![]() |
| கே.பாலகோபால் |
2009 ஆம் ஆண்டு நான் ஒரு குறும்படம் எடுக்க முயன்று கொண்டிருந்தேன். அப்போது அருண்மொழி இன்று மாலை எல்எல்ஏ பில்டிங்கில் நடக்கும் கூட்டத்திற்கு வந்துவிடுங்கள் , அங்கே சந்தித்து பேசலாம் என்றார். மனித உரிமை ஆர்வலர் கே.பாலகோபாலுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நினைவஞ்சலி கூட்டம் அது.அப்போது தான் பாலகோபால் எனக்கு அறிமுகமானார்.அவரது இரண்டு கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து அ.மார்கஸ் வெளியிட்டிருந்தார்.அந்தக் காலக்கட்டத்தில் இருந்த வேலையை விட்டுவிட்டு சட்டம் படிக்கலாம் என்ற எண்ணம் எனக்கு வலுவாக இருந்தது.சில கல்லூரிகளுக்கு விண்ணபித்து நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் கூட வந்திருந்தது.அப்போது படித்த பாலகோபால் கட்டுரைகளில் நீதிபதி எந்த வர்க்கத்தை பிரதிபலிக்கிறாரகள் என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.உண்மையான சமூக மாற்றங்கள் அமைப்புகளால் மக்கள் இயக்கங்களின் போராட்டங்களின் வழியே நிகழ முடியும் என்று எழுதியிருந்தார்.
அப்போது வீட்டிலும் என் அம்மா சட்டம் படிக்கக்
கூடாது என்று கடுமையாக எதிர்த்து சண்டை போட்டார்.ஒரு குழப்பமான மனநிலையில் அந்த எண்ணத்தை
கைவிட்டேன்.அதன் பின் அடிக்கடி பாலகோபால் எழுதிய எதாவது கிடைத்தால் படிப்பேன்.அவரின்
வலைத்தளத்தில்1 சில கட்டுரைகளை படித்ததுண்டு.அவர் தெலுங்கிலும் ஆங்கிலத்திலும்
பேசிய காணொளிகளை பார்த்ததுண்டு.அவரைப் பற்றி நல்ல ஆவணப்படம் ஒன்று இருக்கிறது2.ஜோதி
கத்தம் என்பவர் இயக்கியிருக்கிறார்.ஆனால் புத்தகமாக அவர் எழுத்துகளை வாசித்ததில்லை.சமீபத்தில்
Understanding Fascism : Writings on Caste , Class & The State என்று பாலகோபால் எழுதிய புத்தகத்தை வாசித்தேன்.வ.கீதா தொகுத்து அறிமுகம்
செய்திருக்கிறார்.பெரும்பாலும் அவர் இ.பி.டபள்யூவில் எழுதிய கட்டுரைகள்.
கே.பாலகோபால் தெலுங்கு பிராமணர்.திருப்பதியில்
இளங்கலை கணிதம் கற்று பின்னர் வாரங்கல்லில் மண்டல பொறியியல் கல்லூரியில் முதுகலையும்
முனைவர் பட்டமும் பெற்றார்.அதையடுத்து இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் முதுமுனைவ
ஆய்வாளாராக சேர்ந்தார்.ஒன்றரை வருடம் கழித்து வாராங்கல்லுக்கே திரும்பினார்.அங்கே அவர்
படித்த கல்லூரியிலேயே கணித ஆசிரியராக சேர்ந்தார்.மார்க்ஸியத்தின் அறிமுகம் கிடைத்தப்
பின்னர் தன்னை மனித உரிமைகள் அமைப்புடன் இணைத்துக் கொண்டார்.அவர் களப்பணியாளராக இருந்த
அதே நேரத்தில் தன் சிந்தனைகளைத் தொகுத்து தொடர்ந்து தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் எழுதக்
கூடியவராகவும் இருந்திருக்கிறார்.அப்படி அவர் எழுதிய சில கட்டுரைகளின் தொகுப்புதான்
இந்தப் புத்தகம்.
இந்தக் கட்டுரைகளின் காலம் எண்பதுகளிலிருந்து
இரண்டாயிரம் வரை.இருபது வருடங்கள்.இந்தக் காலத்தில் என்டிஆர் ஆந்திரத்தின் முதலமைச்சர்
ஆகிறார்.இந்தியாவில் தாராளமயமாக்கல் அறிமுகமாகிறது.வலதுசாரிகள் மேலெழுகிறார்கள்.அவர்
தன் கட்டுரைகளில் நேருவின் காலத்திலிருந்து வலதுசாரிகள் எழுச்சி பெறுவதற்கான காரணங்களை
தொகுத்துக் கொண்டே வருகிறார்.
இந்தியா அடிப்படையில் நிலப்பிரபுத்துவ
நாடாகவே அப்போதும் இப்போதும் இருந்திருக்கிறது. 1935யில் கொண்டுவரப்பட்ட இந்திய அரசுச்
சட்டம் தான் இந்திய அரசியலமைப்பாக மாற்றம் பெற்றது என்று சிலர் சொல்வதுண்டு.ஆனால் இவை
இரண்டுக்குமான முக்கிய வேறுபாடு இந்திய அரசியலைப்பில் உள்ள பகுதி மூன்றும் நான்கும்.
பகுதி மூன்று அடிப்படை மனித உரிமைகள் பற்றியும் பகுதி நான்கு அரசுக் கொள்கைகளைக் நெறிப்படுத்தும் காரணிகள் பற்றியதுமாக
உருவாகின.
இவை இரண்டும் வானத்திலிருந்து அருளப்பட்டவை
அல்ல.அவை சுதந்திரம்,சகோதரத்துவம்,நீதி,ஜனநாயகம்,சமத்துவம்,பன்மைத்துவம் ஆகியவற்றை
வலியுறுத்துகின்றன.இந்த விழுமியங்கள் அனைத்தும் நமக்கு மேற்கிலிருந்து கிடைத்தன.இந்தியா
அடிப்படையில் அடுக்குகளாக பகுக்கப்பட்ட படிநிலை சமூகம்.இங்கே யார் யாருக்கு மேலே யாருக்கு
கீழே என்பது நன்கு உணரப்பட்ட நிலையில் தான் இருக்கிறோம்.நமக்கு சாத்தியமான புது விழுமியங்கள்
இந்தப் படிநிலைகளுக்கு எதிரானவை.
நேருவின் காலத்தில் தான் இந்தியச் சமூகம்
இந்தப் புதிய விழுமியங்களை ஏற்றது.அப்போதும் இங்கே நிலப்பிரபுத்துவம் அப்படியே தான்
இருந்தது.அணைகள், நீர்பாசனம், பல்கலைக்கழகங்கள், பொது கட்டமைப்பு ஆகியவை இந்தியாவில்
அடுத்த பதினைந்து வருடங்களில் உருவாக்கப்பட்டன. இதை இந்தியாவின் சோஷியலிச அரசு நிகழ்த்தியது.இந்தியாவிற்கு மேற்குலக நாடுகள் உதவின.ரூபாயின்
மதிப்பு குறையவில்லை.அதுவே நேருவின் காலகட்டம்.பெரிய கொந்தளிப்புகள் இல்லாத காலமாக
இது அமைந்தது.
லால் பகதூர் சாஸ்திரியின் மறைவுக்கு பிறகு
இந்திரா காந்தி பொறுப்பேற்றார்.அறுபதுகளில் தான் இந்தியாவில் பசுமை புரட்சி அறிமுகமானது.
ஊரகங்களுக்கான மின் இணைப்புகள், சாலை கட்டமைப்பு உருவாகி வந்தன.நிலப்பிரபுக்கள் மேலும்
செல்வந்தர்களாக மாறினார்கள்.நிலச்சீர்திருத்தங்கள் பொய்த்து போயின.நிலச்சுவான்தார்கள்
மக்களை மேலும் ஒடுக்கினர்.இந்திய பணக்காரர்கள் யாரும் தாங்கள் ஈட்டிய செல்வத்தை கொண்டு
தொழில் தொடங்க செல்லவில்லை.இந்தியாவில் பல காலமாக அம்பாஸிடர் தான் உற்பத்தியாகிக் கொண்டிருந்தது.சூசுகி
என்ற ஜப்பான் நிறுவனம் தான் இங்கே அடுத்த தலைமுறை கார்களை கொண்டு வர வேண்டியிருந்தது.
ஓடுக்கப்படும் மக்கள் தங்களுக்கு இந்த
அரசு எதுவும் செய்யவில்லை என்று வன்மம் கொண்டனர். அது நகஸல்பாரி இயக்கமாக உருக்கொண்டது.
ஒடுக்கிய சமூகம் இந்தியா முழுமைக்கும் தனக்கான பிரதிநித்துவத்தை ஏழுபதுகளிலிருந்து
தேடிக் கொண்டே இருந்தது. அது இறுதியில் நரசிம்ம ராவ் தலைமையிலான அரசில் தாராளமயமாக்கல்
, உலகமயமாக்கல் வழி தன்னை விஸ்தரித்துக் கொண்டது.
இன்று மகாந்தமா காந்தி ஊரக வேலை வாய்ப்புத்
திட்டம் மாற்றப்பட்டு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.இந்தப் புதிய திட்டத்தில்
மாநில அரசுகள் வருடத்தின் எந்த அறுபது நாட்களில் இந்தப் பணியை செயல்படுத்தக் கூடாது
என்று தெரிவிக்கலாம் என்ற பிரிவு இருக்கிறது.இந்தியாவின் உயர் சாதியினர் தான் நிலப்பிரபுக்களாகவும்
இருக்கின்றனர்.இவர்கள் தங்கள் நிலங்களுக்கு குறைந்த ஊதியத்தில் வேலைக்கு ஆட்கள் வர
வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.நூறு நாள் வேலைப் பணிகள் இந்த அறுவடை , நடப்பு
போன்ற நாட்களில் நடந்தால் பணியாளர்களுக்கு அதை விட அதிக ஊதியத்தை தர வேண்டிய தேவை ஏற்படுகிறது.இதனால்
இந்த நாட்களில் இந்தப் பணியைத் தடை செய்தால் அது நிலப்பிரபுகளுக்கு ஏதுவாக இருக்கும்
என்பதால் அரசாங்கம் அதற்கான சட்டத்தை அமல்படுத்துகிறது.
இந்தியாவில் நிலப்பிரபுத்துவ சாதிகள் வர்க்கமாக
திரண்டு அவையே பின்னர் அரசுகளாக பரிணமித்தன.இவை தான் ஊரகங்களில் ஒடுக்கப்பட்ட சாதி
மக்கள் மீது வன்முறையை ஏவுகின்றன. தமிழகத்தில் கீழ்வெண்மணி, ஆந்திரத்தில் கரம்சேடு
என்று அது எங்கும் ஒன்று போலவே அரங்கேறின.வி.பி.சிங் காலத்தில் மண்டல் கமிஷனின் பரிந்துரை
நடைமுறைப்படுத்தப்பட்ட போது ஊரக மேல் வர்க்கத்தினரும் அதுவரை சுதந்திரம், சமத்துவம்
என்று பேசிக் கொண்டிருந்த பெருநகர மேட்டுக்குடியனரும் ஒன்றாக இணைந்து அதை எதிர்த்தனர்.
உண்மையில் இட ஒதுக்கிட்டால் என்ன தான்
நிகழ்ந்து விடுகிறது.கல்வியிலும் , அரசு வேலை வாய்ப்பிலும் சிறிய சலுகை ஒடுக்கப்பட்ட
மக்களுக்கு கிடைக்கிறது.அவ்வளவுதான்.அரசு வேலைகள் உண்மையில் எத்தனை பேருக்கு பணிகளைத்
ஏற்படுத்தித் தருகின்றன.அதுவும் குரூப் ஏ போன்ற வேலைகளில் இட ஒதுக்கீட்டின் பலன் மிகவும்
குறைவு.இன்று உயர்த்தப்பட்ட சாதியில் பிறப்பதாலேயே ஒருவருக்கு சொத்து கிடைக்கிறது,
அதிகார வர்க்கத்தின் தொடர்புகள் கிடைக்கின்றன, நல்ல கல்வி அமைகிறது. இவையும் ஒருவகையில்
இட ஒதுக்கீடு தானே என்ற கேள்வியை எழுப்புகிறார் பாலகோபால்.வாழையடி வாழையாக அதை உண்டு
செரித்து வாழும் சமூகம் இட ஒதுக்கீடு அடுத்தடுத்த தலைமுறையினருக்கே வழங்கப்படக்கூடாது
என்கிறது.எத்தகைய முரணாக இவை இருக்கின்றன.ஆனால் நமக்கு இந்த முரண்கள் தெரிவதில்லை.
இதன் பின்னணியில் இருப்பது சாதியப் படிநிலையை
பாதுகாத்துக் கொள்ள விரும்பும் வர்க்கத்தின் ஆர்வம் மட்டுமே.தொண்ணூறுகளுக்கு பிறகு
தாராளாமயமாக்கல் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் ஜனநாயகம், சமத்துவம், சுதந்திரம்
போன்ற விழுமியங்களும் அதை முன்னெடுக்கும் நிறுவனங்களும் ஒடுக்கப்படுகின்றன.ஜாதிகள்
வர்க்கமாகி வர்க்கங்கள் அரசுகளை அதன் கொள்கைகளை தீர்மானிக்கின்றன.மேலும் மேலும் மூலதனம்
உயர்த்தப்பட்ட வர்க்கத்தினரிடம் மட்டும் பல்கிப் பெருகுகிறது.அவர்கள் அதைக் கொண்டு
ஒடுக்கப்பட்ட சமூகங்களை முன்னுக்கு கொண்டு வர முனைவதில்லை.இந்தியாவில் நிலப்பிரபுக்கள்
உற்பத்தித் துறையில் முதலீடு செய்வதில்லை.கிராமங்களில் இருக்கும் முதலாளிகள் பணத்தை
பைனான்ஸ் நிறுவனங்களில் போட்டு வட்டியை பெற்றுக்கொள்கிறார்கள்.நீதி நிறுவனங்களின் அநியாய
வட்டியை கட்ட இயலாமல் ஒடுக்கப்படுபவன் மேலும் சிரமத்திற்கு உள்ளாகுகிறான்.
இன்று அரசும் வேலைகளை உருவாக்குவதில்லை.இந்தியாவின்
நிலப்பிரபுக்களும் பெருநகரத்தின் மேட்டுக்குடிகளும் தொழில்களையோ , கல்வி நிறுவனங்களையோ
உருவாக்குவதில்லை என்பதை நாம் கவனிக்கலாம்.ஊரகத்தில் பைனான்ஸ் நிறுவனங்கள் என்றால்
பெரு நகரத்தில் இருக்கும் செல்வந்தன் பங்குச் சந்தையிலும் சேவைத் துறையிலும் முதலீடு
செய்து மேலும் செல்வந்தனாகிறான்.இவர்களை பிரதிநித்துவப்படுத்தும் அரசாக இந்திய அரசு
இருக்கிறது.
இதில் தொண்ணூறுகளில் வலதுசாரி அரசியல்
முன்னிலைக்கு வந்தது.ஏற்கனவே சமத்துவம், நீதி , சுதந்திரம், ஜனநாயகம், பன்மைத்துவம்
என்ற புரியாத விழுமியங்களை சுமந்து நின்ற சமூகத்திற்கு வலதுசாரிகளின் வருகை வாகை சூடியது.இந்தியப்
படிநிலை சமூகத்தை மேலும் காக்க மேலும் வலுக்க வைக்க வந்தது நான் வலதுசாரி அரசியல்.வனங்களுக்கு
சென்று நக்ஸல்களை கொல்லும் அரசால் அதற்கு எந்தத் தடையும் விதிக்காத நீதித்துறையால்
அயோத்தியாவில் பாபர் மசூதி தகர்க்கப்பட்டதை தடுக்க முடியவில்லை.
பெருகும் மூலதனக் குவிப்பு மத்திய தர வர்க்கத்தினருக்கும்
ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பாதுகாப்பின்மையை உருவாக்குகிறது. ஏனேனில் இங்கு மேலும்
மேலும் சமத்துவமின்மை அதிகரிக்கிறது.அரசு இன்னும் இன்னும் ஆயுதங்களை குவிக்கிறது.இந்த
பாதுகாப்பின்மையை அறுவடை செய்ய சிறந்த வழியாக மத அடிப்படைவாதம் பயன்பட்டது.
இந்தியாவில் பிறந்து வளர்ந்த எவருக்கும்
அடிப்படையில் படிநிலை எண்ணம் இருக்கவே செய்யும். ஏனேனில் சமூகமே அப்படித்தான் இருக்கிறது.
அலுவலகத்தில் , அடுக்ககத்தில், பேருந்தில் , ரயிலில் நடைபாதையில், ஷாப்பிங் மால்களில்
என்று எங்கும் நிறைந்திருக்கும் ஆன்மா நமது அடுக்குகளாக பகுக்கப்பட்ட படிநிலை.இதனால்
இந்திய மனம் எளிதில் மற்றமையை உருவாக்கிக் கொள்கிறது. நாம் பிறர் என்ற வேறுபாட்டை உருவாக்குவது
இங்கு கடினமல்ல. குஜராத் கலவரத்திற்கு பிறகு அங்கு சென்று திரும்பிய பாலகோபால் அங்கு
டாக்ஸி டிரைவர் , கல்லூரி மாணவி, குடும்பத் தலைவி, குமாஸ்தா என்று எல்லோர் மனதிலும்
வெறுப்பு உமிழ்வதை பார்த்து துயரற்று போகிறார்.
இந்த வெறுப்பு எதனால் உருவாகுகிறது. அதற்கான
அடிப்படை என்ன. ஒன்றுமில்லை.அவர்களின் உடை , பழக்கங்கள், உணவு , கடவுள் வேறாக இருக்கின்றன.
இது வெறுப்புக்கு போதுமானதாக இருக்கிறது. இந்த வெறுப்பை கொள்முதல் செய்வதில் வெற்றி
கண்டது வலதுசாரி அரசியல்.இன்று அவர்களுக்கு எந்த வித எதிர்ப்பும் இல்லை. நீதித்துறை
எதையும் கண்டு கொள்வதில்லை.அவர்களும் மேட்டுக்குடி வர்க்கத்தின் பிரதிநிதிகளாகவே தீர்ப்புகளை
எழுதுகின்றனர்.இத்தனை ஒடுக்குதல்களை எதிர்த்து ஏதேனும் குழு முழுக்கமிட்டால் அதை அரசு
ஜனநாயகம் என்ற திரைக்கு பின்னே வைத்திருக்கும் துப்பாக்கி கொண்டு சுட்டுக் கொள்கிறது.
இந்தியாவில் நக்ஸல்பாரி என்ற ஊரில் தொடங்கிய
போராட்டம் ஆந்திரா , பிஹார் என்று பல்வேறு மாநிலங்களுக்கு பரவியது.பொதுவாக இவர்கள்
எம்எல் என்று அடையாளப்படுத்தப்பட்டனர்.இதில் சில பிரிவுகள் இன்று ஜனநாயக பாதைக்கு வந்து
விட்டன.இன்னும் ஆயுத போராட்டத்தை தொடரும் மாவோயிஸ்டுகள் காடுகளில் கொல்லப்படுகின்றனர்.கிட்டத்தட்ட
அந்த இயக்கம் முடிவுக்கு வரும் நிலையில் தான் இருக்கிறது.ஆனால் கொல்லப்படும் அனைவரும்
இந்தியக் குடிமகன்கள் தான் என்பதும் உண்மைதான்.ஏன் நக்ஸல்பாரி இயக்கங்கள் உருவாகின
, அந்தக் காரணங்கள் தீர்க்கப்பட்டனவா என்பது குறித்து இந்திய சமூகத்திற்கு எந்தக் கேள்வியும்
இல்லை.
ஒரு புறம் மக்களின் பாதுகாப்பின்மையை வலுவான
அரசு என்ற பிம்பம் கொண்டு மாயம் செய்யும் அரசு மறுபுறம் அந்தப் பாதுகாப்பின்மைக்கு
செறித்துக் கொள்ளும் வகையில் மற்றமைகளை உருவாக்கி தருகின்றது.அதைக் கொண்டு அவர்கள்
தங்கள் நாளை செவ்வனே கழிக்கிறார்கள்.அரசுகள் நிலப்பிரபுக்களுக்கும் , உயர் வர்க்கத்தினருக்கும்
தேவையான திட்டங்களை தீட்டி அவர்களை மகிழ்விக்கின்றன.அதன் மூலம் தன் அரசை காத்துக்கொள்கின்றன.
இறுதியில் இந்தியாவின் படிநிலை காக்கப்படுகின்றது.இது
வலதுசாரி சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கை.அடுக்ககப் படிநிலை சீர்குலைக்கப்படுவது
தான் இந்தியாவில் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் என்று வலதுசாரிகள் வாதாடுகிறார்கள்.அது
நிலைநிறுத்தப்படுவதும் அதற்கான சூழலை உருவாக்குவதும் தான் அரசின் வேலை. இதில் வேடிக்கை
என்னவென்றால் தான் சுரண்டப்பட்டாலும் மத்தியத் தர இந்தியக் குடிமகனும் ஒடுக்கப்பட்ட
இந்தியக் குடிமகனும் தனக்குக் கீழே ஒருவன் இன்னும் இருக்கிறான் என்ற மகிழ்ச்சியில்
உறங்குகிறார்கள்.இந்தியாவில் மூலதனக் குவிப்பு உயர் வர்க்கத்தினரிலிருந்து அடுத்தடுத்த
வர்க்கத்தினருக்கு சென்றிருக்க வேண்டும்.அவை பகிரும் வகையிலான திட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்க
வேண்டும். ஆனால் அதற்கு எதிர் திசையில் அனைத்தும் பயனப்படுகின்றன.
விழுமியங்களை நிறுவனங்கள் தான் பிரதிபலிக்கின்றன.நீதி
என்ற விழுமியம் நீதிமன்றங்களின் வழி பருண்மை வடிவத்தை அடைகின்றன என்று நாம் எண்ணுகிறோம்.சமத்துவம்,சுதந்திரம்,சகோதரத்துவம்
அனைத்தும் நிறுவனங்கள் வழியே தினமும் உணரப்பட வேண்டியவை. ஆனால் அவை இல்லாமல் போகும்
போவது கவலைக்குரியது என்கிறார் பாலகோபால்.ஏனேனில் ஒன்று இல்லாத போது அது பழக்கமாகி
பின்னர் அதை எதிர்பார்க்கும் சுரணை குறைகிறது என்கிறார்.
ஒரு ஜனநாயக சமூகம் மாற்றுக் கருத்தை ,
முரண்படுதலை அங்கீகரிக்க வேண்டும்.ஏனேனில் அது தான் ஜனநாயகம்.இந்திய அரசியலமைப்பின்
பத்தொன்பதாவது பிரிவு அடிப்படையில் அரசியல் சுதந்திரத்தை தான் பேசுகிறது.எனக்கு என்
எண்ணத்தை சொல்ல வெளிப்படுத்த உரிமை இருக்க வேண்டும் என்பது தான் அந்தப் பிரிவின் சாரம்.
இன்று நமது அரசை எதிரத்து எதுவும் பேச
முடியாது.எழுத முடியாது.அது மேலும் மேலும் வலுக் கொண்டதாக தன் பிம்பத்தை பெருத்து வைத்திருக்கிறது.வெறுமன
சின்னத் துணுக்குகள் கூட மிகப்பெரிய எதிர்வினைகளை உருவாக்குகின்றன.முற்றதிகாரம் மிகத்
தீவிர நிலையில் அமலில் உள்ள சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம்.இந்த அரசுகள் மிசா, தடா
, உபா என்ற தடுப்புச் சட்டங்களை உருவாக்கி முரண்படுவர்களை சிறையில் பல காலம் இருக்க
வைக்கிறது. மனித உரிமை ஆர்வலர்கள் கொல்லப்படுகின்றனர்.பீமா கொரேகான் வழக்கில் கைது
செய்யப்பட்ட பலர் பிணையில் வர பல ஆண்டுகளாகின.அவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை.விசாரணைகளும்
தொடங்கவில்லை.
இவை அனைத்திற்கும் அடிப்படை நமது சாதிய
மனநிலை.அதிலிருந்து படிநிலை உருவாகுகிறது. படிநிலையில் மேல்தளத்தில் இருப்பவர்கள் வர்க்கமாக
அணிதிரள்கிறார்கள்.அவர்கள் அரசுகளை உருவாக்குகிறார்கள்.அதன் வழி தங்களை காத்துக் கொள்கிறார்கள்.இதற்கு
எதிரான வலுவானத் தரப்பு உருவாகாத வரை இங்கு மாற்றங்கள் எதுவும் நிகழப்போவதில்லை.நமது
பெருந்தலைவர்கள் உருவாக்கிக் கொடுத்த உயர் விழுமியங்கள் காணாமல் போவதை பார்த்துக் கொண்டிருக்க
போகிறோம்.
பாலகோபால் தன் கட்டுரைகளின் வழி தன் சிந்தனைகளை
மிகக் கோர்வையாக தொகுத்தளிக்கிறார்.அவர் எண்பதுகளில் சொன்ன பல பார்வைகள் இன்று மேலும்
தூலம் பெற்றிருக்கின்றன.அவர் முதலில் ஏபிசிஎல்சி (APCLC) என்ற அமைப்பில் இருந்தார்.வாராங்கல்லில் மருத்துவர் ராமனாதன் கொல்லப்பட்ட
பின்னர் அங்கிருப்பது பாதுகாப்பல்ல என்று அவரை ஐதராபாத் அழைத்து வந்தனர்.தொடர்ந்து
சில காலம் கண்ணபிரானுடன் இணைந்து பணியாற்றிவர் பின்னர் அதில் கருத்து வேறுபாடு உருவாகி
தனி அமைப்பை (Human Rights Forum) உருவாக்கினார்.கல்லூரி வேலை போனதால் சட்டம் படித்து வழக்கறிஞராக பணியாற்றினார்.அவர்
2009யில் காலமானார்.
இந்தப் புத்தகம்3 கீதா ராமசாமி
நடத்திவரும் ஐதராபாத் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் ஆங்கிலப் பதிப்பான செளத் சயிட் புக்ஸ்
சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பு:
1 – பாலகோபாலின் வலைத்தளம் - https://balagopal.org/
2 - பாலகோபால் பற்றிய ஆவணப்படம் - K.Balagopal
- The Man, The Movement and The Moral Compass
3 - புத்தகத்தின் பெயர் – Understanding
Fascism – Writings on Caste Class & State – K. Balagopal – Curated and
Introduced by V.Geetha. South Side Books.
4 - புகைப்படம் - இந்த காணொளியிலிருந்து
எடுக்கப்பட்டது -
Democracy
dialogues- Interview of Dr. K Balagopal (part 2)

No comments:
Post a Comment