2023

 



நான் இந்த ஆண்டில் மனித உரிமைகளுக்கான பட்டயப் படிப்பு படித்தேன்.அநேகமாக அனைத்து வகப்புகளிலும் பங்குபெற்றேன். சட்டம் பற்றிய அறிமுகம் , சட்டவியல் பற்றிய அறிமுகம் , இந்தியாவில் மனித உரிமை மற்றும் சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்கான அமைப்புகள் ஆகிய பாடங்கள் எடுக்கப்பட்டன.நல்லாசிரியர்கள்.நான் இறுதிப் பரீட்சை மட்டும் எழுதவில்லை.ஆனால் இந்த வகுப்புகளால் நான் பயன் பெற்றேன்.எனக்கு அவை பிடித்திருந்தன.எனக்கு இவை புதிய உலகை அறிமுகப்படுத்தின. இதுவரை கேள்விபட்டியிராத பெயர்கள் , கோணங்கள். நான் இலக்கியத்தின் பொருட்டே இவற்றை படிக்க விரும்பினேன். இலக்கியமும் மானுட உரிமைகளுக்கான ஒரு ஏற்பாடு தான்.

தற்காப்புக் கலை (Martial Arts) வகுப்பில் சேர்ந்தேன்.கராத்தே, டே குவான் டூ ஆகியவற்றை உள்ளடக்கியது.யிட் பெல்ட் முடித்து ஜூனியர் எல்லோ பெல்ட் பெற்றேன். தொடர்ந்து வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் உள்ளது.செல்வேன்.இது எனக்கு முக்கியமாகத் தோன்றியது.எனக்கு உடற்பயிற்சிக் கூடங்களுக்கு செல்ல ஆர்வம் இருப்பதில்லை.தற்காப்புக் கலைகள் மகிழ்ச்சி அளிப்பவை.தொடர் பயிற்சி அவசியம்.

இந்த வருடம் வாசித்த புத்தகங்களில் முக்கியமானது கிருஷ்ண ஐயர் பற்றிய சுயசரிதையும் ஜார்ஜ் பெர்னாண்டஸ்  பற்றிய சரிதையும்.இந்த வருடம் வேலை பளூ சற்று நிறையவே அதிகம்.வழி என்ற ஒரு கதை எழுதினேன்.வனம் இதழில் பிரசுரமானது.எனக்கு அந்தக் கதை அடைந்த இறுதி வடிவம் பிடித்திருந்தது.நான் கதைகளில் ஒரு லயம் உருவாக வேண்டும் என்று விரும்புவேன்.ஒரு தாளம்.

நான் குறிப்பிட்ட ஒரு வகை மாதிரியில் கதைகள் எழுதத் துவங்கியதில் வழி என்ற கதை ஒரு வெற்றியாக அமைந்தது. தொடர்ந்து கதைகள் எழுத வேண்டும்.கட்டுரைகள் எழுத வேண்டும். தஸ்தாயெவ்ஸ்கி பற்றி சில கட்டுரைகள் சேர்த்து புத்தகம் கொண்டு வர வேண்டும்.சட்டம் பற்றி மேலும் பயில வேண்டும்.எனக்கு மாயங்கள் ஜாலங்கள் உள்ள கதைகள் எழுத வேண்டும் என்ற ஆவல் உண்டு. அப்படியான சில கதைகளை என்னுடைய சட்டகத்திற்குள் எழுத வேண்டும்.தொடர்ந்து வாசிக்க வேண்டும்.

கதைகளைப் படிப்பது எத்தனை சுவராசியமானது என்று இப்போதெல்லாம் அடிக்கடி தோன்றுகிறது. நமக்கு அது எத்தனை பெரிய நன்மையை அளிக்கிறது.நாம் இலக்கியத்திற்கான நேரத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.நேரமின்மை ஒரு பிரச்சனையாக இருக்கிறது.குழந்தைகள் வளர்கிறார்கள்.அவர்களின் இருப்பே மகிழ்ச்சியை அளிப்பதாக இருக்கிறது.

வரும் வருடத்தில் பாலஸ்தீனத்தில் போர் ஓய்ந்து அந்தக் குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலுக்கு திரும்ப வேண்டும்.அவர்கள் நம் குழந்தைகள் இல்லையா.உரிமைகள் யாசித்து பெறுவது அல்ல.அவற்றை இந்த உலகம் அனைத்து மக்களுக்கும் உறுதி செய்ய வேண்டும்.அதற்கான வலுவான அமைப்புகள் உருவாக வேண்டும்.அதற்கு இலக்கியமும் சட்டமும் போராட வேண்டும்.நாம் நம்மால் முடிந்தவற்றை செய்து கொண்டே இருக்க வேண்டும்.மானுடம் வெல்ல வேண்டும்.

Photo by Markus Spiske - Unsplash



போர் நிறுத்தம்

 

கரமசோவ் சகோதரர்கள் நாவலில் இவான் அல்யோஷாவிடம் நாளையின் பொற்காலத்தை முன்னிட்டு இன்று குழந்தைகள் துயரத்துக்கு உள்ளாக்கப்படலாம் என்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள இயலாது என்பான். புரட்சிகள், வருங்காலத்தின் வசந்தங்களுக்காக இன்று குழுந்தைகள் துயரத்துக்கு உள்ளாக்கப்படுவதை எதிர்க்கிறான் இவான்.

பாலஸ்தீனத்தில் பிறந்த குழந்தைகள் கொல்லப்படுகின்றனர்.வீடுகளை இழந்து தாய் தந்தையரை இழந்து அனாதைகளாகின்றனர்.மிகப்பெரிய வன்முறைக்கான சாட்சியாக இருக்கின்றார்கள்.உயிர் பிழைத்தவர்களில் பலர் உடல் உறுப்புகளை நிரந்தரமாக இழந்து நிற்கின்றனர்.இந்தக் குழந்தைகள் என்ன பிழை செய்தனர். நாளை இஸ்ரேல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தக் குழந்தைகளை கொல்வதை எதன் அடிப்படையிலும் ஏற்க இயலாது.

ஐநா சபையின் பொதுச் செயலாளர் அந்தோணி குத்தேரஸ் ஹமாஸ் நிகழ்த்திய தாக்குதல் வெற்றிடத்தில் நிகழவில்லை என்று சொன்னார்.அவர் அதைச் சொன்னதற்காக கண்டிக்கப்பட்டார்.இஸ்ரேல் அவர் பணியிலிருந்து நீங்க வேண்டும் என்று கூறியது.

இந்தப் போர் நிறுத்தப்பட்டு பாலஸ்தீன மக்களுக்கு அவர்களின் நிலமும் உரிமையும் திரும்ப அளிக்கப்பட வேண்டும்.இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு எட்டப்பட வேண்டும்.பாலஸ்தீனத்தின் மேற்கு கரைப் பகுதிகளில் தங்கியிருக்கும் இஸ்ரேலியர்கள் தங்கள் இடங்களை பாலஸ்தீனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.பாலஸ்தீனத்தின் குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் வாழ்வதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும். பாலஸ்தீனம் இஸ்ரேலின் எந்த தலையிடும் இல்லாத முழுமையான தனி நாடாக அனைத்து உரிமைகளும் கொண்ட தனி நாடாக முகிழ வேண்டும். இவை நிகழ வேண்டும்.

இன்று உலகம் இந்த குரூரத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது.இந்தக் குழந்தைகள் நாளை வளர்ந்து நீங்கள் எல்லோரும் என்ன பிடுங்கிக்கொண்டிருந்தீர்களா என்று கேட்பார்கள்.உங்கள் கைகளில் எங்களின் ரத்தக்கறை படிந்திருக்கிறது என்று கத்துவார்கள்.

அவர்களின் துயரத்தில் அனைவருக்கும் பங்குண்டு. கூட்டுப் பாவம்.நாம் நாகரீகம் அடைந்து விட்டோம் என்றெல்லாம் பலர் பேசும் போது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.நாம் நாகரீக குகைவாசிகள் என்கிறார் ஆத்மாநாம்.ஆத்மாநாம் சொல்கிறார் "நம் சகோதரன் பைத்தியமாக்கப்படுகிறான், நம் சகோதரி நடுத்தெருவில் கற்பிழக்கிறாள், நாம் வேடிக்கை பார்க்காமல் ஏதாவது செய்யலாம், ஆத்திரப்படலாம், கோபப்படலாம், குண்டர்களின் வயிற்றை கிழிக்கலாம்.அல்லது மக்களிடம் விளக்கலாம், அவர்கள் அதை பொருட்படுத்தாமல் கலைவதை பார்த்தபின் அவர்களை வேசியின் மக்களே என்று கூவலாம்.பிச்சைகாரனாய்ப் போய் கத்தலாம்.நம் கத்தல் பெருவெளியைக் கடக்கலாம்.மூக்கணாங்கயிற்றுடன் பிணைத்திருக்கும் கயிற்றை அவிழ்த்து இருப்பிடம் விட்டு நகரலாம்.குறைந்தபட்சம் பேனாவின் முனையின் உரசல் கேட்கும் வகையில் எழுதலாம்."

நாம் என்ன செய்யப் போகிறோம். என்ன செய்ய இயலும்.நாளை மற்றோரு நாளே என்று கடந்து போவோம்.வரும் ஆண்டு பாலிஸ்தீனர்களுக்கு உண்மையான புத்தாண்டாக அமைய வேண்டும்.அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான சாத்தியங்கள் உருவாக வேண்டும்.

தஸ்தாயெவ்ஸ்கியின் ஆக்கங்களில் யூதர்கள் பற்றி எங்கும் நல்ல விதமாக எழுதப்படவில்லை.ஒரு வகை கிண்டல் , கேலி இருக்கும்.ஐரோப்பாவில் பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில் அவர்களுக்கு எதிரான ஒரு மனநிலை இருந்ததை இலக்கியத்தில் அறிய முடிகிறது.அவர்கள் இருபதாம் நூற்றாண்டில் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்தனர்.அந்த துயரத்தை அறிந்தவர்கள் அதே துயரத்தை இன்னொரு இனத்திற்கு அளிக்கின்றனர்.இவை மாற வேண்டும்.

வழி



கடந்த இரண்டு மூன்று மாதங்களில் ஏழுட்டு முறை இந்த காவல் நிலையத்திற்கு வந்திருப்பேன்.நான் வழக்கறிஞர் ஜிலானிக்கானிடம் ஜூனியராகச் சேர்ந்து ஐந்து மாதங்கள் ஆகின்றன.நான் ஒரு எளிய மனிதனாக இந்த காவல் நிலையத்திற்கு வருவது இது மூன்றாவது முறை.உண்மையில் சென்ற முறை நான் பொதுப் பிரஜையாக கூட வரவில்லை.குற்றம் சுமத்தப்பட்டவனாக அழைத்து வரப்பட்டிருந்தேன்.இப்போது கடவுச்சீட்டு தகவல் சரிபார்ப்புக்காக வரச்சொல்லியிருந்தார்கள்.முன்னர் இருந்த எஸ்.ஐ. பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.என்னை என் வீட்டிலிருந்து அடித்து இழுத்துச் சென்ற காவலர்களுள் ஒருவர் என்னைப் பார்த்து சிறு சங்கடமான புன்னகையுடன் கடந்தார்.ஒரு பெண் காவலர் என் சான்றுகளைச் சரிபார்த்துவிட்டு , எல்லாம் சரியாக இருக்கிறது , நாங்கள் எங்களது ரிப்போர்ட்டை அனுப்பிவிடுகிறோம் என்றார்.நான் வெளியே வந்து நின்றேன்.நாவல் மரத்திலிருந்து கணிகள் எங்கும் சிதறிக் கிடந்தன.புதிதாக பணியில் சேர்ந்த எஸ்.ஐ.தர்மராஜ் காவல் நிலையத்துக்குள் சென்றார்.அவர் என்னைக் கண்டுகொண்டதாக காண்பித்துக் கொள்ளவில்லை.தன் துறையைச் சேர்ந்த தன்னைப் போன்ற ஒரு எஸ்.ஐ.யின் பணியிடை நீக்கத்திற்கு காரணமானவனைப் பார்த்து முகமன் தெரிவிக்க அவர் விரும்பாதது இயல்பானது தான்.முன்னர் இருந்த எஸ்.ஐ.மறுபடியும் வேலையில் சேர சிலகாலம் ஆகும்.

இன்று நான் ஒரு வழக்கறிஞன்.ஆனால் உண்மையில் நான் ஒரு இயற்பியலாளனாக வர வேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தேன்.அனைத்தும் ஓர் இரவு மாறியது.என் தந்தை இரு சக்கர வாகனங்களுக்கான உதிரிப் பாகங்கள் விற்கும் கடையை நடத்தி வந்தார்.நான் இயற்பியல் இளங்கலை இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தேன்.எங்களுக்கான வாழ்வாதாரம் அந்தக் கடை தான்.எங்களுக்கு வேறு எந்த நிதி ஊற்றும் இல்லை.அன்று எங்கள் கடை இருந்த பஜார் தெரு வழியாக சென்ற ஊர்வலத்தில் ஏற்பட்ட சிறு குழப்பத்தில் எங்கள் கடை உடைக்கப்பட்டது.அது திட்டமிட்டும் நிகழ்த்தப்பட்டிருக்கலாம்.ஏனேனில் அனைத்துக் கடைகளும் நொறுக்கப்படவில்லை.அவர்களிடம் ஒரு தேர்வு இருந்தது.ஓடையை தாண்டும் மெல்லிய கால்கள் நிலை தடுமாறுவது போல என் தந்தை குலைந்தார்.அவர் கூழாங்கற்களை ஒன்றின் மீது ஒன்று அடுக்குவது போல கடையை மீண்டும் ஒழுங்குக்கு கொண்டு வந்தார்.அதற்கு ஒரு வருட காலம் எடுத்தது.நான் மூன்றாம் வருடத்திற்குள் நுழைந்தேன்.ஒரு நாள் தீப்பிழம்பு போல கொதித்துக்கொண்டிருந்த அந்திப் பொழுதில் எங்கள் தொழில் முடங்கியதிற்கும் கடை அழிக்கப்பட்டதற்கும் நஷ்ட ஈடு கோர முடியுமா என்று அறிந்துகொள்ள நாங்கள் இருவரும் வழக்கறிஞர் ஜிலானிக்கானின் வீட்டுக்குச் சென்றோம்.அவர் இதில் குற்றத்தை நிரூபிப்பதும் நஷ்ட ஈடு கிடைப்பதும் அத்தனை எளிதானதல்ல என்று எங்களுக்கு விளக்கினார்.நாங்கள் வெறும் கைகளை வீசிக்கொண்டு வீடு திரும்பினோம்.கடைகளை மூடிக்கொண்டிருந்தார்கள்.இரவுக்குள் சுருண்டுக்கொள்ள ஆயுத்தமாகிக் கொண்டிருந்தது நகரம்.பாம்பு போல வளைந்து செல்லும் குறுகலானத் தெருக்கள்.உறைந்து போன நகரத்தின் வெம்மை பாதாளச் சாக்கடைக்கு வெளியே கொப்பளித்துக் கொண்டிருந்தது.மரங்கள் காற்று அற்று இறுகிப்போய் நின்றன.குழந்தை ஒன்று வீறிட்டு அழும் சத்தம் கேட்டது.அமைதியாக வந்துக்கொண்டிருந்த வாப்பா சட்டென்று நான் சட்டம் படித்து வழக்கறிஞராக வேண்டும் என்று பேசத் தொடங்கினார்.இன்று நமக்கு செல்வதற்கு ஒரு வீடு இருக்கிறது.அது நாளையும் இருக்க வேண்டும்.கத்தி கத்தி தான் நாம் நமது குரல்வளைகளை பெரிதாக்கிக் கொள்ள வேண்டும்.நமது ஓலங்கள் இடி முழக்கங்களாக மாற வேண்டும்.நமது உரிமைகளுக்கு நாம் தான் போராட வேண்டும் என்று பேசியபடியே வந்தார்.அவர் தனக்குத்தானே பேசிக்கொள்வது போல இவற்றைச் சொன்னார்.நான் அவரை குழப்பத்தோடு பார்த்தேன்.எனக்கு இயற்பியல் மீது உண்மையான ஆர்வம் இருந்தது.பொறியியல் படிக்க நல்ல கல்லூரியில் இடம் கிடைத்தும் நான் இதைத் தான் தேர்வு செய்தேன்.பிரபஞ்சத்தை கேள்வி கேட்க தத்துவத்திற்கும் , இலக்கியத்திற்கும் , இயற்பியலுக்கும் அனுமதி உண்டு என்ற எண்ணம் எனக்கு இருந்தது.நாம் இந்த லோகத்தின் கேள்விகளுக்கான விடைகளை கண்டடைவோம் , பிரபஞ்சத்தின் கேள்விகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்.வழக்கறிஞராக பெயர் வாங்க பல காலம் ஆகும்.சிலர் பெயர் வாங்காமலேயே மறைந்து விடுகிறார்கள்.நாங்கள் ஒன்றும் செல்வந்தர்கள் அல்ல.காத்திருப்புகள் எளிதானவை அல்ல.நான் என் தந்தையிடம் விளக்கினேன்.நான் சம்பாதிக்கிறேன், நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.புழு ஒன்று ஊர்ந்து செல்வது போல நீண்டிருந்தது அன்றைய இரவு.தண்ணீர் குடிக்க படுக்கையிலிருந்து எழுந்த போது என் தந்தை வெளியில் நாற்காலியில் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன்.

நான் இயற்பியல் முடித்தப் பின்னர் என் தந்தையின் எண்ணப்படி சட்டம் படிக்க விண்ணப்பித்தேன்.எங்கள் மாவட்டத்தின் அரசு சட்டக் கல்லூரியிலேயே இடம் கிடைத்தது.நான் மூன்றாம் வருடம் படித்துக்கொண்டிருந்த போது மழை நாள் ஒன்றில் மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்த தந்தை மாரடைப்பில் இறந்து போனார்.நான் தலையற்ற முண்டமாக உணர்ந்தேன்.அந்தக் கடையை இன்னொருவருக்கு விற்றோம்.வந்த பணத்தையும் இருந்த சேமிப்பையும் கொண்டு அந்த வருட படிப்பை முடித்தேன்.சட்டக் கல்லூரியில் படிக்கும் போதே ஜிலானிக்கானிடம் அழைத்துச் சென்று ரசூலுக்கு நீங்கள் தான் தொழில் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.எந்தை இறந்த பின்னர் நான் தினசரி செலவுக்காக ஜிலானிக்கானின் அலுவலகம் சென்று தட்டச்சு வேலைகள் , எழுத்துப்பணிகளை செய்யத் தொடங்கினேன்.

இன்று செல்வதற்கு நமக்கு வீடென்று ஒன்று உள்ளது , அது நாளையும் இருக்க வேண்டும் என்று என் தந்தை சொன்னது எனக்குத் தொடர்ந்து ஒரு அசரீரி போல ஒலித்துக்கொண்டே இருக்கிறது.எங்கள் இல்லம் எங்களிடமிருந்து பறிக்கப்படக்கூடும் என்று அவர் அஞ்சினாரா என்று எனக்குத் தெரியவில்லை.யார் பறிக்கக்கூடும், எதன் பொருட்டு பறிக்கக்கூடும் என்றும் எனக்குப் புரியவில்லை.நான் அவரிடம் அதைக்குறித்து கேட்டதுமில்லை.என் வாப்பா முதலில் ஒரு சோடா ஃபேக்டரி நடத்தினார்.பின்னர் தான் உதிரிப் பாகங்கள் கடையைத் துவங்கினார்.அந்த சோடா ஃபேக்டரியின் அருகில் தான் எங்கள் வீடு.எங்கள் வீட்டுக்கு முன் நிவாஸின் வீடு.அவனது வீடு கிழக்கு நோக்கி சாலை பார்த்து இருந்தது.அவனது தந்தை மோகனரங்கனும் என் தந்தையும் நண்பர்கள்.இருவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தார்கள்.அதன் வழி உருவான சிநேகம்.இணைந்து தான் இந்த இடத்தை வாங்கினார்கள்.நிவாஸ் வீட்டின் பக்கவாட்டிலிருந்த ஏழு அடி அகலம் உள்ள பொதுப் பாதை வழியாக சென்றால் தெற்கு பார்த்த வீடு எங்களுடையது.எங்கள் வீட்டுக்குப் பின்னர் ஒரு அரச மரமும் ஆல மரமும் இருந்தன.அருகில் பாழ்பட்டு நின்ற எங்கள் சோடா ஃபேக்ட்ரி.பின்னர் ஏரிக்கரைத் தெருவும் பின்னே ஏரியும்.முதலில் நிவாஸின் வீட்டுக்கும் எங்கள் இல்லத்திற்கும் மத்தியில் மதில் சுவர் இல்லை.நிவாஸின் அன்னை வீட்டின் பின் வாசல் வழியாக வந்து எங்கள் அன்னையுடன் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பார்.நிவாஸ் என்னை விட பத்து வயது பெரியவன்.நான் நன்றாக பந்து வீசுவேன் என்பதால் அவர்களின் கிரிக்கெட் டீமில் என்னையும் ஒரு முறை சேர்த்துக் கொண்டார்கள்.ஒரு கோடைக்காலத்தின் பின் மதியப் பொழுதில் மோகனரங்கன் என் தந்தையிடம் வந்து நான் வீட்டைச் சுற்றி மதில் அமைக்கப் போகிறேன் என்றார்.அவர் அமைத்த மதில் எங்கள் நிலத்தின் இரண்டு அடிகளை எடுத்துக்கொண்டது. எங்கள் குடும்பங்களுக்கு மத்தியில் பிணக்கு ஏற்பட்டது.ஆனால் என் தந்தை இப்ராஹிம் கசப்பை மென்று முழுங்கினார்.வெளியே உமிழவில்லை. நிவாஸின் திருமணத்திற்கு அவனது தந்தை வந்து அழைத்தார்.அப்போது நிவாஸூக்கு மேடையில் கைகுலுக்கி வாழ்த்துச் சொன்னேன்.நிமோனியா பாதிப்புக்குள்ளாகி மோகனரங்கன் இறந்த போது நாங்கள் சென்றோம்.என் தந்தை இறந்த போது நிவாஸ் இல்லம் வந்து என் கரம் பற்றி நின்று ஆறுதல் சொல்லிச் சென்றான்.

நான் வழக்கறிஞருக்கு பதிவு செய்து இரண்டு மாதம் கழிந்திருந்தது.நீதிமன்றம் செல்லத் துவங்கியிருந்தேன்.சட்டத்துறையை பொறுத்தவரை நாம் முதலில் கற்க வேண்டியது சட்டத்தை அல்ல , சட்ட நுணுக்கங்களை அல்ல, அதன் அன்றாடங்களை.அதன் அன்றாடங்கள் மிகப்பெரிய சடங்குகள்.அந்த சடங்குகளை கற்று அதன் வழி என்ன செய்ய இயலுமோ அதைச் செய்யலாம்.புரட்சிகள் நீதிமன்றங்களின் வழி நிகழ்த்த இயலாது.அதே நேரத்தில் சட்டத்தின் வழி நிகழ்த்தக்கூடியவை ஏராளம்.அங்கு மனித உரிமைகளுக்காக வாதாடும் வழக்கறிஞர்களும், அதன் வழி சென்று நீதிபதி ஆனவர்களும் எளிய மக்களின் நம்பிக்கைகள்.

மார்கழி மாதத்தின் இரவு ஒன்றில் ஜிலானிக்கானின் இல்லத்திலிருந்து வீடு திரும்பிய போது நிவாஸ் வீட்டின் பக்கவாட்டு பாதையில் செங்கல்களும், சிமெண்டும், மணலும் கொட்டப்பட்டிருப்பதை பார்த்தேன்.நிவாஸின் வீட்டின் மேல் மாடிக்கு பக்கவாட்டு வழியாகச் செல்ல படிக்கட்டுகள் கட்டப்போகிறார்கள் என்றார்கள்.

என் இல்லத்திற்கு செல்வதற்கான பொது வழி ஏழு அடி அகலம் கொண்டது.இரு சக்கர வாகனங்கள் எளிதில் செல்ல முடியும்.இப்போது படிக்கட்டுகள் கட்டினால் இரண்டிலிருந்து மூன்று அடிகள் போய்விடும்.பிரதான சாலையிலிருந்து இந்த வழியாக வந்தால் தான் என் இல்லத்திற்கு எளிதில் செல்ல முடியும்.இல்லையென்றால் நான் ஒரு கீலோ மீட்டர் சுற்றி ஏரிக்கரைச் சாலை வழியாக செல்ல வேண்டும்.நிவாஸ் பல் மருத்துவன்.இப்போது சில வருடங்களாக அவன் பிரபலம் அடைந்து வருகிறான்.தொலைக்காட்சிகளில் பேசுகிறான்.பருமனாக இருந்தவன் மேலும் பருமனானான்.அவன் அவனுடன் படித்த அவன் ஜாதிப் பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.நகரத்தின் முக்கிய சர்க்கிளுக்கு அருகில் கிளினிக் தொடங்கினான்.வெளிநாட்டு மாநாடுகளுக்கு சென்று திரும்பினான்.ஊரின் பணக்காரர்களுடன் நட்பு கொண்டான்.வைத்திருந்த காரை விற்றுவிட்டு மினி கூப்பரை வாங்கினான்.ஒரு கறுப்பு நிற டேஷண்ட் நாய் வளர்த்தான்.அது எப்போதும் குரைத்துக்கொண்டே இருந்தது.பன்றிக்குட்டிகள் போல அவனுக்கு செல்வம் பெருகியது.மாடி கட்டினான்.மாடிக்குச் செல்ல படிக்கட்டு கட்டினான்.நான் அவனைச் சாலையில் பார்ப்பது குறைந்து போனது.அவன் எப்போதாவது நடைபயிற்சி செய்ய முற்படுவான்.ஆனால் இரண்டு நாட்களில் அது நின்று விடும்.அவனுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.அந்தக் குழந்தைகளும் சாலையில் விளையாடி நான் பார்த்ததில்லை.ஒரு முறை ஆள் அனுப்பி எங்கள் வீட்டையும் சோடா ஃபேக்டரி இருந்த இடத்தையும் வாங்கிக் கொள்ள விரும்புவதாகவும் நல்ல விலை தருவதாகவும் சொன்னான்.என் தந்தை மறுத்துவிட்டார்.

நான் அவனிடம் சென்று படிக்கட்டுகள் குறித்து பேசினேன்.எனது பால்ய காலத்திலிருந்து என்னை அறிந்தவன்.நாங்கள் இருவரும் ஒரே காற்றையும் ஒரே நிலத்தடி நீரையும் பருகி வளர்ந்தவர்கள்.பருமனாக இருந்தவன் பல்கிப் பெருத்திருந்தான்.அவனது வீட்டின் பால்கனியில் அவன் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான்.இருந்த மற்றொரு நாற்காலியில் என்னை அவன் அமரச்சொல்லவில்லை.பால்கனி முழுதும் இருந்த கிரோட்டன் செடிகளில் தண்ணீர் ஊற்றியிருந்தான்.படிக்கட்டுகள் கட்டுவேன் , உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்றான்.இது பொது வழி என்றேன்.வசைச் சொற்களை பேசுவதற்கு முன் இங்கிருந்து சென்று விடு என்றான்.நான் அதன் பின் அங்கே அதிக நேரம் நிற்கவில்லை.அப்போது என்னிடம் இரண்டு தேர்வுகள் மட்டுமே இருந்தன.ஒன்று அதை அப்படியே விட்டுவிடுவது.இரண்டாவது அவன் மீது வழக்கு தொடுப்பது.நான் முதலாவதை தேர்வு செய்தேன்.அவன் படிக்கட்டுகளை கட்டி முடித்தான்.அந்தப் படிக்கட்டுகளை பார்க்கும் போதெல்லாம் என் மீது யாரோ மூத்திரம் பெய்வது போலவே இருந்தது.சில மாதங்களில் அந்தப் படிக்கட்டுகளுக்கு கீரில் கதவை அமைக்கத் துவங்கினான்.யாரோ அவன் வைத்திருந்த விலையுயர்ந்த காலணிகளையும் குழந்தைகளின் கீயர் சைக்கிள்களையும் திருடி விட்டனராம்.கீரில் கேட்டுக்காக இன்னும் அரை அடி நிலம் போகும்.நான் பொறுமை இழந்தேன்.

இது பொது வழி, இந்த இடத்தை ஆக்கிரமிக்க உங்களுக்கு உரிமை இல்லை , உங்கள் மீது ஏன் வழக்குத் தொடுக்கக்கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பினேன்.நான் எதிர்பார்த்தது போலவே அவனிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை.வேறு வழியின்றி எங்கள் நகரத்தின் சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன்.வழக்கையும் நிவாஸ் எதிர்கொள்ளவில்லை.எக்ஸ் பார்ட்டி அடிப்படையில் எனக்கு சாதகமான இடைக்காலத் தீர்ப்பு வந்தது.தற்காலிகமான இன்ஜக்ஷ்ன் அளித்து நீதிமன்றம் ஆணையிட்டது.அந்தத் தீர்ப்பை கொண்டு போய் காவல் நிலையத்தில் காண்பித்து அவர் கீரில் கேட் கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று கோரினேன். முதல் முறையாக அப்போது தான் நான் எனது நகரத்தின் காவல் நிலையத்திற்கு சென்றேன்.எஸ்.ஐ.தாமோதரனைப் பார்த்து புகார் அளித்தேன்.என் புகார் ஏற்கப்பட்டது.ரசீதும் அளித்தார்கள்.ஆனால் அது உண்மையில் இரு தரப்புக்கான நிலத்தகராறு என்று பின்னர் புகாரை முடித்து வைத்தார்கள்.

காவல் நிலையத்தில் புகார் அளித்து வீடு திரும்பிய அன்று இரவு நான் எதிர்பார்த்திராத நிகழ்வுகள் அரங்கேறின.அன்றுடன் என் வாப்பா இறந்து ஒரு வருடம் ஆகியிருந்தது.என் அன்னை எனக்கு உணவு பரிமாறிவிட்டு என் தந்தையின் புகைப்படத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.எங்கள் தெருவில் இரவு ஒண்பது மணிக்கு மேல் நிசப்தம் நிலவும்.எங்கள் வீட்டுக்குப் பின் இல்லங்கள் இல்லை என்பதால் வண்டிகளின் சத்தம் அதிகம் கேட்பதில்லை. ஒரு ஜீப் வந்து நிற்கும் அரவம் கேட்டது.நிறைய காலடிகளின் ஒலி.என் வீட்டின் கதவு வேகமாக தட்டப்பட்டது.எஸ்.ஐ.தாமோதரனும் இரண்டு காவலாளிகளும் நின்றிருந்தார்கள்.உன்னை கைது செய்கிறோம் என்றார்கள்.ஏன் என்று கேட்டேன்.காவல் நிலையம் சென்று பேசிக்கொள்ளலாம் என்றார்கள்.நான் லுங்கியிலும் பணியனிலும் இருந்தேன்.கையில் சோற்றுப் பருக்கைகள்.நான் உடை மாற்றிக்கொண்டு வருவதாகச் சொன்னேன்.அவர்கள் அதற்குக் கூட அனுமதிக்காமல் உடனே வரச்சொல்லி பணியனைப் பற்றி இழுத்தார்கள்.நான் சட்டம் படித்திருக்கிறேன் , வழக்கறிஞன் என்றேன்.பணியனிலிருந்து கைகளை எடுத்த தாமோதரன் அதுக்கு என்னடா வோத்தா என்று கேட்டு பிடரியைப் பற்றி வெளியே தள்ளினான்.

என்னை வண்டியில் ஏற்றி இரு காவலர்களுக்கு மத்தியில் அமர்த்தினர்.என் அன்னை வண்டி முன் நின்று கெஞ்சினார்.அந்த எஸ்.ஐ என் தாயைத் தள்ளிவிட்டான்.அவர் அருகிலிருந்த அரச மரத்தை தாங்கி நின்றார்.ஏரிக்கரை சாலை வழியாக வண்டி பிரதான சாலையை அடைந்தது.வண்டியை எவருமற்ற புறவழிச்சாலையில் நிறுத்தினர்.இறங்கச் சொன்னார்கள்.என் கைகள் விலங்கிடப்பட்டிருந்தன.நான் நீதிமன்ற வளாகத்திற்குள் மட்டுமே வழக்கறிஞன், ஆனால் தான் இருபத்தி நான்கு மணி நேரமும் போலீஸ்காரன் என்று சொல்லி என் முன்னே பேண்ட் ஜிப்பை கழற்றி மூத்திரம் பெய்தான் தாமோதரன்.என்னை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் எனக்கான ஒரே விடியல் அவனின் பேச்சைக் கேட்பது தான் என்றும் சொன்னான்.அப்போது அவன் என்னை ஓங்கி அறைந்ததில் உதடு கிழிந்து ரத்தம் வந்தது.

காவல் நிலையத்தின் முதல் மாடிக்கு பின் பக்கம் வழியாக அழைத்துச் சென்றார்கள்.அங்கே ஒரு மர ஃபேஞ்சில் அமரச் சொன்னான் கான்ஸ்டபிள்.வேறொருவன் வெறும் ஜட்டியுடன் சுவற்றில் சாய்ந்து சரிந்திருந்தான்.அவன் உடல் முழுக்க ரத்தம்.மாடியின் முகப்பு அருகில் மர நாற்காலியில் ஒரு காவலாளி அமரந்திருந்தான்.வேறு யாரும் இல்லை.சிறிது நேரத்தில் அங்கு வந்த எஸ்.ஐ. உன்னை எவன்டா பேஞ்சு மேல உக்காரச்சொன்னது என்று சொல்லி பேஞ்சை உதைத்தான்.நான் எழுந்து கொண்டேன்.பணியனைக் கழற்றச் சொன்னான்.நான் ஏதும் செய்யாமல் நின்றேன்.அவன் காதில் விழும் படியாக வேகமாக அறைந்தான்.தலை கிண்ணென்று சுற்றியது.மறுபடியும் கழற்றச் சொன்னான்.நான் செய்வதறியாது நின்றேன்.அவன் சட்டென்று பணியனைப் பற்றி கிழித்தான்.என் வயிற்றைத் தொட்டு என்ன வயிறு வழுவழுன்னு இருக்கு என்று சொல்லி இளித்தான்.என்னைச் சுவற்றை நோக்கி தள்ளி கீழே அமரச் சொன்னான்.என் அன்னையும் எனது மாமா நிஜாமும் எனக்கு சட்டை ஃபேண்ட்டை எடுத்து வந்திருந்தார்கள்.ஒரு காவலாளி அதை மேல்மாடிக்கு கொண்டு வந்தான்.ஆனால் என்னிடம் கொடுக்கவில்லை.

நீ தான் நிவாஸ் வீட்டின் காலணிகளையும் சைக்கிள்களையும் திருடினாய் என்று ஓப்புக்கொள்ள வேண்டும் என்றார்கள்.நான் எப்போது திருடினேன், நான் திருடவில்லையே என்றேன்.ஒருவன் லத்தியைக் கொண்டு சட்டென்று என் மணிக்கட்டில் அடித்தான்.வலி தாள முடியாமல் நான் அலறினேன்.நீ ஓப்புக்கொள்ளவில்லை என்றால் உன் தாயையும் கைது செய்ய வேண்டியிருக்கும் என்றான்.வழக்கறிஞர் ஜிலானிக்கான் ஊரில் இல்லை.எனக்கென்று அங்கு வந்து நிற்க யாருமில்லை என்பதையும் அவர்கள் ஊகித்திருந்தார்கள்.நான் ஒப்புக்கொண்டேன்.கையெழுத்திட்டு தருவதாகச் சொன்னேன்.அவர்கள் விரும்பியது போல எழுதி கையெழுத்து வாங்கிய பின்னர் அன்றிரவு லாக்கப்பில் அடைத்தனர்.வேறு ஒருவனும் லாக்கிப்பில் இருந்தான்.அறையின் துர்நாற்றத்தில் எனக்கு குமட்டியது.நான் முழு இரவும் அரை நிர்வாண நிலையில் அமர்ந்திருந்தேன்.

மறுநாள் மதியம் சட்டை ஃபேண்ட்டை அணிந்து கொண்டு வரச்சொன்னார்கள்.நிவாஸ் வீட்டுக்கு அழைத்துச் சென்று எப்படித் திருடினேன் என்பதை விளக்கச் சொன்னார்கள்.எனக்கு அந்த நொடியில் தோன்றிய வகையில் செய்து காட்டினேன்.திருடிய பொருட்களை என்ன செய்தாய் என்று கேட்டார்கள்.காலணிகளை குப்பைத்தொட்டியில் போட்டதாகவும் சைக்கிள்களை ஒரு டெம்போவில் எடுத்துச் சென்று நாற்சந்தியில் போட்டுவிட்டு வந்துவிட்டதாகவும் சொன்னேன்.ஒரு கான்ஸ்டபிள் நான் சொல்வதை குறிப்பு எடுத்துக்கொண்டான்.அன்று மாலை என்னை மாஜிஸ்திரேட்டிடம் அழைத்துச் சென்றார்கள்.என்னை ஜாமீனில் எடுக்க என் அன்னையும் வழக்கறிஞர் ஜிலானிக்கானும் என் மாமா நிஜாமும் வந்திருந்தார்கள்.

அரசு தரப்பு வழக்கறிஞர் என்னை ஜாமீனில் விடுவிக்கக்கூடாது என்றும் குற்றவாளியே குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் ஐந்து நாட்கள் போலீஸ் காவலுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வாதாடினார்.மாஜிஸ்திரேட் என்னைப் பார்த்து அடித்தார்களா என்று கேட்டார்.நான் அந்த நிமிடத்திற்காக காத்திருந்தேன்.சமீபத்தில் பரீட்சை முடிந்து மாஜிஸ்திரேட்டானவர்.பெயர் நந்தன்.அவரின் கேள்வி முக்கியமானது.பெரும்பாலும் இந்தக் கேள்வியை குற்றவியல் நீதிமன்றங்களின் மாஜிஸ்திரேட்டுகள் கேட்பதில்லை.மிக இயந்திரத்தனமாக ஐந்து நாட்கள் காவல் கொடுத்துவிடுவார்கள்.அங்கே நம்மை மேலும் அடித்து துன்புறுத்தி நமது ஆன்மாவை சிதைத்துவிடுவார்கள்.

நான் காவல் நிலையத்தில் கையெழுத்து ஈட்டதற்கும் நான் குற்றத்தை எப்படிச் செய்தேன் என்று விளக்கியதற்கும் காரணம் மிக எளிமையானது.அதைச் செய்யாவிட்டால் என்னை மேலும் வதைத்திருப்பார்கள்.அவமானப்படுத்தியிருப்பார்கள்.மேலும் என் அன்னையைக் கூட கைது செய்திருப்பார்கள்.குற்றம் சுமத்தப்பட்டவரையே குற்றத்தை ஓப்புக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தக்கூடாது என்று இந்திய அரசியலைப்பின் பிரிவு 20(3) சொல்கிறது.அது மட்டுமல்ல என் மீது பதியப்பட்டவை திருட்டு வழக்குகள்.ஐபிசி 447 மற்றும் ஐபசி 379 பிரிவுகள்.அவை மூன்று ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை பெற்றுத் தரக்கூடியவை.அதற்கு உடனடியான கைதுகள் அவசியமற்றவை என்கிறது சிஆர்பிசி பிரிவு 41A.இவற்றை கொண்டு வாதாடலாம் என்ற எண்ணம் எனக்கு இருந்தது.நான் நீதிபதி நந்தனிடம் ஆம் என்னை அடித்தார்கள் என்று சொன்னேன்.

நமது நாளிதழ்களில் உச்சநீதிமன்றங்களும் உயர்நீதிமன்றங்களும் தான் பேசுபெருட்கள்.ஆனால் ஓர் எளிய இந்திய பிரஜைக்கு கீழமை நீதிமன்றங்கள் அதிலும் சிஜிஎம் என்று சொல்லப்படும் குற்றவியல் நீதிமன்றங்களின் மாஜிஸ்திரேட்டுகள் தான் முக்கியமானவர்கள்.உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அல்ல.அவன் ஒரு போதும் அவரை சந்திக்க போவதுமில்லை அங்கு நிகழ்பவை அவனுக்கு பொருட்டுமில்லை.பெரும்பாலான குற்றவியல் குற்றங்களின் ஜாமீன் வழக்குகள் முதலில் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் தான் நிகழ்கின்றன.அங்கே நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.நடந்தவற்றை விளக்கினேன்.உங்களை ஜாமீனில் எடுக்க ஷூரிட்டி இருக்கிறதா என்று கேட்டார்.என் மாமா நிஜாம் தன் வீட்டுப் பத்திரத்தின் நகல்களையும் ஆதார் கார்ட்டையும் உறுதிமொழியையும் தாக்கல் செய்திருந்தார்.ஐம்பதாயிர ரூபாய் ஷூரிட்டியில் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டேன்.தன் தீர்ப்பில் எஸ்.ஐ.தாமோதரன் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் மாஜிஸ்திரேட் நந்தன்.

நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த உடன் அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.அதற்கான மருந்துச்சீட்டையும் அறிக்கையையும் பெற்றேன்.இரவு உறங்கச் சென்றவன் மறுநாள் மதியம் வரை படுக்கையில் கிடந்தேன்.என் அன்னை பாதம் அருகே அமர்ந்து என் கால்களை பற்றி அழுத்தினார்.அந்த ஸ்பரிஸத்தில் ஈரம் வழிந்தோடியது.சூக்கு டீ கொண்டு வந்திருந்தார்.வாயைக் கொப்பளித்துவிட்டு பருகினேன்.அவர் என் கைகளை பற்றிக்கொண்டு பார்த்தபடியே இருந்தார்.அவர் கண்களிலிருந்து நீர் கொட்டியது.நாம் இந்த வீட்டைக் காலி செய்து விடலாம் ரசூல் என்றார்.இங்கே நிகழ்பவை எல்லாம் இந்த வீட்டுக்குத்தான்.நாம் இதை நிவாஸூக்கே விற்றுவிட்டு சென்றுவிடலாம்.உன்னையும் பறிகொடுக்க நான் தயாராக இல்லை என்றார்.என் அன்னை வீட்டை விட்டு அதிகம் வெளியே செல்பவர் அல்லர்.காய்கறி வாங்குவார்.பக்கத்து நகரில் இருக்கும் உறவினர்கள் வீட்டுக்கு பஸ் பிடித்து செல்வார்.இந்த நகரத்திலேயே ஃசோபா, பெட் கடை வைத்திருக்கும் என் மாமா நிஜாம் வீட்டுக்கு சில நேரங்களில் சென்று திரும்புவார்.நான் அதுவரை என் கைதுக்கான காரணத்தை முழுமையாக புரிந்து கொள்ள இயலாமல் திணறிக்கொண்டிருந்தேன்.அவர் மிக எளிதாக அந்தக் புள்ளிகளை இணைத்தார்.

நான் திருடவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.நிவாஸ் அளித்த புகாரின் அடிப்படையில் தான் நான் கைது செய்யப்பட்டேன்.வாப்பா நமது உரிமைகளுக்கு போராடத்தான் சட்டம் படிக்கச் சொன்னார் , நாம் ஓடி ஒளியக்கூடாது என்றேன்.கண்களை தாழ்த்தி தரையை வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்த அன்னை காலி டம்பளரை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.செல்லும் போது என் தலையை கோதிவிட்டுப் போனார்.

ஜிலானிக்கான் அழைத்திருந்தார்.அடுத்த நாள் வருவதாகச் சொன்னேன்.வீட்டுக்குள் சுருண்டு கிடக்காதே , புறப்பட்டு வா,பிழை செய்யாதவர்கள் துவளக்கூடாது என்றார்.என் ஜாமீன் வழக்கை என்னையே வாதாடச் சொல்லி ஊக்கப்படுத்தியவர் அவர் தான்.ஜிலானிக்கான் அதிகம் பேசமாட்டார்.ஆனால் அவரில் இருப்பு எனக்கு என் தந்தையின் நிழல் போல உடன் இருந்தது.துவாலை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றேன்.என் வயிற்றில் சோப் போடும் போது அந்த எஸ்.ஐ. சொன்ன வாக்கியம் நினைவில் வந்தது.நான் குளித்து உடை மாட்டிக்கொண்டு காவல் நிலையம் சென்றேன்.சர்க்கிள் இன்ஸ்பெக்டரிடம் என் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் பற்றி புகார் அளித்து எஸ்.ஐ.தாமோதரன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னேன்.நான் காவலாளிகளை அதில் சேர்க்கவில்லை.புகாரின் நகல்களை டிஜிபி அலுவலகத்திற்கும் மாநில மனித உரிமை ஆணையத்திற்கும் முதல் அமைச்சருக்கும் உள்துறை அமைச்சருக்கும் அனுப்பினேன்.இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட போவதில்லை என்பதை ஊகித்திருந்தேன்.எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை.

ஒரு வாரம் கழித்து உயர்நீதிமன்றத்தில் ஒரு ரீட் மனுவை தாக்கல் செய்தேன்.இந்திய அரசியலமைப்பில் இரண்டு பிரிவுகள் தனி மனிதர்களுக்கு தீர்வுகளை , நிவாரணங்களை அளிப்பவையாக அமைந்திருக்கின்றன.அவை பிரிவு முப்பத்திரண்டும் பிரிவு இருநூற்றி இருபத்தி ஆறும்.ஒருவனுக்கு இந்திய அரசியலமைப்பு அளித்துள்ள அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் போது அவன் பிரிவு 32யைக் கொண்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தனக்கான தீர்வைக் கோரலாம்.அதே போல 226 பிரிவின் அடிப்படையில் ஒருவன் தனது பிராதை உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லலாம். நான் 226 பிரிவைக் கொண்டு என் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மீதான நடவடிக்கை கோரி மனு ஒன்றை அளித்தேன்.

என் தந்தை என்னை மனித உரிமைகளுக்கு போராட வேண்டும் என்று சட்டம் படிக்கச் சொன்னார்.நான் எனக்கான உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடுவேன் என்று நினைக்கவில்லை.உயர்நீதிமன்றத்தின் வழக்காடு முறைமைகள் கீழமை நீதிமன்றங்களிலிருந்து வேறானாவை.மேலும் இங்கு வழக்காடும் மொழி ஆங்கிலம்.நீதிமன்றங்களில் இருவர் முக்கியமானவர்கள்.ஒருவர் வழக்கறிஞர் மற்றவர் நீதிபதி.வழக்கறிஞர் மனித உரிமைகள் மீறப்பட்டது என்று கூப்பாடு போட்டால் நீதி கிடைக்காது.இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவின் அடிப்படையில் என் உரிமை மீறிப்பட்டது என்பதை நிறுவ வேண்டும்.சிஆர்பிசி படி ஏன் என் கைது தவறானது என்று சொல்ல வேண்டும்.

ஆனால் வழக்கறிஞர் எத்துணைத் தீவிரத்தோடு வாதிட்டாலும் நீதியரசரும் அந்த நோக்கை பிரதிபலிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.எப்படி குற்றவாளிகள் வெறும் குற்றவாளிகள் இல்லையோ அதே போல நீதிபதிகள் வெறும் நீதிபதிகள் அல்லர்.அவர்கள் சமூக மனிதர்கள் என்பதால் அவர்களுக்கும் சார்புகள் உண்டு.அந்தச் சார்புகள் அவர்கள் வழங்கும் தீர்ப்புகளையும் பாதிக்கும்.

என் வழக்கு நீதியரசர் கிருஷ்ணன் அமர்வுக்கு வந்தது.என் தரப்பு வழக்கறிஞர் அபுபக்கர். ஜிலானிக்கானின் நண்பர்.ஜிலானிக்கானும் அபுபக்கரும் பாண்டிச்சேரியில் ஒன்றாகச் சட்டம் படித்தார்கள்.அபுபக்கர் பின்னர் மாஜிஸ்திரேட்டாகப் பணிபுரிந்தார்.ஓய்வுக்குப் பின்னர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார்.அகலமான நெற்றி.விரிந்த தோள்கள்.வார்த்தைகளுக்கு மத்தியில் இடைவெளி விட்டு மிக அழுத்தமாகப் பேசினார்.அவர் முகம் எப்போதும் மெல்லிய புன்னகையுடனே இருப்பதாக எனக்குத் தோன்றியது.ஒரு வேளை நான் என் நகரத்தை விடுத்து சென்னைக்கு குடிபெயர்ந்தால் இவரிடம் தான் பணிபுரிய வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.நான் வழக்குக்காக சென்னைக்கு போகும் போது அவரின் இல்லத்திலேயே தங்கிக்கொண்டேன்.அவரது இரு சக்கர வாகனத்தில் என்னையும் அழைத்துக்கொண்டு நீதிமன்றம் சென்றார்.இருசக்கர வாகனத்தில் செல்லும் போது மனம் புதிய தீர்வுகளை கண்டடைகிறது என்று என்னிடம் சொன்னார்.சென்னையில் இத்தனை வாகனங்கள் ஒரு சாலையில் எப்படி இத்தனை ஒத்திசைவோடு செல்கின்றன என்று எண்ணிக்கொண்டே இருந்தேன்.அபுபக்கர் மூன்று வாதங்களை முன்வைத்தார்.முதலாவது என் மீதான திருட்டுக் குற்றங்களுக்கு மூன்று ஆண்டுகள் மட்டுமே தண்டனை அளிக்க இயலும்.அதற்கு உடனடியான கைதுகள் தேவையில்லை.இரண்டு குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி என்னை வற்புறுத்தியது இந்திய அரசியலமைப்பின் படி பிழை.மூன்றாவது இது நிலம் தொடர்பான பகையால் உருவாக்கப்பட்ட வழக்கு என்பதற்கான சான்றுகள்.மேலும் நான் ஜாமீனிலிருந்து வெளிவந்த பின்னர் எனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் விபரங்கள்.

அரசு தரப்பு வழக்கறிஞர் என் மீதான கைது சிஆர்பிசி படி தவறானது இல்லை என்று வாதிட்டார். மேலும் நானே குற்றத்தை ஒப்புக்கொண்டு கையெழுத்து ஈட்டதாகவும் என் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டது என்று சொல்வது என் விருப்பக் கற்பனை மட்டுமே என்றும் சொன்னார்.நான் எனது கட்டளை மனுவில் எனக்கு நிகழ்ந்த அநீதிக்கு எஸ்.ஐ.தாமோதரன் மீது துறை சார்ந்த விசாரணை நிகழ்த்தப்பட வேண்டும் என்று கேட்டிருந்தேன்.இரண்டாவது எனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரினேன்.நீதியரசர் கிருஷ்ணன் என் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் வருத்தமளிப்பதாக தன் தீரப்பில் கூறினார்.நான் வழக்கறிஞன் என்கிற நிலையில் இது மிகவும் கவலையளிப்பதாகச் சொன்னார்.எத்தகைய தருணங்களில் கைதுகள் நிகழ்த்த வேண்டும் என்பதை அர்னேஷ் குமார் எதிராக பீகார் மாநிலம் வழக்கிலும் பிற வழக்குகளிலும் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளதை சுட்டிக்காட்டி இருந்த போதும் காவல் துறை பல்வேறு வழக்குகளில் அதை பின்பற்றாமல் இருக்கிறது என்று கூறினார்.

எனக்கு நிகழ்ந்தவற்றை மாற்ற இயலாது என்றாலும் எனக்கு ஐந்து லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.மேலும் எஸ்.ஐ.தாமோதரன் மீது நான் அளித்த புகாரில் வழக்கு தொடுத்தப் பின்னர் தான் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.அந்தப் புகார் மீது துறை சார்ந்த விசாரணை நிகழ்த்தப்பட வேண்டும் என்றும் அது வரை அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பில் சொன்னார்.மேலும் எனக்கு வழங்கப்பட்ட நஷ்ட ஈடு துறை விசாரணையில் தவறிழைத்தவராக கண்டரியப் படுபவர்களிடம் இருந்து மீட்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

கடவுச்சீட்டு சரிபார்ப்பு முடிந்து பக்கத்தில் பஜாரிலிருந்த என் மாமா நிஜாம் கடைக்குச் சென்றேன்.எதிரிலிருந்த காய்கறி கடையில் எஸ்.ஐ.தாமோதரன் அவன் மனைவியுடன் நின்று கொண்டிருந்தான்.என்னைக் கவனித்தவன் முகம் இறுகினான்.வரிசையில் நின்றிருந்த அவனது மனைவியிடமிருந்த காய்கறிக் கூடையை பிடுங்கி எறிந்துவிட்டு அவரை இழுத்துக்கொண்டு வெளியேறினான்.தாமோதரன் என்னை அடித்ததற்கும் பாலியல் ரீதியில் அவமானப்படுத்தியதற்கும் காரணம் எளிமையானது.நான் குரலெழுப்ப இயலானதவனாக ஆன்மாவை இழந்தவனாக மாறிவிடுவேன் என்று அவர்கள் ஊகித்தனர்.அதன் பின் நான் ஒன்றுமில்லை.வெறும் சக்கை.என்னால் எந்தப் பிரச்சனையும் இருக்காது.நிலத்தை பிடுங்கிக் கொள்ளலாம் என்று கணக்கிட்டார்கள்.

என் மாமா அவன் விறுவிறுவென்று ஓடுவதைப் பார்த்து சிரித்தார்.ஓடுறான் பாரு பேடிப்பயல் என்றார்.பேடிப்பயல்.நான் அந்த வார்த்தையை அவ்வளவாக ரசிக்கவில்லை.அவன் நிவாஸ் வழங்கிய ஐந்து லட்ச ரூபாய்க்காக இதைச் செய்திருக்கிறான்.என் மீதான திருட்டு வழக்கு எப்படியும் தானாக நீர்த்து போய்விடும்.நான் நிவாஸ் மீது அளித்த சிவில் வழக்கு அப்படியே இருக்கிறது.நான் வீட்டுக்குச் சென்றேன்.நான் செல்லவும் நிவாஸின் மனைவி என் வீட்டிலிருந்து வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.அவர் அதன் முன் என் வீட்டுக்கு வந்ததில்லை.என்னைப் பார்த்து அசட்டுத்தனமான புன்னகையை உதிர்த்துவிட்டுச் சென்றார்.அவர் நகைக்காமலே சென்றிருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன்.

நான் என் அன்னையை பார்த்தேன்.அவர் கண் சிமிட்டிச் சிரித்தார்.படிக்கட்டுகள் இடிக்கப்படும் என்ற இனியச்செய்தியை சொல்வதற்காக அவர் வீட்டுக்கு வந்திருக்கிறார்.இந்த நிலத்தை எழுதி வாங்க விரும்பியவர் படிக்கட்டுகளை இடிப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.நான் உணவருந்திவிட்டு சிறிது நேரம் உறங்கினேன்.எழுந்த போது அந்திப் பொழுதில் மங்களம் பூத்திருந்தது.நான் மூன்று ரஸ்குகளை எடுத்துக்கொண்டு வாசல்படியில் சென்று அமர்ந்து கொண்டேன்.ஏரிக்கரையில் பனைமரங்களுக்கு பின்னே ஆரெஞ்சு வானம்.காகங்கள் கரைந்தன.வானம் , பறவைகள், மரங்கள் அனைத்தும் மஞ்சளை பூசிக்கொண்டு ஆனந்தத்தில் கிடந்தன.நான் ரஸ்குகளை மென்றவாறு எழுந்து சுற்றும் முற்றும் நடந்தேன்.யாரோ என்னை கவனிப்பது போல தோன்றவே நிமிர்ந்து நோக்கினேன்.நிவாஸ் மாடியில் நின்று கொண்டு என்னைப் பார்த்தபடியே இருந்தான்.சிவப்பு நிற டீசர்ட்டும் அரைச்சாயரும் அணிந்திருந்தான்.அவன் மீது படர்ந்த மஞ்சள் ஒளியில் அவன் சோபையாகத் தெரிந்தான்.அவன் முகத்தை திருப்பிக் கொள்ளாமல் பார்த்தபடியே நின்றான்.நான் அவனைப் பார்ப்பதை தவிர்த்து திசைமாற்றி நடக்கத் தொடங்கினேன்.அரச மரத்தின் கிளைகளிலிருந்து பீட்ரூட் நிறக் கொண்டை கொண்ட புல்புல் ஒன்று பறந்து சென்றது.நான் அது பறக்கும் திசையை பார்த்தவாறு திரும்பினேன்.அது நிவாஸ் வீட்டு மதில் சுவர் மீது அமர்ந்தது.பின்னர் வானம் நோக்கி பறக்கத் துவங்கியது.இப்போது நிவாஸ் அங்கிருந்து சென்றிருந்தான்.இந்த வீடு இந்த மரங்கள் இந்தப் பறவைகள் நான் என் அன்னை இங்கு தான் இருக்கப்போகிறோம்.இன்று செல்வதற்கு நமக்கு வீடு என்று ஒன்று உள்ளது என்ற என் தந்தையின் வரி என்னுள் அசரரீயாக ஒலித்தது.என் அன்னை எனக்கு டீ போட்டு எடுத்து வந்தார்.என்னிடம் கோப்பையை கொடுத்து விட்டு என் அருகில் இன்னொரு கோப்பையுடன் அமர்ந்துகொண்டார்.நாங்கள் தேநீர் குடித்துக்கொண்டு பேராக்கு பார்த்தோம்.

வனம் இணைய இதழில் பிரசுரமான சிறுகதை.

Photo by Siddharth S Unsplash

Justice V.R.Krishna Iyer


Justice V.R.Krishna Iyer Life is fascinating. I just read his book Leaves from my Personal Life. He had been a Lawyer in Tellicherry in Malabar, had been in jail for almost a month on the suspicion that he might be Communist in 1948, was a member of legislative assembly of Madras State in 1952, had passed a private bill on Fair Rent for Tenants and in 1957 when Kerala State was formed , he then an Independent MLA was made the Law Minister in the First government of EMS Namboodiripad. 

An Independent MLA was given the portfolios of Law, Prisons, Home , Irrigation , Electricity. It covers most of the important portfolios except for Finance which was headed by Achuthanandan. In 1959 the Government was brought down using Article 356 for the first time in India. It was done by none other than Nehru. Krishna Iyer writes that Nehru was in his years of decline then. The Syndicates of Church , Nair Society and Congress were unable to accept that a Communist Government could come to power through ballot in a Democracy. It was a threat to them , their existence and their private property and accumulation of wealth. 

In 1965 Krishna Iyer again contested for Legislative Assembly. But the support of the CPM was withdrawn as he was adamant that he will not contest in the Party Symbol. Though he accepted dialectical materialism he was not inclined to be contesting with CPM party Symbol. He lost and then he never contested in elections except for one.

Then becomes a High Court Judge, followed by 7 years Judge in Supreme Court and retires in 1980. Probably , He might be the only person who would have been in Jail in Independent India and also had been a Supreme Court Judge. His career in Politics and his work had helped him to understand the society well. 

In my course in Human Rights , two Judges names are often mentioned as those who did Judicial Activism. One was V.R.Krishna Iyer and other was Justice Bhagawati. After Retirement he did not get involved in Arbitration as is the case of most Judges. He was made to contest against R.Venkataraman in the Presidential Elections. While he was aware he would not be able to win he agreed to contest as an act of Symbolism. 

Justice Chandru had often told Krishna Iyer was his inspiration. Chandru had got the advice of Krishna Iyer when he was supposed to me made a High Court Judge. Krishna Iyer had told by being a Judge he could do a lot of service to Humanity.

Extraordinary and Fascinating life.


கிழக்கு மேற்கு தெரு

 

லாட்டர்பேக்ட்
 



லெம்கின்
 

 

 

நான் மனித உரிமைச் சட்டங்கள் பற்றிய ஒரு பட்டயப் படிப்பு படித்தேன். இறுதித் தேர்வு எழுதவில்லை.இனி எழுதும் எண்ணமும் இல்லை. அந்தப் படிப்பில் ஒரு பாடம் சர்வதேச அமைப்பில் மனித உரிமைகளுக்கான சட்டங்களும் அவற்றின் அமலாக்கமும்.அரவிந்த் நரேன் நடத்தினார்.எனக்கு அந்த வகுப்புகள் பிடித்திருந்தன.அவர் தன் பாடத்தின் பகுதியாக பிலிப் சாண்ட்ஸ் என்பவர் எழுதிய கிழக்கு மேற்கு தெரு (East West Street) என்ற புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும் என்ற பரிந்துரைத்தார்.

பிலிப் சாண்ட்ஸ் வழக்கறிஞர் , பேராசிரியர்.அவர் தன் மூதாதையர்களின் ஊரான லிவீவ் நகரம் பற்றியும் அந்த ஊரில் வாழ்ந்த இருவர் எப்படி மனித உரிமைகளுக்கான சர்வதேச சட்டங்களை உருவாக்கினார்கள் என்பது பற்றியும் இந்தப் புத்தகத்தில் விவரிக்கிறார்.

பிலிப் சாண்ட்ஸின் தாய் வழி தந்தை லியான் லிவீவ் நகரத்தில் வசித்தார்.லியானின் தாய் லிவீவ் நகரத்தின் பக்கத்து ஊரான சோல்கீவ் என்ற ஊரில் வளர்ந்தார்.லிவீவ் நகரில் கிழக்கு மேற்கு தெருக்களில் வாழ்ந்த ரஃபேல் லெம்கினும் ஹெர்ஷ் லாட்டர்பேக்ட்டும் மனித உரிமைக்களுக்கான சட்ட வரைவுகளை உருவாக்கினார்கள்.அவை சர்வதேச அமைப்பான ஐ.நாவால் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ரஃபேல் லெம்கின் கூட்டுக்கொலை (Genocide)  என்கிற பதத்தை உருவாக்கினார்.எது கூட்டுக்கொலை என்பதையும் வரையுறைத்தார்.ஹெர்ஷ் லாட்டர்பேக்ட் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் (Crimes against Humanity) என்ற சட்ட வரைவை உருவாக்கினார்.இவை இரண்டும் இன்று மனித உரிமைகளுக்கான முக்கியச் சட்டங்களாக இருக்கின்றன.

லெம்கினும் லாட்டர்பேக்ட்டும் மனித உரிமைகளுக்கான சட்டங்களை உருவாக்கினாலும் அவற்றில் முக்கியமான சில வேறுபாடுகள் இருந்தன.லெம்கின் கூட்டுக்கொலைகளை முன்னிறுத்த விரும்பினார்.ஒரு மனிதக்கூட்டத்தின் மீது அவர்கள் சுமந்து நிற்கும் அடையாளத்தின் பொருட்டு நிகழ்த்தப்படும் குற்றம் கூட்டுக்கொலை.அந்த தனிமனிதனுடன் அரசுக்கு வேறு எந்த முரணும் இல்லை.அவர் ஒரு கூட்டத்தை தன் அலகாக கொண்டார்.

லாட்டர்பேக்ட் தனிமனிதனை தன் அலகாக கொண்டார். ஒரு தனிமனிதனுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்களை பற்றியே அவர் பேசினார். தனிமனிதனையே அலகாக கொள்ள வேண்டும் , கூட்டத்தை அல்ல என்றார்.இருவரும் தங்கள் தரப்பை வலுவாக முன்வைத்தார்கள். இருவரும் ஒரே பல்கலைக்கழகத்தில் சில வருட இடைவெளியில் படித்தார்கள்.அவர்களுக்கு ஒரே ஆசிரியர்கள் வகுப்பு எடுத்தார்கள்.

தனிமனிதன் X கூட்டம்.இவை இரண்டும் எப்போதும் சந்தித்து கொள்கின்றன.எந்த மனிதனும் தனிமனிதன் அல்ல. அனைவரும் அடையாளங்களை தாங்கித்தான் நிற்கிறார்கள்.தேசம், இனம் , மொழி,நிறம்,பாலினம்,தொழில்,மதம்,சாதி என்று பல்வேறு அடையாளங்கள் நம் மீது குறிக்கப்படுகின்றன.இந்த அடையாளங்கள் இல்லாத தனிமனிதன் உலகில் இல்லை.லாட்டர்பேக்ட் ஒரு கூட்டத்தினர் மீது நிகழ்த்தப்படும் குற்றங்களையும் தனித்தனி மனிதர்கள் மீது நிகழ்த்தப்பட்ட குற்றங்களாகவே பார்க்க எண்ணினார்.முதலாளித்துவத்தின் அலகு தனிமனிதன்.இருத்தலியத்தின் சுதந்திரத்தின் அலகும் கூட.தனிமனிதன் என்ற புனைவின் மீது தான் சுதந்திரம் என்ற விழுமியம் வைக்கப்படுகிறது.பொருள் ஈட்டுவதற்கான சுதந்திரம், தன்னை வெளிபடுத்திக் கொள்வதற்கான சுதந்திரம், வாழ்வதற்கான சுதந்திரம், வழிபடுவதற்கான சுதந்திரம், சிந்திப்பதற்கான சுதந்திரம்.மாறாக கூட்டத்தின் மீது சமத்துவம் என்ற விழுமியம் வைக்கப்படுகிறது.வாய்ப்புகளுக்கான சமத்துவம், சமூகநிலைக்கான சமத்துவம்.அதாவது நாம் சமத்துவம் என்று பேசும் போது ஒரு சாதி மற்றொரு சாதிக்கு கீழானது அல்ல , ஒரு மதம் மற்றொரு மதத்தைவிட வேறானது அல்ல, ஒரு தேசம் மற்றொரு தேசத்தை விட உயர்வானது அல்ல என்று சொல்ல விரும்புகிறாம்.சமத்துவம் என்ற சொல்லில் மனிதர்கள் கூட்டங்களாக அணித்திரள்கிறார்கள்.சமத்துவமத்தில் அணிகளையும் சுதந்திரத்தில் தனிமனிதர்களையும் நாம் முன்வைக்கிறோம்.

லாட்டர்பேக்ட்டின் குடும்பத்தினர் யூதர்கள் என்பதால் அவர்கள் கொல்லப்பட்டனர்.அவருடைய ஒரே ஒரு உறவினர் இன்கா போருக்கு பின் உயிருடன் இருப்பது தெரிந்து அவரின் அழைப்பில் பேரில் இங்கிலாந்தில் அவருடன் சென்று சேர்ந்தார்.தன் குடும்பத்தினர் யூதர்கள் என்ற அடையாளத்தை கொண்டிருந்ததால் கொல்லப்பட்டனர் என்ற போதும் அவர் தனிமனிதர்கள் மீதான குற்றங்களையே முன்னிறுத்த விரும்பினார். ஏனேனில் அதுவே சட்டத்தின் முன் நிரூபிக்க எளிதானதாக அமையும்.இரண்டாவது காரணம் நாம் கூட்டுக்கொலைகளை பற்றிச் சொல்லும் போது ஒரு கூட்டம் மற்றொரு கூட்டத்தின் மீது நிகழ்த்தும் வன்முறை என்றே அதை முன்வைக்கிறோம்.ஒரு தனிமனிதன் ஒரு கூட்டத்தின் மீது நிகழ்த்திய வன்முறை என்று அல்ல.ஜெர்மனியர்கள் X யூதர்கள் என்ற எதிரிடை அங்கே வந்துவிடுகிறது.அப்போது நமது சொல்லாடல் இயல்பாகவே வன்முறை நிகழ்த்திய தனிமனிதர்களை விடுத்து அந்த ஒட்டுமொத்த கூட்டத்தையும் தனது எதிரியாக பாவிக்கிறது.இந்த இரண்டு காரணங்களால் அவர் தனிமனிதன் இன்னொரு தனிமனிதன் மீது நிகழ்த்தும் வன்முறைகளை மானுடத்திற்கு எதிரான குற்றங்களாக வரையுறைத்தார்.

லாட்டர்பேக்ட்டின் வாதங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை தான்.இரண்டாம் உலகப்போரின் காலக்கட்டத்தில் போலந்தின் ஆட்சியாளராக ஹான்ஸ் ப்ராங்க் இருந்த போது தான் லாட்டர்பேக்ட்டின் குடும்பத்தினரும் லெம்கினின் குடும்பத்தினரும் இந்த நூலை எழுதிய பிலிப் சாண்ட்ஸின் குடும்பத்திரும் யூதர்கள் என்பதால் கொல்லப்பட்டனர். நியூரம்பர்க் விசாரணையில் அவர் மீது கூட்டுக்கொலை என்ற குற்றம் முன்வைக்கப்பட்டாலும் தீர்ப்பில் அவருக்கு மானுடத்தின் மீதான குற்றங்களுக்குத்தான் தண்டனை அளிக்கப்பட்டது. ஹான்ஸ் ப்ராங்க் ஒரு ஜெர்மானியர் என்பதற்காகவோ அவர் ஹிட்லரின் கீழ் ஆட்சி செய்தார் என்பதற்காகவோ அவருக்கு தண்டனை அளிக்கப்படவில்லை.அவர் ஒரு தனிமனிதராக இந்தக் குற்றங்களில் பங்கு வகித்தாரா என்றே ஆராயப்பட்டார்.ஒரு தனிமனிதராக அவர் தன்னை இந்த குற்றச் செயல்களிலிருந்து விடுவித்துக்கொண்டிருக்க இயலுமா என்ற கேள்வியே விசாரணையில் முன்வைக்கப்படுகிறது. மனிதன் தனக்கு அளிக்கப்பட்ட சட்டகத்திற்கு வெளியே செல்ல இயலுமா என்ற கேள்வி இங்கே எழுப்பப்படுகிறது.நாம் சொல்லும் நிர்ணயவாதமும் சுதந்திர இச்சையும் இங்கே முன்னுக்கு வருகின்றன.

சுதந்திரம் சுதந்திர இச்சையை ஏற்கிறது.அதாவது மனிதன் முன் எப்போதும் தேர்வுகள் இருக்கின்றன.மனிதன் தனக்கான பாதையை எப்படிப்பட்ட கையறு நிலையிலும் தேர்வு செய்ய முடியும் என்று நாம் எண்ணுகிறோம்.இருத்தலியவாதம் , முதலாளித்துவம் இரண்டும் சுதந்திர இச்சையை முதன்மைபடுத்துகின்றன.ஹான்ஸ் ப்ராங்க ஒரு வழக்கறிஞர்.அவர் மெல்ல ஹிட்லரின் நம்பத்தகுந்த முதன்மை வட்டத்துக்குள் வருகிறார்.அவர் போலந்தின் தலைமை ஆளுனரானார்.லட்சக்கணக்கான யூதர்களின் கொலைக்கு அவரும் ஒரு காரணியாக இருக்கிறார்.ஜெர்மனி சட்டம் படி ஹான்ஸ் ப்ராங்க் செய்தது குற்றம் அல்ல.ஆனால் அவை மானுடத்திற்கு எதிரான குற்றங்கள்.

பொதுவாக உலகெங்கும் கிரிமினல் குற்றங்கள் ஒரு சட்டம் அமலுக்கு வருவதற்கு முன் நிகழ்ந்தவற்றை கணக்கில் கொள்ளக்கூடாது என்றே சொல்கின்றன.No Retrospective act.இந்திய அரசியலமைப்பிலும் 20(1) இதைச் சொல்கிறது.ஆனால் நியூரம்பர்க விசாரணைகள் ஹான்ஸ் ப்ராங்க் உள்ளிட்ட இருபத்தியொரு பேர் புதிதாக உருவாக்கப்பட்ட சட்டங்களை கொண்டு தண்டிக்கப்பட்டார்கள் என்று பார்க்கலாம்.அல்லது அவை தேசங்கள் உருவாக்கிக்கொள்ளும் சட்டங்களை மீறிய உலகு தழுவிய பொது அறத்தை முன்வைக்கும் காலம் கடந்த சட்டங்கள் என்றும் கொள்ள முடியும்.

ஹச்.எல்.ஏ.ஹார்ட் சட்டத்துறைக்கான நேர்க்காட்சிவாதத்தை முன்வைத்தவர்.லான் பியூலர் புது இயற்கை சட்டக் கோட்பாட்டை முன்வைத்தார். ஹார்ட் நியூரெம்பர்க் விசாரணை ஹான்ஸ் ப்ராங்க் உள்ளிட்டோருக்கான தண்டனையை எப்போதைக்குமான பொதுச் சட்டம் என்கிற அடிப்படையில் வழங்கக்கூடாது என்றார்.அப்படியொரு பொதுச் சட்டம் இருக்க இயலாது.அவர்கள் ஜெர்மனியிலிருந்த சட்டங்களின் அடிப்படையில் தங்கள் செயல்களை செய்தனர்.நாம் வேண்டுமென்றால் இந்த ஒரு முறை புதிதாக உருவாக்கப்படும் சட்டங்களை கொண்டு அவர்களை தண்டிக்கலாம் என்றார்.லான் ஃபுல்லர் அப்படியல்ல, ஜெர்மனி உருவாக்கிய சட்டங்கள் பிழையானவை.அதனால் அதை கணக்கில் கொள்ளத் தேவையில்லை என்றார்.இயற்கை சட்டக் கோட்பாடு மானுடப் பொதுவிற்கு எப்போதைக்குமான சட்டங்கள் உள்ளன என்ற வாதத்தை முன்வைக்கிறது.ஒரு வகையில் நியூரம்பர்க்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு லான் ஃபுல்லர் வழியிலான பார்வையை ஏற்கிறது என்று சொல்லலாம்.

நியூரம்பர்க் தீர்ப்பில் கூட்டுக்கொலை ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும் பின்னர் 1948ஆம் ஆண்டு ஐ.நா.சபை கூட்டுக்கொலைகளுக்கான சாசனத்தை முன்மொழிந்தது.பின்னர் பல்வேறு நாடுகள் அவற்றை ஏற்றன.கூட்டுக்கொலைக்காக இன்று உலகின் பல்வேறு நாட்டின் தலைவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டிருக்கின்றன.

லெம்கின் திருமணம் செய்து கொள்ளவில்லை.இறுதிக்காலத்தில் தனிமையும் வறுமையும் நோய்மையும் கொண்டிருந்தார்.1959யில் மரணமடைந்தார்.லாட்டர்பேக்ட் சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பு வகித்து 1960யில் மரணமடைந்தார்.இருவருக்கும் குற்றங்கள் மீதான மாறுப்பட்ட பார்வை இருந்தது.இரண்டும் மானுட நலத்தை முன்வைத்து முன்மொழியப்பட்டன.அவை இன்று மானுடத்திற்கான அரண்களாக சர்வதேச அமைப்பில் இருக்கின்றன.அவர்கள் இருவரும் ஒரே நகரில் கிழக்கு மேற்கான தெருவில் ஒரே காலக்கட்டத்தில் வாழ்ந்தார்கள் என்பது சற்று வியப்புக்குரியது தான்.

East West Street - Philipe Sands    

தற்காலிகமாய்த் தலைக்குமேல் ஒரு கூரை



வண்ணப்பெண்ணின் புடவை சரசரப்பு போல பெய்து கொண்டிருந்த மழையில் யாரோ ஒரு சிறுவன் தன் தந்தையுடன் நடந்து சென்றான்.அவன் தலையில் சிறிய மஞ்சள் குடையை மாட்டியிருந்தான்.அவன் அந்தக் குடையை அவ்வப்போது கைகளால் பற்றி குதூகலித்தான்.அந்தக் குடை அவனை மழையிலிருந்தும் நாளை வெயிலிருந்தும் காக்கும்.குடை என்பது தலைக்கு மேல் தற்காலிகமாய் ஒரு கூரை.அங்கங்கே சின்னச்சின்ன நீர் குட்டைகள்.மெடிக்கல்ஸூக்கு வெளியே ஸ்டூலில் அமர்ந்திருந்த கண்ணபிரான் அந்தச் சிறுவனையும் அவனுடைய தந்தையையும் பார்த்துக்கொண்டே இருந்தான்.மின்சாரம் நின்றிருந்தது.உள்ளே சுழல் நாற்காலியில் பரதன் அமர்ந்திருந்தார்.கார்மேகங்களிலிருந்து மெல்ல கதிரவன் எட்டிப்பார்த்தான்.மெடிக்கல்ஸீன் கண்ணாடிக் கதவுகளில் பட்டுத் தெறித்த மாலைக்கதிர்களில் அமானுஷ்யம் குடிகொண்டிருந்தது.பரதனின் கண்ணாடி ப்ரேம் மஞ்சள் ஒளியில் ஜ்வலித்தது.திரை விலகுவது போல மழை மெல்ல ஓயத் துவங்கியது.பரதன் மெடிக்கல்ஸின் அறைக்கதவை திறந்துகொண்டு வெளியே வந்தார்.அருகிலிருந்த பிளாஸ்டிக் குடத்திலிருந்து தண்ணீரை குவளையில் எடுத்து முகத்தை அலம்பினார்.வெண்ணிறக் கர்சீப்பை எடுத்து முகத்தை அழுத்தித் துடைத்து கண்ணாடியை மாட்டிக்கொண்டார்.தான் சென்று விஜயனை சந்தித்து வருவதாக கண்ணபிரானிடம் சொன்னார்.அவன் தலையசைத்தான்.வண்டியை கிளப்புகையில் அவனைப் பார்த்து நல்ல ஷர்ட் என்றார்.கண்ணபிரான் புன்னகைத்தான்.

கண்ணபிரான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் மெடிக்கல்ஸூக்கு வேஷ்டியும் முழுக்கை சட்டையும் அணிந்து வருவான்.பரதன் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை.பின்னர் அவனை ஒரு முறை நாள்ரோட்டிலிருந்த பரணி டெக்ஸ்டைல்ஸூக்கு அழைத்துச் சென்று ஃபேண்ட் சர்ட் பிட்டுகளை எடுத்து அருகிலிருந்த நாகா டெய்லரஸிடம் தைக்கக் கொடுத்தார்.முழுக்கை சட்டையெல்லாம் அணியத் தேவையில்லை என்று சொன்னார்.அது வயதான தோற்றத்தை அளிக்கும் என்றார்.மேலும் கோடுகள் போட்ட சட்டைகளை விட பெரிய சதுரங்கள் கொண்ட சட்டைகளை அணியச் சொன்னார்.சட்டைகளை எடுக்கும் போதே சோபையான வண்ணங்களைத் தவிர்த்தார். கை கடிகாரம் ஒன்றை வாங்கிக்கொடுத்தார்.அடிக்கடி மொபைல் ஃபோனை எடுத்து நேரம் பார்ப்பதையும் வீடியோக்கள் பார்ப்பதையும் தவிர்க்கச் சொன்னார்.யாரைச் சந்தித்தாலும் மென்புன்னகையோடு பேசச் சொன்னார்.செருப்பு அணிவதற்கு பதிலாக ஷூ அணியக் கட்டாயப்படுத்தினார்.தினமும் ஷூவை பரஷ்ஷால் பாலிஷ் செய்யச் சொன்னார்.வெளியிடங்களில் ஷூவில் அழுக்கு படிந்து விட்டால் துணி அல்லது கிடைத்தால் வாழைப்பழத்தோலை கொண்டு நன்கு துடைக்கச் சொன்னார்.அவரே ஒரு முறை செய்தும் காட்டினார்.ஒரு போதும் பொது இடங்களில் ஷூவை கழற்றிவிட்டு வெறும் சாக்ஸூடன் இருக்கக்கூடாது.காலையில் ஷூ அணிந்தால் இரவு வீட்டுக்குச் சென்று தான் ஷூவை கழற்ற வேண்டும் என்றார்.ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் சார் என்று சொன்ன கண்ணபிரானை பரதன் என்றே சொல்ல வேண்டும் என்று கட்டளையிட்டார்.மேலும் ஒரு முறைக்கு மேல் ஒரு உரையாடலில் எவர் ஒருவரையும் சார் என்று சொல்லக்கூடாது என்றார்.அது யாராக இருந்தாலும் ஒரு சார் போதும் என்றார்.

கண்ணபிரான் பரதனிடம் வேலைக்கு சேர்ந்த ஆரம்ப நாட்களில் அடிக்கடி டீ குடிப்பான்.மேலும் அருகிலிருந்த ஹோட்டல்களில் காலை மதியம் இரவு என்று உண்டான்.பரதன் அவனை சமைத்து உண்ணச் சொன்னார்.மதியத்திற்கு கடைக்கு சாப்பாட்டை எடுத்து வரச்சொன்னார்.வீட்டுக்குச் சென்று உண்டு வந்தாலும் தவறில்லை என்றார்.அதிகம் டீ காபி குடிப்பதற்கு பதிலாக வெண்ணீரில் எலுமிச்சை கலந்து தேவைப்பட்டால் கொஞ்சம் டீத்தூள் கலந்து குடிக்கச் சொன்னார்.அதற்காக கடையில் ஒரு கெட்டில் வாங்கி வைத்தார்.தொலைந்து போன காலத்தை நினைத்துக்கொண்டு வருந்துவதை தவிர்க்கச்சொன்னார்.சென்றதினி மீளாது என்றார்.எவரிடமும் தலை குணிந்து பேசக்கூடாது , இளிக்கக்கூடாது என்றார்.இளிப்பது வெட்கத்தின் வெளிப்பாடு.காதலிக்கும் பெண்ணைத் தவிர வேறு யாரிடமும் வெட்கப்படத் தேவையில்லை என்றார்.கண்ணபிரான் அரைக்கை சட்டை அணிந்து இன் செய்துகொண்டான்.ஷூ வாட்ச் அணிந்துகொண்டான்.தினமும் சவரம் செய்தான்.அவரைப் போல அவன் மீசையை மழிக்கவில்லை.காலை ஏழு மணிக்கு அவன் மெடிக்கல்ஸைத் திறந்தால் இரவு பத்து மணி வரை இருப்பான்.பரதன் ஒன்பது மணிக்கு வருவார்.அடிக்கடி கட்சி தொடர்பான வேலைகளுக்காக வெளியில் சென்று விடுவார்.மாலையில் சிறிது நேரம் இருப்பார்.வேறு வேலை எதுவும் இல்லையென்றால் அவரும் மெடிக்கல்ஸீலேயே இருப்பார்.வாடிக்கையாளர்களிடம் அதிகம் பேசத்தேவையில்லை , அதே நேரத்தில் பேசாமலும் இருக்கக்கூடாது என்பார்.ஒரு முறை வந்த வாடிக்கையாளர் அடுத்த முறை வரும் போது அவர் சென்ற முறை எதற்காக வந்திருந்தார் என்பதை நினைவில் வைத்து அதை கேட்க வேண்டும், அவர்களின் குடும்பத்து உறுப்பினர்கள் யாருக்காவது உடல் நிலை சரியில்லாமல் இருந்திருந்தால் தற்சமயம் எப்படி இருக்கிறது என்று விசாரிக்க வேண்டும்,அதே நேரத்தில் தேவையின்றி அவர்களை அதிக கேள்விகளும் கேட்கக்கூடாது, அவர்கள் மீது உண்மையான அக்கறை நமக்கு உண்டு என்பதை நாம் உணர்த்தினால் போதுமானது , உண்மையான அக்கறையும் இருக்க வேண்டும் என்று அவனுக்கு அவர் வகுப்பு எடுத்தார்.பயிலப் பயில நுண்ணறிவு கொண்ட இயந்திரம் சொற் கிடங்கிலிருந்து சூழமைவுக்கு பொருத்தமான வாக்கியங்களை உருவாக்குவது போல பயின்று பயின்று தன்னைத் தகவமைத்துக்கொண்டான் கண்ணபிரான்.அவன் பிறருடன் பேசும் போது இளிப்பதை முதலில் பிரக்ஞைபூர்வமாக தவிர்த்தான்.தலையை ஒரு பக்கம் சாய்த்து சொறிந்து கொள்வதை நிறுத்தினான்.மெல்ல அந்தப் பழக்கங்கள் பொருந்தாத பழைய சட்டைகள் போல அவனை விட்டு விலகின.அவன் கச்சிதமாக கூர்மையாக இனிமையாக பேசினான்.

நால்ரோட்டின் முனையில் அமைந்திருந்தது விஜயனின் ஸ்ரீகிருஷ்ண பவன்.ஹோட்டலுக்குள் சாலையிலிருந்து இரண்டு மூன்று படிகள் இறங்கிச் செல்ல வேண்டும்.பெரும் மழை வந்தால் ஹோட்டலுக்குள் நீர் புகுந்து விடும்.ஆனால் அப்படி பெரும் மழை வந்ததுமில்லை.ஹோட்டலுக்குள் நீர் புகுந்ததுமில்லை.தூறல் குறைந்திருந்தாலும் அதிக கூட்டம் இல்லை.இரண்டு மூன்று பேர் காபி குடித்துக் கொண்டிருந்தார்கள்.ஒரு தந்தை தன் மகளுக்கு தோசையை கிள்ளி ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தார்.அடிக்கடி அவளது வாயைத் துடைத்துவிட்டார்.தலையை வருடினார்.தண்ணீர் புகுட்டினார். யசோதையின் கிருஷ்ணன் , கோகுல கிருஷ்ணன்,முரளிகிருஷ்ணன்,ராதாகிருஷ்ணன்,கோவர்தன கிருஷ்ணன் , வேங்கடகிருஷ்ணன் என்று பல்வேறு கிருஷ்ணனின் வரைப்படங்கள் சுவர்களில் மாட்டப்பட்டிருந்தன.மறுபக்க நீலவண்ணச் சுவரில் கிருஷ்ணன் விஜயனுக்கு குருஷேத்திரத்தில் அருளிய கீதா உபதேசத்தின் ஓவியம்.

“என்ன இன்னிக்கு மழை பெய்யுதேன்னு நினைச்சேன்.வாராது வந்த மாமணியா ஹோட்டலுக்கு வந்திருக்கீங்க” என்று கல்லா அருகில் நின்ற பரதனை தன் கேபினிலிருந்து வெளியே வந்த விஜயன் வரவேற்றான்.

“எப்படி இருக்கீங்க விஜயன்”

“நல்லா இருக்கேன்.நீங்க எப்படி இருக்கீங்க.பத்மா மேடம் எப்படி இருக்காங்க”

“நல்லா இருக்காங்க”

“என்ன சாப்பிடுறீங்க”

“இல்ல உங்களப் பாக்க வந்தேன்”

“ஓ.அப்படியா.வாங்க உள்ளே போலாம்.முருகா இரண்டு கப் காபி கேபினுக்கு அனுப்பு.காபி குடிப்பீங்க இல்ல பரதன்.நான் இந்த நேரத்துல பொதுவா பேட்மிட்டன் விளையாட போயிடுவேன்”

“தெரியும்.இன்னிக்கு மழையா இருக்கு.போயிருக்க மாட்டீங்கனு நினைச்சுதான் வந்தேன்.”

“பரதன் கணக்கு தப்பாது தான்.உட்காருங்க.”

குளிரூட்டப்பட்ட அறை.விஜயன் எப்போதும் ஹோட்டலில் தனக்கென்று அமைத்துக்கொண்ட கேபினில் தான் அமர்ந்து கொள்வான்.அங்கிருந்து கொண்டு அனைத்தையும் கவனிப்பான்.மாலைகளில் அவன் புதிதாக துவங்கிய கிளப்பில் பேட்மிண்டன் விளையாடுவான்.எப்போதும் வெள்ளை வேஷ்டி சட்டை நெற்றியில் குங்குமத் தீற்றலுடன் இருப்பான்.காபி கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றான் முருகன்.

“சொல்லுங்க பரதன்”

தான் கட்சியில் முழு நேர ஊழியராக மாற முடிவு செய்திருப்பதால் ஜீவா மெடிக்கல்ஸை கண்ணபிரானுக்கு கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் அதனால் கண்ணபிரான் பெயரிலேயே டிரக் லைசன்ஸூக்கு விண்ணப்பிக்க எண்ணியிருப்பதாகவும் அதற்கு ரெண்ட் அக்ரிமெண்ட்டை கண்ணபிரான் பெயருக்கு மாற்ற வேண்டும் என்றும் முன்னுரைகள் ஏதும் இல்லாமல் கூறினார்.

“ஃபுல் டைம் பார்ட்டி மெம்பர் ஆக போறீங்களா”

“ம்”

“ஃபுல் டைம் பார்ட்டி மெம்பர் எல்லாம் வேறு தொழில் நடத்தக் கூடாதுங்கற கட்டுப்பாடெல்லாம் இன்னுமும் உங்க கட்சில மட்டும் தான் இருக்கு பரதன்”

“அது நம்ம கட்சி இல்லையா விஜயன்”.

“சாரி.நம்ம கட்சிதான்.காபி குடிங்க பரதன்.ஆறிப்போகுது.காபி கொட்டையை சிக்மகளூருலயிருந்து நேரடியாவே வரவழைக்கிறேன்.இங்கேயே வறுத்து அரைக்கிறோம்.இங்க காபி குடிக்க மட்டுமே காலைலையும் சாய்ந்திரமும் ஒரு கூட்டம் வரும்”

தலையாட்டிய பரதன் சுவற்றில் தொங்கவிடப்பட்ட நாகராஜனின் படத்தைப் பார்த்தார்.இது நாகராஜன் இல்லையா விஜயன் என்று கேட்டார்.திரும்பி படத்தைப் பார்த்த விஜயன் , ஆமாம் ,இது ரொம்ப வருஷமா இருக்கே.நீங்க இங்க வந்ததில்லைன்னு நினைக்கிறேன் என்றான்.

“வந்திருக்கேன்.கேபினுக்கு வந்ததில்லை.”

“ஓ.ஆமாம் பரதன்.நாகராஜன் பெரியப்பா தானே எனக்கு எல்லாமே.இன்னிக்கி நான் ஒரு ஆளா இந்த ஊருல இருக்கறதுக்கு காரணமே அவரு தானே.இந்த இடமே அவரது தானே.”

“தெரியும்.அவரு உங்க சொந்த பெரியப்பா இல்ல இல்ல விஜயன்.”

“ஆமாம்.உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.நானும் என் தம்பியும் அப்படியே கூப்படப் போயி நிறைய பேரு அப்படி நினைச்சிக்கிட்டாங்க.நான் எட்டாம் கிளாஸ் படிக்கறப்போ எங்க நைனா இறந்துட்டாரு.நிலம் பதினாறு ஏக்கர் இருந்துச்சு.மணக்குப்பம் எங்க ஊரு.திருக்கோயிலூர்ல இருந்து திருவெண்ணெய்நல்லூர் போற வழியில இருக்கு.”

“தெரியும்.அந்த ஊருக்கெல்லாம் நிறைய முறை போயிருக்கேன்.உங்க அப்பாவும் நாகராஜனும் ஒண்ணா படிச்சாங்க இல்ல.”

“ஆமாம்.நைனாவும் நாகரஜன் பெரியப்பாவும் அண்ணாமலையில ஒண்ணாதான் பி.ஏ. படிச்சாங்க.முதல்ல பெரியப்பா விழுப்புரத்துல தான் ப்ராக்டீஸ் பண்ணாரு.அப்போ நைனாவுக்காக ஒரு நிலத்தகராறு கேஸூ கூட ஜெயிச்சு கொடுத்தாரு.ரொம்ப நல்ல சிநேகம்.நைனா செத்துப்போனப்பறம் சின்நைன்னா எங்களுக்கு உதவல.அவரு பக்கத்துல எடையாருன்னு ஒரு கிராமத்துல கம்பத்துகாரங்க வீட்ல பொண்ணு எடுத்தாரு.அப்பறம் அவங்க வீட்டோட போயிட்டாரு.எங்க சொத்தை வேற பறிக்கப் பாத்தாரு.அங்க நல்ல ஸ்கூலும் இல்ல.எங்க அம்மா நாங்க நல்லா படிக்கனும்னு பெரியப்பாவை வந்து பாத்தாங்க.பெரியப்பா பசங்க இங்க தங்கி ஸ்கூலும் காலேஜூம் படிக்கட்டும்னு சொல்லிட்டாரு.தனு பெரியம்மா கிட்டக்கூட அவரு எதுவும் கேட்கல.தனு பெரியம்மா எங்களை அவங்க பசங்க மாதிரியே பாத்துக்கிட்டாங்க.அவங்க பையன் பாலனுக்கும் எங்களுக்கும் எந்த வித்யாசத்தையும் அவங்க காட்டினதில்லை.ஒரு நாளு கூட சாப்பாடு விஷயத்துல பண விஷயத்துல முகம் சுளிச்சதில்லை.பெரியப்பா ஜவஹர் ஸ்கூல்ல சேத்தாரு.அப்புறம் காலேஜ் படிச்சேன்.நான் ஹோட்டல் ஆரம்பிக்கலாம்னு நினைச்சப்போ அவரு தான் இந்தக் இடத்தை கொடுத்து நடத்திக்கச் சொன்னாரு.முன்னாடி இங்க ஒரு மெஸ்ஸூம் இரண்டு மூணு கடையும் இருந்துச்சு.அப்படியே எல்லாத்தையும் இணைச்சு ஹோட்டலை ஆரம்பிச்சேன்.பெரியப்பா இருக்குற வரைக்கும் அவருகிட்ட வாடகையை ஒண்ணாத்தேதின்னா கொடுத்துடுவேன்.இப்போ பெரியம்மாகிட்ட கொடுத்துடறேன்.நானே அப்பப்போ வாடகையை ஏத்தி பத்திரத்தை புதுப்பிப்பேன்.என் தம்பி இன்ஜினியரிங் முடிச்சுட்டு நல்ல வேலையில இருக்கான்.இதுக்கெல்லாம் அவருதான் காரணம்.எனக்கு இந்த ஹோட்டலுக்கு அவரு பேரு தான் வைக்கனும்னு ஆசை.அவரு தான் கூடவே கூடாதுன்னு சொல்லிட்டாரு.இந்த இடத்தை என் பேருக்கு விலைக்கு கொடுத்துடுங்கனு கேட்கனும்னு நினைப்பேன்.ஆனா கேட்க இதுவரைக்கும் தைரியம் வரல.”

“நீங்க சொல்ற பல தகவல்கள் எனக்குத் தெரியும்.ஆனா இவ்வளவு விவரமா இப்போதான் தெரியுது.”

“பெரியப்பாவ பாக்க நீங்க வருவீங்க இல்ல.”

“ஆமா.அப்போ கடலூர் செயின்ட் ஜோசப்புல பியெஸ்சி கெமிஸ்ட்ரி படிச்சுட்டு இருந்தேன்.வக்கீலுக்கு படிக்கலாம்னு ஒரு எண்ணம் வந்ததுக்கு காரணமே அவரு தான்.அவருக்கு பேரே லேபர் லாயர் தான்.முழுக்க முழுக்க கட்சிக் காரங்க கேஸ் தான் எடுப்பாரு.”

அவன் பேசிக்கொண்டிருக்கையில் ஒருவன் வந்து அரிசி மூட்டைகள் வந்திருப்பதாகவும் குடோன் சாவி வேண்டும் என்றும் கேட்டான்.சாவியை எடுத்துக்கொடுத்தவன் குடோன் மிகச் சிறியதாக இருப்பதால் நிறைய பொருட்களை வாங்கி வைக்க முடியவில்லை என்று பரதனிடம் சொன்னான்.அடிக்கடி வாங்க வேண்டியிருக்கிறது என்றும் புலம்பினான்.தலையசைத்து மெளனமாக இருந்தார் பரதன்.

“நீங்க சொன்ன விஷயம் செஞ்சிடலாம் பரதன்.நீங்க ஃபோன்லையே சொல்லியிருக்கலாம்”

“நேருல வந்து சொல்றது தானே முறை.”

“சரிதான்.நீங்க வந்ததும் நல்லதாப் போச்சு.உங்களைப் பாத்து ரொம்ப நாள் ஆச்சு.அந்தப் பையன் உங்க கிட்ட வேலை செய்றாரா.”

“மூணு வருஷமா எங்கிட்ட வேலை செய்றாரு. அதுக்கு முன்னாடி கொஞ்ச வருஷம் பெங்களூருல்ல வேலையில இருந்தாரு.அவருக்கு அங்க சரியா வரல.அவருக்கு போன வருஷம் தான் கல்யாணம் ஆச்சு.”

“உங்களுக்குத் தெரிஞ்சப் பையனா இருக்கறது ஒண்ணு போதும் பரதன்.நாளைக்கே கூட செஞ்சிடலாம்.உங்கக் கடையில ஒருத்தரு கொஞ்சம் சதை பிடிச்சாப்புல இருப்பாரே.அவரா பரதன்”.

“ஆமாம்.அவரு தான்.”

“ஓகே.டன்.நான் ரெண்டு மூணு தடவை அவரப் பாத்திருக்கேன்.பேரு தெரியாது.மாத்திரலாம் பரதன்.” என்று சொல்லி மேஜையைத் தட்டினான்.

“நல்லது விஜயன்”

“இதுக்கு போயி என்ன பரதன்.ஆமாம் கட்சில எதாவது போஸ்டிங் கொடுக்குறாங்களா” என்று தலையை முன்பக்கம் கொண்டு வந்து கேட்டான்.

“மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்.”

“நல்லது.கடலூர்லயா”

“ஆமாம்”

“அப்போ நீங்க அங்க போயிடுவீங்களா”

“இல்ல பத்மாவுக்கு இங்க தானே ப்ராக்டீஸ்.நெய்வேலி கோர்ட் விருத்தாசலம் கோர்ட்.இப்போதைக்கு இங்க தான்.நான் தான் போயி வருவேன்.பின்னாடி பார்க்கலாம்.நான் வரேன் விஜயன்” என்று சொல்லி எழுந்து கொண்டார்.வாங்க என்று சொல்லி பரதனை வாசல் வரை வந்து வழி அனுப்பினான் விஜயன்.

திரும்பிய விஜயன் ஹோட்டல் கல்லா அருகில் கீழே சிதறிக் கிடந்த பில்களைப் பார்த்து உடனே பெருக்கச் சொன்னான்.ஈரமாக இருந்த வாசலை துடைக்கச் சொன்னான்.விரிந்த நிலையில் வாசலை அடைத்துக்கிடந்த இரண்டு மூன்று குடைகளை அப்புறப்படுத்தச் சொன்னான்.டேபிள்களில் அப்படியே இருந்த காபி டம்ளர்களை எடுக்கச் சொல்லி கத்தினான்.நேராக இருந்த நாற்காலிகளை எடுத்து மறுபடியும் நேராக போட்டான்.யாரும் ஒழுங்காக வேலை செய்வதில்லை என்று சத்தம் போட்டுக்கொண்டே கேபினுக்குள் சென்றான்.

விஜயன் தாரிக் அலி என்பவரிடமிருந்து சில வருடங்களுக்கு முன்னர்தான் பரதனின் கடையிருந்த காம்ப்ளெக்ஸை வாங்கினான்.அந்த வருடத்தில் இரண்டு கிரெளண்டில் இடம் வாங்கி கிளப் ஒன்றை ஆரம்பித்தான்.ஊரில் இருக்கும் பணக்காரர்கள் சந்தித்துக் கொள்ள ஒரு இடம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் விஜயனுக்கு இருந்தது.மேலும் இது நல்ல லாபத்தை தரும் என்றும் அவன் எண்ணினான்.விஜயன் காம்ப்ளெக்ஸை வாங்கிய புதிதில் அங்கிருந்த நான்கு கடைகளிலும் வாடகை வாங்கச் செல்வதுண்டு.பின்னர் அனைவரும் ஜிபேயில் பேடிம்மில் வாடகை செல்லுத்தத் தொடங்கிய பின்னர் செல்வதை நிறுத்திக்கொண்டான்.கடை காம்ப்ளெக்ஸ் , பின்னால் இருந்த ஆறு வீடுகள் ஆகியவற்றை சேர்த்து மொத்தம் இருபது செண்ட் நிலம்.காம்ப்ளெக்ஸின் மாடியில் ஒரு கழிப்பறை மட்டும் இருந்தது.அவனுக்கு காம்ப்ளெக்ஸின் முதல் மாடியிலும் கடைகளை கொண்டு வர வேண்டும் என்ற ஆசை இருந்தது.அந்த இடத்தில் ஒரு குடோன் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் அவனுக்கு இருந்தது.

மழை பெய்திருந்ததால் வெக்கையாக இல்லை.வேம்பின் கிளைகள் காற்றில் மெல்ல நடனமிட்டன.இரவின் இறுக்கத்தை கலைக்கும் வகையில் குடித்திருந்த ஒருவர் “நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே” என்று உச்சஸ்தாயியில் உருகியவாறு தெருவில் நடந்து சென்றார்.கண்ணபிரான் தோசை வார்த்து தக்காளி வெங்காயம் வதக்கி சட்னி செய்து வாசலில் அமர்ந்து சாப்பிட்டான்.நான்கு இல்லங்கள் இருந்த லைன் வீடு.மற்ற இல்லங்களில் வெளி விளக்குகள் அனைந்திருந்தன.நான்கு வீட்டுக்கும் சேர்த்து கழிப்பறைகளும் குளியலறைகளும் கடைசியில் இருந்தன.திருமணமாகி அவன் அவனது மனைவியை அந்த வீட்டுக்குத் தான் அழைத்து வந்தான்.அந்தப் பெண்ணுக்கு அந்த லைன் வீடு பிடிக்கவில்லை.கண்ணபிரானையும் பிடிக்கவில்லை.வீடு சிறித்து இருக்கிறது.கண்ணபிரான் பெருத்து கருப்பாக எருமைமாடு போல இருப்பதாகச் சொன்னாள்.ஏதோ பி.பார்ம் படித்திருப்பதாகச் சொல்லி கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள்.ஆனால் ஒரு மெடிக்கல்ஸில் வெறும் மாதச் சம்பளத்தில் இருப்பவனுக்கு எப்படி தன்னை தன் குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்கலாம் என்று பிலாக்கணம் பிடித்தாள்.எப்போது கண்ணபிரான் அருகில் சென்றாலும் வயிற்று வலி , உடல் சோர்வு என்று சொல்லி ஒருக்களித்து படுத்துக்கொள்வாள்.கல்யாணமான இரண்டாவது மாதத்தில் ஊரில் தோழியின் திருமணத்திற்கு செல்வதாக சொல்லிச் சென்றாள்.இரண்டே நாளில் திரும்புவதாகவும் சொன்னாள்.சென்று ஒரு வருடத்திற்கு மேல் கடந்துவிட்டது.நேரில் சென்று அழைத்தால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வருகிறேன் என்பாள்.பல ஞாயிற்றுக்கிழமைகள் கடந்துவிட்டன.

பரதன் இவை அனைத்தையும் அறிந்திருந்தார்.அவர் ஒரு முறை அவள் வீட்டுக்குச் சென்று அந்தப் பெண்ணிடம் பேசிப்பார்தார்.அவளுக்கு புகார் என்று ஒன்றும் இல்லை என்பதை அவர் புரிந்துகொண்டார்.ஆனால் அவளுக்கு கண்ணபிரானைப் பிடிக்கவில்லை.பிடிக்காததற்கும் அவளிடம் காரணங்கள் இல்லை.அவள் திரும்ப வரக்கூடும் என்று அவர் அவனிடம் சொன்னார்.வராமலும் போகக்கூடும்.உனக்கென்று நிலையான வருமானத்தையும் கெளரவத்தையும் உருவாக்கிக்கொண்டால் அவள் வரக்கூடும்.அதே நேரத்தில் அவளுக்காக என்றில்லாமல் உனக்காக உருவாக்கிக்கொள் என்றார்.அதை எப்படி உருவாக்கிக்கொள்வது என்று கண்ணபிரானுக்குத் தெரியவில்லை.பரதன் அவன் பெயரில் மெடிக்கல்ஸை மாற்றிக்கொடுப்பதால் அது சாத்தியமாகும் என்று எண்ணினார்.அவருக்கு பல காலமாக முழு நேர ஊழியராக சென்று விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.சட்டம் படித்தவர் அதன் பின் ப்ராக்டீஸ் செய்யாமல் இருந்தார்.ஒரு தொழில் இருந்தால் கட்சி வேலைகளையும் செய்யலாம் என்று ஒரு வருட டிப்ளமோ வகுப்பு படித்து மெடிக்கல்ஸை ஆரம்பித்தார்.தன் ஆதர்ச நாயகனான ஜீவானாந்தத்தின் பெயரில் கடைக்கு ஜீவா மெடிக்கல்ஸ் என்று பெயர் சூட்டினார்.அவர் அந்த மெடிக்கல்ஸை தொடங்கி பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டன.கண்ணபிரான் வந்து மூன்று வருடங்கள் சென்று விட்டன.

பரதன் கண்ணபிரானின் ஆளுமையில் வெகுவான பாதிப்பை செலுத்தினார்.அவனை தினமும் காலையில் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யச் சொன்னார்.அவர் வில் போன்ற உடலை கொண்டிருந்தார்.இறுக்கமான கச்சிதமான உடல்.வலுவான உடல் இருந்தால் வலுவான உள்ளம் அமையும் என்று கண்ணபிரானிடம் அவர் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார்.யார் வந்தாலும் சென்றாலும் எது நடந்தாலும் ஒரு நாளின் அட்டவணை மாறக்கூடாது என்பார்.தினமும் பேப்பர் படிக்கச் சொன்னார்.ஆங்கில நாளிதழ்கள் வாசிக்க வேண்டும் என்று அவனுக்கு அறிவுறுத்தினார்.

முந்தைய நாள் மழை பெய்த சுவடே தெரியாமல் மறுநாள் காலை தீயருவி போல கொட்டிக் கொண்டிருந்தது வெயில்.சுப முகூர்த்த தினம் என்பதால் மெடிக்கல்ஸூக்கு எதிரிலிருந்த லக்ஷ்மி திருமண மண்டபத்தில் பட்டுச்சேலைகளிலும் பட்டு வேஷ்டிகளிலும் சீமாட்டிகளும் சீமான்களும் அங்கிங்கும் இங்கங்கும் பரபரத்துக் கொண்டிருந்தார்கள்.மணப்பெண்ணும் மணமகனும் பிளக்ஸ் போர்ட்டில் புன்னகைத்தார்கள்.கண்ணபிரான் ஏழு மணிக்கெல்லாம் மெடிக்கல்ஸை திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.அருகிலிருந்த மளிகைக்கடை எட்டு மணிக்கும் கூரியர் கடை ஒன்பது மணிக்கும் திறக்கும்.பறவை எப்போது அமரும் எப்போது பறக்கும் என்பதை கணிக்க இயலாதது போலவே சிமெண்ட் கடைக்காரர் கடையை எப்போது திறப்பார் எப்போது மூடுவார் என்பதை அறிய இயலாது.மணப்பெண்ணுக்குத் தலைவலி என்று சொல்லி ஒருவர் கண்ணபிரானிடம் மாத்திரைகள் வாங்கிச் சென்றார்.ஊரின் பணக்காரர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள்.ஏதோ பெரிய வீட்டுத் திருமணம் என்று எண்ணிக்கொண்டான்.ஒரு கறுப்பு நிற ஹூண்டாய் க்ரேட்டா கார் வந்து மெடிக்கஸ்ஸ் முன் நின்றது.விஜயன் காரிலிருந்து இறங்கினான்.மெடிக்கல்ஸை நோக்கிச் சென்றான்.கண்ணபிரான் எழுந்து கடையிலிருந்து வெளியே வந்தான்.

“நீங்க தானே கண்ணபிரான்”

“ஆமாம் சார்”

“இங்கே எதிர்தாப்புல ஒரு கல்யாணம்.நம்ம ராஜன் கார்ப்பரேஷன் இருக்குல்ல.அவங்க பொண்ணு கல்யாணம்.நான் போய்ட்டு வந்துடேறன்.வண்டி இங்கேயே இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றார்.

எப்போதும் காலை ஆறு மணியிலிருந்து ஏழு ஏழரை மணி வரை நடை செல்வார் பரதன். அவர் வீடு இருந்த கெங்கைகொண்டான் பகுதியிலிருந்து ஜெயப்பிரியா திரையரங்கைத் தாண்டி நால்ரோடு வழியாக மந்தாரக்குப்பம் பஸ் ஸ்டாண்டு வரைச் சென்று ஒரு சுற்று சுற்றிவிட்டு தன் வீட்டுக்குச் செல்வார்.சில நாட்கள் பேருந்து நிலையத்துக்கு அருகிலிருந்த கட்சி ஆபிஸூக்குச் சென்று நாளிதழ்களை வாசித்துவிட்டு தன் சகாக்கள் எவரேனும் இருந்தால் அளாவிவிட்டு திரும்பிவிடுவார்.பரதனுக்கு நடை என்பது அடிப்படையில் பேராக்கு பார்ப்பதற்கான ஒரு ஏற்பாடு.பூங்காக்களில் அவர் ஒரு போதும் நடை செல்ல மாட்டார்.சாலை என்பது விநோத நடனங்கள் நிகழும் மேடை என்று சொல்வார்.அன்று ஒரு பாலத்தின் அருகே நடை சென்று கொண்டிருக்கையில் எதிரிலிருந்த புற்றுக்கோயிலில் ஒரு பெண் பால் ஊற்றுவதை கவனித்தப்படியே கடந்தார்.நாகங்களை வழிபடுவது எப்போதும் நம் மரபில் இருக்கிறது.தமிழகத்தில் , தென்னிந்தியாவில், இந்தியாவில், தென் கிழக்கு ஆசியாவில் நாக வழிபாடு உள்ளது.பெளத்தம் போன்ற பிரிவுகளில் நாகார்ஜூனரின் வரைப்படங்களில் நாகத்தை பார்க்க முடிகிறது.மகாவிஷ்ணு நாகத்தின் மீது துயில் கொள்கிறார்.சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்களின் வழிபாட்டிலிருந்த நாகத்தை ஆரியர்கள் தங்கள் தெய்வங்களுடன் இணைத்தனர் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.குண்டலினி போன்ற யோக முறைகளில் கூட சக்தியின் குறியீடாக நாகம் வருகிறது.விவேகானந்தர் ராமகிருஷ்ண மடத்திற்காக உருவாக்கிய சின்னத்தில் நாகம் இருக்கிறது.எப்படிப் பார்த்தாலும் வேறு எந்த விலங்கை விடவும் ஊர்வனவை விடவும் பறவையை விடவும் நாக வழிபாடு இந்திய மக்களிடம் அதிகம் காணப்படுகிறது.நம்மூரில் பக்ஷிராஜன்களை விட நாகராஜன்கள் அதிகம் இருக்கின்றனர்.நாகராஜனைப் பற்றி விஜயன் அத்தனை தீவிரமாக பேசியது ஆச்சரியமளிக்கிறது.விஜயனுக்குள் எப்போதும் ஒரு வணிகனின் கணக்கு மட்டுமே இருக்கும் என்று நினைத்தால் அவனுக்குள் இப்படியான நன்றியுணர்வு கூட இருக்கிறது.ஆச்சரியம் தான்.மனிதர்கள் எத்தனையோ அடுக்குகளிலானவர்கள்.எந்த அடுக்கு எப்போதும் வெளிப்படும் என்பது மட்டுமே நிச்சயமற்றதாக இருக்கிறது.தனு அம்மையாரை பார்த்து பல காலம் ஆகிறது.சென்று பார்க்க வேண்டும்.சிந்தித்துக்கொண்டே மாடிப் படிகளில் ஏறி வீட்டுக்குச் சென்றார்.அவரது மனைவி பத்மா நாளிதழ்களை வாசித்துக்கொண்டிருந்தார்.

வெற்றிலை மென்றவாறு கார் கதவைத் திறக்கச் சென்ற விஜயன் கண்ணபிரானைப் பார்த்து கடை நோக்கிச் சென்றான்.விஜயன் வருவதை பார்த்த கண்ணபிரான் ஒரு மடக்கு நாற்காலியை எடுத்து வெளியில் வைத்தான்.தனக்கும் ஸ்டூலை எடுத்து வெளியில் போட்டான்.உட்காருங்க சார் என்றான்.கண்ணபிரான் நன்கு சவரம் செய்திருந்தான்.பெரிய பெரிய சட்டங்கள் கொண்ட ஆரஞ்சு நிற அரைக்கை சட்டையை அணிந்திருந்தான்.ஷூ நன்கு பாலிஷ் செய்யப்பட்டிருந்தது.

“பரதன் இல்ல”

“பரதன் ஒன்பது மணிக்கு மேல வருவார்”

“என்ன முதலாளியை பேர் சொல்லி கூப்பிடுறீங்க” என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.

“அவரு தான் அப்படி கூப்படிச் சொல்லி கட்டாயப்படுத்தினாரு”

“ம்.”

“நீங்க எந்த ஊரு”

“எனக்கு எடையாருன்னு திருக்கோயிலூர் திருவெண்ணெய்நல்லூர் ரோட்டுல இருக்குற ஊர் சார்”

எடையார் என்றவுடன் விஜயனின் காதுகள் பெரிதாகின.கண்கள் விரித்த விஜயன் இதைப்பற்றி தன்னிடம் பரதன் முந்தைய தினம் ஒன்றும் சொல்லவில்லையே என்று தன் ஆச்சரியத்தை பகிர்ந்து கொண்டான்.பரதனை எப்படித் தெரியும் என்று விசாரித்தான்.ஒரு முறை சட்டமன்றத் தேர்தலுக்கு திருவெண்ணெய்நல்லூருக்கு பிரச்சாரத்துக்கு வந்தவர் அன்றிரவு தன் பக்கத்து வீட்டிலிருந்த தோழரின் வீட்டில் தங்கினார்.அப்போது பேசிக்கொண்டிருக்கையில் தான் பி.பார்ம் படித்தவன் என்பதை அறிந்து கடைக்கு ஆள் தேவை வர இயலுமா என்று கேட்டார்.அப்படி வந்து சேர்ந்தேன் என்று சொன்னான்.

“உங்களுக்கு எடையாருல சுப்புராயுலுவைத் தெரியுமா”

“பெருமாள் கோயில் பக்கத்துல கம்பத்துக் காரரு வெள்ளை அம்பாஸிடர் காரு வைச்சிருந்தாரே , அவரா”

“ஆமாம்.”

“உங்களுக்கு அவரு எதாவது சொந்தமா”

“என் சொந்த சித்தப்பா.நான் மணக்குப்பம் தான்”

“அப்படியா.பரதன் சொல்லலையே சார்.அவங்க தான் எங்க முதலாளிங்க.அதாவது ஆண்டைங்க.எங்க அப்பா காலம் வரைக்கும் அப்படித்தான் இருந்துச்சு.அவரு புள்ள தான் இந்த ஆண்டை அப்படிங்கறது எல்லாம் இனிமே வேணாமுன்னுட்டார்.நீங்க எங்களுக்கு கடன் பட்டவங்க இல்ல, நாங்களும் உங்களுக்கு கடன் பட்டவங்க இல்லன்னு சொல்லிட்டாரு.என் தம்பி படிக்கலை,அவங்க கொள்ளிலதான் வேலைக்குப் போறான்.ஏதாவது வீட்டு வேலை இருந்தா செய்வான்.இப்ப தான் சார் தோணுது , உங்களுக்கு அப்படியே சுப்புராயலு ஐயா ஜாடை”

“பரதன் இப்போ எங்க இருப்பார்”

“வீட்ல”

“சரி.எனக்கு நேரமாச்சு.நான் கிளம்புறேன்.”

“சரி சார்.ரெண்ட் அக்ரிமெண்ட்டை இன்னிக்கி சாய்ந்திரம் ஹோட்டலுக்கு கொண்டு வரலாமா”

“வாங்க அதுக்கென்ன , நேத்தே பரதன் கிட்ட பேசினது தானே” என்று சொல்லிக்கொண்ட நாவைச் சுழற்றி பற்களில் சிக்கிக்கொண்ட பாக்கைத் தூப்பி விட்டு காரை நோக்கிச் சென்றான்.

லாரி ப்ரோக்கர் ஷேட்டின் மேல் மாடியிலிருந்தது பரதன் குடியிருந்த வீடு.விஜயன் காரை கொண்டு வந்து நிறுத்துகையில் ப்ரோக்கர் ஷேட் திறக்கப்படவில்லை.பத்மா கேஸ் கட்டை மடித்து அட்டைப்போட்டு கட்டிக்கொண்டிருந்தார்.

“வாங்க விஜயன்.உட்காருங்க.”

“எப்படி இருக்கீங்க மேடம்”

“நல்லா இருக்கேன்”

“போன வாரம் கோர்ட்டுக்கு வந்திருந்தீங்களா.உங்களைப் பாத்தேன்.பேசனும்னு நினைச்சேன்.அப்பறம் உங்களைப் பாக்க முடியல”

“ஆமாம் மேடம்.கடைப் பசங்க நைய்ட் ஹோட்டலை கிளின் பண்ணிட்டு தண்ணீ பேரல்களை வெளியவே வைச்சுட்டாங்க.அதுக்கு கேஸ்.ஃபைன் கட்டிட்டு வந்தேன்”

பத்மாவின் புருவங்கள் இன்னும் கீழே இறங்கவில்லை என்பதை கவனித்த விஜயன் வக்கீல் நமச்சிவாயம் தான் எடுத்துக்கொடுத்தாரு என்று சொன்னான்.

சரி என்பது போல தலையசைத்தார் பத்மா.நெற்றியில் பெரிதாக பொட்டு வைத்திருந்தார்.வெண்ணிற பருத்தி புடவை அணிந்திருந்தார்.கைகளில் கழுத்தில் எந்த அணிகலனும் இல்லை.

“ப்ராக்டீஸ் எப்படி இருக்கு மேடம்”

“பரவாயில்ல.விருத்தாசலமும் போறதால இப்ப கொஞ்சம் ஓகே.” என்று சொல்லி கேஸ் கட்டுகளின் மீது கேஸ் நம்பரை எழுதினார்.

விஜயன் தன்னைப் பார்க்க வரவில்லை பரதனைப் பார்க்க வந்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட பத்மா  “பரதன் , விஜயன் வந்திருக்கிறார் பாருங்க” என்று அமர்ந்த இடத்திலிருந்தே சற்று குரல் உயர்த்திச் சொன்னார்.தனக்கும் பத்மாவுக்கு காபி போட்டு எடுத்து வந்த பரதன் விஜயனிடம் ஒரு கப்பை நீட்டி நான் அப்பறம் குடிச்சுக்குறேன் என்று கொடுத்தார்.விஜயன் மறுக்காமல் வாங்கிக்கொண்டான்.

விஜயன் கண்ணபிரானை பார்த்ததையும் பேசியதையும் சொன்னான்.முந்தைய தினம் பரதன் ஹோட்டலில் கவனித்தது போல பொருட்களை வைக்க அதிக இடம் இல்லாததால் அந்த மெடிக்கல்ஸ் இருக்கும் இடத்தையே குடோனாக வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் சட்டென்று தோன்றியதாகச் சொன்னான்.பரதன் குடோனுக்கு மாற்று ஏற்பாடுகளை பரிசீலிக்கலாம் என்று கூறிய போதும் விஜயன் உறுதியாக சொன்னதையே திரும்பச் சொன்னான்.குடோன் தான் பிரச்சனையா இல்லை வேறு எதாவது பிரச்சனையா என்பதை பரதனால் அறிய முடியவில்லை.கண்ணபிரான் ரெண்ட் அக்ரிமெண்ட்டை எடுத்துக் கொண்டு வந்துவிடக் கூடும் என்பதால் நேரில் சொல்லிவிடலாம் என்று வந்ததாகச் சொன்னான்.இதை விட நல்ல இடத்தில் மெடிக்கல்ஸூக்கான இடம் நிச்சயம் கிடைக்கும் என்றும் சொன்னான்.பரதன் அதன் பின் பேசுவதை தொடர விரும்பவில்லை.விஜயன் பரதனிடமும் பத்மாவிடமும் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினான்.

விஜயனின் முகத்தில் தெரிந்த பதற்றமும் அவசரமும் பரதனைக் குழப்பியது.குடோன் தான் வைக்க வேண்டும் என்றால் முந்தைய தினமே சொல்லியிருக்கலாம்.எப்போதாவது சிமெண்ட் கடையை திறக்கும் சின்னத்துரையை காலிச் செய்யச் சொல்லி அங்கு வைக்கலாம்.ஏன் நல்ல வணிகம் நிகழும் கடையை இடம் மாற்ற வற்புறுத்த வேண்டும்.புதிய இடத்திற்கு கடையை மாற்றினால் பழைய வாடிக்கையாளர்கள் வராமல் போகக்கூடும்.அதுவும் கண்ணபிரானுக்கு மாற்றிக்கொடுக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் இது அவசியமற்றதாக பரதனுக்கு தோன்றியது.அதில் ஏதோ உள் நோக்கம் இருக்கலாம் என்றாலும் என்ன உள்நோக்கம் இருக்கும் என்று அறிய இயலவில்லை.எப்போதும் போல ஒன்பது மணிக்கு கடைக்குச் சென்ற பரதன் கண்ணபிரானிடம் விஜயனுடன் நடந்த உரையாடல் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார்.கண்ணபிரானிடம் வீனஸ் கம்யூட்டர் சென்டருக்குச் சென்று பத்திரம் வாங்கி ரெண்ட் அக்ரிமெண்ட்டை தயாரிக்கச் சொன்னார்.அதற்கான தரவுகளையும் முந்தைய பத்திரத்தின் நகலையும் கொடுத்தார்.கண்ணபிரான் திரும்ப வந்தப் பின்னர் பத்திரத்தை சரி பார்த்தார்.அனைத்தும் சரியாக இருக்கிறது, விஜயனுக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்கிறதாம் அதனால் பத்திரத்தை அடுத்த நாள் அல்லது அதற்கும் அடுத்த நாள் கொண்டு வரச்சொல்லி குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார் என்று சொன்னார். கண்ணபிரான் மேற்கொண்டு எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.ஆனால் அவன் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.அதை கவனித்த பரதன் தான் ஒருவரை சந்திக்க வேண்டும் என்று மட்டும் சொல்லி வெளியே கிளம்பினார்.

தனு அம்மையாரின் இல்லம் முன் இருந்த சிறிய கணபதி கோயிலில் இரு பெண்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.வாசலில் வி.என் இல்லம் என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.மா கொய்யா வாழை தென்னை மரங்கள் சூழ இருந்தது இல்லம்.செம்பருத்தியும் ரோஜாவும் மல்லியும் பூத்திருந்தன.கதவு திறந்திருந்தது.வெளியே இருந்த திண்ணையில் ஒரு வயோதிகர் படுத்திருந்தார்.தனு அம்மையார் இருக்கிறாரா என்று தெரியவில்லை.காலிங் பேல் எங்கு இருக்கிறது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.பரதன் திண்ணையில் அமர்ந்தார்.அந்தப் இரு பெண்களில் ஒருத்தி பரதனை நோக்கி வந்தாள்.யாரை பார்க்கணும் என்று விசாரித்தாள்.தனு அம்மையாரை பார்க்க வேண்டும் , பரதன் என்று சொல்லுங்கள் என்றார்.உள்ளே சென்ற பெண் பரதனை உள்ளே வரச் சொல்லி அழைத்தாள்.

தாழ்வாரத்தில் ஒரு சாய்வான மர நாற்காலியில் அமர்ந்திருந்தார் தனு.பார்த்து வருடங்கள் கடந்து விட்டதை இருவரும் சொல்லிக்கொண்டனர்.பரதன் ஒரு மழை நாளின் இரவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை நாகராஜனிடம் வந்து சொன்னதை நினைவு கூர்ந்தார் தனு.அப்போது நாகராஜன் தன் ராஜ்துத் வண்டியில் பரதனை ஏற்றிக்கொண்டு வடலூர் சபை அருகே டெம்போவை மடக்கி பிடித்ததை சொல்லிச் சிரித்தார்.

“நீங்க அப்போ அடிக்கடி வருவீங்க இல்லையா.எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.நீங்க லா படிச்சிட்டு ப்ராக்டீஸ் பண்ணலைன்னு அவருக்கு வருத்தம்.சொல்லியிருக்கார்.உங்களுக்கு கட்சில போஸ்டிங் கொடுத்திருக்கிறதா சொன்னாங்க.சொல்லுங்க,என்ன விஷயம்.”

பரதன் நிகழ்ந்தவற்றை சுருக்கமாகச் சொன்னார்.தனு விஜயன் அவ்வாறு நடந்து கொள்பவன் இல்லையே என்று மறுத்தார்.இந்த வீட்டில் நாகராஜன் இருந்த போது எத்தனையோ பிள்ளைகள் உணவருந்திருக்கிறார்கள்.எத்தனையோ பிள்ளைகளுக்கு ஒரு விடுதி போல இந்த வீடு இருந்திருக்கிறது.அவர்களோடு விஜயன் பழகியிருக்கிறான்.ஒன்றாக உண்டு உறங்கியிருக்கிறான்.ஆனால் வேறு எந்தக் காரணமும் இருக்க வாய்ப்பில்லை என்று பரதன் மறுபடியும் நிகழ்வுகளைத் தொகுத்துக் கூறிய போது தனுவால் அதை மறுக்க இயலவில்லை.

“என்ன செய்யலாமுனு சொல்றீங்க” என்று கேட்டார்.

“தெரியலை.என்னால இதை வேற மாதிரியும் அணுக முடியும்.இன்ஜங்க்ஷன் வாங்க முடியும்.ஆனா விஜயன் இங்க வளர்ந்தவரு.அதான் உங்களை ஒரு முறை பாத்து பேசிட்டு போகலாமனு நினைச்சேன்.”

“நான் ஒரு தடவை விஜயன் கிட்ட பேசிப் பாக்குறேன்.நீங்க ஒரு இரண்டு மூணு நாளு இந்த விஷயத்தை அப்படியே விட்டுடுங்க.”

தனு அம்மையாரை பார்த்து விட்டு வெளியே வந்த போதும் அந்த வயோதிகர் அங்கேயே படுத்திருந்தார்.திண்ணைக்கு முன்னர் வேய்ந்திருந்த கூரையால் வெயில் தெரியவில்லை.அந்த இரு பெண்கள் பரதனின் வண்டியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.பரதனைப் பார்ததும் இறங்கி ஓடினர்.

வாடகை கொடுத்து இரண்டு மூன்று நாட்கள் தான் ஆகின.அதற்குள் தனு பெரியம்மா ஏன் அழைத்தார் என்று விஜயனுக்கு புரியவில்லை.அதுவும் அன்று மாலையே கட்டாயம் வந்து சந்திக்க வேண்டும் என்று சொன்னதும் ஆச்சரியம் அளித்தது.அவர் அப்படி அழைத்ததே இல்லை.பரதன் பெரியம்மாவிடம் ஏதேனும் சென்று பேசிப் இருப்பாரா என்று நினைத்தவாறு அவரது வீட்டுக்குச் சென்றான்.தனு உடல் மெலிந்து சாய்வு நாற்காலியில் சுருண்டிருந்தார்.விஜயன் அருகில் வந்து அமர்ந்த போதும் தனு அவனிடம் முகத்தை காட்டவில்லை.

“பெரியம்மா வரச் சொல்லியிருந்தீங்க”

தனுவின் தங்கை மகள் ஒரு டம்ளரில் தண்ணீர் வைத்துவிட்டு சென்றாள்.அவளிடம் ஏதாவது கேட்கலாம் என்பதற்குள் அவள் ஏதோ ஒரு அறைக்குள் மறைந்துவிட்டாள்.டிவியில் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது.

“பெரியம்மா வரச் சொல்லியிருந்தீங்க” என்று மறுபடியும் சற்று சத்தமாக சொன்னான் விஜயன்.

“எனக்கு காது கண்ணு புத்தி எல்லாம் நல்லாத்தான் இருக்கு விஜயா” என்று விஜயனை பார்க்காமலே சொன்னார் தனு.

“அவசரமா வரச் சொன்னீங்க”

எழுந்து அருகிலிருந்த டீபாயிலிருந்த ரிமொட்டை எடுத்து டிவியை அணைத்து விட்டு அமர்ந்தார்.அவனையே சிறிது நேரம் அமைதியாக பார்த்தார்.

“நான் கேக்குறதுக்கு நேரடியா பதில் சொல்லு விஜயா”

“கேளுங்க”

“பரதன் கடையில வேலை செய்யுற பையனுக்கு நீ ஏன் மெடிக்கல்ஸை கொடுக்க முடியாதுங்குற”

“இல்ல பெரியம்மா அங்க குடோன் வைக்கலாமுன்னு ஒரு ஐடியா வந்துச்சு.பரதன் கிட்ட நேரடியாவே அவரு வீட்டுக்குப் போயி காலையிலேயே சொல்லிட்டேன்.அவரு உங்களை வந்து பாத்தாரா”

“உனக்கு குடோன் வைக்க வேற எடமே கிடைக்காதா.உனக்கு இல்லாத இடமா.”

“அதில்ல பெரியம்மா.அந்தக் கடை ரோட்டுலெயே இருக்கு.லோடு எத்த இறக்க வசதியா இருக்கும்.”

“அந்த சிமெண்ட் கடை”

“அந்த சின்னத்துரை காலி செய்யமாட்டான்.சண்டைக்கு வருவான்”.

“அப்போ வேற எந்த காரணமும் இல்ல”

“இல்லையே.ஏன்.யாராவது எதாவது சொன்னங்களா”

“சரி விஜயா.உனக்கு நிறைய வேலை இருக்கும்.நீ கிளம்பு.அதை கேக்கத்தான் கூப்பிட்டேன்.”

அதன் பின் தனு பேசவில்லை.ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்தார்.விஜயன் எழுந்திருக்காமல் அப்படியே அமர்ந்திருந்தான்.தனு அவனைப் பார்த்து ஏன் இன்னும் இங்கு இருக்கிறாய் என்றும் கேட்கவில்லை, போ என்றும் சொல்லவில்லை.மெளனம் ஒரு பெருஞ் சுவராக மாறி தன் முன் எழுந்து நிற்பதை உணர்ந்தான்.அவனுக்கு அந்தச் சுவற்றை எப்படி உடைப்பது என்று தெரியவில்லை.அவன் மெல்ல எழுந்து எதுவும் சொல்லாமல் வெளியில் வந்தான்.திண்ணையில் அமர்ந்திருந்த வயோதிகர் வாழைமரத்துக்கு அருகில் சென்று அமர்ந்து சிறுநீர் கழித்தார்.திரும்ப வந்தவர் விஜயனைப் பார்த்து யாருப்பா நீ என்று கேட்டுவிட்டு பதிலுக்கு காத்திராமல் உள்ளே சென்றார்.மா மரத்தின் இலைகள் காற்றில் கூத்தாடின.இலைகள் அத்தனையும் நாவுகளாக மாறி ஒவ்வொன்றும் ஒரு வாதத்தை முன்வைப்பது போல விஜயனை அழுத்தின.உரையாடல்கள் பட்சிகளின் இரைச்சலாக மாறி காதைத் துளைத்தன.ஓங்கி வளர்ந்திருந்த தென்னைகள் ஆகாயத்தின் ஆரஞ்சு கதிர்களின் ஒளியில் தங்களின் தனிமையை உரைத்தன.அவனுக்குத் தன் தலைக்கு மேல் இருந்த கூரை சட்டென்று காணாமல் போய் விட்டது போல இருந்தது.மேலே ஆகாயம் கீழே மண்.விஜயன் மிகவும் தனித்துவிடப்பட்டவனாக உணர்ந்தான்.அவன் அந்த தென்னைகளை மறுபடியும் பார்த்தான்.அவை இப்போது ஓங்காரமிட்டன.கண்களை விலக்கி வீட்டைப் பார்த்தான்.அவன் வளர்ந்த வீடு.அவனுக்கு அந்நியமாகத் தெரிந்தது.இன்று வளர்ந்த சுவர்கள் நாளை மதில்களாக மாறும்.மதில்களை பள்ளிகளிலும் சிறைச்சாலைகளிலும் மனநலவிடுதிகளிலும் அமைக்கின்றனர்.புகமுடியாத வீடு செல்லமுடியாத கருவறை.கரும் பூதம் ஒன்று வானத்திலிருந்து இறங்கி வருவது போல அந்தி மங்கி இருள் சூழ்ந்தது.காரில் சாய்ந்து நின்று சாலையை வெறித்துப் பார்த்தான்.வாகனங்கள் ஒளி பாய்ச்சி சீறிக்கொண்டு சென்றன.கிழக்கில் பிறை உதித்திருந்தது.உடனே வந்து ரெண்ட் அக்ரிமெண்ட்டை கண்ணபிரான் பெயருக்கு புதுப்பித்துக் கொள்ளலாம் என்று பரதனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு காரில் ஏறி ஹோட்டலுக்குச் சென்றான்.

மணல் வீடு இதழில் பிரசுரமான சிறுகதை.

- ஓவியம்  - By Bruno Caruso - Self-scanned, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=78438788