மகிழ்ச்சி சூழட்டும்




வானத்தில் செந்நிறத் தீற்றல்.
தூய ஒளி வெண்ணிற அருவி போல
எங்கும் படர்ந்தது.
அடர்வனத்தை ஊடுருவிய ஒளிக்கற்றைகள்
மண்ணுக்கும் வெளிக்குமான
பாலத்தை உருவாக்கியது.
புங்கை மரத்தின் இளஞ் சிவப்பு
பூக்கள் எங்கும் சொரிந்தன.
வெயிலின் சத்தம் வண்டின் ரீங்காரம் போல
ஒலித்துக்கொண்டிருந்தது.
நிஷ்களங்கம் நிரம்பிய
அந்தக் குழந்தை
தாயின் கதகதப்பில்
அரவணைப்பில்
தூங்கிக்கொண்டிருந்தது.
அங்கே தாய் சேய் இருவரையும்
மஞ்சள் நிற
மகிழ்ச்சி
சூழ்ந்திருந்தது.


BOX கதைப் புத்தகம்




யுத்தத்திற்குப் பிறகான காலத்தில் வன்னிப் பகுதியின் பெரிய பள்ளன் குளம் கிராமத்தின் கதை இந்த BOX கதைப்புத்தகம்.ஷோபா சக்தியின் 'ம்'  நாவலை வாசித்திருக்கிறேன்.யுத்தம் ஏற்படுத்தும் பிறழ்வுகளை பற்றியது 'ம்' நாவல்.இந்த கதைப் புத்தகத்தின் பிரதியை நீங்கள் கையில் வைத்துக்கொண்டு வாசிக்கும் போது உங்கள் மனம் அந்தப் பிரதியை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிட வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பும்.'ம்' நாவலை விட தொழில்நுட்பத்தில் இந்த நாவலில் நிறையவே முதிர்ந்திருக்கிறார் ஷோபா சக்தி.அவர் இந்த நாவலை வடிவமைத்திருக்கும் விதம் அபாரமானது.மிக எளிமையான மொழியை அவர் தேர்ந்திருக்கிறார்.ஆனால் இந்த எளிமையை எதிர்கொள்ள உங்களுக்குத்தான் தெம்பு இருக்க வேண்டும்.

தொடர்ந்து நிர்வாணம் ஒரு தண்டனையாக, ஒரு கருணையாக ,  ஒரு எதிர்ப்பாக , இயல்பானதாக என்று பல்வேறு தளங்களில் இந்த நாவலில் வந்துகொண்டே இருக்கிறது.கார்த்திகை என்கிற சந்த என்கிற சந்த ஸ்வஸ்திக தேரர் என்கிற துறவிச் சிறுவன் இந்த கதையின் மைய கதாபாத்திரம்.அவன் கதை முழுதும் காக்கி நிற அரைக்காற்சட்டையும் , நீலநிற  அரைக்கை மேற்சட்டையும் அணிந்திருக்கிறான்.அவனது கால்களில் செருப்புகளோ சப்பாத்துகபளோ இல்லை.அந்தச் சிறுவன் நன்றாக கொழுத்திருக்கிறான்.அவன் தாடைப் பகுதியிலும் வயிற்றுப் பகுதியிலும் செழிப்பான தசை மடிப்புகள் உருள்கிறது.பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை ஒத்திருக்கும் அவனது முக உடல் அடையாளங்கள் உங்களை துன்புறுத்தக்கூடியவை.

முள்ளிவாய்க்கால் போரின் பின்பு செட்டிகுளம் முகாமிலிருந்து திரும்ப வந்து ஒரு வருடம் கூட ஆகாத அந்த கிராம மக்களை ராணுவம் அந்த ஊரை விட்டு போகச் சொல்கிறது.அவர்களை செட்டிகுளம் முகாமுக்கு அழைத்துச் செல்வதற்கு முன் அங்கு ராணுவம் செய்த கொடூரங்களை அங்கிருக்கும் மக்கள் சிறுவன் கார்த்திகைக்கு நடித்துக் காட்டும் இடங்கள் நம்மை பதறச்செய்பவை.மகிழ்ச்சியான பாதுகாப்பான ஒரு வாழ்க்கை இருக்கக்கூடும் என்பது கூட அந்த மக்களுக்கு மறந்துபோய்விடுகிறது.பெரிய பள்ளன் குளம் என்ற அந்த ஊரின் பெயரை கார்த்திகைக் குளம் என்று மாற்ற அந்த கிராமத்து மக்கள் விரும்புகிறார்கள்.கார்த்திகை என்கிற இளைஞன்தான் அந்த கிராமத்திலிருந்து ராணுவத்தால்  கொலை செய்யப்பட்ட முதல் மனிதன்.அந்தப் பெயரை தான் அந்த கிராமத்து மக்கள் அந்த ஊருக்கு வரும் சிறுவனுக்கு வைக்கிறார்கள்.

உண்மை கதைகளை தொகுத்ததற்கு அப்பால் தன் பங்கு ஒன்றும் இல்லை என்ற எண்ணத்தை உருவாக்கும் வகையில் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது.பாரிஸ் நகரத்தை சேர்ந்தவரான மெதடிஸ்த திருச்சபையின் விசுவாசம் மிக்க ஊழியராக டைடஸ் லெமுவேல் 
பெரிய பள்ளன் குளத்தில் 1928ல் பாட சாலைகளை உருவாக்குகிறார்.அவர் அதற்கு முன் 'டுகோபோர்' நிர்வாண சங்கத்தின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர்.பரிதி,காற்று,நீர் மற்றும் நிர்வாணம் என்பது அச்சங்கத்தினரின் அடிப்படை  கொள்கை.அவர் உருவாக்கும் பாடசாலையில் பெரிய பள்ளன் குளத்தின் ஆறன் படிக்கச் செல்லும் போது வெள்ளான் முறிப்பிலிருந்து வந்த ஆட்கள் ஆறனையும் அவன் குடும்பத்தையும் நிர்வாணப்படுத்தி அடிக்கிறார்கள்.அங்கே அவரின் தொடர் முயற்சியால் அந்த ஊர் பிள்ளைகள் படிக்கத் துவங்குகிறார்கள்.டைடஸ் லெமுவேலின் மனைவியும் குழந்தைகளும் சில வருடங்களில் இறந்து போகிறார்கள்.வைத்திய சாஸ்திரம் கற்கும் லெமுவேல் தீண்டப்படாமலிருந்த அந்தக் கிராமத்து மக்களின் மலத்தையும் மூத்திரத்தையும் எச்சிலையும் சீழையும் காயங்களையும் தீண்டி அந்த மக்களை சுகப்படுத்துகிறார்.அவர் பின்னர் மழைத் தூறல் நாள் ஒன்றில் நார்க் கட்டிலில் முழு நிர்வாணமாக இறக்கிறார்.ஆறன்  டைடஸ் லெமுவேல் என்கிற ஆதாம் சுவாமியின் உடல் மீது வெண்ணிறத் துணியை போர்த்துகிறான்.

அதே பெரிய பள்ளன் குளத்தில் 1985களில் அமையாள் கிழவியின் மகனான தமிழீழ விடுதலை இயக்கத்தில் இணைந்து செயல்பட்ட கார்த்திகையை நிர்வாணப்படுத்தி கொல்கிறார்கள் ராணுவத்தினர்.அவனது இயக்கப்பெயர் ஆதாம்.கார்த்திகை என்ற அமையாள் கிழவியின் மகன் கொல்லப்படும் போது ராணுவத்துக்காரன் கோமத என்கிறான்.அமையாள் கிழவியின் கிளி அவரை சீண்டும் வகையில் கோமத என்று சொல்கிற போது அமையாள் கிழவி அதைக் கொல்கிறார். முள்ளிவாய்க்காலின் போர் முடிந்து பெரிய பள்ளன் குளம் ராணுவத்தால் முழுமையாக கையகப்படுத்தப்பட்ட நாளில் அமையாள் கிழவி அந்தக் குளத்தில் நிர்வாணமாக இறந்து கிடக்கிறார்.

கார்த்திகை என்கிற சந்த என்கிற சந்த ஸ்வஸ்திக தேரர் என்கிற துறவிச் சிறுவன் அமையாள் கிழவியின் நிர்வாணத்தை தான் அணிந்திருந்த காவிநிற சீவிர ஆடையை போர்த்தி அவன் நிர்வாணம் கொள்கிறான்.மதவாச்சியின் பாரம்பரியமிக்க குடும்பமான ஸ்வஸ்திக பண்டார தென்னக்கோன் குடும்பத்தைச் சேர்ந்த அந்தச் சிறுவன் , மதவாச்சியின் பெரிய விகாரை இளந்துறுவியின் கதை ஆழ்படிமமாக நமக்குள் பதிந்திருக்கும் கெளதம புத்தரை கிளர்தெழுந்து பதறச்செய்கிறது.

மடாலயத்திலிருந்து காணாமல் போகும் அந்த இளந்துறவி இறுதியில் அவனின் தாயை பார்த்து அம்மா! ஒரு நல்ல துறவி எப்போதும் துறவியாக இருப்பதில்லை என்கிறான்.இந்த கதையில் நிர்வாணம் போல பெட்டி (BOX) என்கிற மற்றொரு படிமமும் வருகிறது.அமையாள் ஊரை ஆங்கிலேயேர்கள் பெட்டியாக வளைத்து முழுமையாக காலி செய்கிறார்கள்.இறுதிப்போரில் ஆனந்தபுரத்தில் பெட்டி அமைத்து போராட்டத்தை முழுமையாக சிதைக்கிறது ராணுவம்.எழுத்தாளர் ஒஸ்கார் லிங்கோ இலங்கையில் இருக்கும் பாலியில் விடுதிகளைப் பற்றி அறிய அங்கு வருகிறார்.அப்போது ஒரு விடுதியில் இருக்கும் பெண்கள் அவரை சுற்றி பெட்டி வடிவில் நிற்கிறார்கள்.
பாலியல் தொழிலை சட்டபூர்வமானதாக மாற்ற வேண்டும் என்று கோருபவர்கள் இந்த சில பக்கங்களை படிக்கலாம்.

தமிழ் தேசியம், இந்து தேசியம் என்று நாம் பல தேசியங்களை தீவிரமாக பேசிக் கொண்டிருக்கும் காலத்தில் வாழ்கிறோம்.தமிழை எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்தவர்கள் எல்லோரும் இந்த புத்தகத்தை ஒரு முறை படிக்க வேண்டும்.பின்னர் நிலைக்கண்ணாடியில் நம்மை நிர்வாணப்படுத்திக்  கொண்டு நம் அகங்காரத்தின் மீதும் அடையாளங்களின் மீதும் காறி உமிழலாம்.பின்னர் நமது அடையாளத்தையும் அகங்காரத்தையும் உடுத்திக்கொண்டு தலைவாரி பெளடர் அடித்து பல்லிளித்துக்கொள்ளலாம்.

BOX கதைப் புத்தகம் - ஷோபா சக்தி - கருப்புப் பிரதிகள்.

ஆயிரம் சந்தோஷ இலைகள்




மிதக்கும் இருக்கைகளின் நகரம், காகங்கள் வந்த வெயில் , சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை , அச்சம் என்றும் மரணம் என்று இரண்டு நாய்க்குட்டிகள்,ராணி என்று தன்னையறியாத ராணி ஆகிய ஷங்கர்ராமசுப்ரமணியனின் கவிதை தொகுப்புகளிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு ஆயிரம் சந்தோஷ இலைகள்.

அம்மா நீங்கிய அறையில் குழந்தை தன் முகத்தை முறையாக ஸ்பரிசிக்கிறது கண்ணாடியில்.எச்சில் வழியக் கடவுளைத் தீண்டுகிறது முதலும் முடிவுமாய்.அதன் பிறகு அந்தக் குழந்தை வளர்ந்து பெரு நகரங்களுக்கு வேலை தேடி வந்து விடுகிறது.அந்தக் குழந்தை பிறந்து வளர்ந்த ஊர் மரணித்துவிட்டது.அதிசயமாய்  வளர்ந்து முலைபருத்த அவனது இளவயது சிநேகதிகள் அடையாளம் தெரியாமல் கடந்து செல்கின்றனர்.பயணத்தில் எதிர் இருக்கையில் வந்து அமர்கிறாள் அவள்.அவளின் பக்க வகிடெடுத்த கேசத்தில் நரைக்கத் தொடங்கியிருக்கும் புள்ளியில் அழுந்திச் சிதறியிருக்கிறது குங்குமம்.அப்போது அவர்கள் இடையில் பல ரயில்கள் வந்து போகிறது.ஆத்மாநாம் அமிழ்ந்த கிணறு இப்போது அவனுக்கு குளியலறையாகியிருக்கிறது.நெடுநாட்களாக வரவேற்பரையிலேயே தங்கிவிட்டதாய் உணர்கிறான்.வேலைக்கான நேர்காணல்கள் அலுத்துவிட்டது.அப்போது அவனின் கவனமில்லாமலேயே வளர்ந்துவிட்ட பெண் குழந்தை குறித்து வியப்பு ஏற்படுகிறது.அவன் குழந்தையாக இருந்த போது அவன் சிரம் தொட்ட தாதி.இடுப்புகள் மாறி அமர்ந்து முத்தங்கள் அலுப்பேற்படுத்த தந்தையின் தமக்கையரோடும் மூதாதையரோடும் அவன் இருந்த காலம் ஒன்று இருந்தது.ஆனால் அந்தப் பிராயம் விரைவில் கடந்துவிடுகிறது.இன்று பெருநகரத்தில் தனியறையில் அவனுடன் பாயில் உறையும் எறும்புகள் அவன் அரசன் என்பதை அறியும்.

பருவத்தில் மறுகரையில் நின்று அழைத்துச் செல்வான் கிருஷ்ணன் என காத்திருந்தாள் கெளரி.ஆனால் பின்னர் நந்தவனங்கள் கடலில் அமிழ்ந்துவிட்டதை உணர்கிறாள்.அவளின் தலைகோதி சிரம்பற்ற கிருஷ்ணன் இல்லை.முன்னர் அவனது பருவத்தில் சிமெண்ட் நிற காரில் சூரியன் வரும்போதே குதிரைவால் சடையுடன் ஓடைக்குப் படகு செலுத்த வந்தவர்கள் இப்போது வருவதில்லை.படகு இப்போது தனியே நின்று கொண்டிருக்கிறது.

பின்னர் சிறுநகரத்தை விட்டு பெருநகரம் வருபவனுக்கு சூரிய உதயத்தில் வேலை கிடைக்கிறது. சூரிய உதயத்திலிருந்து வருகிறோம் என்று சொல்லி வீடுகளின் கதவை தட்டுகிறான்.அவர்களிடம் பின்னர் இறைஞ்சும் தொனியில் உங்கள் நாயைக் கொஞ்சம் பிடித்துக் கொள்ளுங்கள் நான் வெளி்யேறுகிறேன் என்று சொல்லி அடுத்த வீட்டுக்குச் செல்கிறான்.அவன் வீடு திரும்புகையில் மெஹ்திஹசனின் இசையில் அவனது வீடு மழைக்கால வீடாகிறது.அவனது குரலில் பாயில் படுத்துறங்கும் அரசன் எறும்புகளுடன் சேர்ந்து கனவு காண்கிறான்.பெருநகரத்தில் தனிமையில் யாருமற்று இருக்கும் அவன் தன் நண்பன் ரகசியப் புன்னகையுடன் எதிர்வரக் கூடுமென சாலையை கடக்கிறான்.

ஒரு நாளின் மதியப்பொழுதில் சிறுமி விமலா இறந்து போனதை வீடுகள்தோறும் சொல்லிக்கொண்டிருந்தது வெயில்.மணிபாப்பா இறந்து போனதையும் சிறுமி சுபாஷிணி இறந்து போனதையும் சுவரொட்டிகளில் பார்க்கிறான்.அவர்களைப் பற்றி ஒன்றும் அறிந்து கொள்ள இயலவில்லை என்பதையும்.சூரிய உதயத்தில் விற்பனை பிரதிநிதியாக இருந்தவன் இப்போது பறவைகள் விற்கும் வேலைக்கு மாறிவிடுகிறான்.இப்போது அவன் பெயர் லாரன்ஸ்.வெயில் வரும்வரை தான் இப்பறவைகள் விலை போகின்றன.சீக்கிரம் உங்கள் சிறுவனை அழைத்து வாருங்கள் என்கிறான்.ஆனால் அந்த நகரத்தில் சிறுவர்களே இல்லை என்பதையும் அறிகிறான்.பின்னர் அவன் புதிதாக ஒரு வேலையில் சேர்கிறான்.அவனுக்கு தங்குவதற்கு விசாலமான அறை ஒன்று வழங்கப்படுகிறது.ஒரு அரசனுடையதைப் போல் கழிகிறது எனது நாட்கள் என அம்மாவுக்கு தனது அடுத்த கடிதத்தை எழுதத் தொடங்கிறான்.பெருநகரத்தில் அலைந்து திரிகையில் என்றோ ஒரு நாள் யுவன் சந்திரசேகரனை தன் இருபத்திநாலாவது வயதில் சந்திக்கிறான்.யுவன் சந்திரசேகர் சாம்பவாத் புலியின் விதியும் ஜிம்கார்பெட்டின் விதியும் எங்கேயோ சந்திக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது என்பதை சொல்லிக் கொடுக்கிறார்.சிதறடிக்கப்பட வேண்டிய கபாலம்தான் சிதறடிக்கப்பட்டிருக்கிறது என்று புரிந்துகொள்கிறான்.

பெரு நகரத்தில் சாயங்காலம் மூட்டத்துடன் கவிழத் தொடங்குகிறது.சிறு நகரத்தில் இந்த பழந்தன்மை வாய்ந்த சாயங்காலம் எதைச் சொல்லப் போகிறது தன் அம்மாவுக்கு என்று நினைத்துக்கொள்கிறான்.தலை கோதும் சிறு கணம் போல இந்த அந்தியும் அவளை கடக்குமா என்று எண்ணுகிறான்.தங்குவதற்கு விசாலமான அறை கொடுக்கப்பட்ட வேலைக்கு அவன் பொருத்தமற்றவன் என அவன் மீது புகார்கள் அதிகரிக்கிறது.அவனுக்கு சிங்கத்துக்குப் பல் துலக்கும் எளிய வேலை வழங்கப்படுகிறது.ஆனால் சிங்கம் அவன் அருகில் பல் துலக்க செல்கையில் உறுமுகின்றது.அதைப்பற்றி பறவைகளிடம் புகார் தெரவிக்கிறான்.பறவைகள் ஈ..ஈ… எனப் புரிந்தும் புரியாமலும் இளிக்கின்றன.

தன் நந்தவனங்கள் கடலில் அமிழ்ந்துவிட்டன கிருஷ்ணா என்று சொன்ன கெளரி பின்னர் ஜோசப் தெய்வநாயகத்தின் மனைவியாகி்ய சில காலத்துக்குள்ளேயே கெளரி  அம்மாளாக மாறி விடுகிறாள்.ஜோசப் தெய்வநாயகம் லேட். ஜோசப் தெய்வநாயகம் ஆகிறார்.அதன் பின் கெளரி அம்மாள் மூன்று முறை மட்டுமே சிரிக்கிறார்.கெளரி கெளரி அம்மாள் ஆனதும் பால்யத்தில் விளையாடிய கிருஷ்ணனைப் பாதியில் விட்டதிலும் கிறுஸ்துவுக்கு வருத்தம்தான் என்று அவன் கருதுகிறான்.

நவீன குமாஸ்தாக்களின் தற்கால அடையாளமாகிவிட்ட மோட்டார் சைக்கிளை அவர்களிடமிருந்து எப்படி மீட்பது என்று ஒரு நாள் அவன் தீவிரமாக சிந்திக்கிறான்.அவனுடைய மோட்டார் சைக்கிள் இரவில் உலவவும் வேட்டையாடவும் கூட தனியே வீட்டை விட்டு வெளியேறும்.அவனது மேட்டுநிலத்தில் அதன் முன்சக்கரம் ஒரு சரளைக் கல்லை நொறுக்கும் போது சூரியன் அடிவானில் இறங்கத் தொடங்கும்.அப்போது அவன் சே குவேராவாகவும் ஆகக்கூடும்.

எறும்புகளுடன் பாயில் உறங்கும் அரசன் மருத்துவமனையில் ஒரு புதிய மருந்துக்காக தயாராகிறான்.இனி உபாதைகள் ஒரு துர்க்கனவென விலகிவிடும்.காலைச் சூரியனை இனி மன அழுத்தம் இன்றி காபியுடன் பருகத் தொடங்கலாம் என்று ஏங்குகிறான்.இதுவரை படிந்துகிடந்த சோர்வை வளர்ந்த நகங்களைப் போல வெட்டிக் களைந்து விடலாம்.ஆனால் தாதியின் கால் குதிரைச் சதைப்பகுதியில் நமது கவனம் படரும் போது உறக்கமூட்டும் மருந்துகள் அவன் இமைகளை அழுத்தத் தொடங்குகிறது.

சரியான வேலையில் இல்லாமல் பாயில் உறங்கும் அரசன் , தன் சிறுநகரத்தை பெரு நகர வீதிகளில் சுமைந்தலைபவன் கவிஞனும் ஆகிறான்.உலகின் மிகச் சில்லிட்ட அருநீர்ச் சுனையில் அவனும் முதிய கவிஞனும் திளைத்திருக்கிறார்கள்.பெண்கள் குறித்துப் பேசுகிறார்கள்.சமதளத்தில் உள்ள ஒரு அழகிய யுவதியுடன் இருவருமே ஒரு தற்காலிக காதலில் ஆழ்ந்திருக்கிறார்கள்.பின்னர் அந்த முதிய கவிஞர் படிக்கல்லின் மேலேறி ஈர உடையை முறுக்கிப் பிழிகிறார்.பின்னர் அவர்களின் ஈரங்கள் உலர்ந்து விடுகிறது.அவர்கள் தங்களின் உலகங்களுக்கு செல்கிறார்கள்.

அவன் காதலிக்கிறான்.அவன் தன் உதட்டிலிருந்து தன் காதலியின் இதழுக்கு சாக்லெட் திரவத்தை இடம் மாற்றும்போது என்றுமில்லாத நடன அசைவில் அவள் உடைகளை சுழன்று களையும்போது தாதிக்கும்,தாய்க்கும் பிறகு யாருமே தீண்டாத காதுமடலை அவள் பற்றிக் கடிக்கும்போது அவன் வீட்டின் சிறுமரத்தினடியில் கொம்புள்ள சில வரிக்குதிரைகள் மேய்ந்து கொண்டிருந்தன.செம்பருத்தியை காணும் போது காதலியின் முலைகள் நினைவில் பிரசன்னம் கொள்வதைத் அவனால் தவிர்க்கவே இயலவில்லை.பின்னர் அவன் முலை ஒரு கனி அல்ல.முலைகளை நான் மலரென்றே அழைப்பேன் என்று முடிவுக்கு வருகிறான்.

அவன் சிறுவனாக இருந்த போது மிருதுளா வாரியர் எடுத்த புகைப்படத்திலிருந்த உதட்டுச் சுழிப்பு அவன் வளரும் தோறும் மறையத் துவங்குகிறது.மீன் பிடிக்கத் தேவையான தூண்டில்கள்,வலைகள்,காத்திருப்பின் இருள் அறியாத உதட்டுச் சுழிப்பை சிரிக்கையில் மறைக்கத்தெரியாத அந்த சிறுவயதில் மீனுக்கு பதிலாக தலைப்பிரட்டைகளை எடுத்துச்செல்கிறான்.அந்த பிராயத்தில் எடுத்துச்சென்ற அந்த தலைப்பிரட்டையின் பெயர் சந்தோஷம் என்று இப்போது அதற்கு பெயர் சூட்டுகிறான்.

பெருநகரம் வந்து வெந்நீரால் உடல் முழுவதையும் நனைத்தபோது அவன் தனிமையை முதல் முறை உணர்கிறான்.தவிட்டுக்குருவிகளை வேடிக்கை பார்த்து புதிய காலணிகளை பறிகொடுத்த போது உலகின் மீது அவனுக்கு முதல்முறை அவநம்பிக்கை படர்கிறது.தலையணையின் அடியில் சிறிய கத்தியை தீட்டி உறக்கத்தை தொலைத்த போது முதல் கொலைக்கு தயாராகிறான்.  பெருநகரத்தின் கோடையாக திரண்டு வந்த அழுகையை சிறுநகரத்தில் வாழும் அவன் அம்மா புறக்கணித்த போது அவன் முன் உலகம் இரு கதைகளாய் பிளக்கிறது.

வேறு ஒரு முறை பெருநகரத்திலிருந்து தன் சிறுநகரத்திற்கு செல்லும் போது நெடுஞ்சாலை உணவகத்தில் நிற்கிறது பேருந்து.அங்கு ஒலிக்கும் இசை யாரோ ஒருவரின் துக்கத்தை யாருக்கோ அவசர அவசரமாய் பட்டுவாடா செய்து விடுகிறது.இளநீர் இல்லாத இளநீர் ஒன்றை அவன் பருகிறான்.உணவு இல்லாத உணவொன்றைப் புசிக்கிறான்.நிலவற்ற நிலவை வெறிக்கிறான்.இரவற்ற இரவில் காதலுக்கு இலக்கற்று அலையும் நம் மனமூட்டத்தின் மனச்சித்திரம் தானா இந்த நெடுஞ்சாலை உணவகம் என்று நினைத்துக்கொள்கிறான்.

அவனது மகள் தன் குட்டி நாவால் உலகை அறியத் துவங்குகிறாள்.அவளுக்கு நிலவுகள்,ஒட்டகங்கள்,கதைகள்,கடவுளர்கள் எல்லாவற்றையும் அவளது சிறு கையளவு வடிவங்களாய் மாற்றி பரிசுகளென விரிக்கிறான்.அவற்றை அவள் தன் இருகை பற்றி நாவால் அறியத் தொடங்கும் போது அவன் வேலைக்காக நகரம் விட்டு செல்கிறான்.மறுபடியும் ஒரு நேர்காணல்.அவனை அமரச்செய்ய இருக்கை இல்லை என்று நேர்காணலை செய்ய வேண்டியவர் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்.இறுதியில் நேர்காணல் முடிந்து எழும் போது அவன் கால்கள் மரத்திருக்கிறது.அவனுடைய கால்கள் கையிலிருந்தது தெரியாமல் வணக்கம் சொல்லி விடைபெறுகிறான்.

வேலை நிமித்தம் காலையில் பேருந்து நிலையத்தில் நிற்கிறான்.இன்னும் யார் பார்வைக்கும் அறிய வராத ஒருவனின் சடலத்தின் மீது ஏறத்தொடங்கும் வெயில் நாயே உனக்கு வந்தனம் என்கிறான்.அவன் தன் நேர்காணல்களுக்கும் வேலைக்கும் அணிந்த ஷூ கிழிந்து நைந்து தோல் சிதைந்து நெகிழ்ந்திருக்கிறது.கருணை பணிவு பிரார்த்தனை மரணம் காதல் நிச்சயமின்மை அனைத்தையும் சுமந்திருக்கும் பழுதப்பட்ட கண்களுடன் அவை வீதியை வெறிக்கின்றன.

ராணி என்று தன்னையறியாத ராணியை பார்த்து மரணம் எதுவென கேட்கிறான்.புலன்களை ஒவ்வொன்றாகச் சாத்தி ஒளிகசியும் துளைகள் அனைத்தையும் மெழுகினால் அடைத்து கடைசியில் அவனைச் சூழும் இருள் தான் மரணம் என்று அவள் சொல்கிறாள்.அவன் மரணத்துக்காக காத்திருக்கிறான்.இந்த வாழ்க்கை பிரயாணத்தை யாரிடமும் பகிர இயலாமல் ஆக்கும் இந்த மாய பெருநகரம் கொடுக்கும் தனிமை போன்றது இந்த மரணம் என்று அறிவிக்கிறான்.

மேன்சனில் மொட்டை மாடிக்கு துணிகளை உலரப்போட செல்கிறான்.காற்றில் ஆடிக்கொண்டிருக்கும் துணிகளைப் பார்க்கும் போது துயரமாய் இருக்கிறது.மாடியின் விளிம்புச்சுவர் அருகே சென்று வானத்தின் விளிம்பில் வெட்டி நிற்கும் நகரத்தின் கட்டிடங்களைப் பார்க்கிறான்.மிகவும் உயரம் குறைந்த விளிம்புச்சுவர் அது.மரணம் சமீபத்தில்தான் இருக்கிறது.மரணம் அடையும் அவனை சிதையிலிட்டு எரித்தனர்.அவன் எரிந்த குழியில் நீரூற்றி தானியம் உதிர்த்தனர்.காற்றிலாடும் கதிராவேன்,சூரியன் ஆவேன்,சுதந்திரமும் அழகும் மேனியில் பூரிக்கும் சின்னஞ்சிறு குருவியாவேன், இறுதியில் தான் குதிரை ஆவேன் என்று சூழுரைக்கிறான்.

சிறுநகரத்திலிருந்து பெருநகரங்களை நோக்கி படித்து வரும் இளைஞர்கள், பெருநகரங்களில் அவர்கள் போகும் நேர்காணல்கள், பொருத்தமற்ற வேலைகள்,பிராயத்தின் நினைவுகள்,தனிமை,வேலைக்கான நேர்காணல்களுக்கு சென்று கொண்டிருக்கும் போதே தன் பெண் குழந்தை வளர்ந்து விட்டதை நினைத்து திகைக்கும் கணங்கள், புணர்ச்சி என்ற ஒன்றே நடப்பதில்லை, புணர்ச்சி பற்றிய புனைகதைதான் மொத்தமும் என்று உணர்வது,மரணம் தனிமை போன்ற ஒன்றுதான் என்று அறியும் தருணம் என்ற தொண்ணூறுகளுக்கு பிறகு வந்த ஒர் உலகத்தின் கதைதான் இந்த ஆயிரம் சந்தோஷ இலைகள்.இதில் நீங்கள் இருக்கிறீர்கள்.நான் இருக்கிறேன்.நாம் இருக்கிறோம்.இது தான் இந்த நூற்றாண்டின் படித்து பெரு நகரம் வந்து வேலையில் அமரும் பல இளைஞர்களின் கதை.துயரமும் மரணத்தை சமீபத்தில் பார்க்கும் அந்தக் கணங்களுக்கும் அப்பால் அவ்வவ்போது திருவிழாவும் வருகிறது.அது தான் ஆயிரம் சந்தோஷ இலைகளின் தருணம்.



திருவிழா

மழையில் குளித்த
மாமரம்
சற்றே தாழ்ந்து
முருங்கைக்கிளை மீது வடிக்கிறது
துளிபாரம் தாளாத
இலைகள்
தங்கையென நின்றிருக்கும்
பப்பாளி இலைகளில்
சொரிகிறது.
தொடங்கிவிட்டதா
உங்கள் பண்டிகை


என்று அந்த பெருநகரத்தில் வாழும் சிறுநகரத்து சிறுவன் உவகை கொள்கிறான்.அப்போது அவன் ஆயிரம் சந்தோஷ இலைகளை தரிசிக்கிறான்.

ஆயிரம் சந்தோஷ இலைகள் - ஷங்கர்ராமசுப்ரமணியன் - பரிதி பதிப்பகம்.

கவிஞர்களின் ஒழுக்கமின்மை


கண்டாரதித்தன் விருது விழாவுக்கு நண்பர் முரளி கிருஷ்ணனுடன் சென்றிருந்தேன்.ஜெயமோகன் அற்புதமாக பேசினார்.அஜயன் பாலாவின் பேச்சும் நன்றாக இருந்தது.ஜெயமோனின் பேச்சு கவிஞர்களை சீண்டக்கூடியது.இருத்தலியம்,ப்ராய்ட், நிட்ஷே இவைகளின் தாக்கம்தான் இன்றைய கவிதைகள் என்றார்.தேவதேவன் மட்டுமே இதிலிருந்து விலகியிருப்பவர்.எங்கோ அடையும் தாழ்வுணரச்சியால் வேறொரு தளத்தில் அதிமானுடர்களாய் நிறுத்திக்கொள்ள விரும்புவதன் விளைவாக இருக்கலாம் இந்தக் கவிதைகள் என்றார்.யவனிகா ஸ்ரீராமின் கவிதை ஒன்றை குறிப்பிட்டு அப்படி ஒரு வாழ்க்கை இந்தியாவில் எங்குமே இல்லை என்றார்.

இந்த கவிதைகளின் கருத்துக்கும் நம் கவிஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சம்மந்தமே இல்லை என்பது அவரின் பேச்சின் மையமாக இருந்தது.நகுலனின் கவிதைகளை வாசிக்கும் போது கவிதைகளின் வழி அவர் உருவாக்கும் அபத்த வாழ்வின் அடையாளமின்மை எனும் ஆன்மிக தரிசனம் அவரின் வாழ்க்கை வழியாகவே அவருக்கு கிடைத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.அதை அவர் உருவாக்க வேண்டும் என்று உருவாக்கியதாக தோன்றவில்லை.தமிழ் நவீன இலக்கியத்தின் மகத்தான கவிஞன் நகுலன்.அவர் உருவாக்கிய தரிசனம் அவரின் கண்டுபிடிப்பு.

ஆத்மாநாமின் கவிதைகள் நிகழ் வாழ்வில் கருத்தியல் கொண்டு உருவாகும் அனைத்து அமைப்புகளும் இறுதியில் தொடங்கிய இடத்திற்கே வந்துவிடுவதை பற்றி சொல்கிறது.ஒரு தனி மனிதன் தன்னை எங்கும் பொருத்திக்கொள்ள இயலாமல் சிதறுகிறான்.தலைவனும் பெயரும் அற்ற இயக்கத்தை உருவாக்க முனைகிறான்.இறுதியில் உங்கள் காலை தொழுகை முடிந்ததா அவ்வளவுதான் உங்கள் உணவு ஊர் சுற்றாமல் ஒழுங்காய்ப் போய் தூங்குங்கள் என்கிறார்.

ஜெயமோகன் நம் கவிதைகளில் வரும் தனிமனிதன் உண்மையில் இல்லை என்கிறார்.இது விவாதத்திற்குரியது.பெரு நகரங்களில் தனிமனிதன் உருவாகிவிட்டான் என்றே தோன்றுகிறது.சபரிநாதனின் வால் தொகுப்பில் அந்த பந்தை ஏன் அந்தக் கூடையில் போட வேண்டும் என்று யாருக்கும் தெரியாது என்பதில் வரும் அபத்தம் நவீன தமிழ் கவிதைகளின் மீது பரிச்சயம் அற்றவரை கூட புன்னகைக்க வைக்கக்கூடியது.ஆனால் இவை எல்லாம் ஏன் கருத்துத்தளத்தில் ஒரே போல இருக்கிறது என்பது முக்கியமான கேள்விதான்.

கூட்டத்தில் சபரிநாதன்,ந.பெரியசாமி,சுநீல் கிருஷ்ணன்,விஷால் ராஜாவை சந்திக்க முடிந்தது.வே.நி.சூர்யாவை நீங்கள் எந்த ஊர் என்றேன்.திருநெல்வேலி வரை சென்று திரும்பி வந்து திருநெல்வேலி என்றார்.எங்கு படிக்கிறீர்கள் என்றேன்.பெரம்பலூர் வரை சென்று திரும்பி வந்து பெரம்பலூர் என்றார்.




காலா



கபாலியை விட தெளிவான அரசியல் படம் காலா.படத்தில் ராவணனாக காலா உருவகப்படுத்தப்படவில்லை.நேரடியாகவே ரஞ்சித் சொல்லிவிடுகிறார்.தூய்மையும் சுத்தமும் வன்முறையை தூண்ட வல்லவை.ஜெயமோகனின் மலம் என்கிற சிறுகதை நினைவுக்கு வருகிறது.புதுமைப்பித்தனின் கதையில் அகலிகை ராமரின் செயலை கேள்வி கேட்கிறாள்.தூய்மை எல்லாவற்றையும் கச்சிதமானதாக மாற்ற கோருகிறது.நான் கிழக்கு தாம்பரத்தில் வாடகைக்கு வீடு பார்த்துக்கொண்டிருந்த போது பல பிராமண இல்லங்களில் முதலில் நீங்கள் சைவ உணவு உண்பவர்களாக இருக்க வேண்டும் என்பார்கள் , ஆமாம் சைவம் என்று பேச்சுக்கு சொன்னாலும் இல்லையில்லை ,சைவம் என்று சொல்லி பின்னர் அசைவம் உண்பீர்கள் என்று சொல்லிவிடுவார்கள்.இதில் இருப்பது சாதியம் தான் என்றாலும் அது தூய்மையையும் சுத்தத்தையும் தான் முன்வைக்கிறது.

அந்த தூய்மைவாதத்தின்,கச்சிதத்தின் எதிர்தரப்பாக தாராவியும் காலாவும் வருகிறார்கள்.அவர்களின் தண்ணீரில், காற்றில் இருப்பிடங்களில் துயரம் இருக்கிறது.ஆனால் தூய்மை எனும் வன்முறையை முன்வைக்கும் ராமரை ஹரியை ராவணன் காலா எதிர்கொள்கிறான்.பத்து தலை ராவணன் என்பது உருவகம்.ராவணன் முளைத்துக்கொண்டே இருப்பான்.காலா இறந்தபின் எல்லோரும் காலாவாகிறார்கள்.அவர்கள் ராமரை கொல்கிறார்கள்.

நிலம் மிக முக்கியமான சமூக பிரச்சனை.நிலம் வைத்திருப்பவர்கள் அதிகாரத்தை அடைகிறார்கள்.நிலத்தை இழப்பவர்கள் அடிமைகளாகிறார்கள்.நிலத்தை பாதுகாக்கவும் அதிகாரத்துக்கு அருகில் இருக்க வேண்டியிருக்கிறது.படம் முழுக்க போராட்டமும் அதை ஒடுக்கும் அதிகாரத்தின் தரப்பும் காட்டப்படுகிறது.ரஞ்சித் தன் நோக்கத்தில் தெளிவாக இருக்கிறார்.அவர் முன்வைக்கும் பெருநகரத்தின் சிக்கல் ஒரு கொடூரமான உண்மை.இதில் ரஜினிகாந்த் நடித்திருப்பது ஆச்சர்யம்.ஏனேனில் இதில் ரஜினிகாந்த் காலா கதாபாத்திரமாக மட்டுமே இருக்கிறார்.காலா ஒரு கட்டத்தில் இந்த அதிகாரத்தின் ஒடுக்குதலை எதிர்த்து என்ன செய்வது என்று திகைக்கிறார்.இறக்கிறார்.மக்கள் யுக புருஷர்களை நம்பி இருக்காமல் போராட்டங்களை தங்களின் கையில் எடுப்பதன் மூலமே அதிகாரத்தை எதிர் கொள்ள முடியும் என்கிறார் ரஞ்சித்.ஒரு தொன்மத்திலிருந்து நாம் ஒரே மாதரியான உருவகங்களைத்தான் பெற வேண்டும் என்றில்லை.காலாவை ராவணனுடன் இணைத்திருப்பது நல்ல யுத்தி.

மிக நல்ல அரசியல் திரைப்படம்.


Rajinikanth



2021 Tamil nadu assembly elections will have only two pre poll declared contenders by their parties for the post of CM.Rajinikanth and M.K.Stalin.Stalin appears all too tired and exhausted.May be because he was waiting for the CM chair for a long time and never got it.He is unable to take decisions and has no direction.In 2016 assembly elections if he had agreed for seat sharing with DMDK leader Vijayakanth the results would have been different.DMK would have won the election and Vijayakanth would have got ministerial berths.Both would have won.Jayalalitha would have retired to Kodanadu.Stalin was very much against the alliance though Kalaignar Karunanidhi was eager that the alliance be forged.Kalaignar had a very good understanding of the arena.Stalin didn't want another leader to share dais with him.He felt Vijayakanth's growth would hamper his future.He was ready to lose the battle for better future prospects.

Vaiko was keen that DMK loses the election.He used the opportunity to form the People welfare front.He anyway withdrew filing the nomination at the last moment which led to disasterous failure of People welfare front in the election.Vaiko wanted to prove that though he can't become Chief Minister he can stop DMK from getting the majority.He won.If what Kalaignar had wished had happened it would have been a smooth transition for Stalin due to ill health of Kalaignar.Maybe Rajinikanth would not have dreamt of electoral politics if Tamil nadu is currently having a stable government.

So the scene in 2021 would be different.Rajinikanth would have floated the party by then.There is very less chances for this government to be dissolved by BJP until 2019.By all means the next government in centre will also be BJP government.So the present Tamilnadu government will continue until 2021.

Vijayakanth will be left alone in the assembly election.He will not win even one assembly seat.PMK might try to form an alliance with BJP.Either way its vote bank is restricted to Salem,Dharmapuri,Cuddalore,Villupuram,Vellore districts.They might win around 10 seats mostly in these areas.BJP will form alliance with smaller parties and contest most of the seats.It will not do aggressive campaigning.Rajinikanth will not ally with BJP.But BJP will not campaign against Rajinikanth.It will be targetting only Stalin.

All factions of ADMK will lose deposit.ADMK as a party will be no more after 2021 elections.Tamil Nationalist parties will also not win even one assembly seat.Rajinikanth's party will be contending for all assembly seats without allies.Kamalhasan will not win even his own seat.He might lose deposit.

Left parties,Congress,Dalit panthers of India,Vaiko will be most probably with DMK.There is little chances that Thirumavalavan will enter an alliance with Rajinikanth.But it could happen.So the contenders would be DMK and Rajinikanth's party.Rajinikanth would not be contesting in the 2019 parliamentary elections as he might not wish to burst the myth of Rajini's image before the assembly elections.Also whatsoever might be number of MPs a party wins in parliamentary election it won't affect the centre.So he might not contest.

In Tamilnadu caste and money is playing a major role in elections in the recent past.There has been continuous protest for various reasons since the death of Jayalalitha. Pseudo Environmental activists,Pseudo Cultural activists,Pseudo Tamil nationalists are on rise.The propaganda has almost reached the mainstream that the common public is made to think that there is lot of conspiracies behind anything that happens in Tamilnadu whereas in reality Tamilnadu is much ahead economically than most of the Indian states.

People of Tamilnadu want a strong,charismatic leader.They are tired of the present government.Stalin is unable to win the confidence of people. Tamilnadu needs a government that could bring in investments, make things happen, have an amicable relationship with the centre and most importantly an icon. Rajinikanth fits the bill. Tamilnadu has rarely seen hung assembly.Even though caste and money plays a major role in elections today,most probably Rajinikanth will be the next Chief Minister of Tamilnadu.


காலச்சுவடு மே ஜூன் இதழ்கள்


காலச்சுவடு மே மாத இதழில் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதியுள்ள ரானடேவின் இடத்தில் அம்பேத்கர் கட்டுரையில் கட்டுரையின் தலைப்பு வரியை கட்டுரை முழுதும் எழுதியிருக்கிறார்.அம்பேத்கர் காந்தியையும் ஜின்னாவையும் ஒரு தரப்பில் வைத்து ரானடேவை மறு தரப்பில் வைக்கிறார்.அது அம்பேத்கரின் அப்போதைய நிலைப்பாடு.அதைப்பற்றிய வாசிப்பை முன்வைக்கும் ஸ்டாலின் ராஜாங்கம் அம்பேத்கர் ரானடேவின் இடத்தில் தன்னை பொருத்திப் பார்க்கிறார் என்கிறார்.

காந்தி ஜின்னா ஆகிய அம்பேத்கர் காலத்தின் தலைவர்கள் மாமனிதர்களாக போற்றப்படும் சூழலில் ரானடே போன்றவர் தான் உண்மையான மாமனிதர் என்கிறார் அம்பேத்கர்.யார் மாமனிதர் என்கிற போது வரலாற்றை உருவாக்குவதற்கு காரணமாக அமைபவன் , அறிவும் நேர்மையும் ஒருங்கே பெறுபவன் , சமூக சீர்திருத்தத்தை முன்னெடுப்பவன் மாமனிதன் என்று அம்பேத்கர் சொல்வதை சுட்டிக்காட்டுகிறார் கட்டுரையாளர்.
மேலும் பிம்ப வழிபாட்டை பற்றி அம்பேத்கர் சொன்னதை பற்றி எழுதுகிறார்.காந்தி பிம்ப வழிபாட்டை நுட்பமான அணுகுமுறை வழியாக வளர்தெடுத்தார் என்கிறார் கட்டுரையாளர்.

மேலே மாமனிதர் பற்றி சொல்லியுள்ள மூன்று விஷயங்களும் காந்திக்கும் பொருந்தும் தானே.பிம்ப வழிபாடு பற்றி எழுதுகிறார்.பிம்பத்தை உருவாக்காத அரசியல் சமூக தலைவர் இருக்க முடியுமா.மேலும் இப்படி செய்தால் பிம்பம் உருவாகும் என்பது அது சாத்தியப்படும் முன் யாருக்காவது தெரியுமா.அம்பேத்கர் இன்று ஒரு பிம்பமாக மாறவில்லை என்று சொல்ல முடியமா.இந்த கட்டுரையின் வழி தற்பெருமைக்குப் பதிலாக தன்னடக்கம் , தனிப்பட்ட பகைமைக்கு மாறாக அறிவார்ந்த தலைமை , துதிப்பாடலுக்கு பதிலாக சமமானவர்களோடு விவாதித்தல் , ஆன்மிகத்திற்கு பதிலாக பகுத்தறிவு, பத்திரிக்கையின் வெளிச்சத்திற்கு பதிலாக ஆதரவின்மை,அரசியல் சீர்திருத்தத்திற்கு முன்பாக சமூக சீர்திருத்தம் ஆகியவையே மாமனிதரை உருவாக்கும் என்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது.

இந்த கட்டுரையின் வழி காந்தி கீழே இறக்கப்பட்டு அம்பேத்கரின் பிம்பம் மேலே ஏற்றப்படுகிறது.இது போன்ற பிம்பங்களை உருவாக்காத ஆளுமைகளின் கட்டுரைகள் சாத்தியமில்லை.அம்பேத்கருக்கு தன் காலகட்டத்தில் எதிர் கொண்ட தனிமை , காந்திக்கு கிடைத்த ஊடக வெளிச்சம் , மக்களின் வழிபாடு ஆகியவற்றின் மீது விமர்சனம் இருந்திருக்கலாம்.அது இயல்பு.காந்தியை விட தான் செய்ய விரும்பும் சமூக சீர்திருத்தம் தான் முக்கியமானது என்றும் அவர் கருதியிருக்கலாம்.அது அந்த உரையில் வெளிப்பட்டுள்ளது.

ஆனால் கட்டுரையாளர் அதைப்பற்றிய எந்த கருத்தையும் முன்வைக்காமல் அதை மேலும் விளக்க மட்டுமே செய்கிறார்.இந்தக் கட்டுரையின் நோக்கம் அம்பேத்கரின் அந்த உரையின் தலைப்பான ரானடே காந்தி ஜின்னா என்பதை மாற்றி அம்பேத்கர் காந்தி ஜின்னா என்றுதான் இருந்திருக்க வேண்டும் என்பதில் இருக்கிறது.

காந்தியை தமிழ் அறிவுச்சூழலில் தொண்ணூறுகளுக்கு பிறகு விமர்சனமின்றி பேசுவது சாதியத்துக்கு ஆதரவானதாக பணக்காரர்ளுக்கு ஆதரவானதாக இந்துகளுக்கு ஆதரவானதாக தொழில் வளர்ச்சிக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது.அம்பேத்கர் காந்தியின் சமகாலத்தில் வாழ்ந்தவர்.அவர் காந்தியை விமர்சிக்கலாம்.ஆனால் இன்று காந்தியை விமர்சிக்க மட்டும் தேவையில்லை.ஆக்கபூர்வமான சிந்தனைகளையும் அவரிடமிருந்து பெறலாம்.இந்தக் கட்டுரையின் மிகப்பெரிய குறை ஜின்னாவையும் காந்தியையும் ஒன்றாக்கியது.அம்பேத்கர் அதை செய்யலாம்.கட்டுரையாளர் அதை செய்துள்ளது அவசியமற்றது.அவர் தன் கருத்து என்ன என்று விளக்கவே இல்லை.ஜின்னா வெறுப்பும் அகங்காரமும் மட்டுமே நிரம்பிய மனிதர்.நவகாளி சென்று அமைதி திரும்ப போராடியவர் காந்தி.காந்தியை பற்றி இத்தனை எதிர்மறை சிந்தனைகள் இந்திய மொழிகளில் வேறு எதிலும் இருக்காது.காந்தி தன் அகங்காரத்தை ஆக்கப்பூர்வமான வழியில் பயன்படுத்தினார்.ஜின்னா எதிர்மறை நோக்கில் பயன்படுத்தினார்.அகங்காரம் இருந்ததால் இருவரும் ஒன்றாக ஆக முடியுமா.அம்பேத்கர் அகங்காரம் கொண்டதால் தான் காந்தியிடம் அமர மறுத்து தனித்து நின்றார்.அகங்காரம் மனித இயல்பு.அகங்காரம் அற்ற மனிதன் தலைவனாவது சாத்தியமே இல்லை.

ஏற்க மறுத்தல் ஏற்று மறுத்தல் என்ற கட்டுரையை சிவசங்கர் எஸ்.ஜே எழுதியிருக்கிறார்.அற்புதமான கட்டுரை.இவரை இதற்கு முன் எங்கும் படித்ததாக நினைவில்லை.இவர் எழுதியுள்ள விதம் மிக நன்றாக இருக்கிறது.தலித் கவிதைகளின் புதிய போக்கை சொல்வதன் வழியாக தனக்கான பாதையையும் அவர் அறிவித்துக்கொள்வதாக தோன்றுகிறது. பல முக்கிய படைப்புகளை உருவாக்குவார் என்று தோன்றுகிறது.

போகன் சங்கர் கவிதைகள் இன்றைய ஊடகத்தின் சட்டகங்களை மீறி செல்வது குறித்தும் அந்த கவிதைகளை வெறும் அச்சு கவிதைகளாக மட்டும் மொழியாக்கம் செய்ய முடியாது என்றும் சொல்கிறார்.பாப் டிலோன் நோபல் பரிசு பெற்ற போது அதைப் பற்றி தடம் இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.இதை அதன் தொடர்ச்சியாக கொள்ளலாம்.அவரின் வாதம் ஏற்றுக்கொள்ளும் வகையில் தான் இருக்கிறது.நல்ல கட்டுரை.

தி.பரமேசுவரி எழுதியுள்ள பெண்ணிய கவிதைகள் பற்றிய கட்டுரை நன்றாக வந்திருக்கிறது.பெண்ணிய கவிதைகள் தனி மனித பார்வையிலான கவிதைகளாக சுருங்கி விட்டதை சொல்கிறார்.கவிதைகள் பற்றிய இந்த மூன்று கட்டுரைகளும் கவிதைகளை விட சிறப்பாக இருப்பதாக தோன்றியது.

சித்துராஜ் பொன்ராஜ் காலச்சுவடு ஜூன் இதழில் எழுதியுள்ள உண்ணாமுலை சிறுகதையின் தலைப்பு லாசராவின் அபிதா நாவலை நினைவுப்படுத்தியது.ஆனால் கதையில் முதல் சில உரையாடல்களிலேயே சீனு என்ற பெயர் வந்துவிடுகிறது.அவன் பிராமனன் என்பதும்.ஐயராக இருக்க வாய்ப்பு இல்லை.ஐயங்கார்.அதே போல இறுதியில் பார்த்தசாரதி கோயிலும் நாச்சியார் திருமொழியும் வருகிறது.அப்படித்தான் இருக்க முடியும் என்பதை முன்னர் ஊகிக்க முடிகிறது.நாம் ஒரு சிக்கலை தொன்மத்துடன் இணைக்கையில் நம் மரபின் வழியிலேயே இணைக்கிறோம்.லாசரா அதை அபிதாவில் இணைக்கையில் சித்துராஜ் பொன்ராஜ் அதை நாச்சியார் திருமொழியில் இணைக்கிறார்.