பெளத்தமும் விஷ்ணுபுரமும்


நாகார்ஜூனரும் அவர் சீடர் ஆரியதேவரும்


ஜெயமோகன் விஷ்ணுபுரம் நூலை எழுதிய பின்னர் அதில் கெளஸ்துபம் பகுதியில் வரும் தத்துவ விவதாங்களை பற்றி அறிமுகத்தை உருவாக்கும் பொருட்டு இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் என்ற நூலை எழுதினார்.அதே கெளஸ்துபம் பகுதியில் வரும் பெளத்தக் கருத்துகளை விளக்கும் பொருட்டு பெளத்த அறிஞர் ஓ.ரா.ந.கிருஷ்ணன் எழுதியுள்ள நூல் “ஜெயமோகனின் விஷ்ணுபுரம் புதினத்தில் பெளத்தக் கருத்துக்கள்”.கிருஷ்ணன் இந்த நூலில் விஷ்ணுபுரத்தின் கெளதுஸ்பம் பகுதியில் வரும் பெளத்த கருத்துக்களை பற்றி மட்டும் தன் மாற்றுப் பார்வையை முன்வைக்கிறார்.அதன் மற்ற பகுதிகளான ஸ்ரீபாதம் மற்றும் மணிமுடி பற்றி அவர் இலக்கியரீதியிலான விமர்சனம் எதையும் முன்வைக்கவில்லை.

பெளத்தத்தின் பிரிவுகளான வைபாஷிகம் , மத்தியமிகம், யோகாசாரம் ஆகிய தரிசனங்கள் ஞான சபையில் விவாதிக்கப்படுகிறது.வைபாஷிக மரபினைச் சார்ந்த பிட்சு நாகநந்த மகாபாதர் வாதத்தின் முதல் கேள்வியாக “பவதத்தரே தங்கள் தருக்கத்தில் ஆத்மா பற்றிய கருத்து என்ன?” என்கிறார்.அதற்கு பவதத்தர் கீழ் வரும் பதிலை அளிக்கிறார்.

“அன்னமயகோசத்தின் உள்ளே பிராண , அசுத்த , சுத்த , ஆனந்த , சின்மய கோசாங்களைத் தாண்டி உட்சென்றால் தெரியும் சதானந்த கோசமே ஆத்மாவாகும்.அது தூய பிரகாசம் கொண்டது.புலன்களின்றியே தன்னை உணர்வது.எந்த வடிவில் பிரம்மம் உள்ளதோ அந்த வடிவமே அதற்கும்.பிரமாண்டத்தின் ஆத்மா பிரம்மம்.உடலின் பிரம்மமே ஆத்மா.அவை வேறு வேறு அல்ல.ஏழு உலகங்களும், ஏழு கோசங்களும் பிரம்மத்தையும் ஆத்மாவையும் பிரதிபலிக்கின்றன.அவை அசத் என அறிந்தவன் பிரம்மமும் , ஆத்மாவுமே சத் என்று அறிவான்.ஆத்ம தரிசனம் பிரம்மதரிசனமேயாகும்.ஆகவேதான் உபநிஷதம் அகம் பிரம்மாஸ்மி என்கிறது.பனித்துளிகள் எல்லாமே சூரியனை பிரதிபலிக்கின்றன.ஆத்மா பிரம்மத்தின் பிரதிபலிப்பேயாகும்.” என்று பதில் அளிக்கிறார்.

இங்கே பவதத்தர் அளிக்கும் விளக்கும் ஆதி வேதாந்த தரிசனம்.பிற்கால வேதாந்தங்களான அத்வைதமும் இதே பார்வையை தான் முன்வைக்கிறது.பெளத்த வைபாஷிக பிரிவை சார்ந்த நாகநந்தரிடம் பவதத்தர் புலன்களின் தர்மத்தையும் மகாதர்மத்தையும் இணைத்து கேள்வி கேட்டு ஒரே தர்மம் ஏன் ஆசைகளையும் துக்கங்களையும் உருவாக்கவும்,அவற்றை அழிக்க காரணமாக அமையவும் வேண்டும் என்கிறார்.இதற்கான பதிலை சரியாக நாகநந்தரால் கூற முடியவில்லை.

கிருஷ்ணன் இங்கு சிறிய எழுத்து தர்மம் மகாதர்மம் ஆகியவற்றை பற்றிய விளக்கத்தை அளிக்கிறார்.பால் தர்மம்.தயிர் தர்மம்.பால் தயிராக மாறுவது மகாதர்மம்.பால்தான் தயிராக முடியும்.தண்ணீர் அல்ல.இந்த மகாதர்மம் என்பது இரு பொருட்களின் தர்மத்தையும் புறத்தையும் கொண்டு உருவாகும் நியதி.இதுவே மகாதர்மம்.பொருட்களின் உள்ளார்ந்த தர்மங்களும் புற உலகமும் முயங்கியே அடுத்த நிலை நிகழ்கிறது.நீர் வழி படூஉம் புனை போல என்ற புறநானூற்று பாடல் முன்வைக்கும் ஆஜிவிக தரிசனம் முழு நிர்னயவாதம்.ஆனால் பெளத்தம் முன்வைக்கும் மகாதர்மம் சார்புநிலை நிர்னயவாதம்.

இரண்டாவதாக நாகார்ஜூனரின் மத்தியமிக தரிசனத்தை முன்வைத்து சூனியவாதியான மகாநாமர் ஞான சபையில் விவாதம் செய்கிறார்.பவதத்தர் மனிதப் பிரக்ஞையை ஏற்கிறீர்களா என்று மகாநாமரை கேட்கிறார்.இல்லை என்கிறார் மகாநாமர்.பருப்பிரபஞ்சம் பற்றியும் அதே கேள்வியை கேட்கிறார்.இல்லை என்கிறார் மகாநாமர்.அப்படியென்றால் சூனியத்தை சூனியம் பார்க்கும் போது எப்படி பருப்பிரமை விளைந்தது என்று கேள்வி கேட்கிறார்.அதற்கு மகாநாமர் அறியமுடியாமையே இறுதி விடையாக இருக்க முடியும் என்கிறார்.அறியமுடியாமை என்பது கூற முடியாமை.நியாய மரபுப்படி விவாதத்தை விட்டு விலகிவிட்டீர்கள் என்று சொல்லி அவரை வாதத்தில் முறியடிக்கிறார்.

விவாதத்தின் தொடகத்தில் மகாநாமர் சூனியவாதம் பற்றி விளக்கம் அளிக்கிறார்.அறிபடு பொருள் , அறியும் பொருள், அறிவு ஆகியவை ஒன்றை ஒன்று சார்ந்தவை என்கிறார்.மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது என்கிறார்.பின்னர் அவரே இம்மூன்றும் இல்லை என்கிறார்.எதுவுமே இல்லை என்கிறார்.முதல் விளக்கமும் அடுத்த விளக்கமும் முரணாக இருக்கிறது.அமைப்பியம் எதுவுமே அது அதன் சூழமைவால் தான் அர்த்தம் கொள்ளப்படுகிறது என்கிறது.அதாவது சாலையில் போக்குவரத்து சமிக்ஞையில் சிவப்பு அது பச்சை மற்றும் மஞ்சள் ஆகிய பிறவற்றோடு இருக்கும் சூழமைவால் தான் வாகனத்தை நிறுத்தவேண்டும் என்ற அர்த்தம் கொள்கிறது.தனியாக சிவப்பு நிறத்திற்கு எந்த அர்த்தமும் இல்லை.அதற்காக அவை இல்லை என்று பொருள் கொள்ள இயலாது.இதுவே சூன்யவாதத்திற்கும் பொருந்தும்.தனியாக பொருட்கள் இல்லை.அல்லது தனியாக அவற்றை அர்த்தம் கொள்ள இயலாது.

பெளத்தம் பிரத்யட்சம் , அனுமானத்தை அறிதல் முறைகளாக கொள்கிறது.சுருதியை அது அறிதல்முறையாக கொள்ளவில்லை.அப்படியாக அது வேதத்தை நிராகரிக்கிறது.ஆன்மாயின்மை,நிலையின்மை,நிறைவின்மை ஆகியவையே பெளத்தம் முன்வைக்கும் வாழ்வின் மூன்று உண்மைத் தன்மைகள்.இந்த உலகில் தனித்த பேரிருப்பு என்று எதுவும் இல்லை.மகாதர்மம் தனித்த பேரிருப்பு அல்ல.அது எதையும் இயக்குவதில்லை.இயக்கத்தின் நியதியை சுட்டுவதற்கான தொகுப்பு பெயரே மகாதர்மம்.மகாதர்மம் பொருட்களின் இயங்குதளத்திலேயே வெளிப்படுகிறது.அதனால் மகாதர்மம் பிரம்மம் அல்ல.அது எதையும் உருவாக்கவில்லை.

மூன்றாவதாக பெளத்தத்தின் யோகாசார தரிசனத்தை சார்ந்த அஜிதன் ஞான சபை விவாதத்தில் தன் தரப்பை முன்வைக்கிறான்.வசுபந்தர் அசங்கர் ஆகிய ஞானிகளின் வழிவந்த திக்நாகரின் சீடன் அஜிதன்.திக்நாகர் முன்வைக்கும் யோகாசாரம் விஞ்ஞானவாதம் என்றும் சொல்லப்படுகிறது.சித்தம் மாத்திரம் உள்ளது என்னும் மெய்ஞான மரபு.அதாவது காட்சிப் பிரபஞ்சம் மனதால் மட்டுமே உருவாகுகிறது.இங்குள்ள அனைத்து மனங்களும் இணைந்த ஒட்டுமொத்த மனமே பிரபஞ்தத்தை உருவாக்குகிறது.அதையே ஆலய விஞ்ஞானம் என்று வசுபந்து நிலைநாட்டுகிறார் என்கிறான் அஜிதன்.புறப்பொருட்கள் கனம்தோறும் மாறிக்கொண்டிருக்கிறது.மாறிக்கொண்டே இருக்கும் பொருளின் ஒரு சுட்டுப் பெயர் நாம் அந்த பொருளுக்கு வழங்குவது.எந்தப் பொருளும் அதன் நிறைவில் இல்லை.நிறைவில் இல்லாத பொருள் இல்லை என்றே கொள்ளப்படும்.ஆகையால் நாம் பொருளாக உணர்வது நம் மனத்தால் தான் என்கிறான் அஜிதன்.சூன்யவாதம் அறிபவன், அறிபடு பொருள், அறியும் பொருள் ஆகியவற்றின் சார்பு நிலையிலேயே நாம் ஒன்றை அறிகிறோம் என்று சொல்வதற்கு மாற்றாக யோகாசாரம் மனம் மட்டுமே உள்ளது மற்றவை இல்லை என்ற இடத்திற்கு நகர்கிறது.மேலும் அனைத்து மன விஞ்ஞானங்களும் இனைந்த ஒட்டுமொத்த மனமே ஆலய விஞ்ஞானம் என்றும் அந்த ஆலய விஞ்ஞானம் மகாதர்மத்திலிருந்து எழுந்தது என்றும் சொல்கிறான்.மேலும் காலமே மகாதர்மத்தின் ஆடிபிம்பம் என நம் கண்முன் எழுந்தருளுகிறது என்று கால தரிசன சூத்ரம் பற்றி சொல்கிறான்.இதில் காலத்தை நேர்கோடாக கொள்ளலாகாது என்றும் , அதை சூழற்சியாக கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறான்.அஜிதன் வாதத்தில் வெற்றி பெறுகிறான்.விஷ்ணுபுரத்தின் ஞானாதிபதாயாக பதவி ஏற்கிறான் அஜிதன்.சந்திரகீர்த்தி நகரை ஆள்கிறான்.பெளத்த ஆட்சி அடுத்த இரு நூறு ஆண்டுகள் விஷ்ணுபுர நகரை ஆள்கிறது.

கிருஷ்ணன் தன் நூலில் பெரும்பாலும் நாகார்ஜூனரின் மத்தியமிக தரிசனத்தையும் விளக்கியும் விஞ்ஞானவாதத்தை மறுத்தும் தன் வாதத்தை முன்னெடுக்கிறார்.இந்த நூலில் அவர் இரண்டு விஷயங்களை செய்கிறார்.ஒன்று விஷ்ணுபுரம் நாவலில் மத்தியமிக தரிசனத்தை பற்றி சொல்லப்பட்டுள்ளதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி அதை விளக்கி அதுவே சரியான தரிசனம் என்ற வாதத்தை முன்வைக்கிறார்.மற்றது விஷ்ணுபுரம் நாவலில் வரும் அஜிதன் சொல்லும் விஞ்ஞானவாதத்தை மறுத்து அளிக்கும் விளக்கங்கள்.மறுபுறம் திக்நாகர் முன்வைக்கும் விஞ்ஞானவாதத்தையும் மறுக்கிறார்.அதாவது நாவலில் விஞ்ஞானவாதத்தை அஜிதன் முன்வைக்கும் போது செய்யும் வாதங்களில் உள்ள பிழைகளையும் சொல்கிறார்.அதே நேரத்தில் விஞ்ஞானவாதமும் பிழையான வாதம் என்கிறார்.

விஞ்ஞானவாதம் மனம் மட்டுமே உள்ளது என்கிறது.ஆலய விஞ்ஞானம் மகாதர்மத்திலிருந்த எழுந்த ஒன்று என்று அஜிதன் கூறுகிறான்.மகாதர்மம் தனித்த பேரிருப்பு என்கிறான்.காலம் மகாதர்மத்தின் ஆடிபிம்பம் என்கிறான்.இதற்கு கிருஷ்ணன் கீழ்க்கண்ட மறுப்புகளை சொல்கிறார்.

1. விஞ்ஞானம் எனும் கூட்டு ஏழு உணர்வுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது.அவை:

அ  - ஐந்து அடிப்படைப் புலனுணர்வுகள்
ஆ - மன உணர்வுகள்(எண்ணங்களால் உருவானவை)
இ  - பகுத்து ஆராய்ந்தறியும் அறிவு,புத்தி(Intellectual discriminating consiousness)
ஈ   - எட்டாவதாக ஆலய விஞ்ஞானம் விளக்கப்படுகிறது.

இறுதியாக சொல்லப்பட்டுள்ள ஆலய விஞ்ஞானம் வெளியுணர்வுக்கு வராமல் உள்மன ஆழத்தில் உறைந்திருக்கும் வேட்கைகளும் மற்றும் குணங்களுமாகிய சக்திகளை அதாவது புருஷர் என்று கூறப்படுபவரின் சாரமாக இருக்கும் இந்த சக்திகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.ஒவ்வொரு உயிரையும் உந்தி இயக்கும் சக்திகளாகிய 
  • பவதண்ஹா(வாழவேண்டும், இப்பிடியாக வேண்டும், அப்படியாக வேண்டும் என்ற வேட்கை)
  • காமதண்ஹா(இன்ப வேட்கை)
  • விபவதண்ஹா(அழிவு வேட்கை) 
ஆகிய இச்சாசக்திகளின் மற்றும் குணங்களாகிய சக்திகளின் ஒரு கூட்டே இந்த ஆலய விஞ்ஞானம்.
2. காரணங்களையும் சூழ்நிலைகளையும் ஆதரவுகளையும் சார்ந்து ஒவ்வொன்றும் எவ்வாறு தோன்றுகின்றது,மாறுகின்றது,மறைகின்றது என்பதை நிர்னயிக்கும் இயற்கை விதிகளின் தொகுப்புதான் தர்மம்.பிரபஞ்சத்தின் இயக்கத்தை நிர்ணயிக்கும் ருது நியமம்,பீஜா நியமம்,கம்ம நியமம்,சித்த நியமம் மற்றும் தம்ம நியமம் ஆகிய ஐந்து நியமத் தொகுதிகள் ஒன்றோடொன்று பின்னியிணைந்துள்ளது.இவ்வாறு இணைந்துள்ள தொகுதிகளில் அடங்கும் இயற்கை விதிகளின் சார்புடைமையையும் இயக்கத்தையும் நிர்ணயிக்கும் அடிப்படை விதிகளின் தொகுப்பே மகாதர்மம்.

3. மகாதர்மம் ஆலய விஞ்ஞானம் எப்படிப் பரிணமிக்கின்றது என்று அதன் பரிணாமப் படிமுறையை நிர்ணயிக்கிறது.அது ஆலய விஞ்ஞானத்தை உண்டாக்குவதில்லை.

4. அஜிதன் கூறும் காலச்சக்கர தரிசனம் பற்றி இந்த விளக்கத்தை அளிக்கிறார்.

  1. வண்டுதான் வட்டப்பாதையை இயக்குகின்றதே ஒழிய வட்டப்பாதை வண்டை இயக்குவதில்லை.தன்னிச்சையாகச் செயல்படும் வண்டு சில கட்டுப்பாடுகளுக்கும் நியதிகளுக்கும் ஆட்பட்டுள்ளது என்பது உண்மையே.ஆனால் அதைக்கொண்டு வட்டப்பாதை வண்டை இயக்குகின்றது என்று கூறுவது போலியான வாதம்.அது போலவே வாழ்க்கைச் சக்கரம் ஆலய விஞ்ஞானத்தை இயக்குவதில்லை என்பதும் , ஆலய விஞ்ஞானத்தை ஆக்கும் பேராசைகளும் , பற்றுகளும்தான் வாழ்க்கைச் சக்கரத்தைச் சுழற்றும் விசைகளாக இருக்கின்றன.ஆலய விஞ்ஞானத்தின் பரிணாமச் சுழற்சியே வாழ்க்கைச் சக்கரமாகச் சித்தரிக்கப்படுகிறது. 
  2. காலம் நீண்டுகொண்டுதான் போகிறது.சுழல்வதில்லை.சூரியனைச் சுற்றிவரும் கோள்கள் தம் மையக்கோட்டையும் சுற்றிச் சுழல்கின்றன.ஆகையால் , பகலும் இரவும் மாறிமாறி உண்டாகின்றன.பகல் இரவாகிறது.இரவு பகலாகிறது.பிறப்பு,இறப்பு,மறுபிறப்பு,மறுஇறப்பு என்று வாழ்க்கைச் சக்கரமே சுழன்று கொண்டேயிக்கின்றது.வாழ்க்கைச் சக்கரமே காலச்சக்கரமாகவும் உருவகிக்கப்படுகின்றது என்பது பொருத்தமாக இருக்கும்.
  3. வஜ்ஜிரயான பெளத்தம் கூறும் காலச்சக்கர தரிசனத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால் அது புற உலகையும் அக உலகையும் ஆராய்ந்து பார்த்து இயக்கத்தில் இரண்டிற்கும் இடையேயுள்ள ஒற்றுமைகளைக் காட்டுகின்றது.அண்டத்தின் உருவாகவே பிண்டமும் இருக்கின்றது.பிரபஞ்சங்களும் சூரிய குடும்பங்களும் ஏன் விண்வெளியில் சுழலும் அனைத்துமே , பிறப்பு , வளர்ச்சி, தேய்வு , மரணம் என்று தொடர்ந்து நிகழ்கின்ற வட்டச் சுழற்சிகளுக்கு ஆட்பட்டவைதான்.கோள்களின் சுழற்சிகளை ஆராய்ந்து பார்த்து அவற்றின் அடிப்படையில் நாட்களையும் மாதங்களையும் வருடங்களையும் கணிப்பதற்கு காலச்சக்கர தரிசனம் ஒரு தனிச்சிறப்பான முறையை வகுத்து வழங்கியுள்ளது.
  4. காலத்தையும் வஜ்ஜிராயன பெளத்தம் ஒரு தெய்வமாக உருவகித்து வழிபடுகின்றது.ஆனால் இதிலிருந்து வஜ்ஜிராயன பெளத்தம் காலத்தை ஒரு ஆதிமாகசக்தியாக , தனிப்பெரும் பொருளாக ஏற்றுக்கொண்டுள்ளது என்று கூற முடியாது.
அஜிதன் மனம் மட்டுமே உள்ளது என்கிறான்.பவதத்தர் உள்ளது சத் மற்றதெல்லாம் அசத் என்கிறார்.இரண்டுமே புற உலகை இல்லை அல்லது மாயை என்று ஏற்கிறது.வசுபந்தர் அசங்கர் வழி திக்நாகர் உருவாக்கிய யோகாசாரம் என்ற தரிசனம் விஞ்ஞானவாதத்தை முன்வைத்தது.பின்னர் கெளடபாதர் யோகாசாரம் சார்ந்து தன் தத்துவத்தை உருவாக்குகிறார்.அவரின் வழி வரும் சீடரான ஆதிசங்கரர் அத்வைத்தை முன்வைக்கிறார்.இருப்பது பிரம்மம் மட்டுமே மற்றதனைத்தும் மாயை என்று சொல்கிறார்.பவதத்தர் ஆதிசங்கரர் சொல்வதையே வேறு வார்த்தைகளில் சொல்கிறார்.அஜிதனும் அதையே தான் மனம் என்று சொல்கிறான்.அப்படியென்றால் அத்வைத தரிசனமே பல்வேறு வடிவங்களில் பெளத்தமாகவும் வேறு பல தரிசனங்களாவும் இங்கு ஞானத்தளத்தில் இருக்கிறது என்ற பார்வையை ஜெயமோகன் உருவாக்குகிறாரா என்று கிருஷ்ணன் கேள்வி எழுப்புகிறார்.அப்படியென்றால் இரண்டு தரிசனங்களுக்குமான வித்யாசம் வெறும் சொற்பிரயோகங்கள் சார்ந்த்து மட்டும்தானா.அந்த சொற்கறால் நிகழும் தர்க்கரீதியான போர் மட்டுமே இந்த விவாதங்கள் , மற்றபடி எல்லாம் ஒன்றுதான் என்ற பார்வையைத்தான் விஷ்ணுபுரத்தின் கெளஸ்துபம் பகுதி முன்வைக்கிறதா என்று கிருஷ்ணன் வினவுகிறார்.

ஆதிசங்கரர்

பெளத்ததில் பல்வேறு தரிசனங்கள் இருக்கும் போது ஏன் அத்வைத்தத்தின் முந்தைய வடிவமாக கருதப்படும் யோகாசாரம் விஷ்ணுபுரத்தில் ஞானசபையில் வெற்றி பெறும் தத்துவமாக புனையப்பட்டுள்ளது என்ற கேள்வி சரியான கேள்விதான்.அது மத்தியமிகமாகவோ அல்லது வைபாஷிகமாக இருந்திருக்கலாம்.ஆனால் இந்த யோகாசாரம் தேர்வு செய்யப்பட்டுள்ளதில் அது அத்வைதத்தின் முந்தைய வடிவம் என்பதால் தானா என்பதே ஓட்டுமொத்தமாக கிருஷ்ணனின் புத்தகத்தில் எழுப்பப்படும் கேள்வி.தெரியவில்லை.

ஆனால் மணிமுடி பகுதியில் விஷ்ணுபுரம் நகரின் செம்பர் குல மூப்பன் விஷ்ணுவாக வீற்றிருப்பது செம்பர் குலத்தில் நீலமூப்பன்தான் என்கிறார்.தொடர்ந்து மூப்பன் செம்பர் குல மரபின் தொன்மத்தை விளக்குகிறார்.இதற்கும் ஆதி வேதாந்தந்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.அது மூத்தார் வழிபாடு.அந்த செம்பர் குல மூப்பன் சொல்வது போலத்தான் நாவல் முடிவடைகிறது.பிரளயம் வருகிறது.நான்கு பக்கமும் இதழ்கள் விரிய அதிபிரமாண்டமான ஒரு தாமரை மலர் அதன் நடுவே கரிய பீடத்தில் வேததத்தன் அமர்ந்திருக்க , வேதத்தனை தாமரை இதழ்கள் பொதிந்து மூடிக்கொள்கிறது.இவற்றை படிக்கும் போது விஷ்ணுபுரம் நாவல் எந்த தரப்பையும் முன்வைக்கவில்லை என்று சொல்ல முடியும்.பழங்குடி செம்பர் சமூகம் , அவர்களின் தொன்மம், அதன் வழி உருவாகும் சடங்குகள், அந்த ஊர்களை பேரரசுகள் கைப்பற்றுவது, அப்போது பழங்குடிகள் ஊரை விட்டு வெளியேறுவது, அவர்களின் தெய்வங்கள் பேரரசின் தெய்வமாக மாறுவது , அந்த தொன்மம் ஒரு தரிசனமாக மாறுவது என்று இது ஒரு வரலாற்று பார்வையையும் முன்வைக்கிறது.மேலும் விஷ்ணுபுரம் நாவலில் வரும் சங்கர்ஷணனின் மகாபத்மபுராணம் இந்த விஷ்ணுபுரம் நாவலையே போலச்செய்து காட்டுகிறது.அது ஒரு காவியம்.விஷ்ணுபுரமும் ஒரு காவியமாக முன்வைக்கப்படுகிறது.இதில் எந்த தரப்பையும் தனித்தரப்பாக கொள்ள முடியாது.வைணவத்தில் பெரும் தொன்மமாக இருக்கும் நம்மாழ்வார் ஸ்ரீபாத பகுதியில் பயங்கரமாக பகடி செய்யப்படுகிறார்.பவதத்தரின் மகனான விஷ்ணுதத்தன் பின்னர் சித்தனாகிறான்.அவன் எல்லா தரிசனங்களும் உண்மையே.ஆனால் தர்க்கத்தளத்தில் அது வெறும் சொற்போராக மட்டுமே இருக்கும் என்கிறான்.ஏனேனில் அந்த தரிசனங்களை ஒரு எல்லை வரை மட்டுமே மொழியால் விளக்க முடியும் என்று காசியபனுக்கு சொல்கிறான்.

இருந்தபோதும் கெளஸ்துபம் பகுதியில் அநேகமாக வெற்றிபெறுவதும் ஒன்றுதான் தோல்வியடைவதும் ஒன்றுதான் என்ற பார்வை ஏன் வைக்கப்படுகிறது, ஏன் வெற்றிபெறுவதும் தோல்வியடைவதும் வேறு வேறாக இருக்கக்கூடாது என்ற கேள்வி முக்கியமானதுதான்.ஆதி வேதாந்தமும் பெளத்தமும் ஒன்று தான் என்ற பார்வை இங்கே முன்வைக்கப்படுகிறது.இது அவசியமற்றது.பெளத்தம் வேறு ஆதி வேதாந்தம் வேறு.பெளத்தமும் மத்தியமிகமும் தன் பார்வையை வேதாந்தம் வழி பெறவில்லை.வேதங்களை அவை அறிதல் முறையாக ஏற்கவில்லை.இது பல தளங்களில் ஏற்கப்படுவதில்லை என்பதை காணமுடிகிறது.

இந்த நாவல் வரும் காலம் ஐந்தாம் நூற்றாண்டிலருந்து பதிமூன்றாம் நூற்றாண்டு வரையானதாக இருக்கலாம் என்கிறார் கிருஷ்ணன்.பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை விஷ்ணுபுரம் நாவலை வாசித்தேன்.அப்போது மணிமுடி பகுதியில் ஸ்ரீபாத பகுதியில் வருபவர்கள் ஐதீகங்களாக தொன்மங்களாக கதைகளாக தரிசனங்களாக மாறிவிடுவார்கள்.எனக்கு அது மட்டும் ஈர்த்தது.ஆனால் கிருஷ்ணனின் இந்த நூலை வாசிப்பதற்காக விஷ்ணுபுரத்தை மீள்வாசிப்பு செய்த போது இந்த நாவலின் கட்டமைப்பு, சொற் வளம்,அதன் கனவுத்தன்மை அனைத்தும் மிகவும் ஈர்ப்பத்தாக இருந்தது.ஜெயமோகனுக்கு யானைகளை பற்றி சொல்லி மாளவில்லை.ஸ்ரீபாத பகுதியில் வீரன் என்ற யானை பற்றியும் , இரண்டாம் பகுதியில் அங்காரகன் என்ற யானை பற்றியும் அத்தனை விரிவாக எழுதுகிறார்.ஒரு குழுந்தையின் குதூகுலத்துடன் யானைகளை கண்டு ரசித்தியிருந்தால் மட்டுமே இப்படி எழுத முடியும்.அதை எழுதி எழுதித்தான் தீர்க்க முடியும்.எழுதினாலும் தீராது போலும்.இரண்டாம் பாகத்தில் பிராமணர்கள் உணவு உண்ணும் பகுதி நாவலின் மிகச்சிறந்த புனைவுப் பகுதி.நாவலில் தொடர்ந்து ஜெயமோகன் வைதீக மரபு சாதி அடிப்படையில் தண்டனைகளை வழங்கிய விதம்,சூர்யதத்தரின் கொடுங்கோல் ஆட்சி,லெளகீகத்தளத்திற்கு வெளியே எதும் அறியாத பிரமாணர்களின் அக்கறையின்மை என்று தொடர்ந்து சொல்லிச் செல்கிறார்.சந்திரகீர்த்தியின் பெளத்த ஆட்சி காலத்தில் அத்தனை ஆயிரம் இரவலர்கள் உணவு அருந்த வரும் காட்சியை பார்க்கும் நரோபா இந்த நகரத்தில் இத்தனை இரவலர்களாக என்று வியக்கிறான்.இவர்களுக்கு பெளத்த ஆட்சியில் தான் நகருக்குள் வந்து அண்ணவிகாரத்தில் உணவு அருந்த உரிமை வந்தது என்றும் அதற்கு முன்னர் ஆயிரம் வருடங்களாக மகாமுற்றங்களில் இந்த மக்களுக்கு அனுமதி இருந்ததில்லை என்பதும் சொல்லப்படுகிறது.

திருவடி, பிங்கலன் வழி காமம் மனிதனின் ஆதார விசை என்ற பார்வை நாவலில் வருகிறது.திருவடி லலிதாங்கி என்ற இளம் தாசிப்பெண்னை அத்தனை நெருக்கமாக பார்க்கிறான்.அவளின் முழுங்கையில் மெல்லிய மயிர்கள் இருப்பதைக் காண்கிறான்.வீரன் என்ற யானை மதம் கொண்டு தெருவில் அலைவதால் அங்கே பெருங்குழப்பம் ஏற்படுகிறது.மக்கள் கூட்டம் சிதறிச்செல்கிறது.அந்தக் கூட்டத்தில் அகப்பட்டுக் கொள்ளும் லலிதாங்கியை பத்திரமாக அவள் இல்லம் சென்று சேர்க்கிறான் திருவடி.பின்னர் அவன் ஒரு போதும் சமநிலைக்கு திரும்புவதில்லை.அவன் தினமும் அவள் இல்லம் இருக்கும் கணியைகர் தெருக்கு சென்று அங்கு நின்று பாடித்திரும்புகிறான்.அவன் தன் பாடல்களில் பரிபூரண சுய அழிப்பை அடைகிறான்.அது ஒரு உன்மத்த உளறல் என்று மணிமுடி பகுதியில் மாதவன் எண்ணிக்கொள்கிறான்.அவன் திருவடி ஆழ்வார் ஆகிறான்.சாதி கடந்த திருமணங்களை செய்து வைக்கிறான்.லலிதாங்கி திருவடிக்கு ஒரு நிமித்தம் மட்டுமே.அவன் இசையின் வழி பாடல்களின் வழி அங்கிருந்து வெகுதூரம் மானுடம் தழுவும் தரிசனம் நோக்கி செல்கிறான்.ஒரு ஆதித்துயர்.ஆனால் அதன் ஆதார விசை காமம்.இது பிங்கலன் விஷயத்திலும் நிகழ்கிறது.அவன் லட்சுமி என்ற சங்கர்ஷணனின் மனைவியுடன் கொள்ளும் உறவின் வழி தன் தரிசனத்தை அடைகிறான்.அதை யோக சக்கரமாக வளர்தெடுத்து யோனியை அதன் மையமாக உருவகிக்கிறான்.மற்றவை அனைத்தும் ஸ்திரீலிங்கமாகவும் புருஷலிங்கமாவும் உருவகிக்கிறான்.ஆனால் பின்னர் வஜ்ராயன பெளத்தத்தில் ஒரு கூறாக இணைக்கப்பட்ட யோகசக்கரத்தில் நிகழ்ந்த திரிபுகளும் இழிவான பயிற்சிகளுமே ஒருவகையில் இந்தியாவில் பெளத்தத்தின் சீர்கேட்டிற்கும் அவப்பெயருக்கும் இறுதியில் அதன் வீழ்ச்சிக்கும் மறைவுக்கும் காரணங்களாயின என்கிறார் கிருஷ்ணன்.

எனக்கு இந்த நாவலையும் கிருஷ்ணனின் விமர்சன நூலையும் வாசிக்கும் போது ஒரு விஷயம் முக்கியமாக பட்டது.சுயம் சுயமின்மை.அத்வைதம் ஆன்மா பிரம்மத்தின் பிரதிபலிப்பு என்கிறது.ஆன்மா அழிவற்றது என்கிறது.பிரம்மம் X பிரபஞ்ச மாயை என்ற இரு நிலைகளை போல அழிவற்ற ஆன்மா X அழிந்துபோகும் உடல் என்ற இருநிலைகளும் அதில் இருக்கிறது.அழிந்துபோகும் உடல் இழிவானது , அதனால் உடல் உழைப்பு கீழானது , உடல் உழைப்பாளிகள் தீண்டத்தகாதவர்கள் என்ற எண்ணம் இதிலிருந்து வந்திருக்கலாம்.மேலும் நானே சச்சிதானந்த சொரூபம் என்பதில் நான் என்ற சுயம் மேலெழுகிறது.அதுவே தன்னை,தன் மொழியை , தன் இனத்தை , தன் சேத்தை , தன்னலத்தை முன்வைக்கும் வாதங்களை தர்க்க ரீதியாக முன்னெடுத்து செல்ல வழி செய்கிறது.மனம் மட்டுமே உள்ளது என்ற விஞ்ஞானவாதமும் பொருள் மட்டுமே உள்ளது என்ற லோகயதமும் இரு எல்லைகள்.தனித்த சுயம் இல்லை.எல்லாம் சார்பு நிலைகளில் இயங்குகின்றன என்ற நாகார்ஜூனரின் மத்தியமிக தரிசனம் சுயத்தை மறுக்கவுமில்லை, சுயத்தை கொண்டாடவுமில்லை.சார்புநிலையில் இருக்கும் போது அனைத்தும் ஒரே முக்கியத்துவம் கொள்கிறது.தனிமனிதன் , ஆன்மா போன்றவைக்கு எதிரானது சார்புநிலைத் தத்துவம்.ஆலய விஞ்ஞானத்தை கார்ல் யுங் சொல்லும் கூட்டு நனவிலியோடு இணைத்து பார்த்து புரிந்து கொள்ளலாம்.ஆனால் எதுவுமே தனித்த முழுமுதல் பேரிருப்புகள் என்பதை மத்தியமிக மார்க்கம் நிராகரிக்கிறது.அது சரியென்றே படுகிறது.மேலும் அமைப்பியம் போன்ற கோட்பாடுகளுடன் சார்புநிலை தத்துவத்தை இணைத்து புரிந்து கொள்ள முடியும்.

கிருஷ்ணன் எழுதியுள்ள நூலில் கல்யாணராமன் அணிந்துரை எழுதியிருக்கிறார்.இந்த நூலின் ஒரே குறை இந்த அணிந்துரைதான்.கல்யாணராமன்தான் பிரம்மராஜன் தொகுத்த ஆத்மாநாம் கவிதைகள் குறைபாடுகளுடன் இருக்கிறது என்று பதறி காலச்சுவடில் கட்டுரை எழுதியவர்.இந்த அணிந்துரையிலும் நிறைய பதறியிருக்கிறார்.அவருக்கு இலக்கியமும் தெரியவில்லை , தத்துவமும் தெரியவில்லை.எல்லாவற்றிலும் எப்போதும் அவரால் சதியை கண்டுபிடிக்கமுடிகிறது.ஓ.ரா.ந.கிருஷ்ணன் அவர்களை சென்னை திருமங்கலத்தின் ஜங்ஷன் அருகே இருக்கும் அவருடைய அலுவலகத்தில் சமீபத்தில் சந்தித்து பேசினேன்.அப்போது ஜெயமோகனை பலரும் இந்துத்தவர் என்கிறார்களே , இந்த நூலை வாசித்ததன் வழியாக உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் ஏற்படுகிறதா என்று கேட்டேன்.இந்த நூல் வழி அப்படி ஒரு எண்ணம் ஏற்படவில்லை என்று சொன்னார்.நிச்சயம் தமிழில் எழுதப்பட்டுள்ள மகத்தான நாவல்களில் ஒன்று விஷ்ணுபுரம்.ஜெயமோகன் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் நூல் எழுத என்ன காரணம் இருந்ததோ அதே காரணங்கள் கிருஷ்ணனின் நூலுக்கும் பொருந்தும்.ஜெயமோகன் தன் முன்னுரையில் இத்தகைய படைப்புக்கு அவசியமான விரிவான விமரிசன உரையாடல் நடைபெறவில்லை என்ற படுகிறது என்கிறார்.மேலும் நமது காவிய , சிற்ப மரபுடன் இப்படைப்புக்கு உள்ள உறவும், இந்திய சிந்தனை மரபும் , தமிழக வரலாறும் இதில் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ள முறையும் விமரிசனம் பரிமாற்றம் மூலம் தெளிவடையக் கூடியவை என்கிறார்.அத்தகைய ஒரு விமரிசன நூல்தான் கிருஷ்ணனின் இந்த ஆக்கம்.

நூல்கள்
1. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் – கவிதா வெளியீடு – (இப்போது வேறு பதிப்பகங்கள் வழி வெளியாகிறது என்று நினைக்கிறேன்)
2. ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தில் பெளத்தக் கருத்துக்கள் – ஓ.ரா.ந.கிருஷ்ணன் – மெத்தா பதிப்பகம்.

புகைப்படங்கள்

1.நாகார்ஜூனரும் ஆரியதேவரும் - https://commons.wikimedia.org/w/index.php?curid=21908468
2.ஆதிசங்கரர் - https://commons.wikimedia.org/w/index.php?curid=186869


இருத்தலே சாராம்சம்



நிர்ணயம் - Photo by Antoine Beauvillain on Unsplash



உங்களை ஒருவன் கன்னத்தில் அறைந்துவிடுகிறான்.நீங்கள் அவனை திரும்ப கன்னத்தில் அறைந்துவிடுகிறீர்கள்.கணக்கு தீர்ந்துவிடுகிறது.உங்களுக்கு ஒருவன் துரோகம் இழைத்துவிடுகிறான்.நீங்கள் அவனை பழிக்குப்பழி வாங்க முற்படுகிறீர்கள்.கோபத்தில் உங்கள் கன்னம் சிவக்கிறது.கண்கள் துடிக்கிறது.இரவு படுத்தால் தூங்க முடியவில்லை.எந்த வேலையை செய்தாலும் அந்த துரோகம் உங்களை தொந்தரவு செய்கிறது.நீங்கள் அவனை செருப்பால் அடிக்கிறீர்கள்.அவன் முகத்தில் காறி உமிழ்கிறீர்கள்.அன்றிரவு நீங்கள் நன்றாக தூங்க முடியும்.ஆனால் அவன் ஏன் துரோகம் செய்தான், அவனுக்கு என்ன அவசியம், அவன் ஏன் என்னை தேர்வு செய்தான், அவன் தரப்பின் நியாயம் என்ன என்று சிந்திக்கும் போது உங்களது வன்மம் ஒரு பக்கம் அவனது தரப்பு மறுபக்கம் என்ற தொடர் உரையாடல் உங்களை சுழற்றியடிக்கும்.நீங்கள் இன்னும் உக்கிரமான மன அழுத்தத்தை அடைவீர்கள்.உங்களால் மன்னிக்கவும் இயலாது, பழிவாங்கவும் முடியாது.ஒரு வகை செயலின்மை தளத்தை சென்று சேர்வீர்கள்.ஒரு தூய உயிரியல் பிண்டம் திருப்பித் தாக்கும் , துரோகத்திற்கு பழிவாங்கும். ஆனால் அதீத பிரக்ஞை கொண்டவன் செயலின்மை தளத்தையை அடைகிறான். அப்படியான அதீத பிரக்ஞையால் துன்பப்படுவனின் குறிப்புகள் தான் நிலவறையிலிருந்து எழுதப்பட்ட குறிப்புகள்1.தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களில் இந்த நிலவறையாளனின் தொடர்ச்சி இருக்கிறது.அலெக்ஸி (சூதாடி) , ரஸ்கோல்நிகோவ் (குற்றமும் தண்டனையும் ) , நிகோலய் (பீடிக்கப்பட்டவர்கள்) , அர்காடி (பதின்) , இவான் ( கரமசோவ் சகோதரர்கள்) ஆகிய கதாபாத்திரங்கள் நிலவறையாளனின் சகோதரர்கள்.ரஸ்கோல்நிகோவ் நிலவறையாளன் போலவே வாழ்கிறான்.அலெக்ஸி போலவே நிலைவறையாளனும் எழுதக்கூடியவன்.இருவரும் தொழில் முறை எழுத்தாளர்கள் அல்ல.வேறு வழியில்லாமல் எழுதுபவர்கள்.அவர்கள் எழுதுபவை ஒரு வகை குறிப்புகள்.

கட்டற்ற சுதந்திர விருப்புறுதிக்கு எதிராக தத்துவத்தில் சொல்லப்படுவது நியதி.ஒர் ஆணின் உடல் தசைகள் இறுக்கமாக இருக்கும்.அவன் பொதுவில் பலரின் முன் தன் உணர்வுகளை காண்பிக்க மாட்டான்.தனக்கான வெளியை உருவாக்குவதே ஒர் ஆணுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.அதுவே அவனது அகங்காரத்தை நிறைவு செய்கிறது.இப்படி ஆணுக்கான சாராம்சங்கள் நிர்யணம் பெறுகிறது.இது போல பெண் குறித்து , குடும்பம் குறித்து , அரசாங்கம் குறித்து நாம் சில சாராம்சங்களை நிர்ணயக்கிறோம். உதாரணமாக மார்க்ஸ் நிலவுடைமை சமூகம் முதிர்ந்து முதலாளித்துவம் தோன்றும்.முதலாளித்துவத்தில் தொழிலாளி X முதலாளி என்ற இரண்டு வர்க்கங்கள் மட்டுமே இருக்கும்.தொழிலாளர்கள் ஒன்றுபட்டு புரட்சி செய்வார்கள்.பாட்டாளி சர்வாதிகாரம் உருவாகும்.பின்னர் ஒடுக்கப்படுபவன் , ஒடுக்கப்படுவர்கள் என்ற பாகுபாடு அற்ற ஆன்மிக சமூகம் மேலெழும் என்று எண்ணினார்.இந்த நிலவறையாளன் இந்தக் குறிப்புகள் எழுதிக்கொண்டிருந்த சமயத்தில் தான் மார்கஸ் தனது இயங்கியல் பொருள்முதல்வாதத்தை எழுதிக்கொண்டிருந்தார்.மார்கஸ் மனிதனின் மகிழ்ச்சி வருங்காலத்தில் இருக்கிறது என்று கூறினார்.இதுவரை இருந்த காலங்களில் எப்போதும் மனிதன் மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்பதிலிருந்து தான் இடதுசாரி இயக்கமே தோன்றுகிறது.ஆசிய உற்பத்தி முறை பற்றி அவர் அறியும் போது அவர் அதை தன்னளவில் தொகுத்துக் கொள்கிறார்.அதை வரலாற்று பொருள்முதல்வாதத்தில் ஒரு இடத்தில் வைக்கிறார்.ஆனால் அது அடுத்த பொருள் உற்பத்தி நிலையை நோக்கி நகரும் என்கிறார்.ஏனேனில் அவரின் இஷ்டலோகம் ஆசிய உற்பத்தி முறையில் இல்லை, அல்லது அதில் செய்யப்படும் சிறு சிறு மாற்றங்களில் இல்லை.அது சோஷியலிச சமூகத்தின் முதிர்வில் மட்டுமே இருக்கிறது.ஆகையால் ஆசிய உற்பத்தி சமூகமும் அங்கு வந்து சேர்தாக வேண்டும்.பின்னர் சுரண்டலற்ற சமூகம் சாத்தியப்படும்.இங்கே ஒரு நிர்ணயம் உருவாக்கப்படுகிறது.இந்த நிர்ணயம் நிகழ்ந்தாக வேண்டும்.அதை செய்ய லெனினும் , ஸ்டாலினும் , மாவோவும் முயன்றார்கள்.பின்னர் தோற்றார்கள்.கடவுள் பலி கேட்பது போல எதிர்கால நிர்ணயங்கள் அதற்கான மனிதபலியை பெற்றுக்கொள்கிறது.

நிர்ணயங்கள் கற்பனாவாத்திலிருந்து துவங்குகிறது.அந்திப் பொழுதில் காதலர்கள் தங்களுக்குள் கொஞ்சி குழாவி திளைத்திருக்க, குழந்தைகள் கடலில் கால் நனைத்து ஆர்ப்பரித்து மணலில் விழுந்து புரள ,இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய ,யுவதிகள் கூடி ரகசியம் பேச , குடும்பத்தினர் அமர்ந்து அந்தியை சுகிக்க, சூரியன் மறைந்து கொண்டிருக்கும் அந்தக் அந்திக் கற்பனாவாதக் காட்சி மகிழ்ச்சியை முன்வைக்கிறது.ஆனால் அந்த மகிழ்ச்சி அந்த சமூக கட்டமைப்பில் ஒரு பகுதி மட்டுமே.அங்கு அரசு, காவல்துறை, சிறைச்சாலை , மனநல மருத்துவமனை எல்லாம் பக்கத்தில் இருக்கிறது.அது அந்த அந்திக் காட்சியில் மட்டும் இல்லை.காட்சிக்கு வெளியே அதே கடற்கரையில் விபச்சாரம் நடந்துகொண்டிருக்கிறது.போதை மருந்து விற்பனை ஆகிறது.அதை ஒரு வகையில் அனுமதித்து ஒரு வகையில் தண்டிக்கிறது அரசு.ஆனால் இந்த கற்பனாவாதக் காட்சி லட்சியவாதம் நோக்கி நம்மை அழைத்து செல்கிறது.லட்சியவாதம் நிர்ணயவாதத்தை முன்வைக்கிறது.இங்கே மகிழ்ச்சி என்பது காதலர்களும் , குழந்தைகளும் ,இளைஞர்களும், பெண்களும், குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருக்கும் அந்த அந்திக் காட்சி.அந்தக் காட்சியில் சுரண்டல் இல்லை.அதுவே மகிழ்ச்சிக்கான திறவுகோல்.இப்போது இந்த மொத்த சமூகமும் அதை நோக்கி பயணப்பட வேண்டும்.ஏனேனில் அங்கு தான் மகிழ்ச்சி இருக்கிறது.இப்போது அப்படியான ஒரு நிர்ணயத்தை முன் வைக்கும் சமூக அமைப்பின் கருத்தியலை ஏற்காதவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.அவர்கள் மனித சமூகத்தின் மகிழ்ச்சிக்கு எதிரானவர்கள் என்று சொல்லி அவர்களை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துகிறார்கள்.இப்போது சமூகம் தூய்மை அடைகிறது.இப்போது அந்தியில் மொத்த சமூகமும் கடற்கரையில் அமர வேண்டும்.எல்லோரும் இப்போது நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று கூவ வேண்டும்.ஒரு அதிகாரி வந்து எல்லோரும் கூவுகிறார்களா என்று கண்கானிப்பார்.கூவாதவர்கள் சீர்திருத்தப் பள்ளிக்கு ஒரு வாரத்திற்கு அனுப்பப்படுவார்கள்.

உங்கள் காலைத் தொழுகை முடிந்து விட்டதா.
அவ்வளவுதான் உங்கள் காலை உணவு
ஊர் சுற்றாமல் ஒழுங்காய் போய்த் தூங்குங்கள் 

என்கிறார் ஆத்மாநாம்.

தஸ்தாயெவ்ஸ்கியின் நிலவறையாளன் இந்த மகிழ்ச்சி நோக்கிய நிர்ணயங்களையும் இந்த நிர்ணயங்கள் உருவாக காரணமாக இருந்த கற்பனாவாதத்தையும் கேள்வி கேட்கிறான்.இந்த நிர்ணயவாதத்திற்கு எதிராக இருத்திலியத்தில் முன்வைக்கப்படும் முக்கியமான கோட்பாடு சுதந்திர விருப்புறுதி.இரண்டும் இரண்டும் நான்கு போலத்தான் மனிதன் நடந்து கொள்வான் என்று விஞ்ஞானம் தொடரந்து தன் கோட்பாடுகளை முன்வைத்து வருகிறது.இன்று தரவுகள் சூழ் உலகில் இதுவரையான தனிமனிதனின் தரவுகளின் அடிப்படையில் அவன் அறியப்படுகிறான்.அவன் எதை வாங்குவான் , அவனுக்கு எதை கொடுக்கலாம் என்று தீர்மானிக்கிறது அரசும் , நவீன முதலாளித்துவமும்.அவனை ஒரு அட்டவனையில் பொருத்துகிறது.அவன் அந்த அட்டவனையில் ஒரு எண் மட்டுமே.மற்றவையுடன் கூட்டி பெருக்கி வகுத்து குறைத்து அவன் அடுத்து என்ன செய்வான் என்பதை நிர்ணயிக்க முடியும்.ஆனால் நிலவறையாளன் நீங்கள் எவ்வளவு தான் ஒரு மனிதனை அட்டவனைக்குள் பொருந்த முற்பட்டாலும் அவன் அதை திமிறிக்கொண்டு வெளியில் வந்தே தீருவான் என்கிறான்.அவன் திமிருவான் என்பதும் உங்கள் அட்டவனையில் இருக்கும் என்றால் அவன் மனப்பிறழ்வு அடைந்துவிடுவான்.அப்படியாக உங்கள் அட்டவனையிலிருந்து அவன் தப்பித்து விடுவான்.மனிதனுக்கு மகிழ்ச்சி தேவையில்லை.மனிதனுக்கு சூரியன் ஏன் கிழக்கில் தோன்றுகிறது என்பதற்கான தர்க்கம் கூட தேவையில்லை.அவனுக்கு தொடர்ந்து பயணப்பதற்கான சாலை மட்டுமே தேவை.இலக்கு கூட வெறும் இலக்கிற்காக மட்டுமே.மனிதன் அந்த இலக்கை நோக்கி பயணிப்பான்.ஆனால் இலக்கை அடைந்துவிடுவோம் என்று தோன்றினால் அந்த பயணத்தை தொடர இலக்கை மாற்றுவான் , அல்லது பிறழ்வான்.அந்த தேவையும் அதை உருவாக்குவதற்கான சுதந்திர விருப்புறுதியும்தான் மனிதனின் ஆதார ஏக்கம் என்கிறான் நிலவறையாளன்.


சுதந்திர இச்சை - Photo by Shane Rounce on Unsplash

மகிழ்ச்சியின் பொருட்டு மனிதர்களை ஒரு வழிப்படுத்தி அதை நோக்கி அவர்களை பயணிக்க வைக்க முடியும் என்பதை நிலவறையான் மறுக்கிறான்.மனிதன் தனக்கு தீங்கு அளிக்கும் விஷயங்களை தவிர்த்து பயணிப்பான் என்றாலும் அவன் தன்னை முழுக்க சிதைக்கக்கூடிய செயலையும் செய்வான்.அவனது சுதந்திர விருப்புறுதியின் தேவையும் ஏக்கமுமே அவனை இயக்குகிறது.அதனால் உங்கள் மகிழ்ச்சி நோக்கிய பயணத்தின் பேரூரையை சற்று நிறுத்தி வையுங்கள் என்கிறான்.மனிதன் அடிப்படையில் பிறழ்வானவன்.அதனால் கருத்தியல் கொண்டு எழுப்பப்படும் மாளிகைகள் உண்மையில் சலிப்பை உருவாக்குகிறது என்கிறான் இந்த எதிர்நாயகன்.

நாவலின் இரண்டாம் பகுதியில் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் வேலையில் இருந்த போது நடந்த சில சம்பவங்களை பற்றிச் சொல்கிறான் நிலவறையாளன்.அவன் அப்போலன் என்ற முதிய வயது வேலையாளுடன் ஒரு குடியிருப்பில் வாழ்கிறான்.அவனுக்கு நண்பர்கள் இல்லை.அவன் யாருடனும் பழகுவதில்லை.அவன் புத்தகங்கள் வாசிக்கிறான்.கனவு காண்கிறான்.விலைமாதுக்களிடம் செல்கிறான்.அவனது பால்ய காலம் மகிழ்ச்சி அற்றது.பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் தன்னுடன் படித்த பள்ளித் தோழர்கள் இருந்தாலும் அவன் யாருடனும் தொடர்பில் இல்லை. அலுவலர் ஒருவர் சாலையில் அவனை நேருக்கு நேராக கடக்கும் போது அவனை பொருட்படுத்தாமல் செல்கிறார்.எப்போதும் இவன் தான் ஒதுங்கி செல்ல வேண்டியிருக்கிறது.தன் இருப்பு முற்றிலுமாக பொருட்படுத்தாமல் ஆக்கப்படுவதை சகித்துக்கொள்ள இயலாமல் ஒரு நாள் அந்த அலுவலர் நேருக்கு நேர் வரும் போது ஒதுங்காமல் செல்கிறான்.இருவரும் தோளோடு தோள் உரசிக் கொள்கிறார்கள்.இப்போதும் அந்த அலுவலர் ஒதுங்கிச் செல்லவில்லை.ஆனால் தன் இருப்பு பொருட்படுத்தப்பட்டு விட்டது என்று அவன் உவகை கொள்கிறான். .யாரையும் சந்திக்காமல் இருக்கும் தனிமையிலிருந்து விடுபட வெளியே செல்ல முடிவெடுக்கிறான்.பள்ளித் தோழர்கள் அவனை பொருட்படுத்தவில்லை.ஆனால் அவர்களை சென்று சந்திக்கிறான்.அவர்கள் ஒரு விருந்துக்கு செல்ல முடிவு செய்கிறார்கள்.இவனை அவர்கள் அழைக்கவில்லை.அவனாக தானும் கலந்து கொள்ள விரும்புவதாக கெஞ்சுகிறான்.விருந்தில் அவனாக சென்று கலந்தும் கொள்கிறான்.அங்கு அவன் பிறரை அவமானப்படுத்துகிறான்.அவர்கள் பதிலுக்கு அவனை அவமானப்படுத்துவதில்லை.மாறாக அவனை யாரும் கண்டு கொள்ளமால் விட்டுவிடுகிறார்கள்.அவர்கள் கிளம்பிச் சென்றபின் அவர்களை துரத்திக்கொண்டு விலைமகளிர் விடுதிக்கு செல்கிறான்.அங்கு அவர்கள் இல்லை.சென்றுவிடுகிறார்கள்.லிசா என்ற விலைமாதுவை எதிர்கொள்கிறான்.தான் பள்ளித் தோழர்கள் மத்தியில் அடைந்த அவமானத்தை போக்க லிசாவை அவமானப்படுத்துகிறான்.அவளின் இப்போதைய நிலை எத்தனை கீழ்மையானது என்பதை அவளுக்கு உணர்த்துகிறான்.இதிலிருந்து அவள் தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்கிறான்.தனது அதிகாரத்தை அவள் மீது செலுத்துகிறான்.அவளின் ரட்சகனாக தன்னை காண்பித்துக்கொள்கிறான்.பின்னர் அவனது சொற்களை ஏற்று அவனை சந்திக்க வருபவளை ஐந்து ரூபள்கள் கொடுத்து அவமானப்படுத்தி அனுப்புகிறான்.

அவன் முதல் பகுதியில் சொல்லும் சுதந்திர விருப்புறுதி என்ற கோட்பாடுடன் இரண்டாம் பகுதியின் பகுதிகளை இணைத்துப் பார்க்க முடியும்.முதலில் அவனால் சமூகத்தில், அலுவலகத்தில் பொருந்தி போக இயலவில்லை.படிப்பது , கனவு காண்பது , விலைமாதுக்களிடம் செல்வது என்று அவன் வாழ்கிறான்.தனிமை பொறுக்க முடியாமல் பள்ளித் தோழர்களை சந்தித்தாலும் அவனால் அவர்களோடு சிரித்து பேசி குடித்து விசிலடித்து மகிழ முடியவில்லை.பின்னர் லிசா என்ற விலைமாது அவன் வீட்டுக்கு வருகிறாள்.அவளை அரவனைத்து அவளை ஏற்று அவன் மகிழ்ச்சியான வாழ்வை வாழ விரும்பவில்லை. அப்படியான ஒரு வாழ்வை அவன் கனவு காண்கிறான்.ஆனால் நிஜத்தில் அவளை துரத்துகிறான்.அவமானப்படுத்துகிறான்.தன் அதிகாரத்தை நிலைநிறுத்தும் பொருட்டே அவளிடம் அன்றிரவு ரட்சகனாக காட்டிக்கொண்டதாக சொல்கிறான்.நீ என்ன ஆனால் எனக்கென்ன , நீ எனக்கு ஒரு பொருட்டே அல்ல என்று அவளை தூற்றுகிறான்.அவள் விடைபெறுவதாக சொல்லிச் செல்கிறாள்.அவளை மேலும் அவமானப்படுத்த முந்தைய இரவுக்காக ஐந்து ரூபள்களை தருகிறான்.பின்னர் அதை நினைத்து வருந்துகிறான்.இந்த தொடர் நிகழ்வுகளில் அவன் எங்குமே மகிழ்ச்சியாக இருப்பதன் பொருட்டு ஒரு செயலை செய்யவில்லை.தன் இருப்பை நிலைநிறுத்தும் பொருட்டு , தன் அதிகாரத்தை நிலைநிறுத்தும் பொருட்டு தன் செயல்களை செய்கிறான்.லிசா மகிழ்ச்சியாக இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, தனக்கு இந்த உலகமே நரகத்துக்கு செல்லும் என்றாலும் தன் தேநீர்தான் முக்கியம் என்கிறான்.

விலைமாதுக்கள் விடுதியில் லிசாவிடம் பிரசங்கம் செய்யும் நிலவறையாளன் தான் அவ்வாறு செய்ததற்கு முக்கிய காரணம் தான் வேறு எங்கோ அடைந்த அவமானமே காரணம் என்கிறான்.எங்கோ அடையும் தாழ்வுணர்ச்சியும் , அவமானமும் வேறு இடத்தில் நம்மை முற்போக்கு முகமூடியை அணிய கட்டாயப்படுத்துகிறதா என்ற கேள்வி தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களில் தொடர்ந்து வருகிறது.அப்படி என்றால் முற்போக்கு கோட்பாட்டாளர்களின் உண்மையான நோக்கம் எங்கோ அடைந்த அவமானத்தை துடைக்கும் அதிகார விளைவா அல்லது உண்மையான மனித நேயமா என்று தஸ்தாயெவ்ஸ்கி வினவுகிறார். பீடிக்கப்பட்டவர்கள் நாவலில் வரும் பேராசிரியர் ஸ்டீபன் ட்ரோபிமோவிச் வழியே அவனது மாணவர்கள் அவரது முற்போக்கு கருத்தியல்களை கற்கிறார்கள்.ஆனால் ஸ்டீபன் ட்ரோபிமோவிச் வார்வாரா என்ற பெண்மணியை இருபது வருடங்களாக தொடர்ந்து காதலிப்பார்.அந்த நிறைவேறாத காதலின் துன்பத்தில் அவமானத்தில் உருவானதுதான் அவரது கருத்தியல் வடிவங்கள் என்று தஸ்தாயெவ்ஸ்கி பகடி செய்கிறார்.

அந்த பகடியின் தீவிர வடிவத்தையே லிசாவிடம் சொல்கிறான் நிலைவறையாளன். நல்லொழுக்கம் கொண்டு மகிழ்ச்சியான எதிர்காலத்தை நோக்கி சாப்பாட்டு மூட்டையை தூக்கிக்கொண்டு வேலைக்கு செல்லும் உள்ளீடற்ற வாழ்க்கை வெறுமை நிரம்பியது.தியாகங்களை வேண்டுவது.தினசரி அட்டவனையை கொண்டது.அந்த வாழ்க்கையை வாழ அதை மகத்துவப்படுத்த நாவல்களில் நாடகங்களில் கவிதைகளில் கதாநாயகன் வருகிறான்.அவன் ஒழுக்கமானவன்.தியாகங்கள் செய்பவன்.தன்னலம் அற்றவன்.மானுடத்தை நேசிப்பவன்.விளிம்பில் உள்ள மனிதர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுபவன்.அத்தகைய நாவல்களில் வரும் நாயகன் வழி தங்கள் பழக்கப்பட்ட வாழ்வை எதிர்கொள்கிறார்கள் மக்கள் என்கிறான் நிலவறையாளன்.ஆனால் தான் எதிர்நாயகன்.இதற்கு மேல் எழுதினால் அது உங்களின் உள்ளீடற்ற வாழ்வை மேலும் துலங்கச்செய்து மேலும் சலிப்படைய வைக்கும் என்று தன் குறிப்புகளை நிறுத்திக்கொள்வதாக சொல்கிறான்.

