பிஜாய் இம்மானுவல்

 



கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் 2023 அக்டோபர் மாதம் இருபத்தொன்பதாம் தேதி நடந்த கிறிஸ்தவ மதப்பிரிவின் பிராத்தணைக் கூட்டத்தில் குண்டுகள் வெடித்தன.அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.அந்த மதப்பிரிவின் பெயர் ஜெகோவாவின் சாட்சியங்கள்.குண்டு வெடிப்பை நிகழ்த்தியவரும் அந்தப் பிரிவைச் சேர்ந்தவர் தான்.

இந்தியாவில் சில மனித உரிமை வழக்குகள் புதிய பார்வைகளை ,சட்டங்களை , சட்டத்திருத்தங்களை உருவாக்கியிருக்கின்றன.அவற்றில் ஒன்று பிஜாய் இம்மானுவல் என்ற மாணவருக்கும் கேரள அரசுக்கும் நிகழ்ந்த வழக்கு.அந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரைச் சென்றது.வழக்கின் இறுதித் தீர்ப்பு பிஜாய் இம்மானுவேலுக்கும் பிற மாணவர்களுக்கும் சாதகமாக அமைந்தது.

கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் வி.ஜெ.இம்மானுவல்.இவர் மன்னனம் ஊரில் இருந்த கே.யி.கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணிபுரிந்தார்.இவருடைய மகன் பிஜாயும் மகள்கள் பினுவும் பிந்துவும் கிடங்கூர் என்ற ஊரிலிருந்த என்எஸ்எஸ் உயர்நிலைப் பள்ளியில் 1985ஆம் ஆண்டு படித்து வந்தனர்.இவர்கள் ஜெகோவாவின் சாட்சியங்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

பிஜாயும் அவரது சகோதரிகளும் அவர்களின் மதக் கோட்பாட்டின் படி இறைவனைத் தவிர வேறு எவரையும் துதிப்பதில்லை, வணங்குவதில்லை என்ற நிலைப்பாட்டினை கொண்டிருந்தனர்.இந்தப் பிரிவினர் தேசியம் , மொழி, அரசு ஆகியவற்றிலிருந்து விலகியே இருக்கின்றனர்.அவர்கள் இதில் உறுதியாக உள்ளார்கள்.இதன் காரணமாக உலகம் முழுக்க அவர்களுக்கும் அரசுகளுக்கும் முரண்கள் உருவாகி வழக்குகள் நிகழ்ந்திருக்கின்றன.

பிஜாய் இம்மானுல் (அவரது சகோதரிகளும்) பள்ளியில் காலையில் நிகழும் பிராத்தணைக் கூட்டத்தில் தேசிய கீதம் பாடவில்லை.அவர்கள் எப்போதும் பாடியதில்லை.அவர்களுக்கு முன் அந்தப் பள்ளியில் படித்த அவரது சகோதரிகளான பீனாவும் பெஸ்ஸியும் பாடியதில்லை.அதே நேரத்தில் அவர்கள் தேசிய கீதம் பாடப்படும் போது பிறரை பாட விடாமல் தடுக்கவில்லை. எழுந்து மரியாதை செய்யாமலும் இருக்கவில்லை.இதை செய்தித்தாள் வழியாக அறிந்த சட்டசபை உறுப்பினர் ஒருவர் இதைப் பற்றி சட்டசபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.உண்மை அறிய ஒரு ஆணையம் நிர்ணயிக்கப்பட்டது.அந்த ஆணையம் அந்தக் குழந்தைகள் பற்றிய அறிக்கையில் அவர்கள் தங்கள் சமயத்தின் நெறிப்படி தேசிய கீதம் பாடவில்லை என்றும் அதே நேரத்தில் அவர்கள் ஒழுங்கை கடைப்படிக்கும் பிள்ளைகளாகவே இருக்கின்றனர் என்று சொல்லியிருந்தது.இருந்த போதும் பள்ளி இயக்குனரகம் அந்தக் குழந்தைகளை பள்ளியிலிருந்து நீக்கச் சொல்லி தலைமை ஆசிரியருக்கு கட்டளையிட்டது.அந்தக் குழந்தைகளின் தந்தை வி.ஜெ.இம்மானுவல் பள்ளியில் முறையிட்ட போது தலைமை ஆசிரியர் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று கைவிரித்திருக்கிறார்.

இதை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் பிஜாய் இம்மானுவல் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. முதலில் ஒரு நீதிபதியின் தலைமையிலான அமர்வு குழந்தைகள் நீக்கப்பட்டது சரிதான் என்று உத்தரவிட்டது.பின்னர் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வும் அதையே உறுதி செய்தது.உயர் நீதி மன்றம் தேசிய கீதத்தின் எந்தச் சொல் ஜெகோவா சாட்சியத்தின் நம்பிக்கைக்கு எதிராக இருக்கிறது என்று ஆராய்ந்தது.அப்படி எந்த சொல்லும் இல்லை என்பதால் அவர்கள் தேசிய கீதத்தை பாடாமல் இருந்தது தவறு தான் என்று சொல்லி பிஜாயும் அவரது சகோதரிகளும் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டது பிழையில்லை என்று தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார் வி.ஜெ.இம்மானுவல்.நீதியரசர்கள் ஓ.சின்னப்பா ரெட்டி, எம்.எம்.தத் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை வேறு கோணத்தில் பார்த்தார்கள்.உயர் நீதி மன்றத்தில் தேசிய கீதத்தில் உள்ள எந்தச் சொல் ஜெகோவாவின் சாட்சியத்திற்கு எதிரானதாக இருக்கிறது என்று ஆராய்ந்தார்கள். ஆனால் உச்ச நீதி மன்றத்தில் அவர்கள் பாடாமல் இருந்தது சட்டப்படி பிழையா என்பதை கவனித்தார்கள். அவர்கள் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நின்றார்கள்.பிறர் பாடுவதை தடுக்கவில்லை.அவர்கள் பாடவில்லை என்பதே குற்றம்.

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19(1)(அ) – சுதந்திரமாக பேசுவதற்கும் தங்களை வெளிப்படுத்திக்கொள்வதற்குமான உரிமையை அனைத்து இந்தியப் பிரஜைகளுக்கும் அளிக்கிறது.அதே நேரத்தில் 19(2) – இந்த உரிமைகள் மீதான வரையறைகளை உருவாக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்றும் சொல்கிறது.இந்திய இறையான்மை , ஒருமைப்பாடு, தேசப் பாதுகாப்பு, மற்ற நாடுகளுடான நட்புறவு, பொது ஒழுங்கு, கண்ணியம், ஒழுக்கநெறி, நீதிமன்ற அவமதிப்பு, குற்றம் செய்யத் தூண்டுதல் , அவதூறு ஆகியவற்றின் அடிப்படையில் அந்த வரையறைகளை அரசு இயற்றுவதை 19(1) தடுக்காது என்றும் சொல்கிறது.அதே நேரத்தில்  இந்த வரையறைகளை ஒரு சட்டத்தின் வழி தான் உருவாக்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 25(1) – பொது ஒழுங்கு மற்றும் நெறிமுறைகளுக்கு உட்பட்டு அனைவரும் தங்கள் சமயத்தை கடைபிடிப்பதற்கும் , பின்பற்றுவதற்கும் , பரப்புவதற்கும் முழு சுதந்திரம் அளிக்கப்படுவதாக கூறுகிறது.பிரிவு பத்தொன்பதும் இருபத்தியெந்தும் அடிப்படை உரிமைகள் பகுதியில் வருகின்றன.

அடிப்படைக் கடமைகள் பகுதியில் 51A(அ) பிரிவின் படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இந்திய அரசியலமைப்பின் படி நடக்க வேண்டும்.அதன் நிறுவனங்களையும் லட்சியங்களையும் மதிக்க வேண்டும், தேசிய கீதத்தையும் தேசியக் கொடியையும் மதிக்க வேண்டும் என்று சொல்கிறது.

இவைத் தவிர தேசக் கெளவரத்தை அவமதித்தல் தடுப்புச் சட்டத்தில் தேசியக் கீதம் பற்றி பிரிவு மூன்று தேசியக் கீதம் இசைக்கப்படும் போது பாடுவதை தடுத்தாலோ அல்லது குழப்பத்தை விளைவித்தாலோ அவருக்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறுகிறது. இங்கு தேசிய கீதம் பாடாமல் இருப்பது குற்றமாக சொல்லப்படவில்லை. பிறர் தேசிய கீதம் பாடுவதை தடுப்பதோ அல்லது தேசிய கீதம் பாடும் போது குழப்பம் விளைவிப்பதோ குற்றமாக கருதப்படுகிறது.

கேரளக் கல்விச் சட்டத்திலும் தேசிய கீதம் குறித்து தனித்து எதையும் குறிப்பிடவில்லை.கேரள அரசு தன் தரப்பு வாதத்தை வலுவாக்க 1961யிலும் 1970யிலும் கேரள பொது அறிவிப்புக்கான இயக்குனரகம் கொடுத்த சுற்றறிக்கைகளை சான்றுகளாக காண்பித்தது. ஆனால் இந்தச் சுற்றறிக்கைககள் சட்டங்கள் அல்ல.அப்படியே அவற்றை கணக்கில் கொண்டாலும் அவற்றில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதை ஏற்றுக்கொண்டாலும் ஒருவர் மன ஓர்மையோடு தெளிவான தர்க்கத்தோடு பாடாமல் இருப்பதை இந்தச் சுற்றறிக்கைகள் தடுக்கவில்லை என்று நீதியரசர்கள் சொன்னார்கள்.அந்தச் சுற்றறிக்கையே அனைத்து சமயங்களையும் மதிக்க வேண்டும் என்று சொல்கிறது என்பதை சுட்டிக்காட்டினார்கள்.

பிஜாய் முதலான மாணவர்களை கட்டயாப்படுத்தி பாடச் செய்வது உண்மையில் பிரிவு 19(1) (அ)வுக்கும் 25(1) க்கும் எதிரானதாக இருக்கும்.மேலும் இந்த வழிமுறையை அவர்களின் சமயம் அங்கீகரிக்கிறது.இதன் பொருட்டு உலகம் முழுக்க அவர்கள் பல்வேறு வழக்குகளை சந்தித்திருக்கிறார்கள்.அவர்களின் சமயக்கருத்துகள் படி தேவனின் ராஜ்ஜியம் மட்டுமே இருக்கிறது.மனிதர்கள் உருவாக்கிய அமைப்புளான தேசம் , அரசு போன்றவற்றை அவர்கள் ஏற்பதில்லை.அதே நேரத்தில் அவர்கள் அதை எதிர்ப்பதும் இல்லை.அவர்களின் சமயம் சொல்லும் நெறிகளின் படி அவர்கள் வாழ விரும்புகிறார்கள்.அது இந்திய அரசியலமைப்பின் படியும் உருவாக்கப்பட்ட சட்டங்களின் படியும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது , அதனால் அவர்களை மறுபடியும் பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டார்கள் நீதியரசர்கள்.

சட்டயியலில் லோன் எல்.ஃபுல்லர் (Lon L.Fuller) , ஹச்.எல்.ஏ.ஹார்ட் (H.L.A. Hart) , ரொனால்ட் டவார்க்கின் (Ronald Dworkin), ஜான் ஃபின்னிஸ் (John Finnis) ஆகியோர் முக்கியமாக கருதப்படுகிறார்கள்.ஜான் ஃபின்னிஸ் மரபான செவ்வியல் இயற்கை சட்டக் கோட்பாட்டுக்காக வாதாடினார்.லோன் எல்.ஃபுல்லர் நவீன இயற்கை சட்டக் கோட்பாட்டை பற்றிய வரைவை பேசினார்.ஏ.எல்.ஏ.ஹார்ட் சட்ட நேர்காட்சிவாதத்தை முன்மொழிந்தார்.இவர்கள் எல்லோரும் சட்டத்தின் சட்டகத்தை பற்றி பேசினார்கள்.அதாவது சட்டங்கள் எப்படி இயற்றபட வேண்டும் , முதன்மைச் சட்டங்களாக எவை இருக்க வேண்டும் , இரண்டாம் கட்ட சட்டங்களாக எவை இருக்க வேண்டும் என்று சட்ட உருவாக்கத்தை பற்றி பேசினார்கள்.சட்டத்தின் சட்டகங்கள் எவற்றை பற்றி அக்கறை கொள்ள வேண்டும் என்று வரையறைத்தார்கள்.

ரொடால்ட் டவார்க்கின் இவற்றிலிருந்து மாறுபட்டு சட்டத்தை எப்படி பொருள் கொள்வது என்பதை பற்றி விவரித்தார்.அதாவது சட்டங்கள் இயற்றப்பட்டு விட்டன.இப்போது வழக்குகள் நிகழ்கின்றன.வழக்கறிஞர் வாதாடுகிறார்.சட்டப் புத்தகங்கள் இருக்கின்றன.நீதிபதிகள் இவற்றை ஆராய்கின்றனர்.இந்தச் சட்டங்களை எப்படி பொருள் கொள்வது , அர்த்தப்படுத்திக் கொள்வது , உட்பொருள் கண்டறிவது என்பது பற்றி அவர் சொன்னார்.அவர் நீதிபதிகளை நோக்கி பேசினார் என்று சொல்ல முடியும்.

பிஜாய் இம்மானுவல் என்ற மாணவன் தேசிய கீதம் பாடவில்லை.அவன் தன் மன ஓர்மையோடு தன் சமயம் சொல்லும் நெறிகளை உள்வாங்கி அதன் படி ஏற்படுத்திக் கொண்ட வாழ்க்கை முறையின் காரணமாக தேசிய கீதம் பாடவில்லை.இந்திய அரசியலமைப்பு ஒருவருக்கு பேசுவதற்கும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கும் உரிமை இருப்பதை அங்கீகரிக்கிறது. அதே போல ஒருவர் தன் சமயத்தை கடைப்பிடிப்பதற்கும் , பயில்வதற்கும், பரப்புவதற்கும் உரிமை உண்டு என்று சொல்கிறது.இவை அடிப்படை உரிமைகள் என்று சொல்லப்படுகின்றன.

தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பதும் ஒரு கடமையாக பார்க்கப்படுகிறது.பிஜாய் இம்மானுலின் இந்த வழக்கு ஒரு வகையில் ரொனால்ட் டவார்க்கின் பார்வையை சொல்வதற்கான ஒரு எடுத்துக்காட்டாக அமைந்த வழக்கு. இங்கே இந்த இரண்டு தரப்புகளையும் சீர்தூக்கி பார்த்து அதன் படி சட்ட நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.அந்தச் சிறுவர்கள் தாங்கள் மிகத் தீவிரமாக ஏற்கும் ஒரு சமயக் கருத்தின் முன்னிட்டு மன ஓர்மையோடு மன உறுதியோடு தெளிவான புரிதலோடு தேசிய கீதம் பாடாமல் இருக்கிறார்கள்.அவர்கள் அதை ஒரு மறுப்பாகவோ , கலகமாவோ செய்யவில்லை.அவர்களின் உரிமையாக பார்க்கிறார்கள்.மேலும் அவர்கள் பிறருக்கு தொந்தரவு அளிக்கவில்லை. தேசிய கீதம் பாடும் எழுந்து நிற்கவும் செய்கிறார்கள்.தேசம் , அரசு , ராணுவம் போன்ற எந்த அமைப்பையும் அவர்கள் ஏற்கவில்லை.அவை மனிதர்கள் உருவாக்கியவை.அதனால் அதை அவர்கள் வணங்குவதில்லை.இது நமக்கு வித்யாசமானதாகவும் , வேடிக்கையானதாவும் கூட தோன்றலாம். ஆனால் அவர்களுக்கு அது அவர்களின் சமய நம்பிக்கை சார்ந்த செயலாக இருக்கிறது.அதே நேரத்தில் சமயம் சார்ந்த நம்பிக்கை என்பதற்காக நாம் அனைத்தையும் அனுமதிக்க இயலாது என்றே அரசியலமைப்பு சொல்கிறது.பொது ஒழுங்குக்கும் , நெறிமுறைக்கும் உட்பட்டே அவை அனுமதிக்கப் படுகின்றன. ஒருவர் பேசுவதற்கும் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதற்கும் உரிமை உண்டென்றாலும் அதுவும் வரையறைக்கு உட்பட்டவைதான்.

இந்த வரையறைகளுக்கு உட்பட்டு பார்க்கும் போதும் கூட இந்தச் சிறுவர்கள் தேசிய கீதம் பாடாமல் இருப்பதை அனுமதிக்கலாம் என்று தீர்ப்பு வழங்குகின்றனர் நீதியரசர்கள் ஓ.சின்னப்பா ரெட்டியும் எம்.எம்.தத்தும்.நமது மரபு ஏற்பமைவை (Tolerance) சொல்லித்தருகின்றது. நமது தத்துவங்கள் ஏற்பமைவை போதிக்கின்றன.நமது அரசியலைப்பு ஏற்பமைவை நிகழ்த்துகிறது.நாம் அதை நீர்த்துப் போகச் செய்யாமல் இருப்போம் என்று தீர்ப்பை நிறைவு செய்கிறார்கள்.

இன்று நாம் ஹிஜாப் குறித்து விவாதங்களை கேட்டு வருகிறோம்.இது குறித்த வழக்கு மூன்று பேர் கொண்ட கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடை பெற்று பின்னர் உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு சென்றது.உயர் நீதிமன்றம் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மார்க்கத்தில் மிக அவசியமான சமய வழக்கா என்ற கேள்வியைக் கேட்டு விடை காண முயன்றது.அப்படியான எதையும் மனுதாரர்களின் வழக்கறிஞர்களால் நிறுவ இயலவில்லை .உயர் நீதிமன்றத்தில் ஹிஜாப் அணியக்கூடாது என்ற சட்டம் செல்லும் என்று உத்தரவிட்டது.இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் வழக்கு முறையீடுக்கு வந்தது.உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர்கள் ஹமந்த் குப்தாவும் சுதான்ஸூ துலியாவையும் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்தது.

ஹமந்த் குப்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறில்லை என்று சொன்னார்.சுதான்ஸூ துலியா பிழை என்றார்.நம் முன் இரண்டு தேர்வுகள் இருக்கின்றன.ஒன்று குழந்தைகள் , அதிலும் பெண் குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற தேர்வு.மற்றது பள்ளிச் சீருடை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற தேர்வு.ஒன்று உரிமை மற்றது கடமை.இவற்றை சீர்தூக்கி பார்க்கும் போது குழந்தைகள் அதுவும் பெண் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதே முக்கியம் என்று சொல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்தார் சுதான்ஸூ துலியா.இருவரும் இரு வேறு தீர்ப்புகளை வழங்கியதால் இது மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று உச்சநீதிபதியின் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கும் பிஜாய் இம்மானுவல் வழக்கும் பல இடங்களில் பொருந்துகின்றன.சில இடங்களில் வேறுபடவும் செய்கின்றன.ஜெகோவாவின் சாட்சியம் சமயத்தில் தேசிய கீதத்தை பாடாமல் இருப்பதை அவர்களின் சமயத்தின் நெறியாக கொள்வதற்கு வலுவான தரப்பு அவர்களுக்கு இருந்தது.ஹிஜாப் விஷயத்தில் அது சரிவர நிறுவ இயலவில்லை. சட்டத்தில் இதை அவசியமான சமய வழக்குகள் (Essential Regular Practices) என்று குறிப்பிடுகின்றனர்.அதே நேரத்தில் இரண்டு வழக்குகளிலும் அது முக்கியமான விஷயமாக இருக்கவில்லை.

நீதியரசர் சுதான்ஸூ துலியா அவசியமான சமய வழக்கு என்று கோணத்தில் முறையீட்டாளர்கள் வாதாடி இருக்கத் தேவையில்லை என்று தீர்ப்பில் சொல்லியிருக்கிறார்.அவசியமான சமய வழக்குகள் என்பன ஒரு அமைப்பு ஒன்றைச் செய்யும் போது எழுப்ப வேண்டிய கேள்வி.ஒரு அமைப்பு அது செய்யும் சடங்கு அல்லது பழக்கத்தை அவசியமான வழக்கம் என்று நிறுவ அவசியமான சமய வழக்குகள் பற்றிய கிரந்தங்கள் குறித்த விளக்கத்தை நீதிமன்றங்களில் கூறலாம்.அதாவது பிராமணர்கள் தான் அர்ச்சகர்களாக இருக்க வேண்டும் என்று ஒருவர் வாதிட்டால் இந்து சமயத்தின் எந்த கிரந்தங்களின் படி இவை அவசியமான சமய வழக்குகள் என்று நிறுவ வேண்டும்.ஆனால் ஒரு தனி நபர் தன் தனிப்பட்ட விருப்பத்தின் பெயரால் ஒரு செயலைச் செய்யும் போது அது அவசியமான சமய வழக்கு என்று நிறுவ வேண்டியதில்லை என்று சுதான்ஸூ துலியா தன் தீர்ப்பில் கூறுகிறார்.

வழக்கறிஞர் கெளதம் பாட்டியா இந்த வழக்கை பற்றி தன் The Unsealed Covers நூலில் குப்தா தன் தீர்ப்பில் ஒழுக்கத்தை குறித்தே தொடர்ந்து கவலைப்படுகிறார் என்கிறார்.இந்திய அரசியலமைப்பு பிரிவான 14 சமத்துவம் குறித்து பேசுகிறது.சீருடை சமத்துவத்தை நிறுவ ஒரு அவசியமான வழிமுறை என்றார் ஹமந்த்.மேலும் குழந்தைகளுக்கு பள்ளியில் சீருடை அணிய கட்டாயப்படுத்துவது ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கும் என்கிறார். பிரிவு 19(1) , 25(1) பள்ளியில் சீருடை விவாகரத்தில் செல்லுபடி ஆகாது என்றார் ஹமந்த். ஆனால் துலியா ஒரு பெண்ணை பள்ளி நுழைவாயிலில் நிறுத்தி அவளது பர்தாவை கழற்றச்சொல்வது அவளது தனிப்பட்ட வாழ்க்கைகுள் பிரவேசிப்பதாக மாறும் என்கிறார்.

இங்கே எது முதன்மையானது என்பதே முக்கியம். பிஜாய் தேசிய கீதம் பாடாததால் அவரை பள்ளியிலிருந்து நீக்கியிருந்தால் இன்று அவர் படித்திருக்க மாட்டார்.ஹிஜாப் அணியும் பெண்கள் ஹிஜாப் அணியாமல் வந்தால் தான் படிக்க இயலும் என்பது அவர்கள் வாழ்வை மேலும் பின்னுக்குத் தள்ளுவது.அவர்கள் தங்களை இப்படித்தான் வெளிப்படுத்துக் கொள்வோம் என்கிறார்கள்.அமைப்பு அப்படியான மீறல்களை ஏற்றுக்கொள்வதன் வழியே அவர்களுக்கு கல்வியை அளிக்க முடியும் என்றால் இதில் என்ன பிழை இருக்க முடியும்.மேலும் இன்றைய இந்துத்துவ அரசுகள் தங்களின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்த முனையும் போது சிறுபாண்மை சமூகங்கள் தங்களின் அடையாளங்களை மேலும் இறுகப் பற்றிக் கொள்வது இயல்பாகவே நிகழ்கின்றன.இந்த அடையாளங்கள் அவர்கள் மீது சுமத்தப்படுகின்றன.அவர்கள் அந்த அடையாளங்களை சூட்டியும் கொள்கின்றனர்.

நீதியரசர் சின்னப்பா ரெட்டி சொல்வது போல துலியா சொல்வது போல எது அவசியம் என்பதே பிரதானம்.ரொனால்ட் டவார்க்கின் சட்டம் உறுதியான பாறைகளில் எழுதப்பட்ட சொற்கள் அல்ல என்கிறார்.அவை இறுதி உண்மைகள் அல்ல.எல்லோரும் ஒளிப்படங்கள் எடுக்க முடியும்.ஆனால் சிலர் மட்டும் சரியான கோணம் , சரியான சட்டகம் , குறிப்பிட்ட அளவிலான ஒளியைக் கொண்டு மிக அற்புதமான காட்சி ஒவியங்களை உருவாக்குகிறார்கள். அதே போல சட்டங்கள் எங்கும் இருப்பவை தான்.அதைக் கொண்டு மக்களுக்கு என்ன செய்ய இயலும் , ஓடுக்கப்பட்ட மக்களை எப்படி மேலெற்ற இயலும் என்பது சட்ட வல்லுனர்கள் கைகளிலும் நீதியரசர்கள் கைகளிலும் இருக்கின்றது.நீதியரசர்கள் கிருஷ்ண்ய்யர் , சின்னப்பா ரெட்டி போன்றோர் அத்தகையோர்.அவர்கள் வழி நீதித்துறை செல்ல வேண்டும்.இன்றைய சூழல் அதற்கு எதிர் திசையில் செல்கிறது என்றாலும் இவை மாறும்.மாற்றம் நம்மிலிருந்து துவங்க வேண்டும்.

(தளம் இதழில் பிரசுரமான கட்டுரை)

புகைப்படம் : © Mangostar/stock.adobe.com