உயர்கல்வி


ஜெயமோகனின் பத்து லட்சம் காலடிகள் சிறுகதை சுவாரசியமான சிறுகதை.சிக்கலற்ற எளிய கதை.கதைகளில் பெரும்பாலும் ஒரு தளத்தை அமைத்துவிட்டால் மேற்கொண்டு கதையை கொண்டு செல்வது அத்தனை கடினமானதல்ல.இங்கே ஒரு போலீஸ் அதிகாரி கடந்து வந்த வழக்கும் பத்தேமாரி படகின் தொழில்நுட்பமும் அதை செய்யும் சமூகத்தினரின் வரலாற்றையும் இணைத்து ஒரு அடித்தளத்தை உருவாக்கும் போது எளிதாக கதையை மேலே கொண்டு செல்ல முடிகிறது.கதை படர்க்கையில் இல்லாமல் தன்னிலையில் இருப்பது அதை மேலும் எளிதானதாக ஆக்குகிறது.தரவுகளை அடுக்கி இறுதியில் ஒரு திருப்பத்தை உருவாக்கும் போது சிறுகதை மேலும் சுவாரசியமானதாக மாறுகிறது.

இந்தக் கதையில் இறுதியில் தன் மகன் கொலை செய்யப்பட்டதை அவர் தந்தை சொல்கிறார்.எனக்கு விஷ்ணுபுரம் நாவலில் சூரியதத்தர் வீரன் என்ற யானைக்கு வைத்தியம் பார்த்தவருக்கும் அந்த யானையை வேலைக்கு அமர்த்திய சிற்பிக்கும் தண்டனை அளிக்கும் இடத்தில் நாடகீயத்தனத்தைDramatic) உருவாக்குவார், அந்த பகுதி நினைவுக்கு வந்தது.கிட்டத்தட்ட ஒரு திரைப்படத்தில் ஒரு வில்லன் அறிமுகமாகும் காட்சி போன்றது சூரியதத்தர் தண்டனை வழங்கும் அந்தக் காட்சி.சினிமாத்தனம் என்ற சொல்லை சிலர் எதிர்மறையாக புரிந்துகொள்கிறார்கள்.மிகவும் டிராமடிக்காக இருக்கிறது என்பதைத்தான் சினிமாத்தனமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.இந்தக் கதையிலும் அந்த தந்தை தன் மகன் கொலை செய்யப்பட்டதையும் அப்படியாக ஒரு நாடகீயத்தருணமாக வெளிப்படுத்துகிறார்.அது சட்டென்று உங்களிடம் வருகிறது.அதுவரை கதையில் அதற்கான எந்த சுவடும் இல்லை.அது குறிப்புணர்த்தப்படவும் இல்லை.அதனால் அது டிராமடிக்கான திருப்பமாக ஆகிறது.பத்தேமாரி படகின் தொழில்நுட்பம், வைகன்களை ஆற்றிலிருந்து எடுத்தது ஆகிய இரண்டுக்குமான குறியீடாக மாறுகிறது.

கைமுக்கு சிறுகதையும் அப்படியான தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.ஆனால் இந்தக் கதையில் முக்கியமாக நான் கருதியது உயர்கல்வி நிறுவனங்களை பற்றி அதில் சொல்லப்பட்டிருப்பதை தான்.அது முக்கியமானது.ரோஹித் வெமூலாவின் மரணத்திற்கு காரணமானது.ஏன் நமது உயர் கல்வி நிறுவனங்களில் உயர்த்தப்பட்ட வர்க்கத்தினருக்கானதாக முழுவதுமாக மாறிக்கொண்டிருக்கிறது.ஏழ்மையான பின்னணியிலிருந்து வாழ்வில் முன்னேறியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.அவர்கள் உயர் கல்வி கற்றார்கள்.நாம் அப்துல் கலாம் பற்றி சொல்கிறோம்.சிவன் பற்றி சொல்கிறோம்.ஆனால் இவை ஒரு காலகட்டம்.தொண்ணூறுகள், இரண்டாயிரத்திற்கு முன்னர் கல்வி கற்றவர்கள்.இன்று அந்த நிலை மெல்ல மாறி வருகிறது.உயர் கல்வி என்பது நகரத்து உயர்த்தப்பட்ட வர்க்கத்து மனிதர்களுக்கானது என்பதாக மாறி வருகிறது.இதை இந்தக் கதை பேசுகிறது.அப்படி இல்லாமல் உயர் கல்வி நிறுவனங்களில் வந்து அமர்பவர்களை சூழல் பாவத்துடன்,ஏளனத்துடன் பார்க்கிறது.இது கொடூரமானது.போகும் நிலை மிகுந்த கவலையை அளிக்கிறது.என்ன பிழை செய்தனர் என் மக்கள்.

No comments: