இலக்கியமும் லெளகீகமும்


பாலசுப்ரமணியம் முத்துசாமி எழுத்தாளர்கள் நல்ல வேலையிலிருந்து கொண்டு தங்கள் எழுத்துப் பணியைத் தொடர வேண்டும் என்று தன் பதிவு ஒன்றில் கூறியிருக்கிறார். அவர் இதை நல்ல நோக்கத்தோடு தான் சொல்லியிருக்கிறார்.ஆனால் இலக்கியம் என்பது அடிப்படையில் ஒரு முரணிலிருந்து தோன்றவது.சமூக , பொருளாதார, அரசியல் , உயிரியல் முரண்கள் தான் ஒருவனை எழுத வைக்கும். The Strange case of Billy Biswas என்ற நாவல் அருண் ஜோஷி என்பவரால் எழுதப்பட்டது. அது சிறந்த இலக்கிய ஆக்கம்.அதை எழுதியவர் ஒரு நிறுவனத்தை நிர்வகித்தவர்.செல்வந்தர்.அந்த நாவலே நீதிபதிகள், அரசு உயரதிகாரிகளின் உலகிலிருந்து பிறழ்ந்து போகும் பில்லி பிஸ்வாஸை பற்றியது தான். அவரில் உள்ள முரண் தான் அந்தக் கதையை எழுத வைக்கிறது. அந்த அக சமநிலையின்மை தான் தத்துவமாகவும் , இலக்கியமாகவும் பரிணமிக்கிறது.

ஓர் இலக்கிய ஆக்கத்தை உருவாக்குபவனின் அக உலகமும் அவனது அன்றாட உலகமும் வெவ்வேறு தளங்களில் இருக்கின்றன.அவன் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு ஓரே நாளில் சென்று வருவது ஒரு உடலை கோட்ஸ்டாண்டில் மாட்டிவிட்டு மற்றொன்றை சூட்டிக்கொள்வது போலத்தான்.அது கடினம்.அந்தக் கடினமான காரியத்தை செய்து தான் பலரும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.கார்ல் யுங் ஒரு கலைஞனின் அகப் போராட்டங்கள் பற்றிய நல்ல கட்டுரையை எழுதியிருக்கிறார். அவன் ஒரு சமூக மனிதனாக இருக்கும் அதே நேரத்தில் ஓர் எழுத்தாளனாகவும் இருப்பதின் உள்ளார்ந்த தவிப்பை, பகுதிகளாக துண்டாடப்படுதலை அவர் அதில் சொல்லியிருப்பார். 

ஜி.நாகராஜனுக்கு இருந்த திறன்களுக்கு அவர் பெரும் அரசியல் தலைவர், பத்திரிக்கையாளர் , கல்லூரித் தாளாளர் என்று பல்வேறு தளங்களுக்கு சென்றிருக்க முடியும்.ஆனால் அது சாத்தியமாகவில்லை.ஓர் எழுத்தாளன் தன் சதைத் துண்டின் துணைக்கொண்டு தான் எழுத முடியும். தீமையை தரிசிக்காத எவனும் எழுத்தாளனாக முடியாது.

அதே நேரத்தில் கலைகள் மனிதனை உய்விக்கும் , மெய்விக்கும் என்று எல்லாம் சொல்ல இயலுமா என்று தெரியவில்லை.அதை மக்கள் கொண்டாட  வேண்டும் , போற்ற வேண்டும் என்றெல்லாம் எண்ண இயலாது. வரலாற்றில் கலைஞர்கள் எப்போதும் வணிகர்கள் போல செல்வந்தராக இருக்கவில்லை.அவர்களுக்கு புரவலர்கள் இருந்திருக்கலாம்.இன்று இல்லை.இரண்டாம் உலகப் போரின் போது போலந்தின் ஆளுநராக இருந்தவர் ஹான்ஸ் ப்ராங்க்.அப்போது அங்கே அவர் தலைமையில் லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டனர். அவர் இசை மீது பித்து கொண்டிருந்தார். அவரே இசைக் கருவிகளை வாசிக்ககூடியவராகவும் இருந்தார். சிறந்த ஓவியங்களை சேகரித்திருக்கிறார்.அதனால் மனிதாபிமானத்திற்கும் கலைக்கும் தொடர்பில்லை. 

இலக்கியம் மதிப்பீடுகளை , விழுமியங்களை உருவாக்கும் சித்தாந்த ஏடு அல்ல.அது அடிப்படையில் ஓர் ஆவணம்.ஆனால் செய்தித்தாள் ஆவணம் அல்ல.ஒரு செயலின் மீது மக்களிடமிருக்கும் தாக்கத்தை குறைக்க வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியது ஒன்று தான்.அதை புள்ளி விபரங்களாக மாற்ற வேண்டும்.கடந்த பத்து வருடங்களில் ஐம்பது ரயில் விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. இரண்டாயிரம் மக்கள் இறந்திருக்கிறாரகள் என்ற புள்ளிவிபரம் எந்த விளைவையும் உருவாக்காது. அதிகாரிகளுக்கு திட்டங்கள் தீட்ட இவை உதவியாக இருக்கும். ஆனால் வாசிப்பவர் இதை அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மறந்து போய்விடுவார். 

இலக்கியம் அந்த புள்ளியியலின் மறு பக்கத்தில் நிகழ்வது.கொரோனா காலத்தில் நிகழ்நத எத்தனையோ இன்னல்களை அவலங்களை செய்திக் கட்டுரைகள் முன்னரே பேசியிருக்கின்றன.ஆனால் Homebound திரைப்படம் அதை நிகழ்த்துகிறது. அந்த நிகழ்த்துதல் ஓர் அக சமநிலையின்மையை பார்வையாளரிடம் ஏற்படுத்துகிறது. இந்தப் படத்தின் இயக்குனர் தன் வாழ்வின் சாயலிலிருந்த சந்தன் கதாபாத்திரத்தை உருவாக்கியிருப்பதை சொல்லியிருக்கிறார்.எந்த நல்ல ஆக்கத்திலும் அந்தக் கலைஞனின் குருதி படிந்தே இருக்கும்.முழு நேர எழுத்தாளனாக இருக்க வேண்டும் என்பது முழுமையாக அந்த சிருஷ்டியில் திளைத்திருப்பதற்கான அவா.அது சாத்தியமில்லாத போது புலம்பலாம்.தவறில்லை.

 


No comments: