புக் பிரம்மா குறிப்புகள் - 2

புக் பிரம்மா நிகழ்வில் டீ குடிக்கச் சென்ற போது இருவரோடு உரையாட நேர்ந்தது.அதில் ஒருவர் நான் ஆரம்ப நிலை வாசகன் , ஜெயமோகனை சந்திக்கத் தான் வந்தேன் என்றார். அந்தத் தான், எனக்கு ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருந்தது.எத்தனையோ அரங்குகள் , நிகழ்த்துக்கலைகள் , எழுத்தாளர்கள் இருக்க ஒருவரை மட்டும் சந்திப்பதால் என்ன பயன் என்று புரியவில்லை.பலருக்கு தமிழைத் தவிர வேறு ஏதேனும் மொழியும் தெரியும்.வேறு மொழி அரங்குகளுக்கு செல்லலாம்.எத்தனையோ தேர்வுகள்.

மத்தேயு பத்தாவது அதிகாரத்தில் - 37வது வசனம் -

தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

தாய் தந்தையரை அதிகம் நேசிப்பவன் ,அவர்களுக்கு பாத்திரமானவன் தனக்கு பாத்திரன் அல்ல என்கிறார் இயேசு கிறிஸ்து. தன் தாயை தந்தையை நேசிப்பவன் மரபை நேசிப்பவன்.மரபை நேசிப்பவன் எப்படி தன்னை ஏற்க முடியும் என்கிறார் கிறிஸ்து.Kill your fathers என்ற பதம் உண்டு.

இலக்கியம் வாசிக்கும் போது ஜெயமோகன் வாசிக்கப்படலாம்.ஜெயமோகனை வாசிப்பது இலக்கியத்தை வாசிப்பது ஆகாது. அவர் ஒரு தரப்பு.முக்கியத் தரப்பு.ஆனால் அது போல பல தரப்புகள் உண்டு.ஒரு போதும் பூமணியின் பிறகு போன்ற ஒன்றை ஜெயமோகன் எழுத முடியாது.அது வேறு தளம் , வேறு பார்வை.பூமணியை ஜெயமோகன் வழி அறிவதும் புரிந்துகொள்வதும் கூட பிழைதான்.

நகுலன் உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் நகுலனை படித்து பின்னர் அதைத் தொகுத்து ஏன் பிடிக்கவில்லை என்று உணர்ந்து கொள்ள வேண்டும். ஜெயமோனுக்கு பிடிக்காதவர்கள் தனக்கு பிடிக்காதவர்கள் என்று கொள்ளக் கூடாது. நீங்கள் எதற்காக இலக்கியம் படிக்க வருகிறீர்கள்.ஜெயமோகனை அறிந்து கொள்ளவா?அவரை அறிந்து கொள்வது எப்படி இலக்கியத்தை அறிந்து கொள்வதாகும்.

எனக்கு தஸ்தாயெவ்ஸ்கியை பிடிக்கும்.ஆனால் தஸ்தாயெவ்ஸ்கி ரஷ்ய இலக்கியம் அல்ல என்பதும் தெரியும்.தஸ்தாயெவ்ஸ்கி ஒருவரை வைத்து ரஷ்ய இலக்கியத்தை நாம் பேச முடியாது. ஜெயமோகன் ஒருவரை வைத்து மட்டும் தமிழ் இலக்கியம் பேச முடியாது.


No comments: