நான் பொதுவாக மதுபானக்கடைகளுக்கு செல்வதில்லை.அதாவது பார்களுக்கு.மது விற்பனையகங்களுக்கு சென்று பாட்டில்களை வாங்கி வந்து ஃபிரிட்ஜில் அடுக்கிவிடுவேன்.என் வீட்டின் அருகில் மதுலோக்கா என்ற ஒரு கடை இருக்கிறது.எல்லாவித அயல்நாட்டு சோமபானங்களும் கிடைக்கும்.பெரும்பாலும் அங்கு தான் வாங்குவேன்.மாலையில் வீடு திரும்பிய பின்னர் ஒன்று அல்லது இரண்டு பேக் அருந்துவேன்.பெரும்பாலும் சிங்கிள் மால்ட் ஸ்காட்ச் விஸ்கி.சில நேரங்களில் ரம்.சற்று மகிழ்ச்சியாக இருந்தால் வைன்.என்னுடன் யாருமில்லை.நான் காலை எழுந்தவுடன் பிரேட் ஆம்லேட் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் சென்றுவிடுவேன்.மதியத்திற்கு அலுவலகத்தில் எதாவது உட்கொள்வேன்.மாலை பைக்கில் வீடு திரும்புகையில் சிறிது நேரம் வீட்டின் அருகிலிருக்கும் லக்ஷ்மி தேவி பூங்வாகவில் அமர்வேன்.பலரும் வேகமாக நடைச் செல்வார்கள்.சிலர் கைகளில் ஸமார்ட் வாட்ச் அணிந்திருப்பார்கள்.கார்ன் , ஐஸ்கிரீம் , காபி கடைகள் பார்க்கின் வெளியே இருக்கும்.குழந்தைகளுக்கு சருக்கு மரம், சீஸா , ஊஞ்சல் , கயிறு ஏறுதல் போன்ற விளையாட்டுகள்.பெரியவர்கள் கூட சில உடற்பயிற்சிகளை செய்வார்கள்.அவர்கள் மெய்வருத்தி நம்மை வதைப்பதை ஒரு நொடி கூட பார்க்க மாட்டேன்.அடர்ந்த மரங்கள் இருப்பதால் அந்தியில் விளக்குகளின் வெளிச்சத்திலும் சற்று இருண்டு காணப்படும்.அது சோபையான ஓர் உணர்வை அளிக்கும்.அப்போது அங்கிருந்து வெளியேறிவிடுவேன்.
நான் ஐந்து மணி வாக்கில் சென்றால் ஆறு ஆறரை வரை அமர்ந்திருப்பேன்.அப்போது நான் பாட்டு கேட்க மாட்டேன்.அலைபேசியை எடுத்துப் பார்க்க மாட்டேன்.யார் அழைத்தாலும் எடுக்க மாட்டேன்.வெறுமன இருப்பேன்.பேராக்குப் பார்ப்பேன்.யுவதிகள் செல்லும் போது கண்கள் அவர்களையே தொடர்வதை கவனித்திருக்கிறேன்.எப்போதாவது வெளியில் பில்டர் காபி வாங்கி குடிப்பேன்.அந்தி சாய்ந்த பின் வெளியே வந்து பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்வேன்.சமீபத்தில் கார் வாங்கினேன்.மாலைகளில் இங்கு சட்டென்று மழை பெய்வதால் அலுவலகம் செல்லும் போது சில நாட்கள் காரிலும் செல்கிறேன்.மூன்றாவது மாடியில் பால்கனியை கொண்ட ஒரு படுக்கையறை வீடு.மாலையில் பெரும்பாலும் வெளியே செல்ல மாட்டேன்.தோசை அல்லது இட்லி உடன் ஏதேனும் ஒரு தொக்கு வைத்துக்கொண்டு இரவு உணவை முடித்துவிடுவேன்.பொதுவாக தொக்குகளை ஃபோரம் மாலில் ஏதாவது படம் பார்த்து விட்டு வீட்டுக்குத் திரும்பும் போது அடையார் ஆனந்த பவனில் வாங்கி விடுவேன்.
மாலையில் ஒரு மதுக்கோப்பையை எடுத்துக் கொண்டு போய் பால்கனியில் அமர்வேன்.அந்தச் சாலையில் பெரிதாக வாகனங்கள் செல்லாது.சில நாட்கள் வீடு திரும்பும் போது சிக்கன் வாங்கி வருவேன்.கபாப் செய்து உண்டுவிடுவேன்.சாப்பிட்ட பின்னர் சிறிது நேரம் சாலைகளில் உலாவுவேன்.இரவுகளில் கதவைத் திறந்து இல்லத்திற்குள் புகும் போது வெறுமை ஒரு பூதம் போல சோபாவின் மேல் வியாபித்திருக்கும்.அதற்காகவே பேச்சரவம் இருக்கட்டும் என்று தொலைக்காட்சியை ஒலிக்க விடுவேன்.
அன்று வழக்கம் போல் சாயுங்காலத்தில் வீடு திரும்பிய பின்னர் பிரட்ஜை திறந்த போது பாட்டில்கள் தீர்ந்து விட்டன என்பதை கவனித்தேன்.என்னால் குடிக்காமல் இருக்க முடியாது.வண்டியை எடுத்துக்கொண்டு வெளியில் செல்ல விருப்பம் இருக்கவில்லை.அருகில் நடந்து போகும் தொலைவில் மஞ்சுநாதா பார் இருக்கிறது.தமிழ்நாட்டில் செந்தில் போல கர்நாடகாவில் மஞ்சு என்ற பெயர் பிரபலம்.அது வெள்ளிக்கிழமை.வாரயிறுதியில் அடுத்த வாரத்திற்கான போத்தல்களை வாங்கி நிரப்பிவிடலாம்.இன்று ஒரு நாள் மட்டும் கடைக்குச் சென்று அருந்தலாம் என்று தோன்றியது.
வெளியிலிருந்து பார்க்கும் போது எப்போதும் ஒரு சலிப்பான மஞ்சள் ஒளி அந்தக் கடை முழுதும் பரவியிருப்பதை பார்த்திருக்கிறேன்.மலிவானக்கடை.பலரும் குவார்ட்டர்கள் வாங்கி சாலையை வேடிக்கை பார்த்தவாறு அங்கிருந்த ஒரு திட்டில் வைத்து நின்றவாறே அருந்திவிட்டுச் சென்றார்கள்.அழகற்ற பிளாஸ்டிக் மேஜைகள் , நாற்காலிகள். நான் சென்று ஒரு காலியான இடத்தில் அமர்ந்தேன்.ஏப்ரல் மாதம் என்பதால் வெம்மையாக இருந்தது.வெளியிலிருந்து பார்க்கும் போது தான் கூட்டமாக இருந்தது.உள்ளே அதிக மக்கள் இல்லை.நான் ஒரு குவார்ட்டர் ரம்மும் சிக்கன் பேப்பர் ப்ரையும் ஆர்டர் செய்தேன்.
ஏதோ ஒரு கன்னடப் பாடல் ஓடிக்கொண்டிருந்தது.முதல் மடக்கில் உண்டான வெதுமையை போக்க சிக்கனை எடுத்து ஒரு கடி கடித்தேன்.மெல்ல படபடப்பு குறைந்து உடல் சமநிலைக்கு வந்து கொண்டிருந்தது.அப்போது என் மேஜை அருகில் ஒருவன் வந்தான்.உயரமாக பருமனாக இருந்தான்.பல டேபிள்கள் காலியாக இருந்த போது என் மேஜையின் எதிரில் அமர்ந்தான்.அவன் என்னைப் பார்த்துப் புன்னகைத்தான்.நான் யாரைப் பார்த்தும் புன்னகைப்பதில்லை.எனக்கு தெரிந்த யாராவது சாலையில் என் எதிரில் வந்தால் தலையை கவிழ்த்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிடுவேன்.எனக்கு யாருடனும் உரையாடப் பிடிக்காது.பெண்களைப் பிடிக்கும்.அவர்கள் பெண்கள் என்கிற அளவில்.ஆனால் அலுவலகத்தில் கூட பெண்களுடன் அலுவல்கள் தாண்டி பேச மாட்டேன்.ஆண்களோடு பேச எனக்கு ஒன்றுமிருக்காது. குழந்தைகளை நான் தூக்கியதே இல்லை.ரயிலில் , பேருந்தில் குழந்தைகள் என்னைப் பார்த்து சிரித்தால் நான் முகத்தை திருப்பிக் கொள்வேன்.
உண்மையில் இந்த உலகத்தில் மனிதர்களுக்கு பேச என்ன இருக்கிறது என்பது எனக்கு பல காலமாகவே புதிர்தான்.அலுவலகத்தில் காபி அருந்த உணவு சாப்பிட என்று பல காரணங்களுக்காக என் அணியில் இருப்பவர்கள் ஒன்றாகச் செல்வார்கள்.நான் யாருடனும் செல்ல மாட்டேன்.அவர்களும் என்னை சட்டை செய்ய மாட்டார்கள்.அரசியல் , சினிமா, விளையாட்டு, தட்பவெட்பம், டிராபிக், அலுவலகத்தில் புதிதாக வந்துள்ள சட்டங்கள், மேனேஜர் என்று எதை பற்றியாவது இவர்கள் கதைப்பதை பார்த்திருக்கிறேன்.இதைப் பற்றியெல்லாம் எதற்கு பேசுகிறார்கள் என்று நினைத்துக்கொள்வேன்.உரையாடி என்ன ஆகப்போகிறது.
அலுவலகத்தில் தொலைபேசி உரையாடல்களில் கூட தொடக்கத்திலேயே விஷயத்திற்கு வந்து விடுவேன்.நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் , உங்கள் ஊரில் என்ன வெயில் அடிக்கிறதா , ஓலிம்பிக் போட்டிகளை பார்த்தீர்களா என்பது போன்ற சல்லித்தனமான கேள்விகளை கேட்க மாட்டேன்.அவர்கள் கேட்டாலும் சடசடவென்று பதில் சொல்லிவிட்டு பணி குறித்து பேச ஆரம்பித்து விடுவேன்.
இந்த வேலை கூட அவசியம் கருதித் தான் செய்கிறேன்.எனக்கு பெரிதாக சொத்தெல்லாம் ஒன்றமில்லை.என் தந்தை பார்கின்ஸன் நோய் முற்றி நிமோனியா வந்து இறந்தார்.தாயார் சகோதரனுடன் சென்னையில் இருக்கிறார்.சகோதரனுக்கு திருமணமாகிவிட்டது.என் அம்மா எப்போதாவது போன் செய்து என் கல்யாணம் குறித்து பேசுவார். எனக்கு முப்பத்தியைந்து வயதாகிவிட்டது என்பதில் அவருக்கு வருத்தம்.முடி கூட நரைக்க ஆரம்பித்துவிட்டது என்று சொல்லி அழுவார். மனைவி , மக்கள் என்றாலே எனக்கு எரிச்சல் வந்துவிடும்.எங்கள் தொலைபேசி உரையாடல் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நீளாது.நானும் என் சகோதரனும் பேசி எப்படியும் ஐந்து வருடங்கள் இருக்கும்.சண்டை எல்லாம் ஒன்றுமில்லை.எனக்கு அவனோடு பேச ஒன்றுமில்லை.அவனும் அதைப் புரிந்துகொண்டு ஒதுங்கிவிட்டான்.
பள்ளி நண்பர்கள் , கல்லூரி நண்பர்கள் , அலுவலகத்தில் பணிபுரிந்தோர் , பணிபுரிவோர் என்று யார் அழைத்தாலும் பெரும்பாலும் எடுக்க மாட்டேன்.எதாவது கூடுகைகளுக்கு அழைத்தால் செல்லமாட்டேன்.எனக்கு இந்த வேலையில்லை என்றால் மாத வாடகை , சாப்பாடு இவைகளுக்கு அதிகப்பட்சம் ஒரு வருடம் தான் தாக்குப் பிடிக்க முடியும்.அதன் பின் கடினம்.எனக்கு யாரையும் அண்டிப் பிழைக்க பிடிக்காது.அதன் காரணமாக பணிக்குச் செல்கிறேன்.மேலும் அலுவலகம் சென்று வந்தால் அந்த நாள் முடிந்துவிடுகிறது என்பதால் எனக்கு வேலைக்குச் செல்லப் பிடிக்கும்.
வாரயிறுதிகளில் நான் எதையாவது சமைத்து உண்பேன்.சமைக்க பிடிக்கவில்லை என்றால் வெளியில் சென்று உட்கொள்வேன்.தமிழகத்தில் சைவ உணவகங்களில் பெயருக்கு பின் பவன் என்ற ஒட்டு சேர்த்துக் கொள்வது போல இங்கே சாகர் என்று முடியும் நிறைய ஹோட்டல்கள் உண்டு.உடுப்பி சாகர், சாந்தி சகார், சூக் சாகர் இப்படி நிறைய இருக்கும்.மெனுவை பார்த்து மோவாயைத் தடவி என்று இங்கு நிறைய மெனக்கெடுக்க வேண்டியதில்லை.நாம் போய் எதையாவது சொல்லி நின்றவாறே உண்டுவிட்டு வந்துவிடலாம்.பெரும்பாலும் இந்த நாட்களில் நான் ஐந்தாறு வார்த்தைகள் பேசினால் அதிகம்.எஷ்டோ , ஏனு போன்ற கன்னட வார்த்தைகளைத் தாண்டி பெரிதாக எதையும் பேசமாட்டேன்.சில நேரங்களில் சென்னையில் கூட கடைகளில் எவ்வளவு என்று கேட்பதற்கு பதிலாக எஷ்டோ என்று தவறுதலாக கேட்டிருக்கிறேன்.என் குடியிருப்பில் மொத்தம் ஆறு வீடுகள்.ஒன்றிரண்டு வீடுகளில் குடும்பங்கள் இருந்தன.என் பக்கத்து வீட்டில் இரண்டு பெண்கள் வாடகைக்கு குடியிருக்கிறார்கள்.அதில் ஒருத்தி ஒரு நாள் என்னைப் பார்த்து ஏதோ கேட்க முனைந்த போது நான் பார்க்காதது போல நடந்து சென்றேன்.அதன் பின் அவர்கள் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.தண்ணீர் வரவில்லை , கரண்ட் கட் எதுவாக இருந்தாலும் அதுவாக சரியாகும் என்பது என் எண்ணம்.அதைக் குறித்தும் பெரிதாக யாரிடமும் கேட்டதில்லை.என் ஓனருக்கு நான் ஐந்தாம் தேதியானால் வாடகை கொடுத்து விடுவேன் என்பதால் அவரும் என்னை தொந்தரவு செய்வதில்லை.
