2022

 

இந்த வருடம் பெரும்பாலும் பெங்களூரில் இருந்தேன்.ஒரு மாதம் மட்டும் சென்னையில் தங்கினேன்.இரண்டு வருடங்களுக்குப் பிறகு அலுவலகம் சென்றேன்.பிள்ளைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள்.அவர் பள்ளி முடிந்து வீடு திரும்பும் காட்சி எப்போதும் நெகிழ்ச்சி அடையச் செய்யக்கூடியதாகவே இருக்கிறது.வாழ்க்கை அதன் இயல்புக்கு இந்த வருடத்தில் திரும்பியிருக்கிறது.இது தொடர வேண்டும்.தந்தை அடிக்கடி நினைவுக்கு வருகிறார்.நண்பன் நேதாஜியின் மரணத்தை இன்று வரை என்னால் ஏற்க இயலவில்லை.

கடந்த ஆண்டு சிறுகதைகள் எழுதவில்லை.இந்த வருடம் மூன்று சிறுகதைகள் எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.இரண்டு கதைகள் எழுதியிருக்கிறேன்.முதல் கதை வனம் இணைய இதழில் வெளிவந்தது.இரண்டாவது கதை மணல் வீடு இதழில் வெளியாகும்.வரும் வருடத்தில் நிறைய கதைகளை எழுத வேண்டும்.எழுத முடியும் என்று நினைக்கிறேன்.எப்போதும் ஒரு கதையை எழுதிக்கொண்டிருக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.ஒரு கதையை முடித்தவுடன் அடுத்தக் கதையை தொடங்கி விட வேண்டும்.அதை முடிக்க வெகுகாலம் எடுத்துக்கொள்ளலாம் , ஆனால் தொடங்கி விட வேண்டும்.மனம் அதைச்சுற்றி சிந்தித்துக்கொண்டிருந்தால் போதுமானது.சிறுகதைகளில் சட்டகங்களை வைத்துக்கொள்ளாமல் எழுத வேண்டும்.நாவல் , குறுநாவல் போன்ற வடிவங்கள் பற்றி இப்போதைக்கு எந்தத் திட்டமும் இல்லை.இரண்டாவது சிறுகதைத் தொகுப்பை 2024 அல்லது 2025யில் கொண்டு வருவேன்.அதன் பின் குறுநாவல்கள் எழுத முடியும் என்று நினைக்கிறேன்.

பக்தீன் பற்றி எழுதிய கட்டுரைக்கு நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது.அது ஒரு நல்ல அனுபவம்.நான் இதுவரை எழுதிய வற்றில் பெரிய கட்டுரை அது தான்.இந்த வருடம் அதிகம் வாசிக்கவில்லை என்று படித்த நூல் பட்டியலை பார்க்கும் போது அறிய முடிகிறது.வாசித்தவரையில் கீதா ராமசாமியின் Land Guns Caste Woman நூலும் ஆனந்த் டெல்டும்டேவின் Republic of Caste நூலும் முக்கியமானவையாக இருந்தன.கீதா ராமாசியின் நூல் பற்றி எழுதிய கட்டுரை தளம் இதழில் வெளியாகி உள்ளது.வாசிப்பிலும் எழுத்திலும் ஒரு தொடர்ச்சியை வைத்துக்கொள்ள வேண்டும்.

Mahatma Gandhi in Tamil தொகை நூலில் என் மாற்று பொருளாதாரத்தின் குறியீடு கட்டுரை இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சி அளித்தது.ஆனால் நான் இன்று காந்தியிடமிருந்து சற்று விலகிவிட்டேன் என்றும் தோன்றுகிறது.இந்தியச் சமூகம் பற்றி அம்பேத்கரின் பார்வை எனக்கு மிக அணுக்கமானதாக இருக்கிறது.தஸ்தாயெவ்ஸ்கி பற்றிய புத்தகத்தை 2023 அல்லது 2024யில் கொண்டு வரலாம் என்று நினைக்கிறேன்.அவருடைய பெரும்பாலான முக்கிய நாவல்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதிவிட்டேன்.பக்தீனின் பார்வையையும் எழுதிவிட்டேன்.இன்னும் சில நாவல்களைப் பற்றியும் சரிதைப்பற்றியும் எழுதிச் சேர்க்க வேண்டும்.இந்த வருடம் அவரது நூல்கள் பற்றி மூன்று கட்டுரைகள் எழுதுவேன்.

வேலையில் நான் விரும்பும் திசை நோக்கி பயணிக்க வேண்டும்.அதற்கான சாத்தியங்களை நான் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.இந்த வருடம் அது நிகழ வேண்டும்.பெங்களூரில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.இந்த வருடத்தில் அது சாத்தியமாகலாம்.அப்படி நிகழ்ந்தால் மகிழ்ச்சி.உடலைப் பேண வேண்டும் என்ற அக்கறை அதிகரித்திருக்கிறது.அதற்கான வழிகளையும் கண்டடைந்திருக்கிறேன்.இந்த வருடத்தில் அவற்றை நிகழ்த்துவேன்.என் ஆளுமைச் சிக்கல்களிலிருந்து வெகுவாக விலகி வந்து விட்டேன் என்பதையும் இன்னும் விலக வேண்டியவற்றைப் பற்றிய தெளிவையும் கொண்டிருக்கிறேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பெங்களூரில் தமிழ் எழுத்தாளர்கள் சந்தித்துக் கொள்ளக்கூடிய ஒரு அமைப்பு இருந்தால் நன்றாக இருக்கும்.அதைக் குறித்து ஏதேனும் செய்யமுடியுமா என்று இந்த வருடத்தில் பார்க்க வேண்டும்.திரைப்படங்கள் பார்க்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது.திரைப்படங்களை பார்க்க பிடிக்கவில்லை.தொடர்ந்து என்னையே கட்டாயப்படுத்திக்கொண்டு பார்ப்பதா அல்லது விட்டுவிடுவதா என்று தெரியவில்லை.

தஸ்தாயெவ்ஸ்கி  வாழ்க்கை ஒரு கொடை,வாழ்க்கை என்பது மகிழ்ச்சி என்று சொல்கிறார்.நமக்கு செய்ய வேண்டிய காரியங்கள் இருக்கும்.அது எப்போதும் இருக்கும்.போதாமைகள் இருக்கும்.ஆனால் அடைய வேண்டிய இலக்குகளை நோக்கி பதற்றமின்றி பொறுமையுடன் மகிழ்ச்சியுடன் பயணிக்க வேண்டும்.தர்மாணந்த் கோஸாம்பி மன நிறைவுடன் அறிவுக்கான பயணத்தை மேற்கொள்ளுங்கள் என்கிறார்.நாம் மேற்கொள்வோம்.அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.




No comments: