புக் பிரம்மா குறிப்புகள் - 1

புக் பிரம்மா இரண்டாம் நாள் நிகழ்வுக்கு சென்றிருந்தேன்.நிறைய தமிழ் எழுத்தாளர்கள்.சிலரிடம் அறிமுகம் செய்து கொண்டு முகமன் தெரிவித்தேன். நன்றாக ஒருங்கிணைப்பட்ட நிகழ்வுகள்.குறை சொல்ல ஒன்றுமில்லை.நான் நான்கு நிகழ்வுகளுக்கு சென்றேன். இரண்டு தமிழ் , இரண்டு தெலுங்கு. தமிழில் சிறுகதைகள் பற்றிய அரங்கும் தலித் இலக்கியம் பற்றிய அரங்கும் இன்று இருந்தன.தலித் இலக்கியம் பற்றி ஸ்டாலின் ராஜாங்கம், சுகிர்தராணி பேசினார்கள்.  நன்றாக பேசினார்கள்.கமலாலயன் ஒருங்கிணைத்தார்.சிறுகதைகள் குறித்த அரங்கில் சுநீல் கிருஷ்ணன், கார்த்திக் பாலசுப்பரமணியன், தீபா பங்கு பெற்றனர். எம்.கோபாலகிருஷ்ணன் ஒருங்கிணைத்தார்.சிறுகதைகள் குறித்த அரங்கு இன்னும் சற்று குவிமையம் கொண்டிருந்திருக்கலாம் என்று தோன்றியது. 

நான் தெலுங்கை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் அதிகம் பேசுவதோ கேட்பதோ இல்லை.தெலுங்கு இலக்கியம் குறித்த அறிமுகமும் இல்லை.எனக்கு  சென்னைத் தெலுங்கு,தென் ஆற்காடு , வட ஆற்காடு பகுதிகளின் தெலுங்கு புரியும். அரங்கில் பேசப்படும் தெலுங்கு விளங்குமோ என்ற சந்தேகம் இருந்தது.சரி செல்வோம் என்று தோன்றியது.ஆச்சரியமாக அவர்கள் பேசுவது நன்றாக புரிந்தது. தெலுங்கு நாவல்கள் குறித்த அரங்கில் நிறை கூட்டம்.அரங்கு நிறைந்திருந்தால் எக்ஸ்ட்ரா சேர்கள் போட்டார்கள்.அரங்கில் சு.வேணுகோபலை பார்த்தேன்.நன்றாக பேசினார்கள்.தெலுங்கில் தலித் நாவல்கள் ,அவை சினிமா ஆகாமல் இருப்பதற்கான காரணங்கள், பிற மொழிகளுக்கு மொழியாக்கங்கள் செல்லாமல் இருப்பதற்கான காரணங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

அதே போல மற்றொரு அரங்கு தெலுங்கு மொழியில் பெண்களின் சுயசரிதைகள்.மிகச் சிறப்பான ஒருங்கிணைப்பு.சி.மிருணாளினி என்பவர் தன் எண்ணங்களைத் திறம்பட தொகுத்து சரளமாக பேசினார்.சுயசரிதையில் பாலியல் சார்ந்த பார்வைகளை பேசும் போது அதை சிலோகிக்கும் நாம் பிற பலவீனங்களைப் பற்றி பேசுகிறோமா என்று கேட்டார்.அதாவது ஒருவர் தன் பணியாளர்களை எப்படி நடத்தினார், குழந்தைகளை எப்படி நடத்தினார் என்பதைக் குறித்து அதே போன்ற ஒரு வெளிப்பாட்டை அவர்கள் வைக்கிறார்களா? அப்படி இல்லையென்றால் பாலியல் சார்ந்த பார்வைகள் மட்டும் ஏன் முன்வைக்கப்படுகின்றன என்று கேள்வி எழுப்பினார்.காத்யாயனி வித்மகே ஆண்களின் சரிதை புற உலகை பற்றிப் பேசுகின்றன, பெண்களின் சரிதைகள் அக உலகம் குறித்த சித்திரத்தை அளிக்கின்றன.இவை இரண்டும் சேர்ந்து ஒரு காலகட்டத்தின் பார்வையை தருகின்றன என்றார்.

மேலும் மிருணாளினி பேசும் போது நாம் என்னதான் சுயசரிதை எழுதினாலும் அதை நாம் மனதளவில் சற்று எடிட் செய்து தான் பிரசுரிக்கிறோம் என்றார்.கணவர், அத்தை , மாமா , பிறர் என்று எவரைப் பற்றியும் எழுதும் போது நாம் இந்தச் சமூகத்தில் அவர்களோடு ஜீவிக்க வேண்டிய வகையில் தான் எழுத முடியும், அப்படி எழுவதே நல்லது என்றார்.சில உதாரணங்களைச் சொல்லி எத்தனை தீவிரமான விஷயங்களையும் ஹாஸ்யத்தோடு சொல்ல முடியும் என்றார்.

சுநீல் கிருஷ்ணனனோடும் , கார்த்திக் பாலசுப்பரமணியனோடும் சற்று நேரம் பேச முடிந்தது.ஜெயமோனைச் சுற்றி பலர் நின்றுகொண்டும் பின்னர் அமர்ந்து கொண்டும் அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.நான் செல்லவில்லை.

புத்தக அங்காடியில் தமிழ் ஸ்டால்கள் அதிகம் இல்லை.மகனுக்கு சில காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கினேன்.இனிமையான நாள்.


No comments: