இரு துண்டு கண்ணாடி வில்லைகள்


இரு துண்டு கண்ணாடி வில்லைகள் என்ற கலிலீயோ கலிலீயின் வாழ்வும் விஞ்ஞானமும் பற்றிய புத்தகம் கலிலீயோவின் ஆரம்ப கால வாழ்க்கை , கணிதம் கற்று பேராசிரியர் ஆனது, அவரது கண்டுபிடிப்புகள், திருச்சபையின் தண்டனை ஆகியவற்றை உள்ளடக்கியது.வினோத் குமார் எழுதியிருக்கிறார்.இவர் இதற்கு முன் நியூட்டன் பற்றி ஆப்பிள் நிலா நியூட்டன் என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் சிறப்பு இது வாசகர்களை நோக்கி மாணவர்களே இதை நீங்கள் இப்படி புரிந்து கொள்ளலாம் , இப்போது நீங்கள் ஒரு காபி கடையில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று ஆரம்பித்து அபத்தமாக எதையாவது உளறி அதன் மூலம் எதையும் விளக்காமல் சரியாக வரைபடங்களை கொடுத்து அதன் வழி அறிவியல் விளக்கங்களை அறிவியல் மொழியில் அளித்திருப்பது.தேவையற்ற உவமைகள் தவிர்க்கப்பட்டுள்ளது.அறிவியல் புத்தகங்களை எழுதுவோர் வாசகர்களை மதிக்க வேண்டும்.தன் பாடத்திட்டங்களுக்கு வெளியே தன் பதவி உயர்வுக்கு வெளியே ஒருவன் ஒர் அறிவியல் புத்தகத்தை வாங்கி வாசிக்கும் போது அவன் அதற்கான உழைப்பை தரத்தயராக இருக்கிறான் என்று தான் அர்த்தம்.அதை மதித்து ஒர் அறிவியல் மாணவருடன் பேசுவது போலவே புத்தகத்தை ஆசிரியர் எழுத வேண்டும்.அவர் சொல்வதை இன்னும் தீவிரமாக சொல்ல வேறு அறிவுத்துறைகளின் மொழியை பயன்படுத்தலாம்.உவமைகள் , உருவகங்கள் பயன்படுத்தப்படலாம்.அவை அபத்தமாக இருக்கக்கூடாது.அடிப்படையில் அவர் அறிவியலின் மொழியை பயன்படுத்த வேண்டும்.

இந்தப் புத்தகத்தில் இதை வினோத் குமார் நன்றாகவே செய்திருக்கிறார்.அரிஸ்டாட்டில் பற்றிய இடங்களில் இன்னும் வரலாற்று ரீதியில் விளக்கி அவர் சொன்னது தவறு போன்றல்லாமல் அது அந்த காலகட்டத்தின் விளக்கம் என்று சொல்லியிருக்கலாம்.

எந்த எடையிலான பொருளாக இருந்தாலும் அது பூமியை ஒரே கால அளவில் வந்தடையும் என்று தன் பரிசோதனைகள் வழி சொன்னார் கலிலீயோ.ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை என்பதற்கான காரணத்தையும் விளக்கினார்.கலிலீயோவின் இதற்கான பரிசோதனைகள் தான் நியூட்டனின் முதலாம் விதிக்கான திறவுகோலாக இருந்தது என்பதை நன்றாக விளக்கியுள்ளார்.ஊசலியின் வேகம் ஒரு மாறலியாக இருந்ததை கண்டுபிடித்த கலிலீயோ அதைக்கொண்டு கடிகாரத்தை உருவாக்க முயல்கிறார்.பின்னர் கிரிஸ்ட்டியன் ஹைகென்ஸ் என்ற டச்சு நாட்டு விஞ்ஞானி ஊசலைக் கொண்டு கடிகாரத்தைக் கண்டுபிடிக்கிறார்.

கலிலீயோவிற்கு ஒளிக்கு வேகம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது.ஆனால் அவரால் அதை கணிக்க முடியவில்லை.கோப்பர்நிக்கஸ் சூரியனே மையம் பூமி அதை சுற்றி வருகிறது என்று சொன்னதை கலிலீயோ நிறுவினார்.அதற்காக திருச்சபையின் தண்டனைகளும் பெற்றார்.இந்தப் புத்தகத்தை வாசித்த உடன் தொலைநோக்கியின் வழி வானத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றுவதே இந்தப் புத்தகத்தின் வெற்றி.இது போன்ற புத்தகங்கள் தமிழில் நிறைய வர வேண்டும்.இதழ்களிலும் கட்டுரைகள் வரலாம்.வினோத் குமாருக்கு வாழ்த்துக்கள்.

இரு துண்டு கண்ணாடி வில்லைகள் - வினோத் குமார் - என்.சி.பி.எச் வெளியீடு.

தமிழகத்தில் ஆசிவகர்கள்


பெளத்த அறிஞர் ஓ.ரா.ந.கிருஷ்ணனுடன் சென்ற வருடம் பேசிக்கொண்டிருக்கையில் ஆஜீவகம் பற்றி ஏ.எல்.பாசாம் எழுதிய புத்தகம் பற்றி கேட்ட போது அதை விட சிறந்த புத்தகம் தமிழில் ர.விஜயலட்சுமி எழுதியிருக்கிறார் என்றார்.இந்த முறை சென்னை புத்தக கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தில் இந்த புத்தகத்தை வாங்கினேன்.இந்தப் புத்தகம் 1988யில் முதலில் வந்திருக்கிறது.இப்போது கிழக்கு பதிப்பகம் பிரசுரித்திருக்கிறது.

மணிமேகலை , நீலகேசி, சிவஞான சித்தியார் ஆகிய நூல்களில் ஆஜிவகம் பற்றி சொல்லப்பட்டிருப்பதை பற்றி எழுதியிருக்கிறார்.ஊழ் என்ற கருத்து எப்படி விதி மற்றும் கர்மவினையில் இருந்து மாறுபட்டது என்பதை விளக்குகிறார்.தமிழிலக்கியத்தில் ஊழ் எப்படியெல்லாம் அர்த்தப்பட்டிருக்கிறது என்றும் சொல்கிறார்.

மேலும் தமிழிலக்கியம் தவிர்த்து ஆஜிவகம் பற்றிய வேறு சான்றுகளை பற்றி எழுதுகையில் பாசாம் தன் நூலில் கூறிய கல்வெட்டு சான்றுளை பற்றி ஆராய்கிறார்.ஆனால் அந்த கல்வெட்டு சான்றுகள் ஆஜிவகர்களை குறிக்கவில்லை என்றும் அது ஆசுவி என்று குதிரை வைத்திருப்போரை குறித்திருக்க வேண்டும் என்று விளக்கி பாசாமை மறுக்கிறார்.

ஆஜிவகம் பற்றிய நல்ல ஆய்வு நூல்.இதை கிழக்கு பதிப்பகம் கொண்டுவந்திருப்பது பாராட்டுக்குரியது.

தமிழகத்தில் ஆசிவகர்கள் - முனைவர் ர.விஜயலட்சுமி - கிழக்கு பதிப்பகம்.