மம்தா பானர்ஜி

 

மம்தா பானர்ஜி தொடர்ந்து 34 வருடங்கள் மேற்கு வங்கத்தில் ஆட்சி புரிந்த இடதுசாரி கூட்டணியை முறியடித்து ஆட்சிக்கு வந்தார். மேற்கு வங்கம் தொழில் துறையில் மிகவும் பின் தங்கி இருந்ததால் அதற்கான தீர்வாக டாட்டா மோட்டர்ஸ் நிறுவனத்தின் நானோ கார் உற்பத்தியை சிங்கூரில் கொண்டு வர புத்ததேவ் பட்டாச்சார்யா முயன்றார்.நந்திகிராமில் ஒரு தொழிற்பேட்டையை உருவாக்க விரும்பினார்.இரண்டுக்கும் மிகப்பெரிய எதிர்பியக்கம் நடத்தினார் மம்தா பானர்ஜி. நானோ கார் உற்பத்தி குஜராத்துக்கு சென்றது. நந்திகிராம் தொழிற்பேட்டைத் திட்டம் கைவிடப்பட்டது.அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி தோல்வி அடைந்தது.இடதுசாரிகளுக்கு அது மிகப்பெரிய வீழ்ச்சி.அதன் பின் வங்கத்தில் அவர்கள் இன்று வரை மீளவில்லை. இனி அதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவில்லை. அவர்கள் இன்று கேரளத்தில் மட்டும் இருக்கிறார்கள்.அதே நேரத்தில் மிகச் சிறிய அளவில் என்றாலும் தேசம் முழுவதும் இடதுசாரிகளுக்கு என்று ஒரு வாக்கு வங்கி உள்ளது.பிஹார், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அவர்கள் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுகிறார்கள்.வங்கத்தை மம்தா வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றதாகவும் தெரியவில்லை.ஆனால் அவரால் வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சியை கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி அடைய முடியாமல் தடுக்க முடிந்தது. அது அவருக்கு தேசிய அளவில் கவனத்தை அளித்திருக்கிறது.தேசிய கதையாடலுக்கு எதிரான வங்கத்து கதையாடலை அவரால் உருவாக்க முடிந்தது அவரது வெற்றிக்கு ஒரு காரணம்.
 
பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவதாக இருந்தது.அவரது கோரிக்கைகளை காங்கிரஸால் ஏற்க இயலவில்லை. கன்னையா குமார் போன்றோர் காங்கிரஸில் இணைவதற்கான எண்ணத்தை அவர் தான் உருவாக்கியிருப்பார் என்று நினைக்கிறேன்.இப்போது அவர் திரினாமூல் காங்கிரஸில் இணைந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பணிபுரியத் தொடங்கி உள்ளார். கோவா, அஸாம் , திரிபுரா , மேகாலயா என்று திரினாமூல் காங்கிரஸில் அணி சேர்ப்பு நிகழ்வு நடந்து வருகிறது.மேகாலயாவின் முன்னாள் முதலமைச்சர் தான் பிரசாத் கிஷோருடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியதற்கு பிறகே திரினாமூல் காங்கிரஸில் இணைந்ததாக சொல்லியிருக்கிறார். மறுபுறம் சரத்பவார் , மம்தா, கெஜ்ரிவால் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. கூட்டணிக்கு மம்தா தலைமை ஏற்கக்கூடும்.ஆம் ஆத்மி இப்போதைக்கு டெல்லியிலும் , பஞ்சாபிலும் வலுவான கட்சியாக உள்ளது.தேசியவாத காங்கிரஸ் மஹாரஷ்டிராவில் கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ளது.
 
ஆனால் கர்நாடகம்,தெலுங்கானா, கேரளம், தமிழ்நாடு ஆகிய தென்னிந்திய மாநிலங்களிலும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திலும் காங்கிரஸ் முக்கியக் கட்சியாக உள்ளது.அதே போல மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் இப்போதும் பெரும் வாக்கு வங்கி உள்ள கட்சிதான். உத்திரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு அடுத்த நிலையில் சமாஜ்வாதி கட்சி உள்ளது.பிஹாரில் ஐக்கிய ஜனதா தளமும் , ராஷ்டிரிய ஜனதா தளமும் முக்கிய கட்சிகள்.மேலும் ராம் விலாஸ் பஸ்வானின் மகனும் கட்சி வைத்துள்ளார். இந்தக் கட்சிகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த அணியில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.லாலு பிரசாத் யாதவ் பாரதிய ஜனதாவுக்கு செல்ல வாய்ப்பு குறைவு. காங்கிரஸ் இப்போது வலுவிழந்த கட்சிதான் என்றாலும் அதன் இருப்பு இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ளது.அது இன்னொரு கட்சியின் தலைமையின் கீழ் தன்னை பொருத்திக் கொள்ள துணியாது. ராகுல் காந்தியின் செயல்முறை மாறினால் அல்லது காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைமை வந்தால் காங்கிரஸ் கட்சி மறுமலர்ச்சி அடையும்.ஆனால் எதிர்கட்சிகள் பிரிந்திருந்தால் 2016யில் அதிமுக வெற்றிபெற்றது போல பாரதிய ஜனதா கட்சி 2024லும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. காங்கிரஸ் இல்லாமல் மம்தாவால் பாரதிய ஜனதாவை வெல்வது சாத்தியமில்லை.பிரசாந்த் கிஷோர் நினைத்தாலும் முடியாது. ஒரு வேளை அவர்கள் 2029 தேர்தலுக்காக இப்படியான அமைப்பை உருவாக்க முனையலாம்.இந்த முறை தங்களால் எந்தளவு வெற்றி பெற முடிகிறது என்பதை அவர்கள் சோதித்துப் பார்க்கலாம்.
 
மம்தா பானர்ஜிக்கு சித்தாந்தம் என்று எதுவும் இருப்பதாக தெரியவில்லை.அவர் வெற்றி பெற பெரும் சிரத்தை எடுத்துக்கொள்பவர். மோதி ,அமித் ஷா போல அவரும் கடின உழைப்பாளி. அதைத் தவிர்த்து அவர் வருவதால் கூட்டாட்சி தத்துவம் மாநில சுயாட்சி போன்றவை வலுப்பெற வாய்ப்பு உள்ளது.எழுபத்தியேழில் ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்தது.அப்போது அத்வான ரேடியோ அமைச்சராக இருந்தார்.வாஜ்பாய் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.மொரார்ஜி தேசாய் சில காலமும் சரண் சிங் சில காலமும் பிரதமராக இருந்தார்கள்.இரண்டாவது விடுதலை இயக்கம் என்று அது சொல்லப்படுகிறது.அப்போது ஜெயபிரகாஷ் நாரயணனின் மாணவர்கள் என்ற அரசியலுக்கு வந்தவர்கள் தான் லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், நிதிஷ் குமார் எல்லாம்.மூன்று வருடங்களில் ஆட்சி கலைந்தது.ஆனால் அது காங்கிரஸ் இல்லாத முதல் ஆட்சி. அதற்கு முன்னரே காங்கிரஸ் இரண்டாக உடைந்தது என்பதையும் நாம் இங்கு கணக்கில் கொள்ள வேண்டும்.எண்பத்தொண்பதிலும் தொண்ணூற்றியாறிலும் கூட்டணி ஆட்சி உருவானது.அவை இரண்டுமே இரண்டு வருடங்களே நீடித்தன. இரண்டும் கலைவதற்கு காங்கிரஸ் காரணமாக இருந்தது.
 
அது போன்ற காங்கிரஸ் இல்லாத ஒரு கூட்டணி இப்போது உருவாகி ஆட்சி அமைப்பது அத்தனை எளிதானதாக தெரியவில்லை.பாரதிய ஜனதா கட்சி இன்று வலுவான வாக்கு வங்கி உள்ள மிகப்பெரிய கட்சி.அதை அத்தனை எளிதில் முறியடிப்பது சாத்தியமில்லை.இன்று மோதி அலை என்று ஒன்று இல்லை. வங்கத்தில் தோற்றிருக்கிறார்கள்.பஞ்சாப்பில் அவர்கள் வெல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.உத்திரப்பிரதேசத்தில் அவர்களுக்கு கடினமான போட்டி இருக்கும். உத்திரப்பிரதேசத் தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திசைகாட்டியாக அமையும்.ஆட்டங்கள் பிறழ் ஆட்டங்கள் எதிர் ஆட்டங்கள் என பூமித் தளத்தின் பொழுதுகள் மெல்ல விடிந்தன என்று பகடையாட்டம் நாவலில் யுவன் சந்திரசேகர் எழுதியது போல வருங்காலத்தில் நடக்கவிருக்கும் ஆட்டங்களை நாம் பார்க்கவிருக்கிறோம். ஆனால் எப்படிப்பார்த்தாலும் பாரதிய ஜனதா கட்சி மறுபடியும் ஆட்சிக்கு வராத வகையில் ஆட்டங்கள் இருக்க வேண்டும்.பார்ப்போம்.
 
 

No comments: