண்டும்.

Mahatma Gandhi in Tamil தொகை நூலில் என் மாற்று பொருளாதாரத்தின் குறியீடு கட்டுரை இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சி அளித்தது.ஆனால் நான் இன்று காந்தியிடமிருந்து சற்று விலகிவிட்டேன் என்றும் தோன்றுகிறது.இந்தியச் சமூகம் பற்றி அம்பேத்கரின் பார்வை எனக்கு மிக அணுக்கமானதாக இருக்கிறது.தஸ்தாயெவ்ஸ்கி பற்றிய புத்தகத்தை 2023 அல்லது 2024யில் கொண்டு வரலாம் என்று நினைக்கிறேன்.அவருடைய பெரும்பாலான முக்கிய நாவல்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதிவிட்டேன்.பக்தீனின் பார்வையையும் எழுதிவிட்டேன்.இன்னும் சில நாவல்களைப் பற்றியும் சரிதைப்பற்றியும் எழுதிச் சேர்க்க வேண்டும்.இந்த வருடம் அவரது நூல்கள் பற்றி மூன்று கட்டுரைகள் எழுதுவேன்.

வேலையில் நான் விரும்பும் திசை நோக்கி பயணிக்க வேண்டும்.அதற்கான சாத்தியங்களை நான் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.இந்த வருடம் அது நிகழ வேண்டும்.பெங்களூரில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.இந்த வருடத்தில் அது சாத்தியமாகலாம்.அப்படி நிகழ்ந்தால் மகிழ்ச்சி.உடலைப் பேண வேண்டும் என்ற அக்கறை அதிகரித்திருக்கிறது.அதற்கான வழிகளையும் கண்டடைந்திருக்கிறேன்.இந்த வருடத்தில் அவற்றை நிகழ்த்துவேன்.என் ஆளுமைச் சிக்கல்களிலிருந்து வெகுவாக விலகி வந்து விட்டேன் என்பதையும் இன்னும் விலக வேண்டியவற்றைப் பற்றிய தெளிவையும் கொண்டிருக்கிறேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பெங்களூரில் தமிழ் எழுத்தாளர்கள் சந்தித்துக் கொள்ளக்கூடிய ஒரு அமைப்பு இருந்தால் நன்றாக இருக்கும்.அதைக் குறித்து ஏதேனும் செய்யமுடியுமா என்று இந்த வருடத்தில் பார்க்க வேண்டும்.திரைப்படங்கள் பார்க்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது.திரைப்படங்களை பார்க்க பிடிக்கவில்லை.தொடர்ந்து என்னையே கட்டாயப்படுத்திக்கொண்டு பார்ப்பதா அல்லது விட்டுவிடுவதா என்று தெரியவில்லை.

தஸ்தாயெவ்ஸ்கி  வாழ்க்கை ஒரு கொடை,வாழ்க்கை என்பது மகிழ்ச்சி என்று சொல்கிறார்.நமக்கு செய்ய வேண்டிய காரியங்கள் இருக்கும்.அது எப்போதும் இருக்கும்.போதாமைகள் இருக்கும்.ஆனால் அடைய வேண்டிய இலக்குகளை நோக்கி பதற்றமின்றி பொறுமையுடன் மகிழ்ச்சியுடன் பயணிக்க வேண்டும்.தர்மாணந்த் கோஸாம்பி மன நிறைவுடன் அறிவுக்கான பயணத்தை மேற்கொள்ளுங்கள் என்கிறார்.நாம் மேற்கொள்வோம்.அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.




ஆப்பிளுக்கு முன்

 

சி.சரவணகார்த்திகேயனின் முதல் நாவல் ஆப்பிளுக்கு முன்.2017யில் எழுதியிருக்கிறார்.அதற்கு முன் 2016யில் பிரசுரமான இறுதி இரவு என்ற சிறுகதைத் தொகுப்பு அவரது முதல் புனைவு நூல்.ஆப்பிளுக்கு முன் நாவல் மிகப்பெரிய கேன்வாஸை எடுத்துக்கொள்கிறது.கஸ்தூரிபாவின் மரணம், நவகாளி பயணம், காந்தியின் பரிசோதனைகள்,வங்காளப் பயணம், தேசப் பிரிவினை,மதக் கலவரங்கள், பிர்லா இல்லத்தில் காந்தியின் தங்கல், அங்கே நிகழ்ந்த மரணம்,காந்தியின் மரணத்திற்கு பிறகு மநு நிராதரவாக நிற்கும் நிலை என்று வரலாற்றின் முக்கியத் தருணங்களை பின்புலமாக கொண்டுள்ளது இந்த நாவல்.

இத்தகைய பின்புலமே நாவலுக்கான களத்தை தந்து விடுகிறது.பெரும்பாலும் நல்ல களம் அமைந்து விட்டால் நல்ல கதைகளை எழுதிவிடலாம்.களங்களும் கதாபாத்திரங்களின் குணாதிசயங்களும் அவர்கள் செய்யும் பணிகளுமே ஒரு கதையின் முக்கியத் தளமாக இருக்கிறது.கதை அல்ல!இவற்றை ஒரு ஆசிரியர் சரியாக அமைத்துவிட்டால் அதற்கு மேல் அவரது மொழி வளமும் கற்பனையும் அவரது நோக்கும் கதையை தீர்மானிக்கின்றன.

ஆப்பிளுக்கு முன் நாவல் மிகப்பெரிய களத்தை கொண்டிருந்தாலும் விரித்து எழுதுவதை விட சுருக்கி எழுதும் தன்மை கொண்டதாக அமைந்திருக்கிறது.பொதுவாக இத்தகைய பண்புகளை சிறுகதைகளே கொண்டிருக்கும்.அவற்றில் தான் நாம் கோடிட்டு காட்டி விட்டு அடுத்த பகுதிக்கு சென்று விடுவோம்.இந்த நாவலில் அத்தகைய முறைதான் பின்பற்றப்பட்டுள்ளது.

நாவல் ஆகா கான் அரண்மனையில் காந்தி சிறைப்படுத்தப்பட்டிருந்த காலத்திலிருந்து அவரது மரணம் வரையான காலம் வரை  பயணிக்கிறது.காந்திக்கும் மநுக்கும் இடையிலான பரிசோதனைகளும் அதை முன்னிட்டு அவர்கள் கொள்ளும் உரையாடல்களும் பிறர் அவர்களுடன் மேற்கொள்ளும் உரையாடல்களுமே நாவலின் முன்தளத்தில் அமைந்திருக்கின்றன.மற்றவை அனைத்தும் பின்னணியில் நிகழ்கின்றன.பின்னணியில் நிகழ்பவை மீது எந்த இடத்திலும் கவனம் குவியவில்லை.இந்தப் பரிசோதனைகள் குறித்து நாவல் எந்த விதமான பார்வையையும் முன்வைக்க விரும்பவில்லை.அதை சரி என்ற திசைக்கும் நாவல் எடுத்துச்செல்லவில்லை.தவறு என்றும் சொல்லவில்லை.ஒரு வகையில் அதை பதிவு மட்டுமே செய்கிறது.அந்தப் பரிசோதனைகள் மநுவையும் காந்தியையும் பாதிக்கிறது.இவற்றால் மநு உளநிலை வெகுவாக பாதிப்புக்குள்ளாகிறது.அவள் காந்தி சொல்வதை முழுமையாக ஏற்கிறாள்.கிட்டத்தட்ட நிஷ்களங்கமான ஒரு குழந்தையின் இடத்திற்கு அவள் செல்கிறாள்.ஆனால் அதே நேரத்தில் அவளை சுற்றி உள்ளோரின் கேள்விகளாலும் அழுத்தங்களாலும் அவள் குழப்பம் கொள்கிறாள்.தக்கர் பாபா தன் உரையாடல் வழி மநுவிடம் வெற்றி பெறுகிறார்.ஆனால் அது தற்காலிகமான வெற்றியாக அமைகிறது.

காந்தி எப்போதும் பிறரின் கோணத்தை பொருட்படுத்தாமல் தான் வாழ்ந்திருக்கிறார்.அவர் மநுவிடம் தன் பரிசோதனைகள் பாதியிலேயே நின்றுவிட்டதால்தான் நவகாளியில் தன்னால் அமைதியை கொண்டு வர இயலவில்லை என்று சொல்கிறார்.அவர் எப்போதும் தனிமனிதனின் தூய்மை புறத்தை பாதிக்கிறது என்ற கொள்கையை கொண்டிருந்தார்.சிறு விஷயங்களில் மட்டுமல்ல மிகப்பெரிய கொள்கை முடிவுகளில் கூட அதையே பின்பற்றினார்.சாதிய வேறுபாடுகள் , தீண்டாமை , நிலச் சீர்திருத்தம் ஆகியவற்றில் அவர் உயர் குடிகளின் தூய்மையைத்தான் வலியுறுத்தினார்.ஒடுக்கப்பட்டவர்களுக்கு பெற்றுக்கொள்வதை தவிர வேறு பணிகள் எதுவும் காந்தியின் செயல்திட்டத்தில் இல்லை.காந்தியை பின்பற்றி வினோபா பாவே பல நிலச்சுவான்தார்களிடமிருந்து நிலத்தை தானமாக பெற்றார்.ஆனால் பூதான்  இயக்கம் தோல்வி என்றே நாம் அறிகிறோம்.

காந்தி தன்னை ஒரு அன்னையாக மாற்றிக்கொள்ள விரும்பினார் என்ற பார்வை நாவலில் உரையாடல்களில் மநுவின் எண்ணங்களில் தொடர்ந்து வருகிறது.காந்திக்கும் மநுவுக்குமான உறவு பிறரால் புரிந்து கொள்ள இயலாத ஆன்மிகமான தளத்தில் அமைந்திருப்பதான கோணத்தை நாவல் முன்வைக்க விரும்பி உள்ள அதே நேரத்தில் அப்படியான ஒரு கோணத்தை முழுமையாக பதிவு செய்யவும் விரும்பவில்லை.காந்தியும் மநுவும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறார்கள்.அவர்களுக்குள் ஆழமான பற்று இருக்கிறது.இது நாவலில் நன்கு வெளிப்பட்டுள்ளது.அதே நேரத்தில் அந்த உறவில் உள்ள நோய்மையும் மநுவின் சோர்வின் வழி புலனாகிறது.

எப்போதும் உறவுகளில் நாம் மிகப்பெரிய உரையாடல்களை விளக்கங்களை நமக்கோ பிறருக்கோ அளிக்காமல் இருக்க முடிந்தால் அந்த உறவு இயல்பானதாக இருப்பதாக உணரலாம்.காந்திக்கும் மநுவுக்குமான உறவு இயல்பானதாக இல்லை என்பதை அவர்களுக்குள்ளான உரையாடலும் பிறருடன் அவர்கள் கொள்ளும் வாதங்களும் உணர்த்துகின்றன.தக்கர் பாபாவுக்கும் காந்திக்கும், தக்கர் பாபாவுக்கு மநுவுக்குமான விவாதங்கள் நாவலின் மையமாக அமைந்திருக்கிறது.இந்த வாதங்களை கூர்மையானதாக முன்வைக்க நாவலாசிரியர் விரும்பியிருக்கிறார்.ஆனால் அந்த வாதங்கள் தோய்ந்து போன தோள்கள் போல அமைந்திருக்கின்றன.அந்த வாதங்கள் மிக எளிமையாக நிகழ்கின்றன.அவை எந்த உக்கிரமும் கோபமும் நாடகத்தனமும் பாவனைகளும் இல்லாமல் இருக்கின்றன. ஒப்புநோக்க சுஷீலாவுக்கும் மநுவுக்குமான பேச்சு நன்றாக அமைந்திருந்தன.

இந்த நாவலின் முடிவில் மநு பாவு என் அன்னை என்று எண்ணுகிறாள்.நாவல் இந்தப் பார்வையைத்தான் முன்வைக்க விரும்புகிறதா என்பது தெரியவில்லை.ஆனால் நாவலின் பயணம் இதற்கு மாறாக மநுவின் கையறு நிலையைத்தான் பதிவு செய்கிறது.இது காந்தியின் பரிசோதனைகள் என்பது பற்றிய நாவல் என்பதை விட மநுவின் கைவிடப்பட்ட நிலை பற்றிய நாவல் என்றே கொள்ள முடியும்.மிகப்பெரிய ஆளுமையின் முன் நாம் நம்மை முழுமையாக கரைத்துக்கொள்கிறோம்.அந்த ஆகிருதியின் நிழல் நமது நிழலை இல்லாமல் ஆக்குகிறது.நிழல் என்பது நமது அகங்காரம்.அந்த அகங்காரம் இல்லாத போது அந்த பேராளுமையின் பகுதியாக நாம் மாறுகிறோம்.பேராளுமையின் பகுதியாக இருக்கும் போது மகிழ்ச்சி இருக்கலாம்.குழப்பம் இருக்கலாம்.ஆனால் அந்தக் காலத்திற்கு பின்னர் அவை மிகுந்த மனச்சோர்வை மட்டுமே அளிக்கும்.நாம் பல ஆன்மிக மடங்களில் நிகழ்பவற்றை பற்றி படிக்கிறோம்.அவர்கள் எப்படி முழுமையாக மூளைச் சலவைக்கு உள்ளாகுகிறார்கள் என்பதை படித்து ஆச்சரியம் கொள்கிறோம்.அவை பெரும்பாலும் நமது விருப்பத்தாலேயே நிகழ்கிறது.நாம் நம்மை கரைத்துக்கொள்ள விரும்புகையிலேயே அத்தகைய சாத்தியங்கள் அரங்கேறுகின்றன.ஆனால் அவை குழப்பங்கள் ஊடேத்தான் நடக்கின்றன.

மநுவுக்கும் காந்திக்கும்  , காந்திக்கும் பிறருக்குமான பரிசோதனைகள் ஒரு வகை பாவனைகள்.அவை பாவனைகளாக இருப்பதாலேயே மனச்சோர்வு ஏற்படுகிறது.அவை இந்த நாவலில் பதிவாகி இருக்கிறது.மநுவின் வலியை பதிவு செய்த நாவலாக இதை பார்க்கத் தோன்றுகிறது.ஆப்பிளுக்கு முன் என்பது மனிதனுக்கு ஒரு போதும் சாத்தியம் ஆகாத இறந்தகாலம்.இந்த நாவலின் வெற்றி அதன் களம்.அதே நேரத்தில் நாவல் ஏதேனும் ஒரு கோணத்தை விரித்து எழுதியிருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

சி.சரவணகார்த்திகேயன் - ஆப்பிளுக்கு முன் - உயிர்மை வெளியீடு.

புகைப்படம் - https://www.bbc.com/news/world-asia-india-49848645

காங்கிரஸின் எதிர்காலம்

 

ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. உனா நகரில் அவர் மேற்கொண்ட போராட்டமும் அதன் முறைமையும் தலித் போரட்டங்களில் மிகப் புதிதாகவும் படைப்பூக்கத்துடனும் அமைந்திருந்தது என்று ஆனந்த் டெல்டும்டே சொல்கிறார்.அவர் சென்ற முறை சுயேட்சையாக வெற்றி பெற்றார்.இந்த முறை காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.அவரும் கன்னையா குமாரும் சமீபத்தில் காங்கிரஸில் இணைந்தார்கள்.கன்னையா குமார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தது எனக்கு வருத்தத்தை அளித்தது.ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களை எந்த வகையிலும் புதுப்பித்துக் கொள்ள தயாராக இல்லாத சூழலில் இளைஞர்களுக்கு வேறு வழியும் இல்லை.
 
இன்று ஆம் ஆத்மி கட்சி வளர்ந்து வருவது மத்திய தர வர்க்கத்தினரின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது.வளர்ச்சி, வேலைவாய்ப்பு , ஊழல் அற்ற ஆட்சி என்பதற்கு அப்பால் ஆம் ஆத்மி எதையும் சொல்லவில்லை.மத்திய தர வர்க்கத்தினரும் வேறு எதையும் கோரவில்லை.அவர்களுக்கு என்று சித்தாந்தம் இல்லை.காங்கிரஸ் மற்றொரு ஆம் ஆத்மி கட்சியாக தன்னை காண்பித்துக் கொள்வதால் எந்தப் பயனையும் பெறப் போவதில்லை.ஆம் ஆத்மி எந்தளவு விரைவாக வளர்கிறதோ அதே அளவு விரைவாக சரியவும் கூடும்.மத்திய தர வர்க்கத்தினருக்கு பாரதிய ஜனதா கட்சிக்கும் ஆம் ஆத்மிக்கும் பெரிய வித்யாசம் தெரியவில்லை என்பது தான் உண்மை.லிபரல்களுக்கும் வலதுசாரிகளுக்குமான தூரம் குறைவு தான்.
 
காங்கிரஸ் செய்ய வேண்டியது இஸ்லாமிய நிலையையும் தலித் நிலையையும் ஒன்றிணைத்து அதற்கான கதையாடலை உருவாக்குவது தான்.அப்படி செய்யும் போது மட்டுமே காங்கிரஸ் தனக்கான தனித்த அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும்.அத்தகைய கதையாடல் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.எங்கெல்லாம் தலித் நிலை குறித்து பேசுகிறோமோ அங்கு இஸ்லாமியர்களின் நிலை குறித்தும் பேச வேண்டும்.இரண்டையும் ஒன்றிணைக்க வேண்டும்.இன்று சிறைகளில் இருப்பவர்களில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமானோர் இஸ்லாமியர்களாவகவும் பழங்குடிகளாகவும் தலித்துகளாகவும் இருக்கிறார்கள்.தலித்துகளும் பெரும்பான்மையான இஸ்லாமியர்களும் ஒரே போன்ற வசிப்பிடங்களில் வாழ்கிறார்கள்.இவைகள் குறித்து காங்கிரஸ் பேச வேண்டும்.
 
காங்கிரஸ் போன்ற கட்சிகள் வெறும் வேலைவாய்ப்பு , வளர்ச்சி என்பதை கொண்டு மட்டும் வாக்குகளை பெற முடியாது.அத்தகைய வளர்ச்சியை பாரதிய ஜனதா கட்சியும் ஆம் ஆத்மியும் மேலும் திறன்பட செய்யும் என்று இளைஞர்கள் உட்பட பலரும் நினைக்கிறார்கள்.காங்கிரஸ் தாங்கள் மென்மையான வலதுசாரிகள் அல்ல தாங்கள் பாரதிய ஜனதா கட்சி உருவாக்கி உள்ள மற்றமையை நீர்த்துப் போகச் செய்யக்கூடியவர்கள் என்ற நிலைக்கு தங்களை நகர்த்த வேண்டும்.வளர்ச்சி, வேலைவாய்ப்பு , மதச்சார்பின்மை, விளிம்பு நிலையில் உள்ள இஸ்லாமியர்கள், தலித்துகள் , பழங்குடிகளின் நலன்கள் ,இந்திய அரசியலமைப்பை காப்பது ஆகியவை தான் தங்களின் முக்கியமான கொள்கைகள் என்று சொல்ல வேண்டும்.
 
அப்படி செய்தாலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது.ஆனால் காங்கிரஸ் அதன் வழி முக்கிய தரப்பாக இருக்கும்.தன் அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ளும்.இல்லை என்றால் காங்கிரஸின் அவசியம் என்ன.ஒன்றுமில்லை.அந்த இடத்தை ஆம் ஆத்மி நிரப்பிவிடும்.வெற்றிடத்தை காற்று நிரப்புவது போல.ஆம் ஆத்மியின் வளர்ச்சி பாரதிய ஜனதா கட்சிக்கு அதன் சித்தாந்தத்திற்கு மாற்றே இல்லை என்ற நிலைக்கு இந்தியாவை கொண்டு செல்லும்.இரண்டில் எதை தேர்தெடுத்தாலும் ஒன்று தான் என்ற நிலைக்கு வாக்காளர்களும் செல்வார்கள்.இது ஒரு வகையில் இன்றைய நம் வாழ்க்கையின் உள்ளீடற்ற தன்மையின் வெளிப்பாடு தான்.மற்றமை மீதான அக்கறை அற்ற தன்மையின் புறத்தோற்றம் தான் இந்தக் கட்சிகளின் வெற்றிகள்.ஆனால் அது தனிமனிதர்களின் தோல்வி அல்ல.நகரமயமாக்கலும் , தனியார்மயமாக்கலும் உருவாக்கும் வெற்றிடத்தின் புறத்தோற்றம் இவை.ஆம் ஆத்மியும் பாரதிய ஜனதா கட்சியும் அதனால் பயன் அடையும் இரு முகங்கள்.காங்கிரஸ் தன்னை புதுப்பித்துக் கொண்டு இவர்களுக்கு மாற்றான சக்தியாக தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.அதற்கான கதையாடல்களை கண்டடைய வேண்டும்.இடதுசாரிகளையும் மாநிலக் கட்சிகளையும் ஒன்றிணைத்து தேர்தல்களை சந்திக்க வேண்டும்.அவை நல்ல விளைவுகளை உருவாக்கும்.