முகமூடி





சமீபத்தில் முகமூடி திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்தேன்.இந்தப்படம் வந்த போது பரவலாக எல்லோரும் கிண்டல் செய்தார்கள்.நான் வாசித்தவரை அபிலாஷ் உயிர்மை இதழில் எழுதிய விமர்சனம் அந்த திரைப்படத்தை பொருட்படுத்தி அதன் மெய்யிலை பற்றி ஒரு அற்புதமான பார்வையை அளித்திருந்தது.படத்தை பார்க்கும் போது ஒரு விஷயம் புரிந்தது.இது அடிப்படையில் குழந்தைகளை மனதில் வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்றே தோன்றுகிறது.தற்காப்புக்கலை குறித்த ஒரு ஆர்வத்தை குழந்தைகளின் மனதில் உருவாக்குவது இந்த திரைப்படத்தின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.மிகவும் தீவிரமான ஒரு திரைப்படத்தை எடுக்கத்தெரியாதவர் அல்ல மிஸ்கின்.அவரின் அஞ்சாதே , சித்திரம் பேசுதடி போன்ற திரைப்படங்களோடு ஒப்பிடுகையில் இந்த திரைப்படத்தில் எங்கும் பெண்கள் மீதோ குழந்தைகள் மீதோ வன்முறை நிகழ்த்தப்படவில்லை.கொலைகளும் காட்டப்படுவதில்லை.இரண்டு தாத்தாக்கள்.ஒரு கூன்விழுந்த உதவியாளன்.வேலை இல்லாத இளைஞன்.ஒரு குங்பூ மாஸ்டர்.கொள்ளைகூட்டத்து தலைவன்.இங்கே நரேன் கறுப்பு நிற உடையணிந்து மிகப்பெரிய கறுப்பு நிறத்திலான இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு காட்சி வரும்.அது ஒரு கார்டூன் காட்சியை போலத்தான் இருந்தது.அதே போல நரேன் பேசும் வீடியோ காட்சியும் அப்படியான தோற்றத்தைத்தான் ஏற்படுத்தியது.மேலும் இறுதிக்காட்சியில் தாத்தாக்கள் மாறுவேடத்தில் வரும் காட்சி, கதாநாயகனுக்கு பேட்மேன் போன்ற உடை எல்லாமே ஒரு கேலிச்சித்திரத்தின் தண்மையோடுதான் எடுக்கப்பட்டிருக்கிறது.ஆனால் இந்த திரைப்படத்தின் முக்கிய விஷயம் தற்காப்புக்கலை.தற்காப்புக்கலை என்ற அளவில் மட்டுமே குங்பூவை பற்றி சொல்லாமல் அதில் உள்ளூறைந்திருக்கும் ஆன்மிகத்தையும் இந்த திரைப்படம் பேசுகிறது.லீயின் மாஸ்டர் மிக எளிய வாழ்க்கையத்தான் வாழ்கிறார்.அவர் அந்த கலையை வைத்து எந்த பணத்தையும் சம்பாதிக்கவில்லை.மேலும் லீயின் குரு அவனுக்கு சொல்லிக்கொடுக்கும் வடிவத்தை அவன் இறுதிக்காட்சியில் நரேனுக்கு எதிராக பயண்படுத்துகிறான்.தன் குருவை கொன்றதை , நண்பனை கொன்றதை பற்றி சொல்லி லீயை கோபப்படுத்துகிறான் நரேன்.வன்மம் கொள்ளும் போது சமநிலை குலைகிறது.சமநிலை குலையும் போது எதிரியை எளிதாக வீழ்த்தலாம்.ஆனால் லீ பாலத்தின் மேல் நின்று சமநிலையை அடைகிறான்.அவன் தான் அதுவரை கற்ற கலையின் மூலமாக ஒரு ஆன்மிக மெய்மையை கண்டடைகிறான்.அதுவே இந்த திரைப்படம் அளிக்கும் முக்கிய விஷயம்.அதை குழுந்தைகளுக்கு தற்காப்புகலை குறித்த ஒரு விருப்பத்தை உருவாக்க வேண்டுமென்பதற்காக சற்று கார்டூன் வடிவத்தில் உருவாக்கியிருப்பதாக தோன்றுகிறது.

தங்க மீன்கள்



கற்றது தமிழின் பிரபாகரனை விட தங்க மீன்களின் கல்யாணி தன்னை சுற்றியுள்ள மனிதர்களை நன்றாக புரிந்துகொள்கிறான்.அவனுக்கு யார் மீதும் புகார் இல்லை.கல்யாணி விமான நிலையத்தில் தன் தங்கையிடம் பேசிவிட்டு சென்றபின் அவளின் முகம் அண்மை காட்சியில் பதிவுசெய்யப்பட்டு இருக்கும்.கல்யாணிக்கு அவளின் தங்கை மீது எந்த புகாரும் இல்லை.தன்னை அறைந்துவிடும் தந்தை மீது கூட புகார் இல்லை.பார்வையாளர்களுக்கும் கல்யாணியை எல்லோரும் ஏளனம் செய்கிறார்கள் என்றோ புண்படுத்துகிறார்கள் என்றோ எண்ணம் ஏற்படும் வகையில் காட்சியில் அமைக்கப்படவில்லை.கல்யாணியின் தந்தை ‘அவன் மிகவும் நல்லவன், திரும்ப வருகையில் கொஞ்சம் கெட்டவனாகத்தான் வரட்டுமே’ என்று சொல்வார்.கல்யாணி லெளகீகமானவனாக மாறும் சித்திரமும் இந்த கதையில் இருக்கிறது.தன் குழந்தையை சித்ரவதை செய்யும் பள்ளி அமைப்பிலிருந்து மாற்றி அவளை அரசு பள்ளியில் சேர்க்கும் இடம் கூட அவன் உண்மையில் வாழ்வின் யதார்தத்தை புரிந்துகொள்ளும் இடம்தான்.

ஸ்டெல்லா மிஸ்ஸூம் பள்ளியும் கூட குற்றம் சொல்வதற்கு இல்லை என்பதைத்தான் எவிட்டா மிஸ் கதாபாத்திரம் உணர்த்துகிறது.இன்று மாறிவரும் பெருநகர அமைப்பின் சங்கிலியில் ஒரு கண்ணிதான் பள்ளிக்கூடங்கள்.சுதந்திரமான சிந்தனையும் வெளிப்பாடும் இந்த அமைப்பிற்கு தேவையில்லை.பள்ளியில் ஒரு குழந்தையின் உடல் ஒடுக்கப்படுகிறது.அந்த குழந்தை தன் இடத்தை விட்டு நகராமல் அமர வைப்பதற்கான முயற்சிதான் பள்ளியின் முக்கிய பயிற்சி.சுதந்திரமற்ற வெளியும் சுவர்களும் அவர்கள் பிற்காலத்தில் ஒரு அலுவலகத்தில் எந்த படைப்பூக்கமும் அற்ற வேலையை செய்ய வேண்டியதன் அவஸ்தையை எளிதாக்குவதற்கான ஒரு வழிமுறை.கல்யாணி தனியார் பள்ளியிலிருந்து அரசு பள்ளிக்கு தன் குழந்தையை மாற்றுவது இந்த உலகமயமாக்கல் சங்கிலியின் கண்ணியாக தன் பிள்ளை மாற வேண்டாம் என்பதை உணரும் தருணம்.

பாத்திரங்களுக்கு ஈயம் புசும் வேலை உள்ளூரில் நலிவடைந்து வருவதால் கல்யாணி பெருநகரத்திற்கு சென்றே ஆக வேண்டிய அவசியம்.இன்றைய பெருநகர அமைப்பின் மனிதர்களாக மாறுவதற்காக நடத்தப்படும் பள்ளிகளின் அவசியம்.அப்படிப்பட்ட பள்ளியில் படிக்கும் செல்லம்மா.அவளுக்கு பெரிதாக பிரச்சனைகள் இல்லை.ஆனால் dyslexia போன்று கற்றுக்கொள்வதில் அவளுக்கு பிரச்சனைகள் இருக்கிறது.இங்கும் ஒரு விஷயம் இருக்கிறது.அவள் மற்ற பிள்ளைகள் போல இல்லை.அவளுக்கு சற்று வேறு விதமாக சொல்லித்தரவேண்டியிருக்கிறது.அத்தனை பெரிய பள்ளியில் அவளின் பிரச்சனைகளை கேட்டு ஆராய்ந்து அவளுக்கான வழிகளை உருவாக்கும் பொறுமை யாருக்கும் இல்லை.இன்று எல்லாமே ரெடிமேட் தான்.அந்த ரெடிமேட் அளவுக்கு கீழேயோ மேலேயோ நீங்கள் இருந்தால் தனிமைபடுத்தப்படுவீர்கள்.ஆக செல்லம்மா , கல்யாணி ஆகிய இருவரும் இன்றைய அமைப்பின் தேவைக்கு ஏற்ப தங்களை வடிவமைத்துக்கொள்ள இயலாமல் தவிக்கிறார்கள்.ஒரு கட்டத்தில் கல்யாணி தானும் சரி செல்லம்மாவும் சரி தங்களை அப்படி வடிவமைத்துக்கொள்ள தேவையில்லை என்பதை உணர்வதுதான் அரசுப்பள்ளியில் செல்லம்மா சேரும் இடம்.அவள் அங்கு குளத்தின் தங்க மீன்களை பார்க்கிறாள்.மறுபடியும் தன் குழந்தைமையை மீட்டெடுக்கிறாள்.இனி அவள் திருடப்போவதில்லை.கல்யாணி செல்லம்மா நாளை வந்து சேரவேண்டிய பெருநகர வேலைக்காக இன்று அங்கு போய் கஷ்டப்படதேவையில்லை.அந்த சிற்றூரே போதும்.இது தங்க மீன்களின் ஒரு முக்கிய இழை.

இந்த படத்தின் விளம்பரங்கள் மிகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.ரஜினிகாந்த் தன்னுடைய பாராட்டு விழாவில் பங்கேற்க வேண்டுமென்று எஸ்.ராமகிருஷ்ணன் ஆசைப்படும் போது ,இலக்கிய நூல்கள் சினிமா இயக்குனர்களால் வெளியிடப்படும் போது, ஜெயமோகன் அப்துல் கலாம் கையால் விருது வாங்கும் போது , இத்தகைய விளம்பரங்களும் தவறில்லைதான்.மேலும் இன்றைய சூழலில் பெரிய அளவிலான விளம்பரங்கள் இல்லாமல் ஒரு திரைப்படம் திரைக்கு வந்ததா என்று கூட அறியமுடியாது.

மாற்று சினிமா : நிஜமும் நிழலும்







வெங்கட் சாமிநாதன் எழுதிய அக்ரஹாரத்தில் கழுதை திரைக்கதையில் பேராசிரியர் சென்னையில் தன் வீட்டில் கழுதையை பராமரிக்க முடியாததால் அதை சென்னையிலிருந்து தன் கிராமத்திற்கு ரயிலில் கொண்டுசெல்வதாக ஒரு காட்சி இருக்கும்.அதே ஜான் ஆப்ரகாம் இயக்கிய அக்ரஹாரத்தில் கழுதை திரைப்படத்தில் அது பேருந்தாக மாறியிருக்கும்.மாற்று சினிமாவின் முக்கிய பிரச்சனை திரைக்கதை திரைப்படமாக மாறும் போது நிறைய நடைமுறை சிக்கல்களை அது சந்திக்க நேர்கிறது என்பதுதான்.புதுமைப்பித்தன் எழுதிய ஒரு சிறுகதையின் பெயர் நிசமும் நிழலும்.ஒரு எழுத்தாளர் பதிப்பாளரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார் என்பதையும் உண்மையில் எவ்வாறு நடந்து கொள்ள முடிகிறது என்பதையும் சொல்லும் கதை.மாற்று சினிமா முயற்சிகளும்  அப்படியானதுதான்.ஒரிரு வருடங்களுக்கு முன் கிரிஷ் காசரவள்ளி இயக்கிய கூர்மாவதாரம் படத்தை பார்த்தேன்.குறைந்த செலவில் எடுக்க வேண்டிய அவஸ்தை இயக்குனருக்கு இருந்திருக்கிறது என்பதை நாம் அதில் எளிதாக உணரமுடியும்.

வெகுஜன சினிமாவாக இருந்தாலும் மாற்று சினிமாவாக இருந்தாலும் இரண்டிற்கும் கிட்டத்தட்ட அதே தொழில்நுட்ப கலைஞர்கள் தேவைப்படுகிறார்கள்.நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் , படப்படிப்பு தளம், உணவு , ஆடை வடிவமைப்பு, போக்குவரத்து என்ற அனைத்து தளங்களிலும் வேலை ஒரே போல இருக்கிறது.இந்த தொழில்நுட்ப கலைஞர்கள் , துணை நடிகர்கள் எல்லோரும் சங்கங்களோடு இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.ஆக மாற்று சினிமா உருவாக்கத்திலும் அவர்களிடமிருந்து வேலையை பெற அதே ஊதியத்தைத்தான் ஒருவர் தர வேண்டும்.குறும்படம் , ஆவணப்படங்கள் போன்றவற்றில் நமக்கு தெரிந்தவர்கள் வீட்டில் , அலுவலகத்தில் என்று எடுத்துவிடலாம்.ஆனால் முழு நீளத் திரைப்படத்தில் அத்தகைய விஷயங்கள் சாத்தியமில்லை.அதிகப்பட்சம் காமிரா செலவு , படத்தொகுப்பு செலவு, மாற்று சினிமாவில் ஆர்வம் கொண்ட சில நடிகர்கள் கிடைத்தால் நடிகர்கள் செலவு ஆகியவற்றை ஒரளவு குறைக்கலாம்.மற்றபடி ஒரு நாளின் Production cost குறைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.அதாவது இயங்கிவரும் மைய சினிமாத்துறையின் மனிதர்களின் உதவியில்லாமல் வெளியிலிருந்து ஒரு முழு நீளத்திரைப்படத்தை உருவாக்குவது இன்றைய காலத்திலும் அவ்வளவு எளிதல்ல.மதுபானக்கடை படம் எடுக்கப்பட்டதும் கூட மைய சினிமாத்துறையின் தொழில்நுட்ப கலைஞர்களின் துணையோடுதான்.

இன்றும் திரைப்படத்திற்கு செல்வதுதான் பெரும்பாலும் முக்கிய கேளிக்கையாக இருக்கிறது.மாற்று திரைப்படங்கள் என்று அடையாளப்படுத்தப்படும் திரைப்படங்களையும் திரையிட திரையரங்குகள் தேவைப்படுகின்றன.வெகுஜன சினிமா திரையிடப்படும் திரையரங்குகளில் இவற்றை திரையிட முடியாது.திரையரங்குகள் கிடைக்காது.அப்படியென்றால் மாவட்டம் தோறும் பிரத்யேகமாக இத்தகைய மாற்று திரைப்படங்களை திரையிடுவதற்கான திரையரங்குகளை உருவாக்க வேண்டியது முக்கிய விஷயம் ஆகிறது.நூறு பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்படும் திரையரங்குகள் ஒரு சர்வரோடு இணைக்கப்பட்டு குறும்படங்கள் , ஆவணப்படங்கள் , முழூ நீள திரைப்படங்கள் ஆகியவை திரையிடப்படலாம்.பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படலாம்.அந்த வருமானத்தில் அரங்குகள் பராமரிக்கப்படலாம்.ஆனால் இது எந்தளவுக்கு சாத்தியம்.இன்று இத்தகைய திரைப்படங்களை பார்க்க யார் விரும்புகிறார்கள்.அப்படியே விரும்பினாலும் இணையத்தில் எளிதாக பார்த்துவிடலாம்.

ஆக, உருவாக்குவது, விநியோகிப்பது, திரையிடுவது ஆகிய மூன்று தளங்களிலும் எந்த பொருளாதார சிக்கல்களும் இல்லாமல் ஒரு மாற்று சினிமா உருவாக வேண்டுமென்றால் அதற்கு ஒரு மாற்று உலகம்தான் வேண்டும்.ஏனேனில் திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் , நடிகர்கள் குறைந்த ஊதியத்தில் நடிக்கவும் வேலை செய்யவும் விரும்பினாலும் மைய வெகுஜன சினிமா துறையில் அதிக ஊதியம் கிடைக்கும் என்கிற போது அதை நோக்கித்தான் அவர்கள் செல்ல முடியும்.அவர்கள் குறைந்த ஊதியத்தில் தொடர்ந்து இருக்க வேண்டுமென்றால் அவர்களுடைய தேவைகளையும் குறைந்த செலவில் முடித்துகொள்வதற்கான மாற்று உலகம்தான் வேண்டும்.ஆனால் அப்படி ஒன்று எங்கும் எப்போதும் சாத்தியமில்லை.ஆக அவர் அதிக நாட்கள் மாற்று சினிமாவிற்கு என்று ஒரு வேலை உருவாக்கப்படும் அமைப்பில் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை.டெல்லியில் துவங்கப்பட்ட தேசிய நாடகப்பள்ளியில் பயின்ற பலர் பின்னர் சினிமாவில்தான் நடித்தார்கள்.அதுதான் யதார்த்தம்.உண்மையில் எத்தகைய தீவிர சினிமாவை எடுக்க விரும்பினாலும் அதை இந்த மைய சினிமாத்துறையின் அமைப்பிற்குள்தான் செய்ய இயலும்.வெளியிலிருந்து ஒரிரு படங்கள் செய்யலாம்.ஆனால் தொடரச்சியாக ஒரு இயக்கம் போல செய்வது சாத்தியமில்லை.சாத்தியமான ஒரு விஷயம்,குறும்படங்கள் , ஆவணப்படங்கள், முழு நீளத்திரைப்படங்கள் ஆகியவற்றை திரையிட சில திரையரங்குகளை துவங்கலாம்.ஆனால் அதை செய்வது கூட அத்தனை எளிய காரியம் அல்ல.கேரளாவில் ஏ.கே.கோபாலன் இந்தியன் காபி ஹவுஸ் உருவாக்க செய்த முயற்சிகள் போல இங்கு பெரிய இயக்கமே உருவாக வேண்டும்.அப்போதுதான் அது சாத்தியமாகும்.