Showing posts with label நகுலன். Show all posts
Showing posts with label நகுலன். Show all posts

நகுலனின் தனிமொழி

 



நகுலனின் மூன்று , ஐந்து ஆகிய கவிதைத் தொகுப்புகள் இராமயணத்தை அடிப்படையாக கொண்டவை.ஐந்து கவிதைத் தொகுப்பில் குகன், விராதன், சவரி, சடாயு, வீடனன் ஆகியோரைப் பற்றியே எழுதியிருக்கிறார்.இவர்கள் எவருமே இராமயணத்தின் மையக் கதாபாத்திரங்களோ எதிர் கதாபாத்திரங்களோ அல்லர்.ஆனால் இந்தப் பாத்திரங்கள் அனைத்திற்கும் மையச்சரடு ஒன்றுண்டு.தன்னையழித்தல்.மூன்று தொகுப்பில் உள்ள உறங்குகின்ற கும்பகர்ணன் பகுதியும் ஐந்து தொகுப்பில் உள்ள வீடனன் தனிமொழியும் நகுலனின் உலகை நமக்கு ஒளிபுக உணர்த்துபவை.நகுலனின் நினைவுப்பாதை நாவல், ஐந்து , மூன்று , மழை மரம் காற்று,கோட்ஸ்டாண்ட் ஆகிய கவிதைத் தொகுப்புகள் அவரின் தத்துவத்தை இன்னும் தெளிவாக கூறுபவையாக அமைந்திருக்கின்றன.

ஒரு வகையில் வீடனனின் தனிமொழி தான் நகுலனின் தரிசனம் என்று சொல்லிவிடலாம்.பிரத்யட்சமாக காண்பதையே மனிதன் உண்மை என்று எண்ண விரும்புகிறான்.அனைத்து தத்துவங்களும் அறிதல் முறைகள் பற்றி பேசுகின்றன.பிரத்யட்சம், அனுமானம், ஊகம்,தர்க்கம், ஸ்ருதிகள் என்று ஒவ்வொரு தத்துவமும் தனக்கான அறிதல் முறைகளை வரையறுக்கிறது.பிரத்யட்சத்தை கடந்து அருவத்தை உணர்வதை நகுலன் தன் புனைவுகளில் கவிதைகளில் தொடர்ந்து முன்வைக்கிறார்.

கும்பகர்ணன் நான் அரக்கன் என்கிறான்.வீடனன் தன் தனிமொழியில் அந்த நாம-ரூபத்தைத்தான் கேள்வி கேட்கிறான்.என்னை நான் என்று நான் ஒரு போதும் மயங்குவதில்லை என்று மறுபடி மறுபடி சொல்கிறான். பிறப்பால் இனத்தால் உருவாகும் அடையாளங்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளுதல் தான் நகுலன் முன்வைக்கும் உலகம். வீடனன் தான் பிறப்பாலோ இனத்தாலோ கட்டுண்டவன் அல்ல என்கிறான்.கும்பகர்ணன் வீடனனிடம் அடிப்படையில் நான் ஒரு அரக்கன் , ஸ்தூலத்தைச் சூக்குமாக்கும் வித்தையை நாங்கள் வெறுக்கிறோம்,ரத்தமும் சதையுமாகத்தான் நாங்கள் இந்த உலகைத் தரிசிக்கிறோம்.நாங்கள் அரக்கர்கள், எங்களுக்குக் கனவுகள் பலிக்க வேண்டும், காமம் தீர வேண்டும் , இங்கு நம் வழிகள் பிரிகின்றன என்று தன் உரையை முடிக்கிறான்.

கும்பகர்ணன் தன் செயல்களை நியாயப்படுத்திச் சொல்ல அரக்கர்களின் உலகப் பார்வை அவர்களின் குணங்கள் ஆகியவற்றையே பயன்படுத்திக் கொள்கிறான்.இந்த அடையாளங்கள் இந்த செயல்களை அங்கீகரிக்கின்றன என்று கும்பகர்ணன் சொல்கிறான். இவை சரியானவை தவறானவை என்ற தர்க்க விவாதத்திற்குள் அவன் செல்லவில்லை.கும்பகர்ணன் தாங்கள் சூடிக்கொள்ளும் அர்க்கர்கள் என்ற அடையாளத்தின் வழி தங்கள் செயல்களுக்கான நியாயங்களை உருவாக்கிறான்.அந்த அடையாளங்களை அழித்து விட்டால் அவனால் அவர்களது செயல்களை தர்க்கப்படுத்தி ஒரு வரிக் கூட சொல்ல இயலாது.

வீடனன் இதைத்தான் கேள்வி கேட்கிறான்.விகுதியை பகுதியாக எண்ணிக் கொள்கிறார்கள் என்று சொல்கிறான். ஏதோ ஒன்று நாம-ரூபமாகத் தன்னை கிளை பரப்பிக் கொண்டு இவ்விகலம் முழுவதும் வியாபகமுற்று இருக்கிறது என்று கொள்வதும் அந்த ரூபம் தான் மூல தத்துவம் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று வீடனன் எண்ணிக்கொள்கிறான்.தன் பெரிய அண்ணாவாலும் இளைய அண்ணாவாலும் நாம ரூபத்தை தாண்டிய ஏதோ ஒன்று தங்களைச் சூழ்ந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவில்லை என்று கவலைப்படுகிறான்.தன்மையிலிருந்தே உருவம் என்று சொல்கிறான்.

சித்தாந்தம், சாதி, இனம், சமயம், மொழி, உடல், நினைவுகள் ஆகியவற்றின் வழி நாம் நமக்கான அடையாளங்களை சூடிக்கொள்கிறோம்.சித்தாந்தத்தின் தர்க்கங்கள் நம்முடைய தர்க்கங்கள் ஆகின்றன.உருவத்திலிருந்து தன்மை உருவாகிறது.நாம் நமது என்றும் என்னுடையது என்றும் சொல்லிக்கொள்வது அந்த சித்தாந்தத்தின் வழி உருவான தத்துவத்தைத்தான்.அதுவே ஒருவனின் பிரத்யட்ச உலகமாக ஆகிறது.உருவம் கொண்டு ஒருவன் அடையும் அருவம் அந்த சித்தாந்தத்தின் தன்மையில்தான் இருக்கிறது.இவற்றை தாண்டிய ஒரு அருவம் உள்ளது என்றும் அந்த அருவத்திலிருந்து தனக்கான உருவத்தை அடைய முடியும் என்றும் மனிதன் எண்ணும் போது அடையாளங்களிலிருந்து விடுபடலாம் என்பது நகுலன் முன்வைக்கும் தர்க்கம்.

முன்னர் குறிப்பிட்டது போல ஐந்து கவிதைத் தொகுப்பில் அவர் குகன் , சடாயு, சவரி, விராதன் , வீடனன் ஆகியோர் பற்றி எழுதியிருப்பதில் இருக்கும் இணைக்கும் சங்கலி அவர்கள் தங்களை இழப்பது தான்.காத்திருத்தல்,பணிதல்,தன்னுயிர் நீத்தல்,சாபத்திலிருந்து விடுபடுதல், தன் அடையாளத்தை களைந்து வெளியேறுதல் என்று அவை மற்றமை பற்றிய அக்கறையை முதன்மைப்படுத்துகிறது.நகுலன் தன் படைப்புகளில் மூன்று விஷயங்களை செய்கிறார்.ஒன்று அடையாளம் களைதல் என்னும் நிலை.இரண்டாவது மற்றமை குறித்த உணர்வு.மூன்றாவது அடையாளம் களைந்து இரண்டறக் கலத்தல்.பிறிதாகுதல்.

அடையாளம் களைய நமக்கு தடையாக இருப்பவை பால், உடல், நினைவு, இனம் , சாதி, மதம், சமூக அடுக்கு, சித்தாந்தங்கள் ஆகியவை.திரெளபதி அவள் வந்து போகும் அர்ச்சுனன் என்ற கவிதையில் வந்து போகும் அர்ச்சுனன் என்ற வரி ஒரு நிலையற்றத் தன்மையை குறிக்கிறது.திடமான ஸ்திரமான ஒரு அடையாளத்திலிருந்து விலகி ஒரு பாயம்(flux) நிலையை நோக்கிச் செல்கிறது வந்து போகும் அர்ச்சுனன் கவிதை.மற்றமையை வேண்டி நிற்கிறது.அதே போல கோட்ஸ்டாண்ட் கவிதைகளில் அடையாளத்தை சுமக்கும் உடல் இல்லாமல் போதல் என்ற நிலையைப் பற்றி பேசுகிறார்.

இந்த அடையாளங்களிலிருந்து விடுவித்துக்கொள்ளுதல் என்பது உலகு நீக்கிய ஒரு தரிசனத்தை முன்வைப்பதற்காக அல்ல.அல்லது உலகு கடந்த நிலையை அடைவதற்காக அல்ல.அவை மற்றமை குறித்த அக்கறையை உள்ளடக்கியவை.வீடனன் பிறப்பென்ற பேதைமை நீங்கி ராமனுக்கு நான் ஆட்பட்டேன் என்கிறான்.கும்பகர்ணன் இராவணனிடம் வீடனன் பற்றி சொல்லும் போது அவன் தன் பிள்ளைத்தன்மை நீங்கிவிட்டான் என்கிறான்.பிள்ளைத்தன்மை என்பது பிறப்பின் பால் வரும் பேதைமை.வீடனன் அந்த பிள்ளைத்தன்மை நீங்கி இராமனிடம் சென்று சேர்கிறான்.நகுலன் மற்றமை குறித்த அக்கறையோடு நின்றுவிடுவதில்லை.மற்றமையோடு ஒன்றாகுதல் என்பது நகுலன் படைப்புகளில் தொடர்ந்து வரும் மற்றொரு எண்ணம்.

தான் இராமனைக் கைகூப்பித் தொழுதது பற்றிச் சொல்லும் போது , உண்மையில் யார் யாரைத் தொழுதார்கள் , நான் இராமனிடமிருந்து என்னை வேறாகத் கருதவில்லை, கைகூப்பித் தொழுதல் என்பது யோக முத்திரை , இது தான் கடைசி வார்த்தை என்கிறான்.வீடனன் தன்னை மற்றமையில் கண்டுகொள்கிறான்.மற்றமையாகவே ஆகிறான்.இதுதான் நகுலன் முன்வைக்கும் தரிசனம்.இது அவரது அனைத்துப் படைப்புகளிலும் இருக்கிறது.வீடனன் தனிமொழியில் தெளிவாக பதிவாகியிருக்கிறது.

கோட்ஸ்டாண்ட் தொகுப்பில் எல்லைகள் என்ற கவிதை


..காலக்கறையான்
தின்று கொண்டிருக்கும் மேதை
களின் சிற்ப-சிதலங்கள் , இறந்த
வர்களின் சாந்நித்தியம் இருப்ப
வர்களின் மிரட்டல் – இவை
யெல்லாம் பின்தங்க அவன்
எல்லைகளைக் கடந்து கொண்
டிருந்தான்.


அவன் பயணம் இன்னும்
தொடர்ந்து கொண்டுதான்
இருந்தது.நடுவில் யாரோ
ஒருவர் அவனை நோக்கி
“நீங்கள்? ” என்று உசாவ
அவனுக்கு அவன் பெயர்
கூட மறந்துவிட்டது.

மேதைகளின் சிற்ப சிதலங்கள் ,இருப்பவர்களின் மிரட்டல் ஆகிய இரண்டையும் அவன் கடக்கிறான்.மேதைகளின் சிற்ப சிதலங்கள் என்பவை சித்தாந்தங்களும் , கோட்பாடுகளும், மதங்களும் அன்றி வேறென்ன.நம்மை இந்த சிற்ப சிதலங்களின் வரையறைகள் கட்டுப்படுத்துகின்றன.நகுலன் அவற்றை மீறுவது குறித்து பேசவில்லை, மாறாக அதைக் கடப்பதை பற்றியே தன் படைப்புகளில் பேசுகிறார்.அவனுக்கு அவன் பெயர் கூட மறந்துவிட்டது என்பது அவன் தன் அடையாளங்களிலிருந்து முழுக்க வெளியேறிவிட்டான் என்பதையே குறிக்கிறது.

கோட்ஸ்டாண்ட் கவிதைகளில் வரும் புகழ்பெற்ற ராமச்சந்திரன் கவிதை நாம-ரூபங்கள் சூட்டும் அடையாளங்களிலிருந்து விடுபடுதல் என்பதைப் பற்றிதான் பேசுகிறது.யாருமில்லாத பிரதேசத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது / எல்லாம் என்பது மனிதனை மையப்படுத்தும் பார்வையை கேள்விக்கு உட்படுத்துகிறது.மனிதன் அனைத்தையும் மாற்றும் வல்லமை உள்ளவன் என்பது இருபதாம் நூற்றாண்டில் வலதுசாரி இயக்கங்களும் இடதுசாரி இயக்கங்களும் ஏற்றுக்கொண்ட எண்ணம்.அதை நகுலன் தொடர்ந்து தன் படைப்புகளில் மறுக்கிறார்.மேலும் மனிதன் முழுமையானவன், ஸ்திரமான அடையாளங்களைக் கொண்டவன் என்பதையும் நகுலன் ஏற்கவில்லை.

இவர்கள் என்ற கவிதையில்

 

…எதிரில் இருப்பவன்
பிரக்ஞையின்றித் தங்களைப் பற்றியே
பேசிக் கொண்டிருக்கிறார்கள்

என்று எழுதுகிறார்.இந்த தான் என்ற பிரக்ஞையிலிருந்து எப்படி நழுவுவது விடுபடுவது என்பதை பற்றி மழை மரம் காற்று கவிதைத் தொகுப்பில் விரிவாகச் சொல்கிறார்.

…பல விஷயங்களிலிருந்து

விடுபட்டாலொழிய
காற்றுச் சலிப்பது
இலை அசைவது
திடீரென்று சூரியப்பிராகசத்தில்
இலைகள்
வாடித் தவழ்வது
நமக்குத் தெரியாது

                                            என்கிறார்.மேலும்

..விறகு வெட்டி!

என் நிழலை வெட்டு;
எனக்கு
நானே ஒரு மலடியாகப் போகும்
நிலைமையைப் பார்த்துக் கொண்டிருக்கும்
அவஸ்தையிலிருந்து
என்னை விடுவி!!

என்கிறார். நகுலன் இங்கு என் நிழலை வெட்டு என்று குறிப்பிடுகிறார்.என்னை வெட்டு என்றல்ல. நிழல் என்பதை ஆனவம் , அகங்காரம், அடையாளம்,தர்க்கம்,பிரக்ஞை என்று அர்த்தப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.மேலும் தன்னிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் சொரூப நிலையை பற்றி மழை மரம் காற்று தொகுப்பில் இறுதியில் இப்படி சொல்கிறார்.

 

நான்
என்னை விட்டுச் செல்லும்
நழுவல்
விடிந்தால்
உலகம் நமக்குக் காத்துக்
கொண்டிருக்கிறது;
அதிலிருந்து
இப்படிக் கழன்று கொள்வதில்
                           தான் நமது
விமோசனம்

அடுத்த நாள் விடிந்தால் தன் லெளகீக பரபரப்புகளுக்குள் நம்மை அமிழ்த்த உலகம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதும் அதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள இந்த சொரூப நிலை அவசியம் என்பதையும் தொடர்ந்து தன் படைப்புகளில் முன்வைக்கிறார். அந்த விடுபடுதல் பால் திரிந்து , நினைவுகளிலிருந்து தப்பி, உடலைக் கழற்றி, பிரக்ஞையிலிருந்து நழுவி என்ற பல்வேறு நிலைகளில் நகுலன் படைப்புகளில் வருகின்றன. இந்த விடுபடுதல் வழி அவர் ஒரு ஆன்மிக நிலையை அத்வைத தத்துவத்தை சொல்லவில்லை என்பதே என் எண்ணம்.அவர் சக மனிதனை மட்டுமே இங்கு மற்றமையாக கூறுகிறார்.

மழை மரம் காற்று தொகுப்பில் இறுதியில் தன் கூற்றை மேலும் வலுவாகச் சொல்ல “இவனும் வெகுதூரம் சென்று திரும்பி வந்தவன் தான் சொல்கிறான்” என்று திருமூலரைப் பற்றி சொல்லிவிட்டு திருமந்திரத்தின் கீழ்கண்ட பகுதியை சுட்டுகிறார்.


கொழுந்தினைக் காணிற் குவலயத் தோன்றும்
எழுந்திடங் காணில் இருக்கலுமாகும்
பரந்திடங்காணில் பார்ப்பதி மேலே
திரண்டெழக் கண்டவன் சிந்தையுளானே.

கொழுந்தன் – சுடர் , குவலயம் – உலகம்

பரம் – தத்துவங்களை விட்ட ஆன்மா
பார்ப்பதி – சக்தி

ஞானலிங்கமாகிய ஒளி மயமான சுடரைக் கண்டால் உலகம் தோன்றும்.எழக்கூடிய வல்லமை இருக்குமாயின் இவ்வுலகில் இருத்தலும் கைகூடும், தத்துவங்களை விட்ட ஆன்மாவை உறுதியாகப் பற்றின் – சக்தி உருவில் அமைந்த சிவம் சிந்தையுள் விளங்கும்.1

இந்த மந்திரத்தை நகுலன் கூறும் நிழலை வெட்டு என்பதுடன் பொருத்திப் பார்க்கலாம்.மேலும் நகுலன் தொடர்ந்து உருவத்திலிருந்து அருவம் நோக்கிய பயணத்தைப் பற்றி தன் நினைவுப்பாதை நாவலில், வீடனனின் தனிமொழியில் எழுதுகிறார்.மனிதன் உருவத்தை கடந்து அருவத்தின் உண்மையை அறிய வேண்டும் என்று நகுலன் தன் படைப்புகளில் தொடர்ச்சியாக பதிவுசெய்கிறார்.

நகுலனின் அருவம் உலகம் பொய் என்ற நிலையை நோக்கி பேசவில்லை.அது மற்றமையில் இரண்டறக் கலக்கும் ஒரு அவாவுதலை பற்றியே பேசுகிறது.பெளதீகமான உலகம் இல்லாமல் ஆகிறது என்ற கருத்தை நகுலன் சொல்வதில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.நகுலனின் ஸ்டேஷன் கவிதையை நான் இந்தப் பொருளில் புரிந்து கொள்கிறேன்.

ஸ்டேஷன்

ரயிலை விட்டிறங்கியதும்

ஸ்டேஷனில் யாருமில்லை
அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும் யாருமில்லை
என்பதை;
ஸ்டேஷன் இருந்தது,
என்பதை
“அது ஸ்டேஷன் இல்லை”
என்று நம்புவதிலிருந்து
அவனால் அவனை
விடுவித்துக் கொள்ள
முடியவில்லை
ஏனென்றால்
ஸ்டேஷன் இருந்தது.

இந்தக் கவிதையையும் யாருமில்லாத பிரதேசத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற கவிதையையும் நாம் கவனித்தால் அதில் அவர் மனிதர்களை மட்டுமே குறிப்பிடுகிறார் என்பதை உணரலாம்.பெளதீகமான புற உலகை இல்லாமல் செய்யும் அத்வதை நோக்கிலிருந்து விலகி பிறிது என்ற எண்ணம் அற்ற ஓர் பக்தி நிலையை பற்றி நகுலன் கவனம் கொள்கிறார்.

என்னைப் பார்க்க வந்தவர்

தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்

என்ற கவிதையில் பிறிரை புரிந்து கொள்ளவும் பிறரை அறியவும் விடாமல் தன்னையே ஸ்தாபித்துக்கொள்ள மனிதன் எந்தளவு பிரயத்தனப்படுகிறான் என்பதை கூறுகிறார்.

இந்த நான் என்ற பிரக்ஞையிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்வதையும் உருவங்களிலிருந்து அருவங்கள் நோக்கிய பயணத்தையும் முன்வைப்பவை நகுலனின் படைப்புகள்.நகுலனின் கவிதைகள் பக்திக் கவிதைகளும் கூட.இங்கு மற்றமை கடவுளாக இல்லாமல் மற்றொரு மனிதனாக இருக்கிறது.மற்றமை குறித்த அக்கறை தான் அனைத்து பொதுநல செயல்களுக்குமான முதல் படி. நகுலன் அதை நோக்கி நம்மை அழைத்துச்செல்கிறார்.நாம் செல்வோம்.

1 - திருமந்திரம் விரிவுரை – ஜி.வரதராஜன்

ஷங்கர் ராமசுப்ரமணியன் தொகுத்த நகுலன் 100 அருவம் உருவம் நூலில் இடம்பெற்ற கட்டுரை.



வந்து போகும் அர்ச்சுனன்

 

 


 

அடையாள அரசியல் மிக அதிக அளவில் மக்களை பிளவுபடுத்தும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.சில அடையாளங்கள் பிறப்பால் வருபவை.சில நாம் விரும்பி பெற்றுக்கொள்பவை, அடைபவை.அடையாள எல்லைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் அவாவை உள்ளடக்கியவை நகுலனின் படைப்புகள்.நகுலனின் தன் படைப்புகள் வழி அவர் இந்த அடையாள அணித்திரள்விலிருந்து விடுவித்துக்கொள்வதை பற்றியே முதன்மையாக அக்கறை கொள்கிறார்.

கோட்ஸ்டாண்ட் கவிதைகள் தன் உடலை எடுத்து கோட்ஸ்டாண்டில் மாட்டிவிடும் எளிய கற்பனையிலிருந்து  சாத்தியப்பட்ட கவிதைகள்.நாம் கோட்ஸ்டாண்டில் உடைகளை மாட்டுவோம்.உடலைக் கழற்றி தொங்கவிட்டால் என்ற சர்ரியலிஸ நோக்கே அந்தக் கவிதைகள் உருக்கொள்ள காரணம்.ஆனால் அந்தக் கவிதைகள் வழி அவர் ஒரு அரூப உலகை சிருஷ்டித்து வேடிக்கைக் காட்டி நின்று விட விரும்பவில்லை.அவை அந்தக் கவிதைகளின் நோக்கமும் அல்ல.அவர் தன் தத்துவத்தை அந்தக் கவிதைகள் வழி கூறுகிறார்.உடல் தான் அணைத்து வேறுபாடுகளுக்குமான துவக்கமாக இருக்கிறது.உடலைக் கழற்றுதல் என்ற இந்தக் கவிதைகள் உடல் பொய் என்ற தரிசனத்தை பேசவில்லை.நகுலன் உடல் மாயை என்று சொல்லும் அத்வைதி அல்ல.அத்வைதம் உடலை மறுத்து ஆன்மாவை பிரம்மத்தின் சூக்கும வடிவமாக மாற்றி ஏகம் அத்விதீயம் , ஒன்று இரண்டற்றது என்கிறது.நகுலன் உலகத்தை மாயமாக பார்க்கவில்லை.மனிதன் தன்னை மீறினால் ஒழிய ஒன்றும் முடியாது என்பது என் சித்தாந்தம் என்று நவீனன் நினைவுப்பாதையில் எண்ணிக்கொள்கிறான்.மனிதன் தன்னை மீற இருக்கும் பல்வேறு சாத்தியங்களில் ஒன்று உடலைக் கழற்றுதல்.அதுதான் கோட்ஸ்டாண்ட் கவிதைகள்.

மனிதன் தன்னை மீறுவது என்பது தன் அடையாளத்தை மீறுவதுதான்.அவன் எல்லைகளை கடந்துகொண்டிருக்கிறான் என்கிறார் நகுலன்.கலை வெளிப்பாடுகளில் உருவம் அருவம் இரண்டும் உள்ளன.உருவம் கொண்டு அருவம் கண்டு மறுபடியம் உருவத்தை பிரதிஷ்டை செய்கிறான் இன்றைய மனிதன்.

நினைவுப்பாதையில் நடராஜனுக்கும் நவீனனுக்கும் இடையிலான ஓர் உரையாடல்.

“என்ன செய்வது பார்க்கிறோம்,பேசுகிறோம்,சிந்திக்கிறோம்.கனவு காண்கிறோம்,நாகரிகம் வளர ,வளர நாற்காலியும் அதைச் செய்த தச்சனும் ஆதியில் ஒருவனும் ஒன்றும் பினணந்திருந்ததைப் போல இப்போது முடியாது.ஸமைன் வீல்…”

“யார் இந்த ஸமைன் வீல்”

“சச்சிதானந்தன் பிள்ளையை போல இன்னொரு பைத்தியம் என்று வைத்துக்கொள்”

“ஸமைன் சொன்னது போல தச்சனை விட எஞ்சினியர் மேல்.ஏனென்றால் அவனால் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள முடிவதால், சந்தேகங்கள் ஊடே சஞ்சரிக்க முடியுமென்பதால் இதெல்லாம் படைப்பு இலக்கியத்திற்கும் பொருந்தும்.மேலும் நீ இன்னும் என் நாவலைப் படிக்கவில்லை. ஆதலால் அதைப் பற்றி இப்பொழுதே எப்படி அபிப்பிராயம் சொல்ல முடியும்?”

“அதாவது ஸ்தூலமும் சூக்குமமும் ஒன்றிலொன்று இணையும் பொழுது மற்றொன்று தோன்றி அதன் முழு உருவத்தைத் தன் இயல்பில் எய்துகிறது என்கிறாய்”

நகுலன் கல்குதிரை நேர்காணலில் தன்னைக் கருத்துமுதல்வாதி அல்லது பொருள்முதல்வாதி என்று தொகுக்க இயலாது என்கிறார்.அவரை இயங்கியலாளர் என்று தொகுக்க முடியும் என்று எண்ணுகிறேன்.நிலப்பிரபுத்துவக் காலத்தில் தச்சன் இருந்தான்.முதலாளித்துவ அல்லது சோஷியலிசக் காலத்தில் பொறியியலாளன் வருகிறான்.தச்சன் நாற்காலியோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான். பொறியியலாளன் தான் படைக்கும் பொருளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை.பொதுவாக நாம் இதை அந்நியமாதல் என்ற கோட்பாடுடன் இணைத்து புரிந்து கொள்கிறோம்.தச்சன் தன் உழைப்பின் பருண்மை வடிவத்தை பார்க்க உணர முடிகிறது.அதன் பயனை அறிய இயல்கிறது.அவன் தச்சன் , ஆசாரி என்றே அழைக்கப்படுகிறான்.அவனுக்கு ஓர் அடையாளம் உண்டு.அவனது எல்லைகள் சில நூறு கீலோமீட்டருக்குள் அடங்கிவிடுபவை.ஆனால் ஒரு பொறியியலாளன் தான் அதுவரை கொண்டவற்றை கொண்டு அருவமான ஒரு கோட்பாட்டை உருவாக்குகிறான்.ஆற்றல் ஒன்றிலிருந்து ஒன்றாக மாற முடியும் , ஆனால் அழியாது என்பது வெப்ப இயக்கவியலின் முதல் விதி.இரண்டாம் விதி அதே நேரத்தில் ஒரு ஆற்றல் முழுமையாக வேறொன்றாக மாறாது , அவை வேறு ஆற்றல்களாக மாறி வீனாகவும் செய்யும் என்றும் சொல்கிறது.அதாவது மின்சாரத்தை கொண்டு மோட்டரை சுற்ற வைத்து பின் அதில் ஒரு ஜெனரேட்டரை இணைத்து அதே அளவிலான மின்சாரத்தை உருவாக்க இயலாது.அதில் ஆற்றல் வீனாகும்.இதற்கு இரண்டாம் வெப்ப இயக்கவியல் விதி என்று பெயரிடுகிறான்.விதி செய்கிறான் பொறியியலாளன்.அவன் உலகத்தை சோதனைக் கூடமாக மாற்றி அருவப்படுத்தி அதிலிருந்து விதி சமைத்து உருவங்கள் படைக்கிறான். இங்கே நாம் பொதுவாக சொல்லும் முதலாளித்துவ சமூகத்தில் அந்நியமாதல் உண்டு என்பதை கடந்து எப்படி இன்றைய மனிதனின் பெளதீக உலகம் அருவமாக அவனுள் உருக்கொள்கிறது என்கிறார் நகுலன்.இதனால் தான் ஆப்பிள் கிழே விழுந்ததை பார்த்து புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் நியூட்டன் என்பது எத்தனை எளிய அபத்த வாதம் என்கிறான் நவீனன்.புத்தர் மூன்று துயரக்காட்சிகளை கண்டு துறவறம் பூண்டார் என்ற அபத்த வாதத்தையும் நாம் இதனோடு இணைத்துப் பார்க்கலாம்.மனிதன் சந்தேகங்கள் ஊடே சஞ்சரிப்பவன்.அப்படி சஞ்சரித்து பிரச்சனைகளைப் புரிந்து கொள்கிறான்.இந்தக் கருத்தை தமிழில் வேறு எழுத்தாளர்கள் எழுதி நான் கண்டதில்லை.நகுலனை இந்த அடிப்படையில் இயங்கியலாளர் என்று சொல்ல முடியும்.

இருத்தலியம் மனிதனை சுதந்திரமானவனாக கருதுகிறது.அவன் தனிமனிதன் என்கிறது.அவனது செயல்களுக்கு அவனே பொறுப்பு என்று சொல்கிறது.நகுலன் இருத்தலியவாதத்தை தன் கவிதைகள் வழி நாவல்கள் வழி முன்வைத்தார் என்று சொல்ல இயலும்.தனிமையை இருத்தலிய அவதியை தன் கவிதைகள் வழி முன்வைத்தார்,அவரது நாவல்களில் வரும் பிளவுண்ட ஆளுமை அந்த அந்நியமாதலால் உருவாக்கிய ஒன்றுதான் என்றும் சிலர் சொல்லக்கூடும்.ஆனால் நகுலன் இருத்தலியவாதியும் அல்ல, நவீனத்துவரும் அல்ல.உண்மையில் நகுலன் அதன் மறுதரப்பை சொல்ல முனைந்தார்.

நினைவுப்பாதை நாவலில் - மேல்நாட்டில் மனிதனின் ஆற்றலை மிகைப்படுத்துகிறார்கள் என்கிறான் நவீனன்.மனிதன் கட்டுண்டவன்.நினைவுப்பாதையில் நவீனன் சிவன் , நடராஜன் என்ற இலக்கிய நண்பர்களுடன் தொடர்ந்து உரையாடுகிறான்.நவீனன் சுசீலா என்ற பெண்னை விரும்புகிறான்.அவளுக்கு வேறு யாருடனோ திருமணம் நிகழ்கிறது.நவீனன் தன்னைப்பற்றிய தன் நண்பர்களைப் பற்றிய சுசீலா குறித்த நாவலை டயரி வடிவில் எழுதுகிறான்.ஏன் டயரி வடிவில் எழுத வேண்டும்.ஏனேனில் நாட்குறிப்பு உண்மைக்கு மிக அருகில் வருகிறது.நவீனன் நகுலனுடன் மனம் விட்டு பேச பிரியப்படுகிறான்.ஆனால் நேரடியாக பேச இயலவில்லை.ஏனேனில் உண்மையை நேரடியாக எதிர்கொள்ளும் தைரியம் மனிதனுக்கு இருப்பதில்லை.அதனால் நாட்குறிப்பாக எழுதுகிறான்.இறுதியில் நவீனன் சில நாட்கள் மனநலவிடுதியில் இருக்கிறான்.குணமாகி வீடு திரும்புகிறான்.தன்னை அழிப்பது , கரைத்துக்கொள்வது , விடுவித்துக்கொள்வது , மழை மண்ணை புணர்வது போல இரண்டரக்கலப்பது என்று தனிமனித இருப்பை கடந்த நிலையை நகுலன் முன்வைக்கிறார்.

நகுலன் என்ற பெயர் குறித்து எம்.டி.முத்துகுமாரசாமி தன் பெயரில் என்ன இருக்கிறது என்ற கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறார்.நகுலன் பாண்டவர்களில் ஒருவன்.ஆனால் அர்ஜூனன் போல பீமன் போல தனித்த அடையாளம் அற்றவன்.அவன் பாண்டவர்களின் நிழல்.நிழல்கள் தனித்த இருப்பு இல்லாதவை.நகுலனின் பிளவுண்ட ஆளுமை நவீனன்.மற்றமையாகவே தன்னை காணுதல் தான் நவீனன்.நவீனனின் மனம் நதி தன் பாதை மாறி பிரவாகிப்பது போல கோர்வையற்று பாய்கிறது.மழை மரம் காற்று கவிதையில் இவ்வாறு எழுதுகிறார்.

கண்ணாடிகள் சூழ
நான் ஏன் பிறந்தேன்
பகல் பொழுது
என்னைச் சுற்றி வட்டமிடுகிறது
ராத்திரியில்
ஒவ்வொரு நக்ஷத்திரமும்
என்னை ப்ரசவிக்கிறது
நான் என்னைப்
பார்த்துக் கொண்டிருந்து
வாழ விரும்பவில்லை

தன் தனிமனிதப் பிரக்ஞையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் அவாவுதல் நகுலனின் படைப்புகளில் தொடர்ந்து வருகிறது.நினைவுப்பாதை – பார்க்க பயமாக இருக்கிறது / பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை என்று நினைவுப்பாதையை கூறுகிறார்.நம் நினைவுகள் நம்மை கரைந்து செல்ல இயலாமல் தடுக்கின்றன.நமது பிரக்ஞை நினைவுகளின் வழியே விழிப்புடன் இருக்கிறது.நினைவுகளையே நாம் அறிவு என்றும் கூறுகிறோம்.இந்த எண்ணம் நகுலன் எழுத்தில் மட்டும் அல்ல சமீபத்தில் எழுதும் சபரிநாதன் எழுத்தில் கூட தென்படுகிறது.

அடையாள அரசியல் பிறர் என்ற கதையாடலை கட்டி எழுப்புகிறது.இன்றைய தனிமனிதர்கள் உலகமே அடையாள அரசியலின் அடித்தளம்.தனிமனிதப் பிரக்ஞை இல்லையேல் அடையாள அணித்திரள்வு சாத்தியமில்லை.ஏனேனில் அங்கு பிறர் சாத்தியமில்லை.பிறர் என்பது நரகம் என்று மீள முடியுமா நாடகத்தில் சார்த்தர் எழுதியது பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.இருத்திலியத்தின் இருண்ட பக்கங்கள் பிறர் குறித்த அதன் எண்ணங்கள்.  

நினைவுப்பாதையில் நடராஜன் எழுதிய அனுபவ சத்தியங்கள் என்ற நாவல் வெளியிடப்படுகிறது.நாவலின் முன்னுரையில் நடராஜன் 20ஆம் நூற்றாண்டில் எப்படிப் பொருளாதாரம், பதவிமோகம்,புகழாசை ஆட்சி செலுத்துகின்றன என்பது குறித்து எழுதியிருக்கிறான். “பிதாவே எங்களை மன்னித்துவிடு , எங்களுக்கு நாங்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாது” என்று சச்சிதானந்தம் பிள்ளை சொல்லக்கூடும் என்று நினைத்துக்கொள்கிறான் நவீனன்.மனிதனை மீறியது ஒன்றுமில்லை என்கிறான் நடராஜன். எப்படி அனுபவத்தை அழிப்பது என்று தனக்குத் தெரியவில்லை , ஆனால் அதுவே தன் பாதை என்று எண்ணுகிறான் நவீனன்.

உடலை கோட்ஸ்டாண்டில் தொங்கவிடுவதின் வழி மற்றும் மனம் பிரக்ஞையிலிருந்து தப்பிப்பது ஆகியவற்றின் வழி நகுலன் வேண்டுவது அடையாளங்களிலிருந்து அனுபவங்களிலிருந்து நினைவுகளிலிருந்து விடுவித்துக்கொள்ளும் ஒரு பாதையைத்தான்.இதன் பயன் என்ன.பிறருக்கும் தனக்குமான எல்லைகளை அறுத்து அடையாளமற்ற பெருவெளியை உருவாக்க முனைகிறார் நகுலன்.அப்படியான அடையாளமற்ற பெருவெளி மற்றமை என்பதை இல்லாமல் செய்யும்.

ஆல்பர் காம்யூவும் இப்படியான ஒரு மானுட நேசத்தை முன்வைக்கிறார்.ஆனால் காம்யூ அதை மனிதன் தன் முழுப் பிரக்ஞை வழி அடைய வேண்டும் என்கிறார்.நீங்கள் இந்த உலகம் அபத்தம் என்று ஏற்க வேண்டும். இந்த அபத்த உலகை உங்கள் தினசரி வாழ்வில் எதிர்கொள்ள வேண்டும்.அனைத்தும் அபத்தம் என்பதால் அதற்கு எதிரான கிளர்ச்சியே நமது இருப்பை அர்த்தப்படுத்துகிறது.அப்படியாக மானுட நேசம் சாத்தியம் என்கிறார் காம்யூ.ஆனால் நகுலன் வாழ்க்கை அபத்தமானது என்று சொல்லவில்லை.அவர் பிறர் என்ற ஒன்று இல்லை என்ற என்ற நிலைக்கான தாவுதலை பற்றியே பேசுகிறார்.

ராமச்சந்திரன் கவிதையில் ராமச்சந்திரன் என்பதன் அடையாளம் இல்லாமல் போகிறது.யாருமில்லாத பிரதேசத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற கேள்விக்கு நகுலன் எல்லாம் என்கிறார்.இந்த உலகத்தை மாற்றுவது தான் நம் வேலை என்று மார்க்ஸ சொன்னதை மறுப்பவை நகுலன் கவிதைகள்.மனிதன் நீங்கள் எண்ணுவது போல அத்தனை பெரிய ஆளெல்லாம் இல்லை என்கிறார் நகுலன்.

நினைவுப்பாதை நாவலில் வரும் கொல்லிப்பாவை – 1 என்ற கவிதையின் தொடக்க வரிகள் இவை.

திரெளபதி அவள்
வந்து போகும் அர்ச்சுனன் நான்
வில்லெடுத்துக் கணைபூட்டி
நாண்வளைத்துக் குறிவிழ்த்தி
செளரியம் காட்டிச் சமர் செய்து
காதல் பெற்றான் ஒருவன்
ஆனால்
வந்து போகும் அர்ச்சுனன் நான்


நாக்கடித்து வாய்ப்பறை கொட்டி
வோதாந்தக் கயிறு திரித்துக்
குறிதான் ஏதுமின்றி
ஆண்மை தோற்று
பேடியெனப் பால்திரிந்து
அவள் உருக் கண்டு
உள்ளங் குலைந்து
உரம் வேண்டி
வந்து போகும் அர்ச்சுனன் நான்

 

திரெளபதியை நாண்வளைத்துச் காதல் பெற்ற அர்ச்சுனன் அல்ல தான், அடையாளம் அற்று வந்து போகும் அர்ச்சுனன் நான் என்கிறான் நவீனன். இங்கும் தன்னிலை அற்று மற்றொன்றில் தன்னை கரைத்துக்கொள்ளும் நிலை தான் கவிதையில் வருகிறது.நகுலனின் மனிதர்கள் முழுமையானவர்கள் அல்ல.அவர்கள் பிறிதொடு இணைந்து முழுமைக்கு வேண்டுகிறார்கள்.பிறிது இல்லாமல் முழுமை சாத்தியமில்லை.தன்னை அழித்து மற்றமையில் தன்னை கண்டுகொள்ள விரும்புகிறார்கள் நகுலனின் தனிமனிதர்கள்.நகுலனே நவீனனாக பிளவு கொள்கிறான்.பிறரில் தன்னை காண விரும்புபவர்களே பிளவுண்ட ஆளுமையாகுகிறார்கள்.நாம் நமது அகங்காரத்தை முழுமையாக இழந்து பிறருடன் – அவர் உங்கள் காதலியாகவோ மனைவியாகவோ நண்பனாகவோ இருக்கலாம் – ஆனால் எந்த எல்லை வரை அதை உங்களால் செய்ய முடியும். நீங்கள் யாரையோ ஏமாற்றியதைப் பற்றி அப்பட்டமாக இன்னொருவருடன் - அவர் உங்களுக்கு எவ்வளவுதான் நெருக்கமானவர் என்றாலும் – உங்களால் பகிரந்து கொள்ள இயலாது.அப்படியே பகிரந்துகொண்டாலும் அதை எந்தளவு முழுமையாக சொல்ல முடியும். உண்மைக்கு மிக அருகில் செல்லும் போது நீங்கள் உங்களை நியாயப்படுத்த ஏதேனும் ஒரு புனைவை உருவாக்கி விடுவீர்கள்.மனிதனால் அப்பட்டமாக பிறிதொடு இணைவது சாத்தியமில்லை.நகுலன் நவீனன் என்ற பிளவுண்ட ஆளுமை இந்த உண்மையை மிக அருகில் பார்ப்பதற்கான ஓர் ஏற்பாடாகவும் கொள்ள முடியும்.

உடல் அற்று போதல், அறிவு தான் நினைவு என்றால் நினைவு இல்லாது போதல், மனம் பிறழ்ந்து போதல், பால் திரிந்து பிறிதொடு ஒன்றாகுதல் ஆகியவைதான் நகுலன் முன்வைக்கும் விடுதலைக்கான பாதை.இருத்தலியத்தில் பிறர் என்பது நரகம் என்ற பிறழ்வு நிகழும் போது நகுலன் தான்Xபிறர் என்ற எல்லைகளை கடக்கும் விடுதலையை இணக்கத்தைப் பற்றி பேசுகிறார்.

இருப்பதற்கென்று தான் வருகிறோம் / இல்லாமல் போகிறாம் என்பது வருத்தத்தை தனிமையை சொல்லும் நிலை அல்ல.மாறாக தனிமனிதன் என்ற உணர்வு இல்லாது போதலே நகுலன் முன்வைக்கும் சாத்தியம்.வானத்தின் பகுதியாகிவிடும் பறவை போல அல்ல மண்ணின் பகுதியாகிவிடும் உடல் போல.

அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு நாவலில் பதினெட்டு வயது இளைஞன் தான் சுமந்து நிற்கும் அடையாளங்களே தன்னை ஒரு சிறுமியிடம் எதிரியாக காண்பிக்கிறது என்பதை உணர்கிறான்.அவன் தான் சுமந்து நிற்கும் அடையாளங்களை கண்டு அருவெருப்பு அடைகிறான்.அவன் அங்கிருந்து ஓடுகிறான்.தன் அடையாளங்களிலிருந்து ஒடுகிறான். அவன் அமைப்புகளில் தன்னை பொருத்திக்கொள்ள இயலாத தனிமனிதன் ஆகிறான்.நகுலனும் அந்த அடையாள அழிப்பை தான் முன்வைக்கிறார்.ஆனால் அவர் அடையாளம் அழித்து தனிமனிதன் ஆவதை பேசவில்லை. அடையாளம் அழித்து , உடல் அழித்து, நினைவுகளிலிருந்து தப்பி, பிறிதாகும் நிலை பற்றி பேசுகிறார்.அந்தப் பதினெட்டு வயது இளைஞன் சிறுமியாகும் நிலை.இந்த இடத்தில் அசோகமித்திரனும் நகுலனும் மாறுபாடுகிறார்கள்.அசோகமித்திரனும் நகுலன் ஓரெல்லை வரை ஒன்றாகி பிறகு பிரிகிறார்கள்.நான் கவனித்தவரை அசோகமித்திரனும் நகுலனும் தமிழில் தங்கள் இலக்கியங்களின் வழி ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர்கள்.இவை எளிதானவை அல்ல.மிகப்பெரிய சாதனை.அரிதாகவே நிகழக்கூடியவை.நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதினாலும் அப்படியான ஒரு நிகழ்த்துதல் சாத்தியமில்லை.ஏனேனில் அது பழகிய பாதை அல்ல.

நகுலன் இருத்தலியவாதியோ , நவீனத்துவரோ அல்ல, அத்வைதியோ அல்ல.அவரை பின்நவீனத்துவர் என்று சொல்ல முடியும்.இயங்கியலாளர் எனலாம்.தனிமனிதன் மீது எதையும் ஏற்றாதவர் என்பதால் அவர் இருத்தலியவாதி அல்ல.உடல் பொய் என்ற வேதாந்தம் பேசமால் உடல் கடந்து பிறிதொடு ஐக்கியமாகும் நிலையை அவர் பேசினார்.அதனால் அவர் அத்வைதியும் அல்ல.இது நகுலனின் நூற்றாண்டு.தமிழில் நகுலன் குறித்து எழுதப்பட்டவற்றுள் பெரும்பாலானவை அவரை எப்படி தொகுத்துக் கொள்வது என்று தெரியாமல் விக்கித்து நிற்பவை.அல்லது நகுலன் எளிய விஷயங்களை புரியாத வகையில் பேசுகிறார் என்று புறம் ஒதுக்குபவை.நகுலன் தன் கவிதைகள் வழி, தன் நாவல்களின் மொழி வழி ,கண்டுபிடிப்புகள் வழி தமிழின் மகத்தான படைப்பாளியாக வீற்றிருக்கிறார்.அவரது நோக்கு, தத்துவம் அவரது நாவல்களில் , கவிதைகளில் , கதைகளில் எளிதில் கண்டுகொள்ளும் வகையிலேயே இருக்கின்றன.நாம் தான் நம் அகங்காரங்களை களைந்து அவர் சொல்வதை புரிந்துகொள்ள முயல வேண்டும்.இன்றைய அடையாளங்கள் சூழ் உலகின் ,தனிமனித உரிமைகளை மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் உலகின் எதிர்க்குரல் நகுலன்.

கனலி இணைய இதழில் பிரசுரமான கட்டுரை.

 

கோட்ஸ்டாண்டில் தொங்கும் உடல்




நகுலனின் கோட்ஸ்டாண்ட் கவிதைகள் என்று தொகுக்கப்பட்ட கவிதைகளில் முதல் கவிதை "இல்லாமல் இருப்பது".

இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்.

நமது உடல் அதன் புலன்கள் ஒரு இருப்பை கோருகிறது.அது தன்னை நிறுவிக்கொள்ளவே பிரயத்தனம் கொள்கிறது.ஆனால் காலம் கண்ணாடியாகக் கரைகிறது.ஒரு நதியாக ஒரு ஜலப்ரளயமாகச் சுழித்துச் செல்லுகிறது.விறைத்த கண்களுடன் அதன் மீது செத்த மீன்கள் செல்கின்றன.இறுதியில் நாம் இல்லாமல் போகிறோம்.நகுலன் இந்த காலத்தால் மறைந்துவிடும் நிலையைத்தான் சொல்கிறாரா என்றால் இல்லை.கோட்ஸ்டாண்ட் கவிதைகள் தொகுப்பில் உள்ள இந்த முதல் கவிதைக்கு கடைசிக்கவிதை என்ற தலைப்பிடப்பட்ட கவிதையே பதில்.

கோட்ஸ்டாண்ட் கவிதைகள் 59 வயது திருமணம் ஆகாத தனிமனிதனின் இருப்பு சார்ந்த துயரை சொல்லும் புகார் கவிதைகள் என்று வகைப்படுத்தலாம்.அது எளிதானதும் கூட.ஆனால் அவை அதுமட்டுமே அல்ல.உண்மையில் அவை அதுவல்ல.நகுலன் அல்லது நவீனன் அல்லது அவனுக்கு 59வயது ஆகிவிட்டது.வாழ்க்கை சலித்துவிட்டது.உடலின் உறுப்பான கையை வைத்து நிறைய எழுதிவிட்டான்.கண் நிறைய பார்த்துவிட்டது.மூளை நிறைய சிந்தித்துவிட்டது.மனம் அதையும் இதையும் நினைத்து அலுத்துவிட்டது.சரி, இந்த புலன்களை தாங்கி நிற்கும் உடலை சற்று தூக்கி அந்த கோட்ஸ்டாண்டில்தான் மாற்றி வைப்போமே என்று அவன் நினைக்கிறான்.விருக்ஷம் அற்ற பொந்தாக மாறினால் எப்படியிருக்கும் என்பதாகவும் இந்த கவிதைகளை பார்க்கலாம்.

அப்போது அந்த விருக்ஷம் அற்ற பொந்தாக மாறிய அவன் வெளி வாசல் திண்ணையில் இருக்கிறான்.அங்கு கண் தெளிவான பார்வைக்கு, வாய் வெற்றிலை பாக்குக்குப் பரபரக்கிறது.ஆனால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.அப்போது அந்த உடல் அவனை பார்த்து கேட்கிறது.என்னை தூக்கி எறிந்துவிட்டாய் இப்பொழுது தெரிகிறதா என்று.

வேறொரு நாள் நள்ளிரவில் சூரல் நாற்காலியில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றான்.அருகில் தரையில் ஒரு பாம்பு சுருண்டு கிடக்கிறது.இங்கு பாம்பு சுருண்டு கிடக்கிறது என்பது உடல் அற்று நெளிந்து நெளிந்து தன்னையே சுற்றிக் கொண்டு கடைசியில் தலையும் வாலும் ஒன்று சேர வெறும் சுன்னமாகக் சுருண்டு கிடக்கும் நிலைதான்.
சுன்னமாகக் சுருண்டு கிடக்கும் அவன் எல்லைகளைக் கடந்து கொண்டிருக்கிறான்.வெறும் சுன்னமாக மாறியவன் உடல் அற்றவன்.உடல் அற்றவன் புலன்கள் அற்றவன்.புலன்கள் அற்றவனிடம் காமம்,குரோதம்,கோபம் ஆகிய உணர்வுகளை தூண்ட முடியாது.சிலையாக வீற்றிருக்கும் மேதைகளை காலக்கறையான் திண்றுகொண்டிருக்கிறது.அவன் லட்சியவாதங்கள் தோற்றுவிட்டதால் துவண்டு போய் டாஸ்மாக்கில் நண்ணீர் அருந்த போவதில்லை.ஏனேனில் அவனுக்கு இருப்பே இல்லை.இருப்பு அற்றவனுக்கு உலகம் இல்லை.உலகம் அற்றவனுக்கு லட்சியவாதங்களும் மேதைகளும் அவர்களுடைய சிலைகளும் அவர்கள் உருவாக்கிய சித்தாந்தங்களும் ஒன்றுமில்லை.அவன் அதை கடந்துசெல்கிறான்.இறந்தவர்களின் சாந்நித்தியம் , இருப்பவர்களின் மிரட்டல் இதுவும் இனி அவனை ஒன்றும் செய்ய முடியாது.அவன் எல்லோரும் பெளதிக விதிகளுக்கு உட்பட்டு பின்தங்கி நிற்கையில் எல்லைகளை கடந்துகொண்டிருக்கிறான்.அப்போது அவனை யாரோ நீங்கள் யார் என்று கேட்கிறார்கள்.அவனுக்கு அவன் யார் என்பது மறந்துவிட்டது.அவன் இல்லாமல் ஆகிறான்.அவன் அடையாளம் அற்றவனாக மாறுகிறான்.ஆக நகுலன் முன்வைக்கும் இல்லாமல் போகிறோம் என்பது உடல் அற்று சுன்னமாக ஒரு பொந்தாக மாறிய நிலையில் எல்லைகளை கடப்பதால் யாருமற்றதாக மாறும் நிலை.

இதே கோட்ஸ்டாண்ட் தொகுப்பில் தாடி என்று ஒரு கவிதை இருக்கிறது.தாடி வைப்பது , மொட்டை அடித்துக்கொள்வது நாம் அறிந்துதான் செய்கிறோம்.உடல் வழியாக ஒரு அடையாளத்தை உருவாக்குகிறோம்.நான் பார்த்தவரை நகுலனின் எந்த புகைப்படத்திலும் அவருக்கு தாடியில்லை.

இறுதியாக உடலை கோட்ஸ்டாண்டில் மாட்டிவிட்டு வெளியில் சுன்னமாக மாறி எல்லைகளை கடந்து அவர் வெளிதிண்ணையில் அமர்ந்திருக்கிறார்.அப்போது ராமச்சந்திரன் என்று ஒருவர் அவரை பார்க்க வருகிறார்.அவரை ராமச்சந்திரனா என்று கேட்கிறார்.வந்தவர் ராமச்சந்திரன் என்கிறார்.அதன் பின் இவர் எந்த ராமச்சந்திரனா என்று கேட்கவுமில்லை அவர் சொல்லவுமில்லை.ஏனேனில் வெளித்திண்ணையில் அமர்ந்திருப்பவர் இந்த ராமச்சந்திரனின் உடலை கழற்றி கோட்ஸ்டாண்டில் மாட்டிவிட்டால் அவரும் தன்னை போலவே ஒன்றுமில்லைதான் என்பதை அறிந்துவிட்டார்.அதனால் எல்லா ராமச்சந்திரன்களும் சாரம்சத்தில் ஒன்றுதான் , ஒன்றுமில்லையும்தான் என்பதால் அவர் எதுவும் கேட்கவில்லை.

ராமச்சந்திரன் சென்ற பின் அதே வெளித்திண்ணையில் அவர் அந்தி பொழுதில் அமர்ந்திருக்கிறார்.கையெழுத்து மறையும் வேளையில் மரம்,தந்திக்கம்பம், வீடு எல்லாமே மறைகின்றன.இருள் மாத்திரம் எஞ்சி நிற்கிறது.நம் கண் விழியில் ஒளிபட்டு பிரதிபலிக்காததால் மரம் ,தந்திக்கம்பம் , வீடு எல்லாம் மறைந்துவிட்டன.ஆனால் அவை உண்மையில் இருக்கின்றன.நாம் இல்லாவிட்டாலும் இருக்கும்.நாம் எதையும் உருவாக்குவது இல்லை.

யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம் 

என்ற கவிதையை இப்படி மாற்றி எழுதலாம்.

எல்லோரும் இருக்கும் பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
ஒன்றுமில்லை.

இங்கு "யாருமில்லாத" என்பதிலும் "எல்லோரும்" என்பதிலும் வருவது மனிதர்கள் மட்டும்தான்.மரம் , தந்திக்கம்பம் ,வீடு ஆகியவற்றை இவை குறிப்பதில்லை.அதையும் அவரை ஸ்டேஷன் என்ற கவிதையில் சொல்லிவிட்டார்.

ரயிலை விட்டிறங்கியதும்
ஸ்டேஷனில் யாருமில்லை
அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும் யாருமில்லை
என்பதை;
ஸ்டேஷன் இருந்தது,
என்பதை
‘அது ஸ்டேஷன் இல்லை’
என்று நம்புவதிலிருந்து
அவனால் அவனை
விடுவித்துக் கொள்ள
முடியவில்லை
ஏனென்றால்
ஸ்டேஷன் இருந்தது.

ஆக , இந்த "யாருமில்லாத" என்பது மனிதர்களை மட்டுமே குறிக்கின்றது என்பது முக்கியம்.ஏனேனில் நகுலன் முன்வைப்பது அத்வதை நோக்கு அல்ல.நீயே அது , அனைத்தும் பிரம்மம் என்று அத்வைத்த தரிசனத்தை தன் கவிதைகளில் அவர் முன்வைக்கவில்லை.நகுலனின் இந்த கோட்ஸ்டாண்ட் கவிதைகள் நாம் நமது உடல் வழி அடையாளங்களை கழற்றி கோட்ஸ்டாண்டில் மாட்டிவிடுவதன் மூலமாக "நாம் ஒன்றுமில்லை" என்ற தீவிரமான ஆன்மிக நிலையை அடைவதை குறித்து பேசுகின்றன.நாமும் நமது  அடையாளங்களை சுமந்து திரியாமல் சற்று வெளிவாசல் திண்ணையில் அமரந்து தளர்வான மனநிலையில் கண்ணாடியாக கரையும் காலத்தை வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்திருக்கலாம்.அப்போது அதில் நாம் விறைத்த கண்களுடன் செத்த மீன்களாக மிதந்துகொண்டிருப்பதை பார்த்து புன்னகைக்கலாம்.