அவன் வந்து அமர்ந்த போது புன்னைகத்தது எனக்கு எரிச்சலைத் தந்தது.நான் பதிலுக்கு சிரிக்கவில்லை.நான் வேறு எங்கோ வெறித்துப் பார்த்தேன்.அவன் கையில் பியர் நிரப்பப்பட்ட கிளாஸ் இருந்தது.
“என் பெயர் யாசர்” என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான்.
எனக்கு தூக்கிவாரி போட்டது.நீ யாராக இருந்தால் எனக்கென்ன,என்னை என் தொந்தரவு செய்கிறாய் என்று எண்ணிக்கொண்டேன்.நான் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சரி என்று தலையாட்டி விட்டு அமைதியாக இருந்தேன்.
“உங்கள் பெயர் ரகுநந்தன் தானே”
இப்போது என் கைகால்கள் எல்லாம் மரத்துப்போவது போல ஆகிவிட்டன.வயிற்றில் பெரிய வெற்றிடம் உருவானது.என்னை இந்த நகரத்தில் யாருக்கும் தெரியாது.நான் பேஸ்புக் உட்பட எந்த சமூக வலைத்தளத்திலும் இல்லை.உலக நடப்பை செய்தித்தாள்கள் வழி அறிவேன்.அதுவும் மேம்போக்காக படிப்பேன்.மற்றபடி வேறு எவற்றிடனும் எதனுடனும் எனக்குத் தொடர்பில்லை.
“ஆமாம்”.
எனக்கு ஒரு சிக்கல் இருக்கிறது.யாருடனும் உரையாட பிடிக்காது என்றாலும் யாரையும் புண்படுத்தவும் பிடிக்காது.முகத்தில் அடித்தால் போல பேச விரும்ப மாட்டேன்.நாம் எந்த கேள்வியையும் கேட்காவிட்டால் அந்த உரையாடல் நீடிக்காது என்பது என் திண்ணம்.நான் யாசரை எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.
“என்னை உனக்கு அடையாளம் தெரிகிறதா”
அதற்கு முன்னர் அந்த முகத்தை எங்கும் பார்த்ததாக எனக்கு நினைவில்லை.அப்படியே நினைவில் வந்தாலும் அதையெல்லாம் சொல்லக்கூடிய எண்ணத்திலும் நானில்லை. இப்போது அவன் அடுத்த அஸ்திரத்தை வீசினான்.
“நீங்கள் நெய்வேலிதானே.”
இப்போது நான் உண்மையில் பதற்றம் கொள்ள ஆரம்பித்தேன்.கால்கள் அப்படியே தரைக்குள் சென்று விடும் என்று தோன்றியது.இவனுக்கு என் பெயர் தெரிந்திருக்கிறது, என் ஊரை அறிந்திருக்கிறான்.நான் இந்த நகருக்கு வந்து பத்தாண்டுகள் கழிந்துவிட்டன.எனக்கு இந்த நகரில் நண்பன் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை.இந்த நகரத்தின் அந்நியத்தன்மை தான் எனக்கு மிகவும் உவப்பாக இருக்கிறது.இந்த யாசர் அதை உடைக்க பார்க்கிறான்.
“ஆமாம்”
“நானும் நெய்வேலிதான்”
இருண்ட வீட்டின் சிறு மூலையிலிருந்து மஞ்சள் ஒளி படர்வது போல இப்போது எனக்கு யாசர் என்ற பெயர் லேசாக நினைவுக்கு வந்தது.நாங்கள் சிறு வயதில் ஒரு லைன் வீட்டில் வாழ்ந்தோம்.அப்போது அதே லைன் வீட்டில் வாழ்ந்த எனது நண்பர்கள் சாகுல், உமர், பஷீர், ஹாஜா, யாசர்.சாகுலும் உமரும் சகோதரர்கள்.போலவே பஷீரும் ஹாஜாவும்.சாகுலின் தந்தை மரக்கடை வைத்திருந்தார்.ஹாஜாவின் வாப்பா கடிக்காரக் கடை வைத்திருந்தார்.யாசரின் தந்தை மகாலட்சுமி திரையரங்கில் கேண்டீன் எடுத்து நடத்திக்கொண்டிருந்தார்.
யாசருக்கு இரண்டு சகோதரிகள் பானு , சுபைதா.எங்களுக்கு மூத்தவர்கள்.அதில் பானு மிக நன்றாக வரைவார்.அவர் நீல வண்ணத் தாவணியில் ஸ்கூலுக்கு சைக்கிளில் சென்ற சித்திரம் நினைவில் நிற்கிறது.பன்னிரெண்டாம் வகுப்புக்கு பிறகு அவர் படிக்கவில்லை.நாங்கள் தமிழ்நாடு லைனிலிருந்து பின்னர் வீடு மாறி பெரியாகுறிச்சி சென்றோம்.பெரிய தூரம் ஒன்றுமில்லை.ஐநூறு மீட்டர் தொலைவு இருக்கும்.ஆனால் அதன் பின் என் நண்பர்கள் மாறிவிட்டார்கள்.யாசரை நான் அதன் பின் அதிகம் பார்க்கவில்லை.எப்போதாவது மகாலட்சுமி திரையரங்கு சென்றால் அங்கு இருப்பான்.அவன் நல்ல சிவப்பு.குழந்தை போல சிரிப்பான்.அப்போதே சற்று குண்டாக இருப்பான்.இப்போது மிகவும் பெரிதாக இருக்கிறான்.வெள்ளை நிற டீசர்ட் அணிந்திருந்தான்.அநேகமாக அது டபுள் எக்ஸலாக இருக்க வேண்டும்.அவனுக்கு எப்படி என் முகம் நினைவிலிருந்தது என்று எனக்குத் தெரியவில்லை.நாங்கள் நெய்வேலியிலிருந்து பின்னர் சென்னையில் குடியேறிவிட்டோம். அவனைப் பார்த்தே எப்படியும் பதினைந்து இருபது வருடங்கள் இருக்கும்.
ஒரு முறை நான் பள்ளி முடிந்து நெய்வேலி டவுன்ஷிப் சிபிஎஸ் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன்.நான் எப்போதும் வீடு திரும்பும் பாலாஜி பஸ் வந்தது.அது சிதம்பரம் வரை செல்லும்.நான் பேருந்தில் பையை வைத்து விட்டு பஸ் ஸ்டாண்டுக்கு பின்னே இருக்கும் சாலையில் சிறுநீர் கழிக்கச் சென்றேன்.வந்து பார்த்தால் பஸ்ஸைக் காணோம்.அடுத்து வந்த பெரியார் வண்டியில் ஏறி மந்தாரக்குப்பம் சென்று அங்கிருந்து இன்னொரு கடலூர் பேருந்தைப் பிடித்து வீட்டுக்குச் சென்றேன்.எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.அந்த வருடத்தின் ரெகார்ட் நோட்டுகள் பையில் இருந்தன.இதை எப்படி வீட்டில் சொல்வது, பள்ளியில் சொல்வது என்று எனக்குப் புரியவில்லை.கிடைக்குமா என்றும் தெரியவில்லை.பேருந்து நடத்துனர் பையை எடுத்துவைத்தால் சரி.தொலைந்து போனால் என்ன செய்வது.இரவு நைனாவை அழைத்துக்கொண்டு சிதம்பரம் டிப்போ சென்று விசாரிக்கலாமா என்றும் யோசித்தேன்.அச்சம் வயிற்றை கவ்விக்கொண்டது.எனது கம்யூட்டர் சயின்ஸ் வாத்தியார் எதையாவது சொல்வதற்குள்ளாகவே பட்டென்று கன்னத்தில் அடித்து விடுவார்.வீடு திரும்பினால் யாசர் வாசலில் இருந்த பேஞ்சில் அமர்ந்திருந்தான்.அவன் தோளில் என் பையும் சாப்பாட்டுக் கூடையும்.தேவதை ஒன்று இறங்கி வந்தது போல இருந்தது அந்தத் தருணம்.அவனும் அப்போது தான் வந்திருப்பான் போல.இவனுக்கு எப்படி இவை கிடைத்தன என்று எண்ணிக்கொண்டேன்.அவன் சிபிஎஸ்ஸூக்கு அடுத்திருந்த தொமுச நிறுத்தத்தில் ஏறியிருக்கிறான்.பையின் வெளியே என் பெயரை பார்த்து உள்ளே டயரியில் அது நான் தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டு எடுத்து வந்திருக்கிறான். வீட்டினுள் வந்து காபி குடித்து விட்டு போனான்.அவன் என்னை விட ஒரு வயது மூத்தவன்.பள்ளிப் படிப்பு முடிந்து ஒன்றும் செய்யாமல் இருந்தான்.மருத்துவம் படிக்க விருப்பம் என்றும் அதனால் இம்ப்ரூமண்ட் எழுதப் போவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தான்.தேவிரத்னா திரையரங்கிலும் அவனது வாப்பா கேண்டீன் நடத்திவந்தார்.அங்கு சென்று திரும்பிய போது தான் பையை பார்த்து கண்டக்டரிடம் சொல்லி எடுத்து வந்திருக்கிறான்.
அது தான் யாசரை கடைசியாக பார்த்தது.அதன் பின் அவன் எங்கோ உத்தர பிரதேசம் சென்று விட்டதாகவும் மருத்துவம் படிக்கப்போவதாகவும் அம்மா ஒரு முறை சொன்னார்.நெய்வேலியிலிருந்து உத்தர பிரதேசம் எத்தனை தூரம் இருக்கும் அதற்கு எத்தனை நாள் பயணிப்பார்கள் என்று எண்ணிக்கொண்டேன்.பானு அக்கா, சுபைதா அக்காவின் திருமணங்களுக்கு சென்று வந்த ஞாபகம் இருக்கிறது.பானு அக்காவின் நிக்காஹ் வேலூரில் நடந்தது.அவை எல்லாம் நடந்து பதினைந்து இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன.எல்லாம் எங்கோ எப்போதோ யாரோவாக எனக்குத் தோன்றின.எனக்கு அவர்களின் முகங்கள் கூட மங்கலாகத்தான் நினைவில் இருக்கிறது.
இதோ இப்போது என் சதைத்துண்டின் ஒரு பகுதி போல யாசர் அமர்ந்திருக்கிறான்.அவன் முழுப் பெயர் யாசர் அராபத்.எத்தனை அழுத்தமான அழகான பெயர்.அந்தப் பெயரை உச்சரிக்கும் போது அது உருவாக்கும் ஒலியும் லயமும் அழுத்தமும் எனக்கு மிகவும் பிடிக்கும்.நான் சில நேரங்களில் அந்தப் பெயரை தனியாக இருக்கும் போது சிறு வயதில் உச்சரித்துக் கொண்டதுண்டு.
எனக்கு அவனிடம் கேட்க மிக முக்கியமான வினா ஒன்று இருந்தது.என் முகத்தை எப்படி இந்த மாலைப் பொழுதில் மங்கலான மஞ்சள் ஒளியில் அடையாளம் கண்டு கொண்டாய் என்று கேட்டேன்.அவன் நீ உன் தந்தை போலவே இருக்கிறாய் என்றான்.நான் மெளனமானேன்.எனக்கு மேற்கொண்டு அவனிடம் என்ன கேட்க என்று தெரியவில்லை.என் தந்தை இறந்தப் பின்னர் ஒரு திருமணத்திற்கு நெய்வேலிக்கு செல்ல வேண்டியிருந்தது.நான் பொதுவாக எந்த நிகழ்வுக்கும் செல்வதில்லை.அவை இறப்போ பிறப்போ திருமணமோ எதுவாக இருந்தாலும்.இந்தத் திருமணத்திற்கு பெண்ணின் தந்தை பெங்களூர் வீட்டுக்கே வந்து அழைத்திருந்தார்.நான் நெய்வேலியிலிருந்த போது அவரின் பெல்ட் கடையில் அடிக்கடி சென்று அமர்ந்து கொள்வேன்.திண்பண்டங்கள வாங்கி கொடுப்பார். எதாவது பேசிக்கொண்டிருப்பார்.கேட்டுக்கொண்டிருப்பேன்.அவருக்கு என் நைனாவிடம் அதிக ஸ்நேகம்.மேலும் என்னை அவருக்கு ஏனோ பிடிக்கும்.அந்த உரிமையில் வந்து அழைத்தார்.நல்ல மனிதர்.நான் சென்றேன்.கஸ்தூரி திருமண மண்டபம் என்று நினைக்கிறேன்.திருமணச் சடங்குகள் எரிச்சலைத் தந்ததால் நான் வெளியே வந்து சாலையில் சிறிது நேரம் நின்றேன்.ஊரே திரிந்துவிட்டது.சாலையை விரித்திருந்தார்கள்.நிறைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டிருந்தன.சற்று நேரம் நடந்தேன்.நான் வாழ்ந்த தமிழ்நாடு லைன் , எதிரிலிருந்த கடைகள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.ஏதோ ஒரு துணுக்குறல்.என் தந்தை நினைவுக்கு வந்து விட்டார்.அவர் அந்தச் சாலையில் என்னை அழைத்துச் செல்வது , அவர் எல்.எம்.எல் வேஸ்பாவில் தனியாகச் கோர்ட்டுக்குச் செல்வது என்று ஏதேதோ நினைவுகள்.என்னால் என்னைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.மனதில் ஏதேதோ ஓலங்கள்.அதன் பின் அங்கே இருக்கவே பிடிக்கவில்லை.உடலை நினைவுகளால் உலுக்க முடியும் என்பதை அன்று தான் உணர்ந்தேன்.நான் சாலையில் நடப்பதை நிறுத்திவிட்டு மண்டபத்திற்குள் சென்று அமர்ந்து கொண்டேன்.இப்போது இங்கு யாசர் என் முகத்தில் என் தந்தை இருக்கிறார் என்று சொல்கிறான்.நான் மிகவும் இலகுவாக உணர்ந்தேன்.என்னுள் ஏதோ விலகிக்கொண்டது.நான் புன்னைகைத்தேன்.
“யாசர் அராபத்.” என்று என்னுள் சொல்லிக் கொள்ளும் லயத்துடன் கூப்பிட்டேன்.
“ம்.”
“எப்படி இருக்க”
“நல்லாயிருக்கேன்.நீ எப்படி இருக்க”
“நானும் நல்லா இருக்கேன்.”
அவனுடைய குரல் சன்னமாக இருந்தது.ஊற்று பெருக்கெடுப்பது போல நினைவுகள் திரள்வதும் மதகில் மோதி நிற்கும் வெள்ளம் போல உணர்வுகள் குழம்பி நிற்பதுமாக சலனத்திருந்தேன்.சொல் கனத்து மொழி அற்றுப் போனேன்.குடிப்பதை நிறுத்தினேன்.
வெளியே போவோம் என்றேன்.அவன் தலையசைத்தான்.சிறது நேரம் எதுவும் பேசாமல் நடந்து சென்றோம்.எங்கும் உணவு விடுதிகள்.சிறிதும் பெரிதுமாக.மக்கள் தின்றுகொண்டே இருந்தார்கள்.வீதி விளக்குகளும் கடைகளின் எல்ஈடி வெளிச்சமும் நடந்து சென்ற மாதர்களும் அவர்களின் உடைகளும் சாலையின் இரைச்சலும் போதையும் என்னை வெகுமாக சுழற்றி அடித்தன.மாமோஸ் கடை, பானி பூரி கடை , சமோஸா கடை , சிக்கன் கடை , காபி கடை , சின்ன பிரியாணி கடைகள், பெரிய பிரியாணி கடைகள் ,சஹார்கள், பார்கள், ஜூஸ் கடைகள், ஐஸ்கிரீம் கடைகள் , இத்தாலிய உணவுக் கடைகள் , அராபிய உணவுக் கடைகள், தலைச்சேரி உணவகம் ,குட்டநாடு உணவகம்,ஆந்திரா மீல்ஸ், தமிழ்நாடு சாப்பாடு, ஸ்வீட் கடைகள்,கேக் கடைகள், நூறு வகை தோசைக் கடைகள், லக்னோ ஸ்ரீரீட், வடக்கன் கபே , பேக்கரிகள் என்று எத்தனை எத்தனை அங்காடிகள்.எங்கும் கூட்டம்.இப்படியே உண்டு உண்டு எல்லோரும் ஒரு நாள் வயிறு வெடித்து இறக்கப் போகிறார்கள்.மனிதர்கள் ஏன் இப்படி சாப்பிடுகிறார்கள்.உண்டு உண்டு எதை தீர்த்துக் கொள்ளப் போகிறார்கள்.நிரப்ப முடியாத எது அவர்களுக்குள் இருக்கிறது.அப்படியே ஓடிச்சென்று சமோசா கடையில் விரல்களை வழித்துக் கொண்டிருந்தவனின் புட்டத்தில் உதைக்க வேண்டும் என்பது போல இருந்தது.
கடைகள் இருந்த தெருவை கடந்து நான் வாழும் பகுதியை நோக்கி நடந்தோம்.இரைச்சல் குறைந்தது.சிந்தை எல்லாம் எங்கோ தொலைந்து போய் மனம் இனிமை கொண்டது.யாசர் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்திருக்கிறான்.சிறிது காலம் அலிகரிலும் பின்னர் டெல்லியிலும் பணிபுரிந்திருக்கிறான்.வாணியம்பாடியை சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறான்.மனைவியின் பெயர் வஹீதா.முதலில் ஒரு பெண் குழந்தை.அதன் பெயர் நாஸியா.பின்னர் ஒரு ஆண் குழந்தை.அதற்கு தாரீக் என்று பெயர் வைத்திருக்கிறான்.மூன்றாவதாக அவன் மனைவி கருவுற்ற போது தான் 2019யில் அங்கே சிஏஏவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்திருக்கின்றன.அவர்கள் டெல்லியில் தென் கிழக்கு பகுதியில் மதன்பூர் காதர் கிராமத்தில் சரிதா விஹார் என்ற பகுதியில் வாழ்ந்திருக்கிறார்கள்.அதன் அருகில் இரண்டு கீலோ மீட்டார் தொலைவில் தான் தான் ஷாகின் பா போராட்டங்கள் நடந்திருக்கின்றன.டெல்லி முழுதும் பல இடங்களில் இது போன்ற போராட்டங்கள் நிகழ்ந்திருக்கின்றன.2020 பிப்ரவரி மாதத்தில் வட கிழக்கு பகுதியில் கலவரங்கள் மூண்டிருக்கின்றன.இவன் வாழ்ந்த பகுதியில் குழப்பங்கள் எதுவும் முதல் நாள் இருக்கவில்லை.வன்முறைகள் தொடங்கிய அடுத்த நாள் மனைவியை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறான்.வீடு திரும்பிய போது பிறழாட்டங்கள் குறித்த வதந்திகள் பரவியிருக்கின்றன.மக்கள் பதறியபடி ஓடியிருக்கிறார்கள்.அந்தப் பகுதியில் தள்ளுமுள்ளு நிகழ்ந்திருக்கிறது.ஆட்டோவிலிருந்து இறங்கிய அவனது மனைவி கிழே விழுந்திருக்கிறார்.அன்றிரவு அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது.பல முறை டெல்லியை விட்டு வேறு எங்காவது சென்று விடலாம் என்று மனைவி மன்றாடியும் யாசர் அதை பொருட்படுத்தவில்லை.இவ்வாறு நிகழ்ந்த பின் கருச்சிதைவுக்கு அவன் தான் காரணம் என்று சொல்லி டெல்லியிலிருந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவரது சொந்த ஊரான வாணியம்பாடிக்கு சென்று விட்டார்.பின்னர் டெல்லியை விட்டு வந்தால் தான் திரும்புவேன் என்று அவர் பிடிவாதம் கொண்டார்.
அப்போது கோவிட் காலம் என்பதால் இவனால் எங்கும் மாற முடியவில்லை. கொரோனா கட்டம் முடிந்து ஒரு வருடம் கழிந்து இவன் டெல்லியிலிருந்த வேலையை உதறவிட்டு பெங்களூரில் புதிதாக பணியாணை பெற்று வந்திருக்கிறான்.மனைவியிடம் பல முறை மன்னிப்பு கேட்டு சமாதானப் படுத்தியிருக்கிறான்.
நாங்கள் பேசிக் கொண்டே வந்த போது யாசர் சட்டென்று நின்றான்.ஏன் என்பது போல நான் அவனைப் பார்த்தேன்.இது தான் நான் தற்போது குடியிருக்கும் வீடு என்றான்.இப்ராஹிம் மன்ஸில் என்று பெயர் பொரிக்கப்பட்டிருந்த இல்லம்.முதல் மாடியில் வாடகைக்கு குடியிருக்கிறான்.அவனது மனைவியின் உறவினர்கள் வீடு.அடுத்த நாள் தன் இல்லாள் வந்துவிடுவாள் என்றான்.வாழ்வை புதிதாக தொடங்க வேண்டிய இடத்தில் நின்றான் யாசர்.புதிய ஊர்.கோரமங்களாவிலேயே அக்கூரா மருத்துவமனையில் பொது மருத்துவராக பணியில் சேர்ந்திருப்பதாகச் சொன்னான்.
தன் வீட்டுக்கு அழைத்தான்.இன்று இராப் பொழுது இங்கே இரு என்றான்.நான் என் இருப்பிடம் தவிர வேறு எங்கும் தங்குவதில்லை.அவன் அழைப்பை நிராகரிக்கவும் முடியவில்லை.நான் டீசர்ட்டும் ஷார்ட்ஸூம் அணிந்திருந்ததால் அங்கேயே உறங்குவதில் அத்தனை சிக்கல் இல்லை என்று தோன்றியது.இரவு உணவுக்கு இருவருக்கும் தோசையும் உடன் சிக்கன் கறியும் சமைத்தான்.அவன் தன் மனைவி குழந்தைகளுடன் டெல்லியில் காந்தி நினைவகத்தின் முன் நின்று எடுத்துக்கொண்டிருந்த புகைப்படத்தை பெரிதாக மாட்டியிருந்தான்.அரபியில் எழுதப்பட்ட ஒரு சட்டகம் இருந்தது.பிபிசியில் காஸாவில் நிகழும் அவலங்களைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார்கள்.சிறிது நேரம் பார்த்தோம்.
அவன் தன் வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றான்.ஒரு பெரிய பிளாஸ்டிக் பாய் அதன் மேல் படர்த்த ஒரு விரிப்பு , இரண்டு தலையனைகள் , போர்வைகள் எடுத்து வந்தான்.ஒரு பாட்டிலில் தண்ணீர்.பெளர்ணமிக்கு முந்தைய நாள்.இன்றிரவு நிலவின் கீழ் நாம் உரையாடலாம் என்றான்.வீட்டின் முன் ஒரு பூவரச மரம் இருந்தது.காற்று லேசாக வீசியது.கொஞ்சம் குளிர்.அவன் கொண்டு வந்த போர்வைகள் கனமாக இருந்தன.என்னைக் குறித்து கேட்டான்.நான் என்னைக் குறித்து சொல்ல ஒன்றுமில்லை என்றேன்.
“ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல”
“பிடிக்கல”
“ஏன் பிடிக்கல”
எனக்கு அவன் கேட்டதில் உவப்பில்லை என்றாலும் எரிச்சலும் இல்லை.அவன் மேற்கொண்டு ஒன்றும் கேட்கவில்லை.உடல் தீண்டல் உயிர்களுக்கு அவசியமானது என்றான்.ஒரு மருத்துவனாக நான் அதை மேலும் வலியுறுத்துவேன் என்றான்.
நான் விலைமாதுகளுக்கு மாதம் ஒன்றுக்கு முப்பதாயிரத்திலிருந்து நாற்பதாயிரம் வரை செலவு செய்கிறேன்.ஒரு திங்களுக்கு இரண்டு அல்லது மூன்று பெண்கள்.இன்று இணையம் வந்து விட்டப் பின்னர் இவை எல்லாம் மிக எளிதாகி விட்டது.வீட்டு வாடகைக்கு தரகர் இல்லா தளங்கள் இருப்பது போல இவற்றிற்கும் தளங்கள் இருக்கின்றன.இதை முழு நேரத் தொழிலாக செய்யும் பெண்கள் மட்டுமல்லாமல் பகுதி நேரமாக செய்யும் கல்லூரிப் பெண்களும் திருமணமான பெண்களும் இருக்கிறார்கள்.நான் எட்டு மணி நேரத்திற்கு அவர்களை பதிவு செய்வேன்.நான் சந்தித்த பெண்கள் அனைவரும் மிகுந்த கரிசனத்தோடே என்னோடு நடந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் என் உடலைத் தீண்டும் போது அதில் பரிவு இருக்கும், பரிகாசம் இருக்காது.
எனக்கு அவர்கள் மீது ஒரே ஒரு புகார் தான்.அவர்கள் பெரும்பாலும் நான்கு மணி நேரத்திற்கு பிறகு புறப்படுகிறேன் என்பார்கள்.இரவு இன்னும் முடிந்திருக்காது.அவர்களுக்கு அடுத்த கஸ்டமர் கூட பல நேரங்களில் கிடைத்திருக்க மாட்டான்.ஆனால் அவர்கள் கிளம்ப யத்தனிப்பார்கள்.இனி புணர்தல் வேண்டாம் , தொடுகை கூட வேண்டாம் ,ஏன் உரையாடல் கூடத் தேவையில்லை வெறுமன உடன் இருந்து போகலாமே என்று கெஞ்சுவேன்.என்னால் ஒரு கட்டத்திற்கு பிறகு அவர்களை கட்டாயப்படுத்த முடியாது.அவர்கள் ஏதாவது காரணம் சொல்லி தப்பித்துவிடுவார்கள்.போகும் போது இதெல்லாம் எல்லா காலத்துக்கும் சரிபட்டு வராது , விரைவில் திருமணம் செய்து கொள் என்று அறிவுறுத்துவிட்டு போவார்கள். அவர்களின் ஸ்பரிசம் ,கொஞ்சல், வாசனை,உடை, குரல்,உடல் வாகு என்று எண்ணியவாறே தூங்கிவிடுவேன்.ஒரு முறை புணர்ந்தால் அடுத்த ஒரு வாரம் தாக்குப் பிடிப்பேன்.இரண்டு மூன்று வருடங்களாக இப்படித்தான் இருக்கிறேன்.
நான் இதைச் சொன்ன போது யாசர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.சிறிது நேரம் அவன் ஒன்றும் சொல்லவில்லை.இப்படி எல்லாம் உன்னைச் சீரழித்துக்கொள்ள உனக்கு யார் உரிமை கொடுத்தார்கள் என்று கேட்டான்.இதில் என்ன சீரழிவு இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.திருமணம் செய்வது , குழந்தைகள் பெறுவது , அவர்களை வளர்ப்பது , மனைவியிடம் இனிமையாக நடந்து கொள்வது என்பதை எல்லாம் நினைத்தால் சலிப்பாக இருக்கிறது என்றேன்.மேலும் இன்று எல்லாமே பிளாஸ்டிக்காக மாறிவிட்டது.யாரிடமும் அறியாமை இல்லை,எல்லாமே கணக்குகள் தான், எனக்கு இவை எல்லாம் போரடிக்கிறது என்று சொன்னேன்.
நாங்கள் இருவரும் பாயில் அமர்ந்தவாறு பேசிக்கொண்டுருந்தோம்.அவன் முன் தலையில் வழுக்கை ஏறியிருந்தது.தாடி வைத்திருந்தான்.அவனது ஒவ்வொரு கையும் தும்பிக்கை போல இருந்தன.உண்மையில் அவன் ஒரு வெள்ளை நிற குட்டி யானை போல இருந்தான்.அந்த முகத்தில் இருந்த சலனமின்மை எனக்கு வியப்பூட்டியது.அவன் சினம் கொண்டிருக்கிறானா அல்லது மகிழ்ந்திருக்கிறானா என்பதை கண்டு கொள்ள இயலாத ஒரு முக அமைப்பு.
“நீ தப்பான பாதையில ரொம்ப தூரம் போயிட்ட டா”
“இதுல என்ன தப்பு இருக்கு”.
“நீ இன்னும் எத்தனை ஆயிரம் பெண்களை புணர்ந்தாலும் உன்னால் ஒரு போதும் இந்த சூன்யத்தை கடக்க முடியாது”
“ஒரு மனைவியுடன் இருந்தால் இந்த சூன்யத்தை கடந்து விட முடியுமா”
அவன் சிரித்தான்.
“எதாவது வெரினியல் டிசிஸ் வந்துடப் போவுது”
“இதுவரைக்கும் இல்ல”
“இதை நான் எதிர்பாக்கல”
“எதை”
“நீ இப்படி.ஒண்ணுமில்ல”
“நானும் உன்னைய பார் ஷாப்புல பாப்பேன்னு நினைக்கல”
“அது வந்து , நாளைக்கு வைஃப் வராங்க. இனிமே புதுசா எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதுன்னு ஒரே பதற்றம்.ஒரு மாதிரி மனசு தொந்தரவா இருந்துச்சு.அதான்”.
“ம்.”
“சரி. நான் உனக்கு அட்வைஸ் பண்ணல.இதை விட்டுவிடுவோம்”
“ரெயிட்”
டெல்லியில் பல காலம் இருந்துவிட்டு பெங்களூரு வந்திருப்பது , இங்கே புது ஊரில் பொருந்திக் போவது கடினமாக இருக்கிறதா என்று கேட்டேன்.நான் டெல்லியில் நிகழ்ந்த கலவரத்தை எதிர்பார்க்கவில்லை என்றான்.அது சட்டென்று நிகழ்ந்துவிட்டது.அலிகரில் சிறிதும் பெரிதுமாக கலவரங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.ஆனால் டெல்லியில் தலைநகரில் அது நிகழும் என்று நான் நினைக்கவில்லை.என் மனைவி அங்கிருந்து கிளம்பிவிடலாம் என்று எவ்வளவோ சொன்ன போதும் நான் அதைச் சட்டை செய்யவில்லை.நாங்கள் ஒரு இந்துப் பெண்ணின் வீட்டில் தான் குடியிருந்தோம்.அவர் எங்களோடு நன்றாகத்தான் பழகினார்.அந்தப் பகுதியிலிருந்த சிலர் எங்களை சிலேடையாக கிண்டல் செய்தாலும் பெரிய தொந்தரவு என்று எதுவும் இருந்ததில்லை.
சிஏஏவிற்கு எதிரான போரட்டாங்கள் நிகழ்ந்த போது கூட மக்கள் அமைதியாகத்தான் இருந்தார்கள்.அதனால் இது இவ்வளவு பெரிய வன்முறையாக மாறும் என்று நாங்கள் எண்ணவில்லை.அன்று மாலை மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது ஊர் அமைதியாகத்தான் இருந்தது.வரும் போது தான் நகரம் பற்றிக் கொண்டது.அப்போது தான் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டது.என் மனைவியால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அதன் பின் உடனடியாக கோவிட் வந்துவிட்டது.இரண்டு வருடங்கள் அப்படியே சென்றுவிட்டன.அதன் பின் நான் அடிக்கடி வாணியம்பாடி செல்வதும் வருவதுமாக இருந்தேன்.வஹீதா கண்டிப்பாக டெல்லிக்கு வர மாட்டேன் என்று சொன்னாள்.பிறகு தான் இங்கு பெங்களூரில் சில தொடர்புகள் மூலம் வேலை வாங்கினேன்.வந்து சில மாதங்கள் ஆகின்றன.
அவன் தொடர்ந்து பேசினான்.இந்த மூன்று வருடங்கள் தனியாக இருந்தது மிகுந்த சோர்வை அளித்துவிட்டது.நாளை அவள் வருகிறாள்.எனக்கு ஏனோ மனம் நிலைகொள்ளாமல் இருக்கிறது.குழந்தைகளின் இருப்பும் இனிமையும் நாளை எனக்கு கிடைக்கப் போகிறது.அதனுடன் எங்களின் மூன்றாவது குழந்தையின் இன்மையும் திரும்ப எங்கள் முன் வரும்.இனி எந்த அசம்பாவிதமும் வாழ்வில் நிகழக்கூடாது.அமைதியான மகிழ்வான வாழ்க்கை சாத்தியமாக வேண்டும்.தெற்கில் இருப்பவர்களுக்கு இந்து மூஸ்லீமகளுக்கு இடையிலான இந்தப் பிரச்சனையை புரிந்து கொள்வதில் குழப்பங்கள் இருப்பதை கவனிக்கிறேன்.இந்தச் சிக்கலுக்கு பல்வேறு பரிமாணங்கள் இருக்கின்றன.உயர் குடி இந்துக்களுக்கும் உயர் குடி இஸ்லாமியர்களுக்கும் இடையிலான ஓர் அதிகாரப் போட்டியாகவும் இவை ஒரு காலத்தில் இருந்தன.ஆனால் இன்று இந்த வேறுபாடுகள் புதிய தளத்தை அடைந்துவிட்டன.நிலம் , சொத்து ,வரலாறு, தேசம், தேசக் கடவுள், தொழில், எண்ணிக்கை, உணவு , கலாச்சாரம், உடை, மற்றமையின் அரசியல் தேவை,முதலாளித்துவம் உருவாக்கும் பதற்றமும் அச்சமும் என்று பல்வேறு வகையிலும் இன்று இது ஊடுபாவுகிறது.இதற்கு தீர்வெல்லாம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.அவரவர் முடிந்தவரை பாதுகாப்பாக வாழ வேண்டியது தான்.ஆனால் ஒன்று.இங்கு உண்மை என்று எதுவும் இல்லை.எல்லாமே கதையாடல்கள் தான்.எண்பதுகளில் இங்கு சீக்கியர்கள் எப்படிப் பார்க்கப்பட்டார்கள்.யூதர்கள் ஐரோப்பா முழுவதும் இருபதாம் நூற்றாண்டில் வெறுக்கப்பட்டார்கள்.அறுபது லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள்.இன்று இவை எல்லாம் மாறிவிட்டன.யார் மாற்றியது.ஐரோப்பிய மக்கள் சட்டென்று யூதர்களை ஏற்றுக்கொண்டு விட்டார்களா?.இல்லை.கதையாடல்கள் மாறிவிட்டன.இன்று எங்கள் மீது எண்ணற்ற புனைவுகள் கட்டமைக்கப்படுகின்றன.பின்னர் இந்தப் புனைவகளுக்குள் இருக்கும் கதாபாத்திரங்களாக நாங்கள் மாறுகிறோம்.மாற்றப்படுகிறோம்.கதையாடல்கள் நம்மை கட்டுப்படுத்துகின்றன.இன்று நமக்கு தேவைப்படுவது புதிய கதை.அதை நிகழ்த்த தேவை ஒரு நிமித்தம்.ஒரு தருணம்.ஒரு சாத்தியம்.அவை உருவாக வேண்டும்.அதற்கு காலம் எடுக்கும்.பேசிக்கொண்டு இருக்கும் போதே அவன் முகம் கூர் கொண்டு சிந்தையில் ஆழ்ந்தது.விரிப்பில் விரல்களால் எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தான்.
நான் யாசரிடம் ஆறுதலாகவோ மறுப்பாகவோ எதையும் சொல்லவில்லை.எனக்கு உண்மையில் இவை குறித்தெல்லாம் எந்த அறிவும் இல்லை.ஆனால் யாசர் இதனால் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறான்.அவன் கூற்றில் ஏதோ ஒரு மெய்மை இருக்கும் என்று தோன்றியது.நான் எந்தக் கேள்வியும் கேட்காமல் இருப்பதே சரியாக இருக்கும் என்று நினைத்தேன்.அவன் கரங்களை மட்டும் பற்றினேன்.அதன் பின் நாங்கள் அதைக் குறித்து அதிகம் பேசவில்லை.
“ரஜினிகாந்த் படமெல்லாம் இன்னும் பாக்குறீயா”
“ஏன்”
“சின்ன வயசுல , உள்ளே ஒரு டீசர்ட் போட்டுக்கிட்டு மேலே உங்க நைனா சட்டையை பட்டன் போடாம மாட்டிக்கிட்டு வந்து நிப்பியே, ஞாபகம் இருக்கா”
நான் சிரித்தேன்.நாங்கள் பேசிக்கொண்டே உறங்கிப்போனோம்.மறுநாள் சனிக்கிழமை.எனக்கு அலுவலகம் இல்லை.ஏழு ஏழரை மணிக்கு நல்ல வெயில்.நான் எழுந்து கொண்டேன்.யாசர் என்னருகில் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தான்.வாய் விரித்து நன்றாக குறட்டை விட்டுக்கொண்டிருந்தான்.நான் எழுந்து சோம்பல் முறித்தேன்.பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து கொப்பளித்தேன்.அவன் கண் விழித்து என்னைப் பார்த்தேன்.
“மணி என்ன”
“எட்டு”
அவனும் எழுந்து கொண்டான்.
“எப்போது வருகிறார்கள்”
“இன்னைக்கு சாய்ந்திரம் மைசூர் எக்ஸ்பிரஸூல ஆம்பூர்ல ஏறுவாங்க.ராத்திரி எட்டு மணிக்கு கண்டொண்மண்டுல நிக்கும்.போய் கூப்பிட்டு வரனும்”
“உன்கிட்ட கார் இருக்கா”
“இல்ல.ஓலா தான் புக் பண்ணணும்”
“நான் கார் எடுத்து வரவா”
“உன்கிட்ட கார் இருக்கா.”
“ஆமா.இப்போதான் ஒரு மாசத்துக்கு முன்னாடி கார் வாங்கினேன்.அடிக்கடி மழை பெய்யறதால ஆபிசுக்கு பைக்குல போறது சிரமமா இருக்கு.”
“ஓ”
“நான் கார் எடுத்து வரட்டுமா”
“உனக்கு எதாவது வேலை”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல”
“ஆர் யூ சூவர்”
“நான் வந்தா உனக்கு எதாவது தொந்தரவா”
“இல்ல.நீ சும்மா கேக்குனுமேன்னு கேக்குறியான்னு”
“எனக்கு அப்படியெல்லாம் கேக்க தெரியாதுடா.சரி.ஏன் நீயே ஆம்பூர் போயி கூட்டிக்கிட்டு வரல”
“அவ நீ ஒண்ணும் வரத் தேவையில்லனு சொல்லிட்டா”
“ஓ,அப்படி”
“ஆமாம்.அவளுக்கு எதையும் தனியா அவளே செய்யப் பிடிக்கும்.”
“ம்.ஸ்டாரங் லேடி”
அவன் இளித்தான்.
நான் இரவு ஆறரைப் போல வருவதாகவும் ஒன்றாகச் செல்வோம் என்று யாசரிடம் கூறிவிட்டு வீடு திரும்பினேன்.யாசர் மொட்டை மாடியிலிருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான்.நான் தனியாக நடக்க ஆரம்பித்தேன்.அவன் இருந்த தெருவிலிருந்து நடந்து பார்க்கை கடந்து இடது பக்கம் திரும்பினால் வீடு.வழியில் மைதானத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.நான் அங்கேயே நின்று வெகு நேரம் அவர்களின் ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்.
- மணல் வீடு இதழில் பிரசுரமான சிறுகதை