தந்தை

 

தந்தை இறந்துவிட்டார்.இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன.பல வருடங்களாக பார்க்கின்ஸ்ன் நோயால் அவதிப்பட்டு வந்தார்.மரணம் அவருக்கு விடுதலையாக அமைந்தது என்று தோன்றுகிறது.என் தந்தை இறந்து போனது சில நேரங்களில் என்னை தலையற்ற முண்டமாக உணர வைக்கிறது.எந்த வயதனாலும் தந்தை தந்தை தான்.குறிஞ்சிப்பாடி அருகே கஞ்சமநாதன்பேட்டை என்ற ஊரில் வரதராஜூலு - பத்மாவதி தம்பதியினருக்கு  1945யில் முதல் மகனாக பிறந்தார் சடகோபன்.என் பாட்டனார் வரதராஜூலு பதினாறு ஏக்கர் நிலம் வைத்திருந்தார்.அவரது உறவினர் - அத்தை மகன் - அவரை இருக்கும் நிலத்தை விற்று வில்லியனூர் சென்றால் புது நிலம் வாங்கி இன்னும் செழிப்பாக இருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.விற்ற நிலத்தின் காசை வாங்கிக்கொண்டு அத்தை மகன் வித்தை காட்டிவிட்டார்.கையில் காசு இல்லை, நிலம் இல்லை, குழந்தைகள். யாரோ உறங்குவதற்கு வில்லியனூரில் திண்ணையை கொடுத்திருக்கிறார்கள்.அங்கே என் பாட்டனார் விவசாயக் கூலியாக வேலை செய்திருக்கிறார்.அங்கே ஆரம்பப் பள்ளிக்கு சென்றார் என் தந்தை. பின்னர் புதுப்பேட்டை என்ற பண்ருட்டிக்கு அருகே இருக்கும் ஊருக்கு அவர் உயர்நிலைப் பள்ளி படிக்கும் போது வந்திருக்கிறார்கள்.அது சிறுநகரம்.அங்கு என் தாத்தா சில கூலி வேலைகளுக்கு சென்றிருக்கிறார்.

அங்கே தான் குடும்பம் ஓரளவு நிலைபெற்றிருக்கிறது.என் தந்தை புகுமுக வகுப்பு முடித்தப்பின்னர் கடலூர் அரசுக் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் கற்றார்.பாட்டனார் என் தந்தையும் சிற்றப்பாவும் மைனராக இருந்த காலத்தில் விற்ற நிலத்தை மீட்பதற்காக மைனர் சூட் வழக்கு தொடுத்தார்கள்.அப்போது என் தந்தை வழக்கறிஞர் ஒருவரை அடிக்கடி சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.அவர் என் தந்தையை இந்த புக்க எடு,அந்த புக்க எடு என்று ஏதோ சொல்லியபடி இருந்திருக்கிறார்.பிராமணர்.ஏதோ ஒரு வகையில் வக்கீல் தொழில் மீது என் தந்தைக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

பின்னர் அந்த வழக்கில் வெற்றி பெற்று நிலம் திரும்ப கிடைத்திருக்கிறது.அதிலிருந்து பெற்ற பணத்தைக் கொண்டு ஐஸ் பேக்ட்டரி ஒன்றை பண்ருட்டியில் துவங்கினார்கள். பி.எஸ்.சி முடித்த என் தந்தை அதன் பின் வேலைக்கு செல்லவில்லை.அறுபதுகளின் இறுதியில் அவர் பி.எஸ்.சி முடித்துவிட்டார்.மிக எளிதில் வேலை கிடைத்திருக்கும்.ஆனால் செல்லவில்லை.வழக்கறிஞராக வேண்டும் என்ற எண்ணம் வேறூன்றிவிட்டது.என் சித்தப்பா, என் பாட்டனார், குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து என் தந்தையை வழக்கறிஞருக்கு படிக்க வைத்தார்கள்.பல பருக்கைகள் சேர்ந்து ஒரு கவளம் சோற்று உருண்டையை உருட்டி என் தந்தைக்கு அளித்திருக்கிறார்கள். சென்னையில் அவருக்கு சட்டம் படிக்க இடம் கிடைக்கவில்லை.பின்னர் பாண்டிச்சேரியில் அவருக்கு சீட் கிடைத்தது.அங்கு படித்தார்.பழைய காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.காமராஜரின் பக்தர்.காங்கிரஸ் இரண்டாக உடைந்ததை அவரால் ஏற்கவே முடியவில்லை.இந்திரா காந்தி காமராஜரை கைது செய்ய முயன்றதை அவரால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை.சரண்சிங் இந்திரா காந்தியை கைது செய்த போது சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தவர் அதை மிகவும் மகிழ்ச்சியோடு கொண்டாடியிருக்கிறார்.கல்லூரிக்கு வேஷ்டி அணிந்துதான் சென்றிருக்கிறார்.

சட்டம் படித்து பின்னர் விழுப்புரத்தில் சில காலம் வழக்கறிஞராக இருந்திருக்கிறார்.அப்போது தான் ஒரு மூத்த வழக்கறிஞர் "நான் வாழவைப்பேன்" என்ற படம் வந்திருக்கிறது , அதில் ரஜினி என்று ஒருவன் நடித்திருக்கிறான் , போய் பார் என்று பத்து ரூபாய் கொடுத்திருக்கிறார்.காமராஜரின் மறைவுக்கு பின்னர் அரசியிலில் யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளாமல் இருந்த என் தந்தை அப்படியாக ரஜினிகாந்தின் ரசிகரனார்.அவரால் ஏனோ திராவிட இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியவில்லை.இந்திரா காங்கிரஸையும் ஏற்க முடியவில்லை.ஜனதா கட்சியில் கொஞ்ச காலம் இருந்திருக்கிறார்.கடலூர் மாவட்ட அளவில் ஏதோ பொறுப்பில் இருந்தார்.பின்னர் அதிலிருந்தும் விலகவிட்டார்.அதன் பின் அவர் அரசியில் கட்சி எதிலும் பங்கு கொள்ளவில்லை.வைகோ மீது அவருக்கு சற்று ஈடுபாடு இருந்தது.

பண்ருட்டியில் இருந்த காலத்தில் என் தந்தைக்கும் சிற்றப்பாவிற்கும் நிறைய மன கசப்பு ஏற்பட்டது.அப்போது என் தந்தைக்கு திருமணமும் நடந்திருந்தது.அதன் பின்னர் என் தந்தை நெய்வேலியில் புதிதாக தொடங்கப்பட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கலாம் என்று முடிவு செய்து மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு 1983யில் நெய்வேலி வந்து சேர்ந்தார்.பிறந்தததிலிருந்து ஒரு சோப் வாங்கக்கூட கடைக்கு போகதவர் என் தந்தை.அவரை சுற்றியிருந்த குடும்பத்தினர் அவருக்காக அனைத்தையும் செய்தார்கள்.பின்னர் நெய்வேலியில் அடுத்த இருப்பத்தியைந்து வருடங்கள் வாழ்ந்தார். என் சித்தப்பா என் தந்தையை படிக்க வைத்தார் என்பதால் அடிக்கடி தொழில் தேவை என்று சொல்லி பணம் வாங்கிக் கொண்டார்.

என் தந்தைக்கு பணம் சேர்த்து சொத்து சம்பாத்திக்க வேண்டும் என்ற தெளிவு இல்லை.வரும் காசை வைத்து வாழ்ந்தார்.பிள்ளைகளை படிக்க வைத்தார்.மற்றபடி உலகம் அறியாதவர்.மனிதர்கள் மனக்கணக்குகளை உணராதவர்.தன்னை வாழ்க்கையில் உயர்த்திக்கொள்ள சாத்தியப்பட்ட பல ஏணிகளை அவராகவே தள்ளிவிட்டார்.உதறினார்.தனக்கென்று சில சட்டதிட்டங்களை வகுத்துக்கொண்டார்.ஆக்ஸிடென்ட் கேஸ்களை எடுக்க மாட்டேன் என்பது அப்படியான ஒரு வரையறை.இப்படி பல வரையறைகளை வைத்துக்கொண்டு சம்பாதிப்பதற்கான வழிகளையும் தடுத்துக்கொண்டார்.ஊரில் இருக்கும் பணக்காரர்களூடன் நல்ல இணக்கமான உறவை வைத்துக்கொள்வதை பற்றி கவலையற்று இருந்தார்.தொண்ணூறுகளில் நோட்டரி பப்ளிக் ஆனார்.அதன் பின் தன்னை மேலும் சுருக்கிக்கொண்டார்.

2007யில் நானும் என் அண்ணணும் சென்னையில் வேலை வாங்கிய பின்னர் அவரும் வேறு வழியில்லாமல் ஒரு வருடம் கழித்து சென்னை வந்தார்.சென்னை அவருக்கு பிடிக்கவில்லை.நண்பர்களும் இல்லை.இங்கே உயர் நீதிமன்றம் , எழும்பூர் நீதிமன்றம் எல்லாம் சென்று பார்த்தார்.அவருக்கு எதுவும் சரியாகவரவில்லை.பின்னர் சைதை நீதிமன்றத்தில் சில வருடங்கள் சென்றார்.அவருக்கு வருமானம் என்று எதுவும் வரவில்லை என்றாலும் அவருக்கு அங்கு சில அறிமுகங்கள் கிடைத்தன.அவர் தன் கூச்சம், வெட்கம் போன்ற இறுக்கங்களிலிருந்து வெளியே வந்து ஒரு நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கியிருந்தால் இன்னும் சிறந்த வழக்கறிஞராக தன் வாழ்க்கையில் இருந்திருப்பார்.என் தந்தையை விட சட்டம் குறைவாக தெரிந்திருந்த வழக்கறிஞர்கள் நிறைய வருமானம் ஈட்டுவதை பார்த்திருக்கிறேன்.

நல்ல மனிதர்.Well Cultured Man.ஒரு முறை நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது அவரிடம் "இந்த வாழ்க்கை பற்றி என்ன நினைக்கிறாய் நைனா" என்று கேட்டேன்.அவர் "எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்" என்று சொன்னார்.நான் கேட்டேன், அப்படின்னா நீ ஏமாந்துகீனு இருக்கியா நைனா .அவர் சிரித்தார்.மிகவும் அழுத்தமானவர்.வாழ்வில் பல்வேறு அவமானங்களை சந்தித்தவர்.மிகவும் தனித்துவிடப்பட்டவர்.சொந்தங்கள்,நட்பு என்று எந்த ஆதரவும் அவருக்கு வாழ்வின் இரண்டாம் பாகத்தில் இல்லை.அவர் அடைந்த பல அவமானங்களை அவர் ஒரு போதும் சொன்னதில்லை.அவர் வாழ்வின் வறுமை நிரம்பிய காலத்தை பற்றிக்கூட மிகச்சிறிய கீற்றுக்களைத்தான் அவர் சொல்லியிருக்கிறார்.தேர்வுக்கு செல்லும் நாட்களில் கூட வீட்டில் சாப்பிட ஒன்றும் இருந்ததில்லை என்பதை சொல்லியிருக்கிறார்.

நான் என் வாழ்க்கையில் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் பல முறை வேலையை ராஜினாமா செய்துவிட்டு இருந்திருக்கிறேன்.அவர் ஒரு முறை கூட அறிவுரை வழங்கியதில்லை.நான் ஒரு முறை இருக்கிற வேலையை விட்டுவிட்டு சட்டம் படிக்க முடிவு செய்த போது கூட அவர் எதுவும் சொல்லவில்லை.பின்னர் எப்போதோ என்னை விட என் பிள்ளைகள் நன்றாக சம்பாதிக்கிறார்கள் என்று மட்டும் ஒரு முறை சொன்னார்.

வாழ்வில் எந்த சுகங்களுக்காகவும் ஏங்கியவர் அல்ல.ஒரு நல்ல காபி குடிக்க விரும்புவார்.நீதிமன்ற வளாகத்திலிருந்த கூரை வைய்ந்திருந்த கடையில் டீயும் வடையும் சாப்பிடுவார்.நெய்வேலி டவுன்ஷீப் மையின் பஸாரிலிருந்த இந்தியன் காபி ஹவுஸில் காபி சாப்பிடுவார்.எங்களையும் அழைத்து செல்வார்.சிவாஜி வரை ரஜினியின் படங்களை தியேட்டரில் சென்று பார்த்தார்.அதன் பின் அவருக்கு ரஜினிகூட பிடிக்காமல் போய்விட்டது.2009யில் பார்க்கின்ஸன் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன.பார்க்கின்ஸனுக்கு மருத்துவத்தில் தீர்வு இல்லை.மாத்திரைகள் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.2021 ஏப்ரல் 21ஆம் தேதி மரணமடைந்தார்.எழுபத்தியைந்து வயது வாழ்க்கை.

பெளத்தத்தில் மறுபிறப்பு குறித்து சொல்கிறார்கள்.திருக்குறளில் கூட 

உறங்குவது போல சாக்காடு உறங்கி

விழிப்பது போல பிறப்பு 

என்று சொல்லப்பட்டிருக்கிறது.அவர் ஒரு வேளை மறுபடியும் பிறப்பதாக இருந்தால் இந்த வாழ்வில் அவர் கொண்ட இன்னல்கள் அற்ற இனிமையான வாழ்வு அவருக்கு சாத்தியப்படட்டும்.மகிழ்ச்சியும் நிறைவுமான வாழ்வை அவர் வாழட்டும்.

அவர் தன் வாழ் நாளில் ஒரு சதுர அடி நிலத்தைக் கூட வாங்கவில்லை.இதுவரை நானும் வாங்கவில்லை.வாடகை வீட்டில்  வாழ்ந்து இறந்து போனார்.அவர் உயிருடன் இருக்கும் போதே என் முதல் சிறுகதைத் தொகுப்பை கொண்டு வந்துவிட வேண்டும் என்று நினைத்தேன்.அதே போல கொண்டு வந்தேன்.அவருக்கு அந்த நூலை சமர்பித்தேன்.அவருக்கு நூலை காட்டினேன்.ஒரு நாள் முறையிட ஒரு கடவுள் என்ற பெயரைப் படித்தார்.பெயர் சர்வோத்தமன் சடகோபன் என்று எழுதப்பட்டிருப்பதை படித்தார்.ஆனால் அவரால் எதையும் தொகுத்துக்கொள்ள இயலவில்லை.இன்னும் ஓரிரு வருடங்களுக்கு முன்னர் என் தொகுப்பை கொண்டு வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.அவருக்கு பெயர்கள் மறந்துவிட்டன.அவர் தன் தந்தை, தாயார் , தம்பி ஆகியோரின் பெயர்களைத்தான் இறுதிக்காலத்தில் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார்.ஒரு முறை அவருக்கு மூளைக்கு பயிற்சியாக இருக்கட்டும் என்று எஸ்.வி.ராமகிருஷண்ன் எழுதிய ஒரு புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொல்லி கட்டுரை ஒன்றை எழுதச் சொன்னேன்.சிறிய பதிவு ஒன்றை எழுதினார்.நன்றாகத்தான் எழுதினார்.2014யில் என்று நினைவு.ஆனால் அவர் அதில் ஆர்வம் காட்டவில்லை.அவருக்கு பெரிதாக வாழ்வில் எதிலும் ஆர்வமில்லை.எப்போதும் ஒரு விலகலுடன் இருப்பார்.உறவுகள் மீது கூட பெரிய ஈடுபாடு இல்லை.பிள்ளைகள் மீது பெரும்பற்றுடன் இருந்தார்.அவருடைய ஒரே பற்று அது மட்டும்தான்.சென்னையை சேர்ந்த என் அம்மாவை 1980யில் திருமணம் செய்து கொண்டார்.

அவரைப்பற்றிய ஒரு சித்திரத்தை பிம்பம் என்ற கதையில் எழுதினேன்.அவரின் தொடர்ச்சியாக என்னைப் பார்த்தேன்.இப்போதும் அப்படியே பார்க்கிறேன்.என் தந்தை இனி நான் எழுதும் எத்தனையோ கதைகளில் வரப்போகிறார்.அவரை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன் என்பதால் அவரைக் குறித்து எழுத எனக்கு நிறைய இருக்கிறது.அவர் தட்டையானவர் இல்லை என்பதால் அவரைப்பற்றி நிறைய எழுத முடியும்.

ஒரு முறை ஒரு வழக்கு சம்பந்தமாக யாருடனோ பேசிக்கொண்டிருக்கையில் கத்தி வெட்டுக்கும் அருவாள் வெட்டுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது , அதை வைத்தே வழக்கில் வெல்லலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.என் தந்தை குறித்தே வேறு ஒரு சித்திரம் அப்போது எனக்கு கிடைத்தது.தன் எல்லைகளை சுருக்கிக் கொண்ட நல்ல மனிதர்.பண்பட்ட மனிதர்.அவருக்கு என் அஞ்சலி.

என் தந்தை 

என் மகன்

என் மகன் 

என் தந்தை

நான் தந்தை

நான் மகன்.



 

2 comments:

Unknown said...

மிகவும் சிறந்த மனிதராக வாழ்ந்து சென்று உள்ளார். அவரை பற்றிய தொகுப்பை இன்னும் சிறப்பாக அமைத்து அவருடைய நினைவை போற்றுவோம்

Balaji Manoharan said...

Miga arumai. Nan ungal thanthi odu pesierukiran. Nalla manithar. Avar josiyam parka enaku oru nabarai parinthuraithar. Nalla panbalar .