பொருளாதார நிபுணர் ஹா-ஜூன் சாங்கின் (Haa-Joon Chang) நேர்காணல் சமீபத்திய பிரண்ட்லைன்
இதழில் வந்திருக்கிறது. இது போன்ற உரையாடல்களில் பேட்டி எடுப்பவருக்கு தன்
கேள்விகளை சரியாக தொகுத்துக் கொள்ளத் தெரிந்திருந்தால் , அதிலிருந்து
விலகாமல் இருக்க முடிந்தால் நேர்காணல்களே கட்டுரை போல திரண்டு வரும். ரோஹித் இனானி
என்பவர் பேட்டி கண்டிருக்கிறார். நல்ல கேள்விகள்.சிறந்த பதில்கள்.
நேர்காணலின் முக்கிய நோக்கம்
இந்தியாவின் உற்பத்தித் துறை பற்றியது. ஹா-ஜூன் சாங் தென் கொரியாவுடன் ஒப்பிட்டு
இந்தியா தொழிற்துறையில் எத்தனை பின்தங்கியிருக்கிறது என்று கூறுகிறார்.
இந்தியாவில் தொழில் மயமே நிகழவில்லை என்கிறார். ஏன் இந்திய மக்களுக்கு தேவையான ஷூக்கள், ஜீன்ஸூகள் போன்ற அடிப்படை பண்டங்களை உற்பத்தி
செய்வதில் முனைப்பு காட்டக்கூடாது என்று கேள்வி கேட்கிறார்.ஒரு துறை வளர வேண்டும்
என்றால் அந்தத் துறையில் அந்நிய முதலீட்டை குறைக்க வேண்டும் என்று
வலியுறுத்துகிறார்.தென் கொரியாவில் ஹூண்டாய் நிறுவனம் வளர்ந்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு
சமமாக மாறும் வரை அங்கே அந்த அரசு அதை பாதுகாத்தது என்று சுட்டிக் காட்டுகிறார்.
இந்தியாவில் சேவைத்துறை தான்
வளர்ந்திருக்கிறது. ஆனால் அதில் கூட மெக்கென்சி போன்ற ஒன்று உருவாகவில்லை என்று
சொல்கிறார். உற்பத்தித் துறையின் வளர்ச்சியே தொழில்மயம் என்பது அவரது
வாதம்.இந்தியாவின் மொத்த ஜிடிபியில் பன்னிரெண்டிலிருந்து பதிமூன்று சதவிகிதம் தான்
உற்பத்தித் துறையின் பங்கு என்கிறார்.
இதற்கான முக்கிய காரணம் இந்தயாவின்
பணக்கார சிண்டிகேட்டுகள் தான் என்பது அவரது எண்ணம்.உற்பத்தித் துறை உடனே வளராது.
அதற்கு பல பத்தாண்டுகள் தேவைப்படும். இவர்கள் அதை செய்யத் தயாராக இல்லை.உடனடியாக
பங்குச் சந்தையில் லாபம் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். உற்பத்தித் துறை
வளர முதலீடும் பொறுமையும் தேவைப்படுகிறது. அது இங்கே நிகழவில்லை என்கிறார்.
இப்போதும் தாமதம் இல்லை , தொடங்கலாம் என்று
சொல்கிறார்.
நல்ல நேர்காணல்.