பா.இரஞ்சித்

 

பா.இரஞ்சித்தின் திரைப்படங்கள் வெளியாகும் போது அவை குறித்து விமர்சனங்களும் பாராட்டுகளும் வந்தபடியே இருக்கின்றன. கபாலி வந்த போது தினமணியில் அதைக்குறித்த விமர்சனக் கட்டுரை வந்திருந்தது.பொதுவாக தினமணியில் திரைப்படங்கள் குறித்து எதுவும் எழுதப்படுவதில்லை. தமிழில் தலித் இலக்கியம் என்ற ஒரு பிரிவு தொண்ணூறுகளுக்குப் பிறகு உருவானதாக பொதுவான ஒரு எண்ணம் உண்டு.திரைப்படங்களில் தலித் சினிமா என்பதன் துவக்கம் பா.இரஞ்சித்திலிருந்து துவங்குவதாக கொள்ளலாம்.சரவணகார்த்திகேயன் தலித் திரைப்படங்கள் என்று ஒரு பட்டியலிட்டு ஒவ்வொன்றையும் தரம் பிரித்திருக்கிறார்.அவற்றில் பாதிக்கு மேல் பா.இரஞ்சித் இயக்கியவை அல்லது அவர் தயாரித்தவை.அசுரன் என்ற படத்தை வெற்றிமாறன் இரஞ்சித்தின் திரைப்படங்களின் வெற்றியை கண்டே எடுத்தார்.இன்று இத்தகைய திரைப்படங்கள் வணிகரீதியாகவும் பெறும் வெற்றி பெறுகின்றன.
 
பாலா, மிஷ்கின் போன்ற இயக்குனர்கள் தனி மனிதனின் அகநெருக்கடிகளை முன்வைத்தே தங்கள் திரைப்படங்களை இயக்கினர்.பாலாவின் பரதேசி விரிந்த தளத்தில் ஓடுக்கப்பட்ட மக்களுக்கான படம் என்று கொள்ள முடியும்.ஆனால் அந்தப் படத்தின் அமைப்பு தனிமனிதனின் பாடுகளை முதன்மையாக கொண்டது.இருத்தல் சாராம்சத்திற்கு முந்தையது என்று இருத்தலியத்தை தொகுக்க முடியும். தனிமனிதனின் அகம் நிர்ணயிக்க இயலாத ஒன்றாகவே இருக்கிறது என்று கூறுகிறது இருத்தலியம்.டி.ஆர்.நாகராஜ் தன் எரியும் பாதம் புத்தகத்தில் அம்பேத்கர் மற்றும் காந்தியின் அணுகுமறையை பற்றி விரிவாக எழுதுகிறார்.காந்தியின் பார்வை தனிமனிதனை அலகாக கொண்டது.அம்பேத்கர் சாதியப் பிரச்சனையை இந்து மதம் என்ற அமைப்பின் சிக்கலாகவே பார்க்கிறார்.தனிமனிதர்களின் சிக்கலாக அல்ல.தனிமனிதன் மாறினால் சாதியச் சிக்கல்களை தீர்க்கலாம் என்றார் காந்தி.அமைப்பை மாற்றினாலே இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படும் என்றார் அம்பேத்கர். கனிவை அல்ல சுய மரியாதையை கோருவதே அம்பேத்கரின் பாதை. அமைப்பு வருகிற போது தனி மனிதர்கள் அங்கு வருவதில்லை. எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி அமைப்பியல் பிரதியும் கூட. வேம்பலை என்ற ஊரை பிரதிநித்துவப்படுத்துபவனே நாகு. அதைத் தவிர்த்து அவன் ஒன்றுமில்லை. அவனின் துயரங்கள் வேம்பலையின் துயரங்கள் , அவனது பாடுகள் வேம்பலையின் பாடுகள். 
 
பா.இரஞ்சித்தின் திரைப்படங்களையும் நாம் அப்படி பார்க்க முடியும்.அவை முன்வைக்கும் தனிமனிதர்கள் அந்த அமைப்பை பிரதிநித்துவப்படுத்துகிறார்கள். சார்பட்டா பரம்பரையில் வரும் கபிலன் ஹிரோ அல்ல. எளிமையான சூழலிலிருந்து வருபவன் தன்னை தகவமைத்துக் கொண்டு முன்னேறுவதற்கு எவை தடையாக இருக்கின்றன.குடி ஒரு முக்கியச் சிக்கல்.தன் சூழலால் அவன் அடையும் அழற்சி.குடியும் அழற்சியும் மேலும் கீழ்மை நோக்கித் தள்ளுகிறது.அவனுக்குத் தன்னை எப்படி மீட்டுக்கொள்வது என்றே தெரியவில்லை.
 
இவை பொதுவாக மிகுந்த போராட்டங்களுக்கு பிறகு தங்கள் லட்சியங்களை நோக்கி பயணிக்கும் எவருக்கும் ஏற்படக்கூடிய தடுமாற்றங்கள் என்றும் பார்க்க முடியும்.பா.இரஞ்சித் சோழர்கள் குறித்து பேசியதற்காக பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.அவர் திசை திரும்பியிருந்தால் அவரால் அதன் பின் சார்பட்டா பரம்பரையை எடுத்திருக்க இயலாது.இந்த அமைப்பு உங்களின் பாதையை தீர்மானிக்கிறது. உங்களை நோக்கி தன் மாயக்கரங்களை வீசிக்கொண்டே இருக்கிறது.இங்கே துவங்குவது ஒரு பகடையாட்டம்.
 
நீங்கள் மைய அமைப்பு உருவாக்கும் கதையாடல்களுக்கும் கலாச்சார வெளிகளுக்கும் மாற்றான ஒரு கதையாடலை ,வெளியை உருவாக்க வேண்டிய பகடையாட்டம்.அம்பேத்கர் பெளத்தத்தை தழுவினார்.அமைப்பின் பிரச்சனையை மற்றொரு அமைப்பின் வழியாகவே எதிர்கொள்ள முடியும். ஒரு சட்டகத்தில் ஒரு பெருளின் அர்த்தம் மற்றொன்றால் தான் அர்த்தம் கொள்கிறது.நீங்கள் உயரமானவர் குண்டானவர் சான்றோர் என்று அடையும் அடையாளங்கள் அந்த சட்டகத்தாலேயே அர்த்தம் கொள்கின்றன. ஒரு வேற்றுகிரவாசிக்கு இவை என்ன அர்த்தம் கொடுக்கப் போகிறது.அவனுக்கு நாம் எல்லோருமே பிறர் தான்.பூமிவாசிகள்.அவ்வளவுதான். அது மேலும் பெரிய சட்டகம்.
 
ஓடுக்கப்பட்டவர்கள் குறித்த ஒரு மாற்று கதையாடலை, பண்பாட்டு வெளியை பா.இரஞ்சித் உருவாக்கி வருகிறார். நீலம் என்ற இலக்கியப் பத்திரிக்கையைத் துவங்கியிருக்கிறார்.திரைப்படங்களை , ஆவணப்படங்களை தயாரிக்கிறார். அவர் கடந்த சில ஆண்டுகளாக நடத்திவரும் கலாச்சார நிகழ்ச்சிகள் முக்கியமானவை. 
 
பெருநகரங்கள் கிராமத்து திருவிழாக்கள் போன்ற சில கலாச்சார வெளிகளை கொண்டிருக்க வேண்டும்.இசை, நடனம், நாடகம், சினிமா, ஓவியம் என்று பல்வேறு மாற்று கதையாடல்களை உள்ளடக்கிய பண்பாட்டு நிகழ்வுகள் அங்கே அரங்கேற வேண்டும். அவை மக்கள் ஓன்று கூடி தங்கள் தனிமனித இருப்பை தற்காலிகமாக மறக்கும் கொண்டாட்டங்களாகவும் இருக்க வேண்டும்.அவை மைய பண்பாட்டு வெளியில் மாற்றங்களை ஏற்படுத்தும்.உரையாடல்களை உருவாக்கும்.அமைப்பில் சலனங்கள் சாத்தியப்படும்.
 
பா.இரஞ்சித்தின் ஆக்கங்கள் அனைத்தும் இத்தகைய சலனங்களை ஏற்படுத்தும் முயற்சிகளாவே இருக்கின்றன. அவை நல்ல விளைவுகளையே உருவாக்கும் என்று நான் எண்ணுகிறேன்.என் தலைமுறையின் சினிமா இயக்குனர்களில் பா.இரஞ்சித் முக்கியமானவர்.அவரை பலரும் பல வகைகளில் விமர்சித்தபடியே இருக்கிறார்கள்.அதில் பலருக்கு ஒரு ஷாட்டை உருவாக்கும் கற்பனை கூட இல்லை என்பது தான் அதில் உள்ள வேடிக்கையான விஷயம்.
 

No comments: