கதை நிலைகள்


கதைகளை தன்னிலை,முன்னிலை , படர்க்கையில் எழுதலாம்.

தன்னிலை

ஒரு கதையின் துவக்கத்தில் "என் அம்மா நேற்று இறந்துவிட்டார்.நான் ஊருக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பினேன்."  என்பதும்

"ராஜனின் அம்மா நேற்று இறந்துவிட்டார்.ராஜன் செய்தி கிடைத்தவுடன் ஊரிலிருந்து கிளம்பினான்" என்பதும் முற்றிலும் வித்யாசமான பாதிப்பை ஏற்படுத்துபவை.


தஸ்தாயெவ்ஸ்கியின் நிலைவறையிலிருந்து குறிப்புகள் தன்னிலையில் எழுதப்பட்ட நாவல்.திரைப்படத்தில் இதை Point of View ஷாட்டுடன் ஒப்பிடலாம்.இதன் செளகரியம் இது கொந்தளிப்பான விஷயங்களை பேச பெரிதும் உதவுபவை.மேலும் புற உலகை பற்றி கவலைப்பட தேவையில்லை.கதை சொல்பவனின் அளவில் புற உலகம் வெளிப்பட்டால் போதுமானது.

முன்னிலை

முன்னிலையில் ஆசிரியர் நம்மை பார்த்து பேச ஆரம்பித்து விடுகிறார்.

"என்ன சார் , எப்படி இருக்கீங்க.சாப்டாச்சா.நான் இன்னும் சாப்படல. இங்க மூணு வேல சாப்படறவங்கள மனசுல வெச்சே எல்லாத்தையும் முடிவு செய்றாங்க.நான் உங்கள சொல்லல.பொதுவா சொன்னேன்.அப்பறம் இங்க நல்ல மழை.வெளிய கூட போக முடியல.இன்னிக்கு மத்தியமும் சாப்படல.உங்களுக்கு எப்படி.நல்லா சிக்கன் பிரியாணி சாப்டுட்டு தூங்க போற மாதிரி தெரியுது"

இப்படி கதையை வாசகனை நேரடியாக பார்த்து பேசுவது போல எழுதுவது முன்னிலை.ஆல்பர் காம்யூவின் நாவலான வீழ்ச்சி , முழுக்க முழுக்க முன்னிலையில் எழுதப்பட்டது.இது கேமிராவை ஒருவர் முன் வைத்து அவரை நேரடியாக கேமிராவை பார்த்து பேச வைப்பது போல.இது வாசகரிடம் இடம் காலம் குறித்த மயக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது.ஆனால் மிக குறைந்த அளவிலேயே இது பயன்படுத்தப்பட்டுள்ளது.ஒரு பொது சிக்கலை பேச இந்த உத்தி பெரிதும் பயன்படும்.

படர்க்கை 

நாம் வாசிக்கும் பெரும்பாலும் கதைகள், நாவல்கள் படர்க்கையில் எழுதப்பட்டவைதான்."அவனது அம்மா இறந்துவிட்டள்.அவன் துயரத்தில் ஆழ்ந்திருந்தான்".இங்கே ஆரம்பித்து அவன் வடபழனியிலிருந்து கோயம்பேடுக்கு செல்லும் போது அந்த நகரம் , அதன் இரைச்சல் ஆகியவற்றை புறவயமாக விளக்க படர்க்கையில் கதை சொல்வது பெரிதும் உதவும்.திரைப்படத்தில் point of view shot,monologue உத்தி போன்றவை தவிர்த்து அனைத்து ஷாட்களும் படர்க்கை தன்மையினலானவைதான்.

எங்கே எதை பயன்படுத்த வேண்டும் என்பதில் ஒரு எழுத்தாளனின் வெற்றி இருக்கிறது.

No comments: