Showing posts with label பெளத்தம். Show all posts
Showing posts with label பெளத்தம். Show all posts

இந்திய பெளத்தம்

 

பெளத்தம் பற்றி இரண்டு விதமான பார்வைகள் தமிழில் இருக்கின்றன.ஒன்று அதற்கும் வேதாந்தத்திற்கும் பெரிய வித்யாசங்கள் இல்லை என்ற நோக்கு.பெளத்தம் வேதங்களை முழுக்க நிராகரிக்கிறது என்று சொல்ல இயலாது என்றும் வேதங்களின் தொடர்ச்சியாகவே பெளத்தத்தை பார்க்க முடியும் என்ற பார்வை.மற்றது பெளத்தம் முழுக்க தனித்த மரபை கொண்டது,அது வேதங்களிலிருந்து எதையும் பெற்றுக்கொள்ளவில்லை என்னும் பார்வை.
 
பொதுவாக பெளத்தம் வேதங்களை , ஆன்மாவை , சாதிகளை மறுக்கும் ஒரு கருத்தியலாக இங்கே இடதுசாரி சிந்தனையாளர்கள் முன்னெடுக்க விரும்புகிறார்கள்.அயோத்திதாசர் ஓடுக்கப்பட்டவர்கள் உண்மையில் பூர்வ பெளத்தர்கள் என்றும் நாம் பூர்வ பெளத்தத்தை மீட்டெடுப்பதே பொற்காலத்திற்கு திரும்பும் வழி என்றார். அயோத்திதாசர் சொல்வதில் உண்மை இல்லை என்று பலரும் சொல்கிறார்கள்.அயோத்திதாசர் முன்வைப்பது ஒரு கதையாடலை.A Narrative.அந்த கதையாடல் வழி அவர் ஒரு சட்டகத்தை உருவாக்குகிறார்.அதன் வழி எப்படி பழைய பொற்காலத்தை மீட்பது என்று சொல்கிறார்.உண்மையில் அப்படி ஒரு பொற்காலம் இருந்ததா என்பதல்ல முக்கியம்.அப்படியான பொற்காலத்தை இனி ஓடுக்கப்பட்டவர்களுக்கு உருவாக்க முடியுமா என்பதை அதில் உள்ள அக்கறை. ஓர் அடையாள அணித்திரள்வு எந்த வர்க்கத்தை முன்னிறுத்துகிறதோ அதன் அடிப்படையில் அது எப்படியான நோக்கை முன்வைக்கிறது என்று கூற முடியும். இந்துத்துவமும் ஒரு பொற்காலம் இருந்தது என்று சொல்கிறது.ஆனால் அயோத்திதாசரின் பார்வையும் இந்துத்துவத்தின் பார்வையும் ஒரே வர்க்கத்தை பாதிக்கப்பட்டவர்களாக கொள்ளவில்லை.அதிலிருந்தே அதன் வேறுபாடுகளும் துவங்குகின்றன.பொற்காலங்கள் புனையப்படுபவை.எல்லா   பொற்காலங்களும்.அவை லட்சியவாதங்களும் கூட.
 
அம்பேத்கர் ஒரு மாற்று சமயத்தை பற்றி ஆராய்ந்த போது அவர் அனைத்து சமயங்களையும் பரிசீலித்தார்.சார்வாகம் , ஆஜிவிகம் போன்றவற்றை எவராலும் பரிசீலிக்க இயலாது. ஆஜிவிகம் பற்றி நமக்கு பெரிதாக எதுவும் தெரியாது.ஏ.எல்.பாசாம் ஒரு நூல் எழுயிருக்கிறார்.ர.விஜயலட்சுமி தமிழகத்தில் ஆசிவகர்கள் என்ற நூலை எழுதியிருக்கிறார்.அறிவுத்தோற்றவியல் குறித்தும் , இருப்பியல் உலகம் குறித்தும் அந்தத் தத்துவம் என்ன கூறுகிறது என்பதும் அதை எப்படி தன் நியாயங்கள் மூலம் நிரூபிக்கிறது என்பதும் முக்கியம்.அதைத் தொடர்ச்சியாக வளர்த்தெடுத்து அதற்கு சடங்குகளையும், குறியீடுகளையும் உருவாக்கும் தரிசனம் காலப்போக்கில் மதங்களாக மாறுகின்றன.
 
ஆஜிவிகம் , சார்வாகம் போன்றவற்றிக்கு அப்படியான எந்த முறையான பார்வையும் இல்லை.சார்வாகத்திற்கும் நமது எளிய தர்க்கங்களுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை.பெரியார் கூறியதும் ஒரு வகை சார்வாகம் தான்.அது எளிய தர்க்கம்.ஆனால் அது முழு நாத்திக கோட்பாடு என்ற வகையில் முக்கியத்துவம் கொள்கிறது.ஆனால் அதை ஒரு மெய்யிலாக சமயமாக கொள்ள முடியாது.
 
அறிவுத்தோற்றவியலில் ஸ்ருதிகளை (வேதங்களை) பெளத்தம் ஏற்கவில்லை. தனிப்பெரும் பொருளான பிரம்மத்தின் மற்றொரு வடிவமே ஆன்மாவாக நம் மரபில் இருக்கிறது.அப்படி தனித்த மாறாத ஒரு பொருளாக எதையும் பெளத்தம் ஏற்கவில்லை. மறுபிறப்பை பெளத்தம் ஏற்கிறது. பெளத்தம் நிர்ணயவாதத்தை(ஊழ்) முன்வைக்கிறது. அறிபடு பொருள், அறியும் பொருள், அறிவு ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.எதுவும் தனித்து இயங்குவதில்லை. சூனியவாதம் என்பது அத்வைதம் அல்ல.எதுவும் இல்லை என்று சூனியவாதம் சொல்லவில்லை. தனித்து அர்த்தம் கொள்ளும் வகையில் எதுவும் இல்லை என்று சொல்கிறது.பிரம்மம் இல்லையேல் ஆன்மாவும் இல்லை.
 
பெளத்தம் சாதிகள் குறித்து என்ன சொல்கிறது என்று கேள்விக்கு நாம் எளிய விடைகளை தர இயலாது.சட்டென்று மூன்று துயரங்களை கண்டு புத்தர் தன் ஞானத்தேடலைத் துவங்கினார் என்ற கதையாடலை அம்பேத்கர் ஏற்கவில்லை. தர்மானந்த் கோஸாம்பியும் தன் பகவான் புத்தர் நூலில் அதை மறுக்கிறார். புத்தர் இரு நாடுகளுக்கு மத்தியில் ரோகிணி ஆற்றை முன்னிட்டு நிகழந்த போர்களை கண்டு துயரம் கொண்டே தன் தேடலைத் துவங்கினார்.மறத்திற்கும் அன்பு சாத்தியம் என்பதே பெளத்தம்.அவர் சங்கத்தை துவங்கினார். அதில் தொடர்ச்சியாக சட்டங்களை உருவாக்கியபடியே இருந்தார்.அதனால் சாதி குறித்த பெளத்தத்தின் பார்வை என்ன என்பதற்கு அதை கடக்கும் சாத்தியப்பாடுகளை அதன் தரிசனம் கொண்டுள்ளது என்பதையே பதிலாக கொள்ள முடியும்.ஏனேனில் அது உடல் பொய்யானது என்ற பார்வையை கொண்டிருக்கவில்லை.ஆன்மாயின்மை, நிலையின்மை, நிறைவின்மை ஆகியவையே பெளத்தம் முன்வைக்கும் மூன்று உண்மைத் தன்மைகள்.
 
இப்படி நாம் பெளத்தத்தை விளக்கும் போதே சிறுபாண்மையினருக்கு இலங்கையில் , பர்மாவில் நிகழும் துயரங்களையும் பார்க்கிறோம்.திபெத்திய பெளத்தம் எப்படி மிகப்பெரிய நாடான சீனாவை எதிர்க்கும் ஆற்றலை தன் மக்களுக்கு அளித்துள்ளது என்றும் பார்க்கிறோம்.சீனா அடுத்த தலாய்லாமாவை தேர்தெடுத்தாலும் திபெத்திய மக்கள் இப்போதைய தலாய்லாமா சுட்டிக்காட்டும் ஒருவரையே தங்கள் தலாய்லாமாவாக கொள்ளப்போகிறார்கள். இப்படி நம் முன் பல்வேறு பெளத்தங்கள் இருக்கின்றன. அப்படியாக இந்தியாவிற்கும் ஒரு பெளத்தம் இருக்கிறது. அது அசோகர் காலத்திலிருந்து தொடர்ந்து மறத்திற்கும் அன்பு என்ற போதனையை உள்ளடக்கிய ஒன்றாக இருக்கிறது.அது நேருவின் ஆட்சிக்காலத்தில் இருந்தது.இன்றைய ஆட்சியில் இல்லை.நாளைய ஆட்சியில் இருக்கும்.
 
பெளத்தம் இந்தியாவிற்கு அளித்த கொடையாக அந்த நோக்கையே பார்க்கிறேன்.ஆன்மாவை, சாதியை, தனித்த பெருங்கடவுளை , பிரம்மத்தை மறுத்து ஒன்றை ஒன்று சார்ந்து இயங்குகிறது என்னும் பார்வை.மறத்திற்கும் அன்பு என்ற விரிவு. அந்த பெளத்த மெய்யியல் தான் என்னுடைய பெளத்தம்.இந்தியாவின் பெளத்தம்.அம்பேத்கரின் பெளத்தம்.அந்த பெளத்தத்தில் சாதி இல்லை,ஆன்மா இல்லை, வேதம் இல்லை.நாம் இருக்கிறோம்.

பொருள்



தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்

ஸ்டீபன் ஹாக்கிங் பற்றிய தியரி ஃஆப் எவரிதிங்(Theory of everything) திரைப்படத்தில் அவர் இறுதி காட்சியில் தன் மனைவி மக்களுடன் அரண்மனைக்கு சென்று ராணியை சந்தித்த பின்னர் தோட்டத்தில் தன் குழந்தைகள் தொலைவில் விளையாடிக்கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்தவாறு தன் மனைவியிடம் பார், நாம் உருவாக்கியவற்றை என்று கூறுவார்.மிகவும் அபாரமான காட்சி.

ஸ்டீபன் ஹாக்கிங் தன் பொருள் என்று தன் மக்களை கூறுகிறார்.மேலே உள்ள குறள், தம் புதல்வரைத் தம் பொருள் என்று சொல்லுவர் அறிந்தோர்.அந்த புதல்வரின் பொருள் அவர் அவரின் வினையான் வரும் என்று கூறுகிறது.

தன் குழந்தைகளின் அறிவுச்செல்வம், பொருட்செல்வம், மக்கள் செல்வம் எல்லாம் அவர் அவரின் வினையால் வருவது.அது வாழையடி வாழையாக வருவது அன்று.இதுவும் பெளத்தம் , சாங்கியம் கூறும் காரண - காரிய அடிப்படையையே குறிக்கிறது.அதே நேரத்தில் கர்மவினை என்று பெளத்தம் எதையும் சுருக்குவதில்லை.தற்செயல் என்று எதையும் தனித்து பார்ப்பதுமில்லை.காரணங்களையும், சூழ்நிலைகளையும் , ஆதரவுகளையும் சார்ந்து ஒவ்வொன்றும் எவ்வாறு மாறுகின்றது, மறைகிறது, தோன்றுகிறது என்பதை நிர்னயிக்கும் இயற்கை விதிகளின் தொகுப்பே தர்மம்.கர்மவினை ஒருவரின் தனிப்பட்ட செயல்களை மட்டுமே சுட்டுகிறது.ஆனால் பெளத்தம் எதையும் தனித்த ஒன்றாக பார்ப்பதில்லை.அது ஆன்மைவை மறுக்கிறது.அதனாலேயே அதை அனான்மவாதம் என்கிறார்கள்.எதுவும் மாற்றத்திற்கு உட்படாத வகையில் இருக்க இயலாது என்பதே பெளத்தத்தின் அடிப்படை.

இதுவரையான காரணங்களின் வழி இனியான காரியங்கள் இருக்கிறது.அதில் உங்களின் பங்கும் இருக்கிறது.உங்களின் பிரக்ஞையின் துணைக்கொண்டு இருக்கும் சூழமைவில் நீங்கள் எவ்வாறு தேர்கிறீர்கள் என்பதையே பெளத்தம் பேசுகிறது.அந்த வகையில் இந்தக் குறள் தந்தை வழி மகன் எந்த பொருளையும் பெறுவதில்லை, மாறாக அது அவனின் வினை வழி வருவது என்று கூறுகிறது.அப்படியே அவன் பெறும் மக்களும் அவன் வினை வழி வருவது என்றே கூறுகிறது.ஒரு கருவில் உருவாகும் குழந்தையின் எண்ணத் தொகுப்பு அவரின் வினையாலும் தேர்வாகிறது என்பதாக கூட இதைக் கொள்ள முடியும்.

திருக்குறளில் பெளத்தத்தின் தாக்கம் வலுவாக உள்ளது.இதை குறித்து பல அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள்.தனித்த சுயம்பு என்று எதுவும் இல்லை.ஒன்றின் சாத்தியம் அந்த சூழமைவில் தான் இருக்கிறது.ஐன்ஸ்டீன் அவர் உருவான காலத்தில் தான் உருவாகியிருக்க முடியும்.Positive unconsciousness என்று ஃபூக்கோ தன் The order of things புத்தகத்தில் இதை குறிப்பிடுகிறார்.இது முக்கியமான ஒன்று.

இது யுகபுருஷர்களை , பிம்பங்களை, அறிவுஜீவிதனத்தை உடைக்கிறது.எனக்கு இந்த தேர்தெடுக்கப்பட்டவர்கள், ஆசிர்வதிக்கப்பட்டவர்கள், பீடிக்கப்பட்டவர்கள் போன்றவற்றில் நம்பிக்கை இல்லை.எழுத்து, கலை , விஞ்ஞானம், ஆன்மிகம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த நம்பிக்கை உள்ளது.அவர்கள் பெரும்பாலும் உலக மனிதர்களை இரண்டாக வகுக்கிறார்கள்.சாமானியர்கள் மற்றும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் அல்லது வேறு ஏதோ பட்டவர்கள்.ஜெயமோகன் இதை பலமுறை எழுதியிருக்கிறார். இந்த ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் தான் இந்த சாமானியர்களின் வாழ்க்கையின் விடிவெள்ளி மற்றும் சனியும் கூட.அவர்கள் இவர்களுக்காக புதிய உலகை உருவாக்குவர்கள்.அதன் பொருட்டு அவர்களின் சிறுமைகள், மீறல்கள் உலகத்தால் பொறுத்தக்கொள்ளப்பட வேண்டும்.குற்றமும் தண்டனையும் நாவலில் இதைத்தான் ரஸ்கோல்நிகோவ் சொல்கிறான்.

ஆனால் ஒருவன் ஒரு இருட்குகையில் சிறு ஒளியை உருவாக்குவது கூட அந்த சூழமைவிலிருந்து பெறும் ஒன்றே.அங்கு அதை செயல்படுத்தும் அவன் ஒரு நிமித்தம் மட்டுமே.அவன் கடவுளோ, ஆசிர்வதிக்கப்பட்டவனோ அல்ல.ஐன்ஸ்டீன் தன் அறிதல்களை பற்றி சொல்லும் போது தான் நியூட்டன் , கலீலியோ போன்றோரின் தோள்களில் ஏறி அதை அறிந்ததாக கூறுகிறார்.அவர் ஏன் அறிந்தார் பிறர் ஏன் அறியவில்லை என்ற கேள்விக்கு நாம் Resonance என்பதை பற்றி யோசிக்கலாம்.சூழமைவில் உள்ள ஒரு அறிதலை அதன் அலைவரிசையில் வந்து சேரும் ஒரு மனம் அறிந்துகொள்கிறது.அவ்வளவுதான்.அதற்கு அப்பால் அந்த மனம் செய்யக்கூடியது ஒன்றுமில்லை.

நான் பெரும்பாலும் இலக்கிய கூட்டங்கள் , விவாதங்கள், உரையாடல்களில் , குழுக்களில் , ஜெபங்களில் பங்கு கொள்வதில்லை.அது ஏதோ ஒரு வகையில் அறிந்தோர் சபை என்ற எண்ணத்தை கொண்டுள்ளது.எனக்கு அப்படியான இடங்களில் என்னை பொருத்துக்கொள்வதில் தயக்கம் உள்ளது.நீங்கள் புதிதாக படைக்க ஒன்றும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.இன்றைய மனிதன் நேற்றைய மனிதனை விட பண்பானவன் , நாகரீகமானவன், அறிந்தவன் என்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை.அவர் அவர் தன் பிரக்ஞையின் வழி இந்த வாழ்க்கையில் தேர்கிறார்கள்.அதற்கு அப்பால் இதைப்பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.சென்று சேர்வதற்கும் அழைத்துக்கொள்வதற்கும் எந்த இஷ்டலோகமும் இல்லை. 

மறுபிறப்பு



உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு

மறுபிறப்பு குறித்த பெளத்தத்தின் சாரம் உள்ளடக்கியிருக்கும் குறள்.பெளத்தம் மறுபிறப்பு குறித்து பேசும் போது முதலில் மரணத்தை இரண்டாக வகுக்கிறது.அவை பொருள் மற்றும் எண்ணம்.பொருள் அழிந்து பஞ்சபூதங்களில் கலந்து விடுகிறது.எண்ணம் அழிவதில்லை.அது மறுபிறப்பு கொள்கிறது.அதற்கான கருவை கண்டடைகிறது.பெற்றோர் , மூத்தோரின் உடல் சார்ந்த இயல்புகளை , நோய்களை குழந்தைகள் பெற முடியும் என்றாலும் எண்ணம் பெற்றோரின் , மூத்தோரின் வழி வந்ததாக இருக்க வேண்டும் என்றில்லை என்பது இதில் உள்ள முக்கிய விஷயம்.

எண்ணம் , மனம் என்று நாம் சொல்பவற்றை  பெளத்தத்தில் விஞ்ஞானம் என்று சொல்கிறார்கள்.
விஞ்ஞானம் ஐந்து அடிப்படை புலனுணர்வுகள், மன உணர்வுகள், பகுத்து ஆராயும் அறிவு, புத்தி ஆகிய ஏழு உணர்வுகளை உள்ளடக்கியது.மேலும் எட்டாவதாக ஆலய விஞ்ஞானம் விளக்கப்படுகிறது.இது இச்சாசக்திகள் மற்றும் குணங்களாகிய சக்திகளின் கூட்டாக தொகுக்கப்படுகிறது.

இப்போது நாம் அதிகம் உபயோகப்படுத்தும் கார்ல் யுங் சொன்ன கூட்டு நனவிலி என்பதுடன் ஆலய விஞ்ஞானத் இணைத்து பார்க்கலாம்.பெளத்தம் எதையும் தனித்த பொருளாக பார்க்கவில்லை.ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை சார்ந்து இருக்கிறது என்கிறது பெளத்தம்.எந்த மனமும் தனித்த இருப்பு அல்ல.ஆலய விஞ்ஞானம், மகாதர்மம் என்பவை எல்லாம் வெறும் சுட்டு பெயர்கள் தான்.

அதனால் இந்த மறுபிறப்பு பற்றி பேசும் போதும் அது அந்த விஞ்ஞானத்தின் தொடர்ச்சியை பேசுகிறது.மேலே உள்ள குறளில் வரும் உறங்குவது போல சாக்காடு உறங்கி விழிப்பது போல பிறப்பு என்பது அந்த தொடர்ச்சியை தான் பேசுகிறது.இது நிலையாமை என்ற அதிகாரத்தில் இருந்தாலும் இது தொடர்ச்சியை குறிக்கிறது.மரணமும் பிறப்பும் தொடர் நிகழ்வுகள்.அவற்றின் இடையில் இருக்கும் தருணங்கள் நிலையற்றவை.

மறுபிறப்பு குறித்து பேசும் போது மக்களை பெற்றெடுப்பது, அறிவு , கலைகளை விட்டுச் செல்வது ஆகியவையும் மறுபிறப்பாக பார்க்கப்படுகிறது.இதனுடன் ஒரு மனிதன் இறந்த பின்னர் அந்த கூட்டு உணர்வின் தொடர்வும் பெளத்தத்தில் மறுபிறப்பாக பார்க்க படுகிறது.

இதன் அடிப்படையில் பார்க்கும் போதும் பெற்றோர் மற்றும் மூத்தோரின் அறிவு தொடர்ச்சியாக குழந்தைகள் இருக்க வேண்டும் என்பதில்லை என்பது புலனாகிறது.பெளத்தம் பெற்றோர், மூத்தோரிலிருந்து குழந்தைகள் பெறுவது உடல் வழி தொடர்ச்சி மட்டுமே என்கிறது.இந்த சாதியை சேர்ந்தவருக்கு இந்தக் குணம், இவரின் மகன் என்பதால் இவன் இப்படித்தான் இருப்பான் என்பது போன்ற வாதங்கள் இதன் வழி இல்லாமல் ஆகிறது.இது எந்த அளவு உண்மை என்பது குறித்து எனக்குத் தெளிவில்லை.ஆனால் எனக்கு இந்த பார்வை மிகவும் பிடித்திருந்தது.இதை படித்த போது ஒரு பெரிய விடுதலை உணர்வை அது அளித்தது.ஒரு கூட்டத்திற்கு, மக்கள் தொகுப்பிற்கு பிறப்பால் ஒரு குணத்தை அளிக்கும் பாவச் செயலை இது வீழ்த்துகிறது.இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.நான் பெளத்தத்தின் வழி பெற்ற முக்கியமான மெய்யுணர்வாக இதையே கருதுகிறேன்.


 
 

லக்ஷ்மி நரசு






பி.லக்ஷ்மி நரசு எனும் பொக்காலா(பாகாலா) லக்ஷ்மி நரசு எழுதிய “பெளத்தம் என்றால் என்ன?” என்ற புத்தகத்தை ஓ.ரா.ந.கிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.லக்ஷ்மி நரசு பற்றி K.பிரம்மச்சாரி 1959யில் தொண்டு இதழில் எழுதிய கட்டுரை , ஜி.அலாய்சியஸ் எழுதிய கட்டுரை , தேவப்பிரிய வலிசின்ஹா அவர்கள் 1946யில் எழுதிய கட்டுரை ஆகியவை புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெளத்தம் மறுமலர்ச்சி பெற்றது.தமிழகத்தில் பெளத்த மறுமலர்ச்சிக்கு பங்காற்றியவர்களில் முக்கியமானவர்கள் பி.லக்ஷ்மி நரசு, சிங்காரவேலர் , அயோத்திதாசர் ஆகிய மூவர்.சிங்காரவேலர் வழக்கறிஞர்.பெளத்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.பின்னர் மார்க்ஸியம் , பகுத்தறிவு , சுயமரியாதை இயக்கம் என்று பயணப்பட்டார்.அயோத்திதாசர் இங்கே ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பவர்கள் பூர்வ பெளத்தர்கள் என்று இறந்தகாலத்தில் இருந்ததாக அவர் முன்வைத்த ஒரு பொற்காலத்தை மீட்டுருவாக்கம் செய்ய முயன்றார்.லக்ஷ்மி நரசு வாழ்க்கை மார்க்கமாக பெளத்தத்தை பார்த்தார்.பகுத்தறிந்து பிரக்ஞைபூர்வமாக வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டிய ஒரு வழிமுறையை லக்ஷ்மி நரசு பெளத்தத்தின் வழி முன்வைக்கிறார்.கிட்டத்தட்ட ஒரு தற்காப்புக்கலை நூலை போல உள்ளது பெளத்தம் என்றால் என்ன என்ற புத்தகம்.கடும் நோண்பு இருந்து தன்னை வருத்தி அறியும் வழி ஒரு எல்லையாகவும் புலன் இன்பத்தில் தோயும் வாழ்க்கை மறு எல்லையாகவும் கொள்ளும் போது பெளத்தம் மத்திம மார்க்த்தை வலியுறத்துகிறது.இந்த மத்திம மார்க்கத்தை பெளத்தம் வாழ்வின் அனைத்து நிலைகளுக்கும் எடுத்து செல்கிறது.பெளத்தம் இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது,நாம் யார் போன்ற கேள்விகளின் அடிப்படையில் அல்லாமல் நம் முன் இந்த வாழ்க்கை இருக்கிறது, இந்த வாழ்வை நாம் எப்படி வாழப் போகிறோம், மனிதனுக்கு சாத்தியப்பட்டுள்ள இந்த அறிவின் வழி வாழ்வை எப்படி அனுகப் போகிறோம் என்ற அடிப்படையிலேயே இருக்கிறது.ஒவ்வொன்றும் கணத்திற்கு கணம் மாறிக்கொண்டு இருக்கிறது.அனைத்தும் காரண காரிய அடிப்படையிலேயே இயங்குகிறது. இங்கு அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது.சார்ந்து இயங்குகிறது. தனியான முழுமுதற் பொருள் என்று எதுவும் இல்லை.நிலையின்மையில் நித்யத்தை தேடும் மனிதன் நிலையானது ஒன்றை அடைய விரும்புகிறான்.அது அவனுள் துக்கத்தை உருவாக்கிறது.ஒவ்வொரு பொருளும் கணத்திற்கு கணம் மாறிக்கொண்டு இருக்கிறது.நாம் ஒரு பொருளுக்கு அளிக்கும் பெயர் ஒரு சுட்டுப் பெயர் மட்டுமே.நாம் முன்பு பார்த்த பொருள் அல்ல மறுபடி பார்ப்பது.அந்த பகுத்தறிவோடு வாழ்வை வாழ ஒரு வழியை அளிக்கிறது பெளத்தம்.

அந்த வழியில் செல்ல அடிப்படையான சில பயிற்சிகளை மேற்கொள்வது உதவியாக இருக்கும் என்கிறது.அவை நான்கு உன்னத உண்மைகளும் உன்னத எட்டு அங்கப் பாதையும் ஆகும்.

நான்கு உன்னத உண்மைகள்

அ.இன்ப துன்ப உணர்வு கொண்டு நாம் இயங்கும் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் துக்கம் இணைந்திருக்கிறது.(துக்கம் வாழ்வில் இருக்கின்றது என்கிற உண்மை)

ஆ.துக்கம் காரணத்தால் விளைகின்றது.துக்கத்தின் காரணம் தன்னலப்பற்றோடு கூடிய பெரும் வேட்கையாகும்.புலனின்பங்களிலும் காம சுகங்களிலும் கொள்ளும் பெரும் வேட்கையாகும்.(திருஷ்ணை). (துக்கம் காரணத்தால் உண்டாகின்றது என்கிற உண்மை)

இ.தன்னலப்பற்றோடு கூடிய பெரும் வேட்கைகளைத் துறப்பதன் மூலம் துக்கத்தை நீக்க முடியும் (துக்க நிரோதம் என்கிற உண்மை)

ஈ.தன்னலப்பற்றோடு கூடிய பெரும் வேட்கைகளை ஒழித்து துக்கத்திலிருந்து பரிபூர்ணமாகவும் நிரந்தரமாகவும் விடுதலை பெறுவதற்கான மார்க்கம் இங்கு உள்ளது.அது உன்னத எட்டு அங்கப்பாதையாகும்.(அரிய அட்டங்கிக மார்க்கம், துக்க நிரோத மார்க்கம் என்கிற உண்மை)

எட்டு அங்கப்பாதை

நல்லறிவு
நல் நோக்கம்
நற்பேச்சு
நற்செயல் (சீலம் , தானம் )
நற்தொழில்
நன் முயற்சி (தன்னலத்துறவு , தற்கட்டுப்பாட்டை வளர்ப்பது)
நல் மன விழிப்புணர்வு (நல்ல ஆசை , நல்ல எண்ணம்)
நற்சமாதி 

ஆகிய எட்டு அங்கப்பாதைகள் நான்கு உன்னத உண்மைகளை அடைவதற்கான பாதையை வகுக்கிறுது.இந்த எட்டு அங்கப்பாதை வழி உண்மையை அடைவதற்கு சிரத்தை தேவை என்று பெளத்தம் வலியுறுத்துகிறது.இந்த நூலின் பெரும்பகுதி இந்த எட்டு அங்கப்பாதைகளை விளக்குகிறது.மிக கூர்மையான மொழியில் ஓ.ரா.ந.கிருஷ்ணன் இதை மொழிபெயர்த்துள்ளார்.

சிங்காரவேலர், அயோத்திதாசர் ஆகியோரிலிருந்து லக்ஷ்மி நரசு ஒரு விஷயத்தில் வேறுபடுகிறார்.சிங்காரவேலர் பெளத்தத்தின் வழி மார்க்ஸியம், பகுத்திறவு, சுயமரியாதை இயக்கம் என்று எதிர்காலத்தில் அடையக்கூடிய பொற்காலத்தை நோக்கி பயணித்தார். அயோத்திதாசர் ஓடுக்கப்பட்டவர்கள் பூர்வ பெளத்தர்கள் என்று இறந்தகாலத்தில் பொற்காலத்தை கண்டு கொண்டு அதனை மீட்டுருவாக்கம் செய்ய முயன்றார்.லக்ஷ்மி நரசு பெளத்தத்தின் வழி எந்த பொற்காலத்தையும் அடைய முயலவில்லை.பெளத்தம் அதன் அளவில் ஒரு வாழ்க்கை மார்க்கம் என்பதையே அவரின் இந்த நூல் வழி நாம் அடைய முடிகிறது.பகுத்தறிந்து நம் முன் உள்ள இந்த வாழ்வை தக்க தற்காப்புகளுடன் கருணையுடன் கூர்மையுடன் வாழ பெளத்தம் வழி வகுக்கிறது என்பதை இந்த நூலின் வழி அவர் சுட்டிக்காட்டுகிறார்.அந்த அளவில் அவர் சிங்காரவேலர் போல அயோத்திதாசர் போல லட்சியவாதி அல்ல.

லக்ஷ்மி நரசு இயற்பியல் பேராசிரியர்.சென்னை கிறுஸ்துவக் கல்லூரி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரியில் பணிபுரிந்திருக்கிறார்.இயற்பியல் எப்படி இயற்கையை புரிந்துகொள்ள உதவும் ஒரு அறிதல் துறையோ அப்படியே அவர் பெளத்தத்தையும் பார்த்தார் என்று தோன்றுகிறது.அவர் இயற்பியலில் மிக ஆழ்ந்த அறிவை கொண்டிருந்தார் என்று அவரைப்பற்றிய எழுதப்பட்ட கட்டுரைகளில் கூறப்பட்டுள்ளது.1860யில் பிறந்த லக்ஷ்மி நரசு 1934 வரை வாழ்ந்தார்.சென்னை மாகாணத்தில் பெளத்த தர்மத்தை பரப்புவதற்கு இடைவிடாமல் செயலாற்றியிருக்கிறார்.அயோத்திதாசர் , சிங்காரவேலர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.இவர் எழுதிய பெளத்தத்தின் சாரம் (Essence of Buddhism) பெளத்தம் பற்றிய முக்கிய நூலாக பார்க்கப்படுகிறது.மேலும் சாதி பற்றிய ஆய்வு (The Study of caste) என்ற நூலை எழுதியிருக்கிறார்.பெளத்தம் சுருக்கமாக என்று மற்றொரு நூலையும் எழுதியிருக்கிறார்.ஆனால் அந்த நூல் கிடைக்கவில்லை.பெரம்பூர் தென்னிந்திய சென்னை பெளத்த சங்கத்தை அயோத்திதாசருக்கு பிறகு பொறுப்பேற்று நடத்தினார்.

பெளத்தம் என்றால் என்ன – லக்ஷ்மி நரசு – தமிழில் ஓ.ரா.ந.கிருஷ்ணன் – மெத்தா பதிப்பகம்