இந்துத்துவ அரசியலின் வீழ்ச்சி



இந்துத்துவ இயக்கங்கள் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு சில விஷயங்களை முக்கியமாக வலியுறுத்தி வருகிறது.கஷ்மீர் பிரச்சனையில் அதன் நிலைப்பாடு, பொது சிவில் சட்டம் போன்றவை அதில் முக்கியமானவை.வலதுசாரி இயக்கங்கள் எப்போதும் தங்கள் பொற்காலத்தை இறந்தகாலத்தில் தேடுகிறார்கள்.அதனால் அவர்கள் எப்போதும் வரலாற்றை திருப்பி எழுதுவதில் முனைப்புடன் இருக்கிறார்கள்.1984யில் இரண்டு இடங்களில் மட்டும் வென்ற பாரதிய ஜனதா கட்சி 1998யில் ஆட்சியை பற்றியது.பிறகு 2014யில் பத்து வருடங்கள் கழித்து மறுபடியும் ஆட்சிக்கு வந்தார்கள்.வலதுசாரி இயக்கங்கள் உலகம் முழுதும் என்ன செய்வார்களோ அதையே இங்குள்ள வலதுசாரி இயக்கங்களும் செய்துள்ளது.ஒரே மொழி,ஒரே ஜனசக்தியாக ஒன்றிணைவதன் அவசியம் போன்றவை அதில் முக்கியமானவை.கஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புரிமை தரும் இந்திய அரசியல் அமைப்பின் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது.பொது சிவில் சட்டம் இன்னும் கொண்டு வரப்படவில்லை என்றாலும் முத்தலாக் தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அயோத்தியில் இதுவரை சர்ச்சைக்குரிய இடமாக கருதப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.மசூதி இடிக்கப்பட்டது தவறு என்று நீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அதனால் தான் வேறு இடத்தில் மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.இந்த தீர்ப்பு சமூக நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்பாகவே பலராலும் பார்க்கப்படுகிறது.

இதில் உள்ள முக்கிய விஷயம் இனி இந்துத்துவ அரசியல் எங்கும் செல்ல இயலாது என்பதுதான். ராம ஜென்ம பூமிக்கான போராட்டம் தான் பாரதிய ஜனதா கட்சி தேசிய அரசியலில் ஒரு வலுவான கட்சியாக உயர்வதற்கான வழியை வழங்கியது.இனி இப்படியான ஒரு போராட்ட களத்தை கண்டுபிடித்து அதன் அடிப்படையில் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று யாத்திரை செல்வதும் மக்களை திரட்டுவதும் சாத்தியமில்லாதது.குறியீட்டு தளத்தில் இந்துத்துவ அரசியில் அதன் எல்லையை தொட்டு விட்டது.இனி அந்த இயக்கத்திற்கு செல்வதற்கு வழி இல்லை.அது கீழே சரிந்துதான் ஆக வேண்டும்.பண்பாட்டு தளத்திலான அடையாள அணித்திரள்வு இனி வேறு ஒரு விஷயத்தை முன்வைத்து உருவாக்க முடியாது.அதனால் தான் எப்போதும் வெற்றியின் களிப்பில் இயக்கங்கள் சோர்வும் கவலையும் கொள்கின்றன.

திராவிட இயக்கங்களுக்கு இந்தி எதிர்ப்பு ஒரு பெரிய வரமாக அமைந்தது.அப்படியான ஒரு எதிர்ப்பை உருவாக்குவதற்கான வாய்ப்பு அமைந்திருக்காவிட்டால் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைத்திருக்க முடியாது.இப்போது எவ்வளவு முயன்றாலும் அப்படியான ஒரு இந்தி எதிரப்பு அலை உருவாக வாய்ப்பில்லை.அதே போல இந்துத்துவ அரசியலுக்கும் இனி தன்னை முழுமையாக திரட்டிக்கொள்ள வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை.என்பதுகளின் இறுதியில் உருவான இந்துத்துவ அலை மெல்ல இந்த முப்பது வருடங்களில் அதன் உச்சத்தை அடைந்துள்ளது.மலை உச்சிக்கு செல்லும் ஒருவன் கீழே இறங்கி வருகிறான்.மலை ஏறும் எவரும் எவரேஸ்ட் சிகரங்களில் குடியிருப்பதில்லை.இனி காங்கிரஸ் கட்சி அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்குள் ஒரு தலைவரை கண்டுபிடிக்க வேண்டும்.அவர் தான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க வேண்டும்.இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.இரண்டு கட்சிகள் இருக்க கூடாது.ஒரு கம்யூனிஸ்ட் கட்சியாக மாற வேண்டும்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி - 1 போன்ற அரசாங்கம் மறுபடி அமைய வேண்டும். அதை நோக்கி இந்துத்துவம் தவிர்த்த மாற்று அரசியல் கட்சிகள் பயணிக்க வேண்டும்.மண் பயனுற வேண்டும்.

அருண்மொழி


அருண்மொழி இறந்துவிட்டார் என்ற செய்தியை படித்தேன்.மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.மிக நல்ல மனிதர்.அவர் எத்தனையோ பேருக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறார்.அவருக்கு திரைத்துறையில் , அரசியலில், இலக்கிய, நாடகத்துறையில் இருக்கும் பலரை நன்கு தெரியும்.சென்னையின் எந்தப் பகுதிக்கும் கூகிள் மேப்பை விட சிறந்த வழி சொல்வார்.சென்னையில் எங்கு சென்றாலும் அங்கு சென்று சந்திக்க ஒரு நண்பர் இருப்பார்.

நான் அவரை அவர் பிரசாத் ஸ்டுடியோவில் வேலை செய்து கொண்டிருந்த போது சந்தித்தேன்.அவர் தான் நான் இயக்கிய ராவ் சாஹிப் என்ற குறும்படத்திற்கு பல உதவிகள் செய்தார்.அவரின் உதவி இல்லாதிருந்திருந்தால் அந்த குறும்படத்தை எடுத்திருப்பேனா என்று தெரியவில்லை.யாரையும் சுரண்டாதவர்.சென்ற வருடம் சென்னை புத்தக கண்காட்சியில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன்.சில மாதங்களுக்கு முன்னர் ஏதோ விடுமுறைக்கு சென்னைக்கு சென்றிருந்த போது , மகனுக்கு பேராக்கு காட்ட சாலிக்கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் சுற்றிக்கொண்டிருந்த போது அவரும் இரு சக்கர வாகனத்தில் எதிரில் வந்தார்.பார்த்து பேசினேன்.அது தான் கடைசியாக பேசியது என்று நினைக்கிறேன்.சென்னை செல்லும் போது அவர் நடத்தி வரும் நடிப்பு பள்ளிக்கு சென்று அவரை சந்திக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.அது இனி நடக்காது என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.மூன்று முழு நீளத் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.ஏழாவது மனிதன் படத்திற்கு அவர் வசனம் எழுதினார்.திருநங்கைகளின் பிரச்சனைகள் பற்றி உண்மையான அக்கறை அவருக்கு இருந்தது.அதை சார்ந்து சில படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கிறார்.ஆவணப்படங்கள் இயக்கியிருக்கிறார்.சமீபத்தில் நடிப்பு பள்ளி நடத்தி வந்தார்.அவர் நாளை காலை பத்து மணிக்கு வருகிறேன் என்று பத்து பேரிடம் சொல்வார்.இறுதியில் பதினொராவதாக ஒருவரை பார்க்க சென்று விடுவார்.அவருக்கு என் அஞ்சலி.

(நவம்பர் 9ஆம் தேதி பேஸ்புக்கில் எழுதிய பதிவு)

 

 

அந்நியமாதலும் தீர்வும்




எரிக் ஃபிராம் ( Erich Fromm) மனவளமான சமுதாயம் (Sane Society) நூலில் மனிதனுக்கு அடிப்படையிலேயே இயற்கையிலிருந்து விலகி செல்வதற்கான இருத்தலிய சிக்கல் இருப்பதை சொல்கிறார்.அவனால் விலங்குகளை போல இயற்கையோடு இயைந்து இருக்க இயலாது.ஆதாம் ஏவாள் விலக்கப்பட்ட கனியை உண்பது அந்த விலகிச்செல்லும் விருப்புறுதியைத்தான் குறிப்புணர்த்துகிறது என்கிறார்.எப்படி ஒரு மனிதக் குழுந்தை பிறந்து எழுந்து நடக்க நீண்ட வருடங்கள் எடுத்துக்கொள்கிறதோ அதே போல மனித சமூகம் இயற்கையிலிருந்து விலகி வர நீண்ட நெடுகாலம் எடுத்துக்கொண்டது.கடந்த நான்காயிரம் ஆண்டுகளில் தொடர்ந்து மனிதன் மிகப்பெரிய அளவில் பாய்ச்சலை நிகழ்ந்திருக்கிறான்.அவன் இன்று தொழில் மய சமூகத்தில் வேலை பிரிவனைகள் மிகவும் இறுக்கமாக கடைப்பிடிக்கப்படும் முதலாளிய அல்லது சோஷயலிச சமூகத்தில் வாழ்கிறான்.இந்த வேலை பிரிவினை அவனை அந்நியப்படுத்துகிறது.இந்த அந்நியமாதல் அவனுக்குள் மன அசதியை ஏற்படுத்துகிறது.அந்நியப்படும் அவன் அருவமான உலகில் வாழ்கிறான்.பருண்மையான உலகம் அவனுக்கு அருவமானதாக மாறுகிறது.

அவன் ஜனநாயக அரசியலில் பங்கு பெறுகிறான்.ஆனால் அதிலிருந்து அந்நியப்பட்டிருக்கிறான்.அவன் உலகம் அருவமாகிறது.பஸ்ஸில் பயணித்த ஐம்பத்திரண்டு பேர் மரணம், நிலநடுக்கத்தில் பத்தாயிரம் பேர் உயிரிழந்தனர் போன்ற செய்திகள் நம்மை உலுக்கவதில்லை.நம்மை அழ வைப்பதில்லை.இது படைப்பிலிருந்து விலகும் மனிதன் அடையும் அந்நியமாதல்.இந்த அந்நியமாதல் அவனது தனிப்பட்ட வாழ்ககையில் , அவன் பங்கெடுக்கும் ஜனநாயக அரசியலில் , அவனது ஓய்வு நேர விருப்பங்களில்,  அவனது வேலையில் , உறவுகளில், வாழ்க்கை பற்றிய நோக்கில் எல்லாம் பாதிப்பு செலுத்துகிறது என்கிறார் எரிக் ஃபிராம்.இதற்கு அவர் அளிக்கும் தீர்வுகள் தான் மிகவும் எளிமையானதாக இருக்கிறது.வேலை பிரிவினைகள் தான் அந்நியமாதலுக்கான காரணம் , அவன் செய்யும் வேலையின் முழுமையை அவனுக்கு உணர்த்துவதன் வழி அவனது அந்நியமாதலை குறைக்க முடியும் என்கிறார்.

எரிக் ஃபிராம் இந்த தீர்வுக்கு வர முக்கிய காரணம் அவரது மார்க்ஸிய பார்வை.அவர் வரலாறு இந்த திசையில் தான் செல்ல முடியும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார்.விஞ்ஞானம் , தொழில்நுட்பம் , இயற்கையை வசப்படுத்துதல் ஆகியவற்றிலிருந்து மனிதன் திரும்ப வாய்ப்பில்லை என்கிறார்.அதனால் கிராம பொருளாதாரத்தை அவர் ஒரு தரப்பாக கூட முன்வைக்கவில்லை.ஆதாம் ஏவாள் உண்ட விலக்கப்பட்ட கனி என்பது மனிதனுக்கு இயல்பாகவே இருக்கும் அறிந்துகொள்வதற்கான விருப்புறுதியில் உருவாவது.அதனால் அவன் இப்போது வரலாற்றில் இருக்கும் இந்த இடத்திற்கு வந்துதான் ஆக வேண்டும்.சமூகத்தில் தகாப்புணர்ச்சி நீக்கமும் , இயற்கையிலிருந்து விலகலும் ஒன்றுதான் என்கிறார்.அதாவது அது இப்படித்தான் நிகழ்ந்தாக வேண்டும்.வேறு எப்படியும் அது இருக்க வாய்ப்பில்லை என்கிறார்.இந்த இயற்கையிலிருந்து நீங்குதல் தந்தை பிம்பத்திடம் அடிபணியும் பண்பை உருவாக்குகிறது என்கிறார்.

இப்படியான பல சட்டகங்கள் வழி அவர் வந்தடையும் தீர்வு எளிமையானதாகவும் Status quoவை நிலைநிறுத்துவதாகவும் இருக்கிறது.இதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை.முதலாளிகள் இந்த பரிசீலனைகள் ஏற்றுக்கொள்வார்கள்.ஒரளவு வரை நடைமுறை படுத்தவும் செய்வார்கள்.ஏனேனில் இது அவர்களின் உற்பத்தியை பெருக்க உதவுக்கூடும்!

இந்த அந்நியமாதலுக்கு அவர் அளிக்கும் மற்றொரு தீர்வு கூட்டுக்கலை விழாக்கள்.இன்று மதம் சார்ந்த சடங்குகள் இல்லாத நிலையில் தனிமனிதன் நவீனக்கலை வடிவங்களை நோக்கி செல்கிறான்.ஆனால் அதில் அவன் தன்னை இழப்பதில்லை.இந்த உலகத்தை தன் தலையால் மட்டும் அறிந்தால் போதாது என்கிறார் எரிக் ஃபிராம்.தன்னை முழுமையாக கரைத்துக்கொள்ளக்கூடிய கிராமத் திருவிழாக்கள் போன்ற கூட்டுக்கலைகள் வேண்டும் , அது கலாச்சார தளத்தில் அவனது அந்நியமாதலுக்கான தீர்வாக இருக்கும் என்கிறார்.

இதில் கூட்டுக்கலை பற்றிய அவரின் தீர்வு பெருநகரங்களில் நடைமுறை படுத்துவது நல்ல விளைவுகளை உருவாக்கும்.ஆனால் வேலை பிரிவினை உருவாக்கும் அந்நியமாதல் , அதனால் அனைத்தையும் அருவமாக உணர்தல் என்ற சிக்கலில் இருந்து விடுபட அவன் வேலை செய்யும் பண்டம் அல்லது சேவை பற்றிய முழுமை உணர்வை பெற வேண்டும் என்ற தீர்வு வேறு என்ன வழி இருக்கிறது என்ற அடிப்படையிலான பார்வை.அவருடைய தீர்வுகள் பெருநகர தொழில்மய சமூகங்களுக்கு மாற்று இல்லை என்ற நிச்சயமான முடிலிருந்து உருவாகுகிறது.அவர் காந்தியை எங்குமே குறிப்பிடவில்லை.ஹெர்பர்ட் மார்க்யூஸா இந்த வேறு வழி இல்லை என்ற கலகமற்ற பார்வையைத்தான் விமர்சிக்கிறார்.

ராஜ் கெளதமன் மொழிபெயர்த்திருக்கிறார்.மொழிபெயர்ப்புகள் எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு மிக சிறந்த உதாரணமாக அமைந்துள்ள புத்தகம் இது.ராஜ் கெளதமன் இதை மிகவும் விரும்பி மொழிபெயர்த்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.அவர் எரிக் ஃபிராம் பற்றி நீண்ட அறிமுகம் ஒன்றை அளித்திருக்கிறார்.அந்த அறிமுகம் எரிக் ஃபிராம் முன்வைக்கும் பார்வையை புரிந்து கொள்ள பெரிய அளவில் உதவுகிறது.

மனவளமான சமுதாயம் - எரிக் ஃபிராம் -  மொழிபெயர்ப்பு ராஜ் கெளதமன் - காலச்சுவடு பதிப்பகம்

புகைப்படம் - By Müller-May / Rainer Funk, CC BY-SA 3.0 de, https://commons.wikimedia.org/w/index.php?curid=43921778