நட்பு


ரவி சுப்பரமணியன் இயக்கிய எல்லைகளை கடந்து எழுத்துக்கலைஞன் ஆவணப்படத்தில் ஜெயகாந்தனிடம் கலைஞர் கருணாநிதி பற்றிய ஒரு கேள்விக்கு இந்த குறளை பதிலாக சொல்லியிருப்பார்.

அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.


நாடாமல் உருவான நட்பு என்று தனக்கும் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் இடையிலான நட்பைப் பற்றி சொல்லியிருப்பார்.
அன்பினால் உருவாகும் ஆர்வம், அந்த ஆர்வம் உருவாக்கும் நட்பு.இது அன்புடைமை என்ற அதிகாரத்தில் வருகிறது.கிட்டத்தட்ட இதே பொருளை கொண்ட மற்றொரு குறள் நட்பு என்ற அதிகாரத்தில் வருகிறது.

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்

பேசிப் பழகி ஒருவரை அறிந்து கொள்வதால் நட்பு உருவாக வேண்டும் என்ற அவசியமில்லை.இருவருக்கும் ஒரு போன்ற உணர்ச்சி இருந்தால் நட்பு எனும் உரிமை தரும் என்கிறார் வள்ளுவர்.கிட்டத்தட்ட நட்பை காதலை போன்ற ஒன்றாக ஆக்குகிறார்.பரிமேலழகர் இந்த குறளில் பழகுதல் பற்றிய விளக்கத்தில் பலகால் கண்டும் சொல்லாடியும் மருவுதல் இவ்விரண்டும் இன்றிக் கோப்பெருஞ் சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சியொப்பின் அதுவே உடன் உயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும் என்று சொல்கிறார்.

அன்பும் ஆர்வமும் இருந்தால் பேசுவதும் பழகுவதும் இன்றி நாடாது நட்பு என்ற உரிமை அது உருவாக்கும் என்கிறது இவ்விரண்டு குறள்கள்.நம்முடன் அதிகம் பழகாமல் , பேசாமல் இருந்த ஒருவரின் மரணம் நம்மை சில நேரங்களில் அதிகம் உலுக்குகிறது.நம்முடன் நிறைய நேரம் செலவழித்து பேசிப்பழகிய ஒருவரின் மரணத்தை நாம் எளிதல் கடந்து விடுகிறோம்.ஒரு உறவில் உருவாகும் பற்றுக்கும் பேசிப் பழகி கழித்த காலத்திற்கும் தொடர்பில்லை.

கலைஞர் பற்றிய கேள்விக்கு முதலில் இந்த குறளை சொல்லிவிட்டு பின்னர் தான் விளக்கம் அளிப்பார்.சட்டென்று ஒரு கேள்விக்கு ஒரு குறளை பதிலாக தருவது ஆச்சரியமானது.அதை அவர் தன் மனதுக்குள் மறுபடி மறுபடி மீட்டிக்கொள்கிறார்.அதனால் தான் அவரால் பாரதியார், குணங்குடி மஸ்தான் சாகிபு,வள்ளுவர், சிலப்பதிகாரம் பற்றிய எல்லாம் எளிதாக போகிற போக்கில் சொல்லிச் செல்ல முடிகிறது.ஒரு கேள்விக்கு வையத் தலைமைக்கொள் , வட்டாரத் தலைமை போதாது என்கிறார்.தமிழில் எழுத்தாளர்கள் பற்றி எடுக்குப்பட்ட ஆவணப்படங்களில் மிகச்சிறந்த ஆவணப்படம் ஜெயகாந்தன் பற்றி ரவி சுப்பரமணியன் எடுத்தது தான்.

ஒரு வகையில் ஒரு எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையிலான உறவு கூட இந்தக் குறளில் சொல்லப்படுவது போன்றது தான்.காந்திக்கும் டால்ஸ்டாய்க்குமான அத்தகையதுதான்.

No comments: