மறுபிறப்பு



உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு

மறுபிறப்பு குறித்த பெளத்தத்தின் சாரம் உள்ளடக்கியிருக்கும் குறள்.பெளத்தம் மறுபிறப்பு குறித்து பேசும் போது முதலில் மரணத்தை இரண்டாக வகுக்கிறது.அவை பொருள் மற்றும் எண்ணம்.பொருள் அழிந்து பஞ்சபூதங்களில் கலந்து விடுகிறது.எண்ணம் அழிவதில்லை.அது மறுபிறப்பு கொள்கிறது.அதற்கான கருவை கண்டடைகிறது.பெற்றோர் , மூத்தோரின் உடல் சார்ந்த இயல்புகளை , நோய்களை குழந்தைகள் பெற முடியும் என்றாலும் எண்ணம் பெற்றோரின் , மூத்தோரின் வழி வந்ததாக இருக்க வேண்டும் என்றில்லை என்பது இதில் உள்ள முக்கிய விஷயம்.

எண்ணம் , மனம் என்று நாம் சொல்பவற்றை  பெளத்தத்தில் விஞ்ஞானம் என்று சொல்கிறார்கள்.
விஞ்ஞானம் ஐந்து அடிப்படை புலனுணர்வுகள், மன உணர்வுகள், பகுத்து ஆராயும் அறிவு, புத்தி ஆகிய ஏழு உணர்வுகளை உள்ளடக்கியது.மேலும் எட்டாவதாக ஆலய விஞ்ஞானம் விளக்கப்படுகிறது.இது இச்சாசக்திகள் மற்றும் குணங்களாகிய சக்திகளின் கூட்டாக தொகுக்கப்படுகிறது.

இப்போது நாம் அதிகம் உபயோகப்படுத்தும் கார்ல் யுங் சொன்ன கூட்டு நனவிலி என்பதுடன் ஆலய விஞ்ஞானத் இணைத்து பார்க்கலாம்.பெளத்தம் எதையும் தனித்த பொருளாக பார்க்கவில்லை.ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை சார்ந்து இருக்கிறது என்கிறது பெளத்தம்.எந்த மனமும் தனித்த இருப்பு அல்ல.ஆலய விஞ்ஞானம், மகாதர்மம் என்பவை எல்லாம் வெறும் சுட்டு பெயர்கள் தான்.

அதனால் இந்த மறுபிறப்பு பற்றி பேசும் போதும் அது அந்த விஞ்ஞானத்தின் தொடர்ச்சியை பேசுகிறது.மேலே உள்ள குறளில் வரும் உறங்குவது போல சாக்காடு உறங்கி விழிப்பது போல பிறப்பு என்பது அந்த தொடர்ச்சியை தான் பேசுகிறது.இது நிலையாமை என்ற அதிகாரத்தில் இருந்தாலும் இது தொடர்ச்சியை குறிக்கிறது.மரணமும் பிறப்பும் தொடர் நிகழ்வுகள்.அவற்றின் இடையில் இருக்கும் தருணங்கள் நிலையற்றவை.

மறுபிறப்பு குறித்து பேசும் போது மக்களை பெற்றெடுப்பது, அறிவு , கலைகளை விட்டுச் செல்வது ஆகியவையும் மறுபிறப்பாக பார்க்கப்படுகிறது.இதனுடன் ஒரு மனிதன் இறந்த பின்னர் அந்த கூட்டு உணர்வின் தொடர்வும் பெளத்தத்தில் மறுபிறப்பாக பார்க்க படுகிறது.

இதன் அடிப்படையில் பார்க்கும் போதும் பெற்றோர் மற்றும் மூத்தோரின் அறிவு தொடர்ச்சியாக குழந்தைகள் இருக்க வேண்டும் என்பதில்லை என்பது புலனாகிறது.பெளத்தம் பெற்றோர், மூத்தோரிலிருந்து குழந்தைகள் பெறுவது உடல் வழி தொடர்ச்சி மட்டுமே என்கிறது.இந்த சாதியை சேர்ந்தவருக்கு இந்தக் குணம், இவரின் மகன் என்பதால் இவன் இப்படித்தான் இருப்பான் என்பது போன்ற வாதங்கள் இதன் வழி இல்லாமல் ஆகிறது.இது எந்த அளவு உண்மை என்பது குறித்து எனக்குத் தெளிவில்லை.ஆனால் எனக்கு இந்த பார்வை மிகவும் பிடித்திருந்தது.இதை படித்த போது ஒரு பெரிய விடுதலை உணர்வை அது அளித்தது.ஒரு கூட்டத்திற்கு, மக்கள் தொகுப்பிற்கு பிறப்பால் ஒரு குணத்தை அளிக்கும் பாவச் செயலை இது வீழ்த்துகிறது.இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.நான் பெளத்தத்தின் வழி பெற்ற முக்கியமான மெய்யுணர்வாக இதையே கருதுகிறேன்.


 
 

No comments: