2019


2019 ஆம் ஆண்டு சிக்கல்கள் ஏதும் இல்லாத வருடமாக இருந்தது.இந்த ஆண்டிலும் பெங்களூரில் வீடு மாற வேண்டியிருந்தது.வேலையில் பெரிய சிக்கல்கள் ஏதும் இல்லை.அடுத்த வருடம் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று தோன்றுகிறது.வேலை சார்ந்தும் நிறைய படிக்க வேண்டியிருக்கிறது.இரண்டு குழந்தைகளை சமாளிப்பதற்குள் நாள் முடிந்துவிடுகிறது.இந்த வருடம் நன்றாக வாசித்தேன்.விஷ்ணுபுரம் நாவலையும் கிருஷ்ணன் அதற்கு எழுதிய விமர்சன நூலையும் முன்வைத்து எழுதிய கட்டுரை நிறைவான அனுபவமாக இருந்தது.உலவ ஒரு வெளி , ஜனனம் ஆகிய இரண்டு சிறுகதைகள் எழுதினேன்.ஜனனம் மணல் வீடு இதழில் வரும் என்று நினைக்கிறேன்.வரும் 2020யில் முதல் சிறுகதை தொகுப்பு பிரசுரமாகும்.

ட்டய்கு ரியோக்கன் கவிதைகளின் மொழிபெயர்ப்பு மற்றும் தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களை முன்வைத்து எழுதும் கட்டுரைகளை தொடர வேண்டும்.இவற்றை அடுத்தடுத்த வருடங்களில் புத்தகங்களாக கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்.பெளத்தம்,திரைப்படங்கள்,பெருநகரங்கள் - தொழில்மயம் - அந்நியமாதல் - அடையாளம் பற்றிய கட்டுரைகளையும் புத்தக விமர்சனங்களையும்  தொடர்ந்து எழுத வேண்டும்.எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.


நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்!


செந்தமிழ்க்கிழார் என்பவர் எழுதியுள்ள "நீங்களும் கோர்டில் வாதாடலாம்" என்ற சிறு புத்தகம் தனி பிராது (Private compliant) தாக்கல் செய்து அதை எப்படி வழக்கறிஞர் இல்லாமல் நீதிமன்றங்களில் நடத்துவது என்பதை பற்றிய நடைமுறைகளை பற்றி விளக்குகிறது.இதில் காவல் துறை அதன் நடைமுறை, நீதிமன்றங்கள் அதன் பிரிவுகள் மற்றும் நடைமுறை, தனி பிராதை எப்படி தாக்கல் செய்வது , வழக்கில் தோற்றால் மேற்கொண்டு செய்ய வேண்டிய மேல் முறையீடு , சீராய்வு மனு ஆகியவற்றை பற்றி ஒரளவு விளக்கமாக சொல்கிறது.

ஒரு எழுத்தாளனுக்கு 

1. இந்திய அரசியல் சாசனம் (Indian Constitution)
2. குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC)
3. இந்திய உரிமையியல் நடைமுறைச் சட்டம் (CPC)
4. இந்திய சாட்சிய சட்டம்(Indian Evidence Act)
5. இந்திய தண்டனை சட்டம் (Indian Penal Code)

ஆகிய ஐந்து புத்தகங்கள் பற்றிய ஒரு அடிப்படை புரிதல் இருக்க வேண்டும்.தமிழ் எழுத்தாளன் நிச்சயம் தனி பிராது கொடுக்கும் அளவுக்கு தைரியமானவர் இல்லை என்பது உண்மைதான்.ஆனால் மேலே சொல்லியுள்ள ஐந்து புத்தகங்கள் பற்றி எளிய அறிமுகமாவது ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டும்.இவை அனைத்தும் தமிழில் கிடைக்கிறது.

நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் ! - செந்தமிழ்க்கிழார் - நர்மதா புத்தகம்.