நாவலில் வரும் எதிர்நாயகன் , முதல் வாக்கியத்தில் நான் ஒரு நோயாளி , நான் நல்லவன் அல்ல என்கிறான்.தொடர்ந்து என் நுரையிரல் கெட்டுபோய்விட்டது.என் நுரையிரல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.நான் மருத்துவர்களை சென்று பார்க்கப்போவதில்லை.நான் மருத்துவர்களை மதிக்கிறேன்.நான் படித்தவன்.ஆனால் மூடநம்பிக்கை உள்ளவன் என்று தொடர்கிறான்.ஒவ்வொரு வாக்கியமும் அடுத்த வாக்கியத்தை மறுக்கிறது.முதல் மூன்று நான்கு வரிகளிலேயே நிலைவறையாளன்   தன்னைப் பற்றி முழுமையாக சொல்லிவிடுகிறான்.இயங்கியல் என்கிற வார்த்தையை விட இங்கு முரணியக்கம் சரியான வார்த்தையாக தெரிகிறது.மனிதன் முரணான சிந்தனைகளின் வழி இயங்குகிறான்.பகுத்தறிவு பேசிக்கொண்டிருப்பவர் திடீரென்று தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது ஜோதிட நிலையங்களுக்கு செல்கிறார்.அப்போது அவரது பகுத்தறிவு அவருக்கு தடையாக இல்லை.சாதி குறித்து தொடர்ந்து எதிர்வினை ஆற்றுபவர் சாதிப்பற்று கொண்டவராக இருக்கிறார்.பெண்ணியம் பேசுபவர் பெண்னை சுரண்டுகிறார்.இவை மனிதர்கள் போலியானவர்கள் என்பதால் மட்டுமல்ல.மனிதர்கள் முரணாக சிந்திக்கக்கூடியவர்கள் என்பதாலும்தான்.மனிதன் தன் சிந்தனைக்கு கட்டுண்டவன் கிடையாது.சிந்திப்பதனால் அல்ல , உள்ளார்ந்த தன் சுதந்திர விருப்புறுதி உருவாக்கும் தேவையாலும் ஏக்கத்தாலுமே மனிதன் இருக்கிறான் என்கிறான் நிலைவறையாளன்.

ஒரு வேளை நம் புத்தகங்கள் எல்லாம் இல்லாமல் ஆகிவிட்டால் நாம் எதன் அடிப்படையில் வாழ்வோம் , எதை பற்றிக்கொள்வோம் என்று வினா எழுப்புகிறான்.அவனே நிரம்ப படித்தவன்.அதனால் அதீத பிரக்ஞை உணர்வு கொண்டவன்.ஆனால் அவனே அந்த படித்த கருத்தியல்களின் தளைகளிலிருந்து விடுபட்டு சுதந்திர விருப்புறுதி குறித்தும் தூய உயிரியல் பிண்டமான மனிதனின் தேவை மற்றும் ஏக்கம் குறித்தும் பேசுகிறான்.

குற்றமும் தண்டனையும் நாவலிலும் விலைமாது வருகிறாள்.விளிம்பில் இருப்பவள்.சோனியா ரஸ்கோல்நிகோவை மீட்கிறாள்.ஆனால் இந்த நாவலில் அவன் முழுக்க தனித்திருக்கிறான்.இங்கும் ஒரு விலைமாது வருகிறாள்.விளிம்பில் இருப்பவள்.அவளை பற்றிக்கொள்வதன் வழி அவன் மீள முடியும்.சமூக மனிதனாக மாற முடியும்.அவனது மீட்புகளை அவனே தட்டிவிடுகிறான்.அவனுக்கும் ரஸ்கோல்நிகாவிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு , ரஸ்கோல்நிகோவ் ஒரு கருத்தியலின் அடிப்படையில் இரு கொலைகளை செய்கிறான்.பின்னர் வருந்துகிறான்.மன்னிப்பு கேட்கிறான்.மீள்கிறான்.பாவம் -  மன்னிப்பு – தியாகம் – மீட்பு என்ற கிறுஸ்துவ கருத்தியலை அந்த நாவல் முன்வைக்கிறது.ஆனால் நிலைவறையாளன் நிறைய படித்து அதீத பிரக்ஞை கொண்டவனாக இருந்தாலும் அவனில் ஒரு முரண் இருக்கிறது.அவன் அதே கருத்தியல்களை சந்தேக்கிறான்.படித்தவன் , ஆனால் நான் மூட நம்பிக்கை கொண்டவன் என்கிறான்.நீதி குறித்து அவனுக்கு தீர்மானமான எண்ணங்கள் இல்லை. “தீர்மானத்தின் ஆணிகள் அறையப்படாத சவப்பெட்டி என்று என் கபாலத்தைச் சொல்லலாம் நீங்கள்” என்ற யுவன் சந்திரசேகரின் கவிதை வரி நிலைவறையாளனுக்கு கச்சிதமாக பொருந்தும்.அவனுக்கு கருத்தியல் மீது நம்பிக்கை இல்லை , அதனால் அவன் பாவம் குறித்து அலட்டிக்கொள்வதில்லை.பாவம் இல்லாததால் மீட்சியும் இல்லை.அவன் லிசாவை அவமானப்படுத்தியதற்காக துயரப்படுகிறான்.ஆனால் அதை மாற்றிக்கொள்ள அவன் விரும்பவில்லை.ஒரு வேளை மறுபடியும் அவளிடம் சென்று மன்னிப்பு கேட்டால் மறுநாள் அவளை வெறுக்க வேண்டியிருக்கும்.இத்துடன் இதை விட்டுவிடுவதுதான் சரி என்கிறான். செயற்கையான மகிழ்ச்சியை விட துயரம் மேலானது என்கிறான்.அவன் துயரத்தை பிரக்ஞையுடன் ஏற்கிறான்.அதன் வழி பாவம் – மன்னிப்பு – தியாகம் – மீட்பு என்ற கிறுஸ்துவ கருத்தியலை நிராகரிக்கிறான். 

ஆல்பர் காம்யு எழுதிய வீழ்ச்சி நாவல் இந்த நிலைவறையிலிருந்து எழுதப்பட்ட குறிப்புகள் நாவலின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது.அந்த நாவலும் தன்னுரை பாணியில் அமைந்திருக்கும்.நிலைவறையாளன் ஒரிடத்தில் நான் பூச்சியாக மாற முடியவில்லை என்கிறான்.நமக்கு காப்காவின் உருமாற்றம் நாவல் நினைவுக்கு வருகிறது.தஸ்தாயெவ்ஸ்கியின் இந்த நாவல் இருத்தலிய கோட்பாடு சார்ந்த முக்கியமான வரைவை உருவாக்கியது.சுதந்திர விருப்புறுதி மனிதனின் சாராம்சம்.அதுவே அவனை மனிதனாக இருக்க வைக்கிறது.அது நசுக்கப்படும் என்றால் அவன் தப்பிக்க விழைவான்.வேறு வழி இல்லை என்றால் மனப்பிறழ்வு கொள்வான் என்பதே நிலைவறையாளனின் செய்தி. மனிதனுக்கு நிழல் இருப்பது போல மனிதன் உருவாக்கும் அமைப்புகளுக்கும் , கருத்தியல்களுக்கும் நிழல் இருக்கிறது என்கிறார் கார்ல் யுங்.பிறழ்வு மனிதனின் இருப்பை அனுமதிக்கிறது.ஒழுக்கமான பிசிறுகள் அற்ற வாழ்க்கை நிலையானது.மரணமுற்றது. அவன் பிறழ்வில் உயிர்ப்புடன் இருக்கிறான். இருத்தலே சாராம்சமாகிறது.

மனிதர்களை முற்போக்கு தத்துவங்கள் கொண்டோ அல்லது பிற்போக்கு தத்துவங்கள் கொண்டோ வழிநடத்தாமல் விட்டுவிடுவதே சிறந்தது என்கிறான் நமது எதிர்நாயகன்.வசந்தம் எதிர்காலத்தில் அல்லது இறந்தகாலத்தில் இருக்கட்டும்.ஆனால் மனிதர்கள் துயரப்பட்டு ,சண்டைபோட்டு ,காதலித்து, அதிகாரம் செலுத்தி , அதிகாரத்துக்கு கட்டுபட்டு , பயணத்திற்காக இலக்குகளை உருவாக்கி, பின்னர் திசைமாற்றி, கலகம் செய்து தங்கள் வாழ்வை வாழ்வார்கள்.வாழ்க்கை அடிப்படையில் இருப்பு சார்ந்தது.அதன் போக்கில் விடுங்கள் என்கிறான்.மகிழ்ச்சிக்கான திறவுகோல் உங்கள் கைகளில் இருக்கலாம்.ஆனால் மனிதனின் பிரச்சனை திறவுகோலை கொண்டு கதவை திறந்து உள்ளே சென்ற பின் என்ன செய்வது என்பதுதான்.அதனால் மகிழ்ச்சி என்ற திறவுகோலை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.மனிதன் தன் நிழலுருவத்தை கண்டு அஞ்சி எளிமையாக வாழ்வான்.நீங்கள் ஒழுங்காய் போய்த் தூங்குங்கள் என்கிறான்.நாயகர்களும் நாயகிகளும் தூங்கலாம்.

  
1.  நிலவறையிலிருந்து எழுதப்பட்ட குறிப்புகள் – Notes from the Underground – Fyodor Dostoevksy - Translated by Richard Pevear and Larissa Volokhonsky – Everyman’s Library.

(தமிழினி இணைய இதழில் வெளியான கட்டுரை)