சரவணகார்த்திகேயன் Bad Girl திரைப்படம் பற்றி எழுதியிருப்பதை படித்த போது இதைக் குறித்து என் எண்ணங்களை பகிரலாம் என்று தோன்றியது. ஒரு பதின் வயது ஆண் பள்ளியில் ஒரு பெண்ணை விரும்பி , பின்னர் கல்லூரியில் காதலில் ஆழ்ந்து , புத்தி பேதலித்து , கோமாளியாகி , பின்னர் அதிலிருந்து மீண்டு வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து அதுவும் தோற்றுப் போய் முப்பதுகளின் முற்பகுதியில் தலை வழுக்கையாகி தொந்தி பெருத்து உடல் சீரழிந்து கிடக்கலாம் என்றால் அதைத் திரைப்படமாக உருவாக்கலாம் என்றால் ஒரு பெண் கதாபாத்திரத்தை முதன்மையாக்கி அதே போன்ற கதையை சொல்லலாம்.
இருத்தலியம் என்பது சுதந்திர
விருப்புறுதியை குறித்து பேசும் கோட்பாடு.நாம் ஒன்றை தேர்வதற்கான சுதந்திரம்.
நீங்கள் வேலையில் தொடர்வதற்கு , திருமணம் செய்து
கொள்வதற்கு , ஓட்டு செலுத்துவதற்கு, தோசை
சாப்பிடுவதற்கு நீங்கள் தான் பொறுப்பு. அமைப்பு அல்ல. ஒன்றை செய்வதற்கும்
செய்யயாமல் இருப்பதற்கும் முழு சுதந்திரம் ஒருவருக்கு உண்டு. பின்னர் அதைச்
சுமக்கும் எடையும் அவருடையது தான். விதி, ஊழ், சட்டம், குடும்பம், மரபு,
அப்பா, அம்மா , என்
தங்கை கல்யாணி என்றெல்லாம் சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது. எல்லா
சூழ்நிலைகளிலும் எத்தனை கையறு நிலையிலும் நமக்கு ஒரு தேர்வு இருக்கிறது. அந்தத்
தேர்வின் விளைவுகளும் நமதே. சாராம்சம் என்று எதுவும் இல்லை. இருத்தல் அனைத்து
சாராம்சங்களுக்கும் முந்தையது. இதுதான் இருத்தலியம்.
Bad Girl திரைப்படத்தில் அந்தப்
பெண் பதின் வயதில் ஒருவன் மீது ஆர்வம் கொள்கிறாள். பின்னர் கல்லூரியில் ஒருவனை
தீவிரமாக காதலித்து ஏமாற்றப்படுகிறாள்.அல்லது ஏமாற்றப்படுவதாக
உணர்கிறாள்.அதிலிருந்து மீண்டு வேறொரு உறவில் சில காலம் இருந்து அதிலும்
கசப்புற்று தனித்து வாழ்கிறாள். இதை ஐம்பதுகளின் பெண் செய்திருக்க முடியாது.
இத்தகைய வாழ்வை நிகழ்த்த அவளுக்கு சுதந்திரம் தேவைப்படுகிறது. சுதந்திரம் என்பது
சாதிப்பதற்கு மட்டுமானது அல்ல, சிதைவதற்கும் தான். அது
பெண்ணுக்கும் உண்டு.ஆண் ஒருவன் பெண்ணை நம்பி ஏமாந்து தேவதாஸாக இருக்க முடியும்
என்றால் அது குறித்து நமக்கு பச்சாதாபம் ஏற்படலாம் என்றால் காலம் தோறும் அதைக்
குறித்து கதைகளும் , கட்டுரைகளும் , நாவல்களும்
படைக்கலாம் என்றால் பெண் பாத்திரம் மீது அத்தகைய கதைகளை உருவாக்கலாம்.
தி.ஜானகிராமனின் மரப்பசு அம்மணி என்ற
பெண்ணைப் பற்றியது. அதில் அம்மணி கோபாலி என்ற பாடகரை சுரண்டி வாழ்வாள். பின்னர்
அதுவும் சலித்துப் போய் தன் சொல்லுக்கு கட்டுப்படும் ஒருவனை திருமணம் செய்து
கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து சேர்வாள். இந்தத் திரைப்படத்தில் வரும் பெண்
யாரையும் சுரண்டுவதில்லை. குழப்பத்துடன் தன் வாழ்வை எதிர்கொள்கிறாள். அதற்கான
சுதந்திரம் அவளுக்கு சாத்தியமாகியிருக்கிறது. Bildungsroman வகையிலான கதை. நல்ல திரைப்படம்.மரப்பசுவை விட நல்ல ஆக்கம்.
No comments:
Post a Comment