பஷீரின் புன்னகை




சாரம்மா இடைமறித்து , 'கொஞ்சம் நிறுத்துங்க.உங்கக்கிட்ட ஒண்ணு கேக்கணும்' என்றாள்.
'தாராளமா ஆணையிடு'
'எப்போதிலிருந்து நான் உங்க இதயத்து நாயகி?'
'என்னிக்கோவிலேயிருந்து!'
'இந்த விஷயத்தை ஏன் என்கிட்ட இவ்வளவு நாளா சொல்லல்லே?'
'நான் சொல்லல்லியா? - ஒவ்வொரு நாளும் உன்னை நினைப்பேன்.காதல் கடிதம் எழுதுவேன்'
'அதுக்கப்புறம்?'
'கிழிச்செறிஞ்சிடுவேன்'
'சரி,உங்க இதயத்து நாயகின்னா நான் என்ன சொன்னாலும் நீங்க கேப்பீங்க இல்லையா?'
'என்ன சொன்னாலும் செய்யத் தயார்.யாரையாவது கொல்லணுமா,கொல்றேன்.கடலை நீந்திக் கடக்கணுமா, கடக்கறேன்.உனக்காக நான் சாகக்கூடத்தயார!' உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார் கேசவன்.
'இப்போதைக்குச் சாக வேண்டாம்.எங்கே தலைகீழா நில்லுங்க பார்ப்போம்'
'உண்மையாகவே நிக்கணுமா?'
'ஆமாம்.'
'அதாவது சிரசாஸனம்..இல்லியா?'
'ம்..'
சட்டையைக் கழற்றிய கேசவன் அதை நாற்காலியின்மேல் வைத்தார்.வேஷ்டியை மடக்கிக் கட்டித் தலையைத் தரையில் ஊன்றிக் கால்கள் இரண்டையும் மேல் நோக்கித் தூக்கி நின்றார்.
அவரையே வைத்த கண் எடுக்காமல் பார்த்து நின்ற சாரம்மா மெல்ல முறுவலித்தாள்:
'பேஷ்'
கேசவன் நின்ற கோலத்தில் கேட்டார்: 'சாரம்மா! உனக்கும் என்னைப் பிடிச்சிருக்கு இல்லையா?'
அவள் பதில் ஒன்றும் கூறவில்லை.
கேசவன் மீண்டும் கேட்டார்.
'சாரம்மாவுக்கு வேலை பிடிச்சிருக்கா?'
ஒசையின்றிப் படியில் இறங்கிப் போன சாரம்மா , கீழே இருந்தபடி 'நாளைக்குச் சொல்றேன்...' என்றாள்.
காதல் கடிதம் - வைக்கம் முஹம்மது பஷீர் - தமிழில் சுரா...

மனிதன் கீழ்மையும் தீமையுமான குணங்களாலானவன்.அந்த கீழ்மையை மிக மெல்லிய வகையில் உணர்த்தும் ஆக்கங்கள் இருக்கின்றன.மிக தீவிரமான அதை விசாரணை செய்யும் ஆக்கங்கள் இருக்கின்றன.காம்யுவின் வீழ்ச்சி நாவலைப் போல.பிறரின் கீழ்மை குணங்களை பேசும் போது நமது கீழ்மை குணங்கள் , வக்கிர எண்ணங்கள், ஆபாச உணர்வுகள், பாசாங்குகள், பாவனைகள் என எல்லாவற்றையும் நம்மால் பட்டியலிட முடியும் என்றால் அப்போது நமது கீழ்மையும் பிறிரன் கீழ்மையும் ஒன்றோடு ஒன்று மோதி ஒரு புன்னகை மேலெழும்.அங்கே சண்டையோ,சச்சரவோ ,புகாரோ, கண்ணீரோ, கவலையோ இல்லை.முக்கியமாக கேலிப்புன்னகை இல்லை.மானுடத்தின் மீது உண்டாகும் மிகப்பெரிய கரிசனம்.அப்போது நாம் பஷீரை கண்டடையலாம்.அது பஷீரின் புன்னகை.அந்த புன்னகையோடு பஷீர் தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறு சொல்கிறார்..

மங்களம்
சுபம்...


சம்ஸ்காரா





யு.ஆர்.அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா நாவல் மிகவும் புகழ்பெற்றது.மிகப்பெரிய அளவில் புகழும் அளவுக்கு நிச்சயம் சம்ஸ்காரா ஒன்றும் அத்தனை சிறந்த நாவல் இல்லை.சம்ஸ்காரா நாவலோடு அசோமித்திரனின் பதினேட்டாவது அட்சக்கோடு நாவலை ஒப்பிடும் போது சம்ஸ்காரா ஏன் இத்தனை தூரம் புகழப்பெற்றது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.பதினேட்டாவது அட்சக்கோடு நாவலுக்கும் சம்ஸ்காராவுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன.இரண்டுமே அடையாளத்தை மையப்படுத்துபவை.இரண்டிலுமே மைய கதாபாத்திரம் தன் அடையாளங்களிலிருந்து விலகிச்செல்ல விரும்புகிறது. பிராணேஸாசார்யார் சற்று வயதானவர்.சந்திரசேகரன் பதினேட்டு வயது இளைஞன்.ஆச்சாரியார் வசிப்பது சிவமோகாவில் தூர்வாசபுரம் என்ற கிராமத்தில்.சந்திரசேகரன் செகந்திரபாத் என்ற பெருநகரத்தில் வசிக்கிறான்.ஆச்சாரியார் இறுதியில் தன் அடையாளத்திலிருந்து வெளியேற இயலவில்லை என்பதை உணர்கிறார்.சந்திரசேகரன் தன் அடையாளங்களிலிருந்து வெளியேறி வந்துவிடுகிறான்.

பிராணேஸாசார்யார் தன் வாழ்க்கையில் தன் மரபில் தனக்கு வழங்கப்பட்ட அனைத்து ஒழக்கநெறிகளையும் கடைப்பிடிப்பவர்.நோயால் அவதியுறும் தன் துணைவிக்கு சேவகம் செய்பவர்.தன் தெருவில் தனக்கு முற்றிலும் எதிர் வாழ்க்கை வாழும் நாரணப்பா பிளேக் நோயால் மரணமடைகிறான்.ஆச்சாரியாரின் இல்லாளும்  இறந்துபோகிறாள்.நாரணப்பாவின் பிணத்தை என்ன செய்வது என்பதை அறிந்துகொள்ள மடத்திற்கு செல்லும் அந்த ஊர் மாத்வ பிரமாணர்களில் சிலர் பிளேக் நோயால் இறந்துபோகிறார்கள்.மாருதியிடம் இதற்கு ஒரு விடை கேட்டு தவிக்கும் ஆச்சாரியார் இறுதியில் வயிற்றுப்பசியால் மயங்கி பின்னர் சந்தரி என்ற பெண்ணின் ஸ்பரிசத்தில் முயங்கி முதல் முறையாக தன் ஒழக்கநெறிகளிலிருந்து விடுபட்டு இயற்கையின் முன் மண்டியிடுகிறார்.பின்னர் தன் ஊரை விட்டு விலகி ஆச்சாரியார் மேளிகே என்ற ஊருக்கு செல்கிறார்.அப்போது புட்டன் என்ற வழிப்போக்கன் அவரோடு சேர்ந்துகொள்கிறான்.மேளிகேவில் நடக்கும் திருவிழாவில் உணவருந்துகிறார்.அங்கே நடக்கும் சேவல் சண்டை, ‘ரப்’‘ரப்’ என்ற ஒலி, கள்ளின் நெடி , அந்த மக்களின் கண்கள் இவற்றை பார்க்கும் ஆச்சாரியார் அவைகளிலிருந்து அந்நியப்படுகிறார்.குழப்பத்தில் அவர் மறுபடியும் தூர்வாசபுரம் நோக்கி செல்கிறார்.

ஆச்சாரியாரால் ஆழ்மன அளவில் தன் சாதிய அடையாளங்களிலிருந்து வெளியேற முடியவில்லை.அவருடைய முயற்சி நேர்மையானது.ஆனால் அவர் தோல்வியடைகிறார்.அவரால் அந்த சேவல் சண்டை , போதையேறிய அந்த மக்களின் கண்கள் இதற்கு மத்தியில் வாழ முடியும் என்று தோன்றவில்லை.அவர் பதறுகிறார்.அவர் குழப்பத்தில் தான் செய்தவற்றை ஒப்புக்கொள்ள தன் ஊருக்கு செல்கிறார்.அவர் யாரிடம் சென்று எதை ஒப்புக்கொள்ளப்போகிறார்.அங்கே இருப்பவர்கள் தங்கள் சாதிய மரபுக்கு வெளியே சென்று சிறதளவுவேனும் சிந்திக்க இயலாதவர்கள்.அவர்களிடம் சென்று அவர் எதை ஒப்புக்கொள்ளப்போகிறார்.உண்மையில் அவர் தன் ஊரில் ஒரு செளகரியத்தை உணர்கிறார்.அது அவருடைய பிரபஞ்ச வெளி.அவருக்கு பரிச்சயமான தினசரி வாழ்க்கை.மேளிகேவில் அவர் புதிதாக ஒரு வாழ்க்கையை வாழ ஆரம்பித்தால் அவர் புதிதான ஒரு தினசரி வாழ்வை கற்க வேண்டும்.அந்த வாழ்க்கை முறை சார்ந்த சொற்கள், பழக்கவழக்கங்கள், தெருக்கள், கலாச்சார செயல்பாடுகள் அணைத்தும் வேறாக இருக்கும்.தன் மத்திய வயதில் இதுவரை தான் கற்றதை முழுவதும் தன் ஆழ்மனதிலிருந்து வெளியேற்றி புதிதாக ஒன்றை புகுத்திக்கொள்ள ஆச்சாரியாரால் இயலவில்லை.அந்த தோல்வியை சம்ஸ்காரா நாவலில் அனந்தமூர்த்தி நேர்மையாக முன்வைக்கிறார்.அது முக்கியமானது.

நாம் எத்தனையோ கோட்பாடுகளை பேசலாம், தத்துவங்களை பேசலாம்,அறம் குறித்து பேசலாம்.ஆனால் நம் வாழ்க்கை என்பது தினசரி தினங்களலானது.தினசரி என்பது மலம் கழிப்பதும்,உண்பதும்,புணர்வதும்,உறங்குவதும் விழிப்பதும்,முடிந்தால் உழைப்புதும்தான்.உண்பது, புணர்வது,உறங்குவது,விழிப்பதில் இல்லமும் உழைப்பதில் சமூகமும் வருகிறது.மனிதன் இந்த தினசரி வாழ்வின் செளகரியத்தை மிகவும் விரும்புகிறான்.ஒரு அலுவலகத்தில் பல வருடங்கள் தொடர்ந்து வேலை செய்பவர் அது தன் தினசரி வாழ்வை ஏதோ ஒரு வகையில் செளகரியமானதாக வைத்திருப்பதாலேயே ஊதியம் குறைவாக இருந்தாலும் அதிலேயே தொடர்கிறார்.உண்மையில் எந்த மனிதனுக்கும் மாற்றம் பிடிப்பதில்லை.அவன் நேற்றை போல இன்றும் இன்றை போல நாளையும் இருந்தால் நிம்மதியாக உறங்குவான்.இந்தியாவில் புரட்சி ஏற்பட்டு மாவோயிஸ்டுகள் ஆட்சியை பிடிக்க போகிறார்கள் என்றால் அப்போது நம் சமூகத்தின் முற்போக்கு சிந்தனையாளர்கள் பலரும் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள்.ஏனேனில் அது அவர்களின் தினசரி வாழ்வை பாதிக்கும்.நமது புரட்சி, கிளர்ச்சி,பச்சாதாபங்கள்,அறம் எல்லாம் நமது தினசரி வாழ்வை அதிகம் போனால் அரை மணி நேரம் எடுத்துக்கொள்ளும் என்றால் நாம் அதை அனுமதிப்போம்.ஆச்சாரியார் தன் தினசரி வாழ்வின் செளகரியத்தை உணர்ந்து மறுபடியும் தூர்வாசபுரம் செல்கிறார்.இடையில் அவர் சந்தரியுடன் உறவு வைத்துக்கொள்வதும் , மேளிகே செல்வதும் விபத்துகள்.நாரணப்பாவும் உண்மையில் எந்த கலகமும் செய்யவில்லை.அவன் தனக்கு சாத்தியப்பட்ட செளகரியமான வாழ்வை சந்தரியுடன் வாழ்ந்தான்.அவ்வளவே. 

இங்கே பதினேட்டாவது அட்சக்கோடு நாவலில் சந்திரசேகரன் தன் வயது கூட இல்லாத ஒரு சின்ன பெண்ணிடம் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய மத அடையாளங்களை சுமந்திருப்பதை உணர்ந்தவனாக அந்த சூரியோதையத்தின் போது ஒடுகிறான்.ஆனால் சந்திரசேகரனும் ரயில்வேயில் வேலை செய்யும் தன் தந்தை தனக்கு வழங்கிய தினசரி வாழ்வை வாழ்வதற்கான உழைப்பை மேற்கொண்டு அதே போன்ற செளகரியங்ளோடு வாழ்வான்.இது இந்த இரண்டு நாவல்களையும் இணைக்கும் புள்ளி.சம்ஸ்காரா நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டதும், ஆங்கிலத்தில் ஏ.கே.ராமானுஜத்தால் மொழிபெயர்கப்பட்டதும் இதற்கு அதிக புகழை அளித்திருக்கிறது. இந்த நாவல் ஏன் அதிக புகழை அடைந்தது என்றால் இது மாற்றமின்மையை (Status Quo) வலியுறுத்துகிறது என்பதால்தான்.காந்தி ஏன் ஒரு phenomenon என்றால் சுதந்திர போராட்டத்தில் எந்த அளவுக்கு அவருடைய அக்கறைகள் இருந்ததோ அதே அளவுக்கு மலம் கழிப்பது பற்றியும் உண்பது பற்றியும் இருந்தது.அவர்தான் நம் தினசரி வாழ்வை பற்றி சிந்தித்தார்.அவர் மட்டும் தான் சிந்தித்தார்.

சம்ஸ்காரா - யு.ஆர்.அனந்தமூர்த்தி - மொழிபெயர்ப்பு - டி.எஸ்.சதாசிவம் - அடையாளம் பதிப்பகம் 




தலைமையாசிரியரின் இரங்கல் உரை






வைத்தியலிங்கம் மிகவும் நல்லவர்
வைத்தியலிங்கம் என் உயிர்த்தோழர்
வைத்தியலிங்கம் எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்
இந்த மூக்குக்கண்ணாடியை கூட அவர் தான் மூர்மார்க்கெட்டில் 

வாங்கிக்கொடுத்தார்
நான் செய்நன்றி மறவாதவன்
செய்நன்றிக்கு ஆங்கிலத்தில் Gratitude என்று பொருள்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு என்பது வள்ளுவன் வாக்கு
நான் உண்டு வீசிய வாழைப்பழத் தோல் வழுக்கி வைத்தியலிங்கம் 

மரணமடைந்தார் என்பது துரதிர்ஷ்டவசமானது
வைத்தியலிங்கத்தை இழந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடாக

நூற்றியொரு வாழைப்பழங்களை
கொடுக்க ஆணையிடுகிறேன்
என்று தொண்டை கமறிய தலைமையாசிரியர்
அதற்கு மேல் பேச முடியாமல் தலைப்பாகையை சரிசெய்துக்கொண்டு 

நாற்காலியில்
அமர்ந்து துக்கம் தாளாமல் வாழைப்பழம் சாப்பிட்டார்.


ரஜினிகாந்த்







ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ரஜினிகாந்த் தன் காதலியிடம் நான் காண்டேகர், தி.ஜானகிராமன்,ஜெயகாந்தன் ஆகியோரை மிகவும் விரும்பி படிப்பேன் என்பார்.அதற்கு அவர் காதலி இந்த புத்தகங்களை எல்லாம் எதற்கு படிக்கிறீர்களோ என்பாள்.புரிந்தவர்களுக்கு சொல்லத்தேவையில்லை , புரியாதவர்களுக்கு சொல்லி பிரயோஜனமில்லை என்பார் ரஜினிகாந்த்.நல்ல திரைப்படம்.நல்ல வசனம்.காண்டேகர் என்ற பெயர் தமிழில் அந்த திரைப்படத்தில் மட்டும் தான் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.கதையின் பிற்பகுதியில் ரஜினிகாந்த் எழுத்தாளராகிறார்.அதற்காகத்தான் கதையின் முற்பகுதியில் அவர் சிறந்த வாசகர் என்பதை நிறுவ அந்த வசனம் இடம்பெற்றிருக்கிறது.ஆனால் படத்தில் ஒரிடத்தில் கூட அவர் வாசிப்பது போன்ற காட்சியில்லை.

ரஜினிகாந்த் கன்னடிகர் என்பதால் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்று சுப.உதயகுமார் எழுதியிருக்கிறார்.எனக்கு சுப.உதயகுமாரிடம் கேட்க ஒரு கேள்வி இருக்கிறது.நான் வாணியம்பாடியில் படித்தேன்.அங்கே உருதுவை தாய்மொழியாக கொண்ட இஸ்லாமியர்கள் அதிகம்.அவர்களில் ஒருவர் நாளை அரசியலில் இறங்கி (அது ஏன் அரசியலில் இறங்க வேண்டும், அதென்ன பாதாளத்திலா இருக்கிறது), தமிழக முதலமைச்சராகும் சூழல் உருவாகும் பட்சத்தில் சுப.உதயகுமார் அதை எதிர்ப்பாரா அல்லது ஆதிரிப்பாரா.சுப.உதயகுமாரின் இதுபோன்ற வாதங்கள் வேடிக்கையானவை.சிறுபிள்ளைத்தனமானவை.

உண்மையில் ரஜினிகாந்த் ஆட்சிக்கு வந்தாலும் அல்லது யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவும் தமிழகமும் ஒரே போலத்தான் இருக்க போகிறது.இன்று நம் எல்லோருக்கும் தேவை பணமும் செளகரியங்களும் தான்.அது நமக்கு சாத்தியப்பட இங்கு சந்தைகளும் அதில் நிறைய கடைகளும் உருவாக வேண்டும்.அவ்வளவுதான்.அதைத்தான் காங்கிரஸ் செய்தது.பி.ஜே.பி செய்கிறது.நாளை வேறு யார் வந்தாலும் அதைத்தான் செய்வார்கள்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பரதன் கம்யூனிஸ்ட் கட்சியின் காலம் முடிவடைந்துவிட்டதை சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.உண்மையில் மாற்று பொருளாதார கொள்கைகள் உள்ள ஒரே தரப்பு கம்யூனிஸ்ட்கள்தான்.அதற்கும் பிரகாஷ் காரத் மூடுவிழா நடத்திவிட்டார்.காந்திய தரப்புகள் கட்சி அரசியலில் இல்லை.சுப.உதயகுமார் போன்றவர்கள் காந்தியம் பேசுவது போல தோன்றும் போது அவர் தமிழ் தேசியம் பேசுகிறார்.தமிழ் தேசியம் பேசுகிறார் என்று நினைக்கும் போது ஆம் ஆத்மியில் இணைந்து தேர்தலில் நிற்கிறார்.வேடிக்கைத்தான்.

ஸ்டீபன் ஹாக்கிங் தன் புத்தகம் ஒன்றில் 'Philosophers of Science'  என்பவர்களை இயற்பியலாளர்களாக முடியாமல் தோற்றுபோனவர்கள் என்று கிண்டல் செய்கிறார்.அது போலத்தான் இங்கு பணம் வேண்டாம் , செளகரியங்கள் வேண்டாம் என்று கூச்சல் போடும் நிறைய பேரும்.எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.பீடிக்கப்பட்டவர்களின் கதை நாவலில் இது போன்று முற்போக்கு சிந்தனையாளர்களை பயங்கரமாக பகடி செய்திருக்கிறார் தஸ்தாவெய்ஸ்கி.

உண்மையில் பி.ஜே.பிக்கும் காங்கிரஸூக்கும் வித்யாசமில்லை.கலாச்சார தளத்தில் சில வேறுபாடுகள் இருக்கலாம்.இருக்கிறது.மற்றபடி எந்த வித்யாசமுமில்லை.மாற்று தரப்புகள் நிச்சயம் இருக்கின்றன.ஆனால் இன்று அதை முன்வைப்பர்களுக்கே இந்தியாவோ , தமிழகமோ தனக்கே என்று தனியான ஒரு பொருளாதார கொள்கையை வைத்துக்கொள்ள முடியாது என்று தெரியும்.உலகம் தழுவிய மாற்று பொருளாதார கொள்கை உருவாகி வரும்போதுதான் உண்மையான மாற்றம் சாத்தியம்.நிச்சயம் இன்றைய சூழலில் அது சாத்தியமில்லை.


பில்லி பிஸ்வாஸின் விசித்திர வழக்கு







பில்லி பிஸ்வாஸ் மானுடவியல் துறையில் உயர் கல்வி பெற்று அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிகிறான்.பில்லி பிஸ்வாஸின் தந்தை பிஸ்வாஸ் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி.பிஸ்வாஸின் நண்பன் ரொமி.ரொமியும் பிஸ்வாஸூம் அமெரிக்காவில் ஒரு கோடைக்காலத்தில் ஒன்றாக தங்குகிறார்கள்.அவர்களுடைய நட்பு பிஸ்வாஸீன் மரணம் வரை தொடர்கிறது.கல்லூரியில் மாணவர்களை அழைத்துக்கொண்டு சத்தீஸ்கர் பகுதியில் இருக்கும் பழங்குடியினரை புரிந்துகொள்வதற்காக செல்லும் பிஸ்வாஸ் அங்கே காணாமல் போய்விடுகிறான்.அவனை மாவட்ட ஆட்சியராக இருக்கும் ரொமி தன் நண்பர்களின் துணையோடு இரண்டு வருடங்களாக தேடுகிறான்.அந்த பகுதியின் பழங்குடியின மூப்பரை அழைத்து விசாரிக்கிறான்.பிஸ்வாஸ் பற்றிய எந்த தடயமும் கிடைக்கவில்லை.அவன் புலியால் வேட்டையாடப்பட்டு மரணித்திருக்கலாம் என்று அந்த வழக்கை மூடுகிறார்கள் காவல் துறையினர்.

சில வருடங்கள் கழித்து , அதாவது பிஸ்வாஸ் இறந்துபோனதாக அனைவரும் ஏற்று பத்து வருடங்கள் கழித்து அவனை ரொமி சத்தீஸ்கரில் ஒரு வனப்பகுதியில் பார்க்கிறான்.ரொமி அந்த பகுதியின் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று ஆறு மாதங்களான நிலையில் மிகுந்த வரட்சியால் பாதிக்கப்பட்டியிருக்கும் அந்த பகுதிகளை பார்த்தவாறு ஜீப்பில் சென்றுகொண்டிருக்கும் போது பிஸ்வாஸ் பழங்குடியினர் கூட்டத்திலிருந்து சட்டென்று தாவி முன்வந்து ரொமியோடு பேசுகிறான்.அதிர்ந்து போகும் ரொமி பின்னர் பிஸ்வாஸின் கதையை கேட்கிறான்.

பிஸ்வாஸ் டெல்லியில் பேராசிரியராக இருக்கும் போது மீனா என்ற பெண்னை திருமணம் செய்துகொள்கிறான்.ஒரு ஆண் குழந்தையும் பிறக்கிறது.ரொமியும் சீது என்ற பெண்னை திருமணம் செய்துகொள்கிறான்.ஆனால் பிஸ்வாஸின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாக இருக்கிறது.மீனா பணம் , பதவி, அதிகாரம் , செளகரியங்கள் ஆகியவையே மகிழ்ச்சியான வாழ்க்கை என்று வளர்க்கப்பட்டவள்.அவளால் பிஸ்வாஸின் துயரரும் மனதை பிஸ்வாஸ் எவ்வளவு கதறி அழுதாலும் புரிந்துக்கொள்ளமுடிவதில்லை.ஒரு மனிதன் கதறி அழும் போது அவன் வேண்டுவது தன் பிரச்சனைக்கான தீர்வை அல்ல.மாறாக அவன் வேண்டுவது தன் பிரச்சனையை செவிகொடுத்து கேட்பதும் ,புரிந்துகொள்வதும்தான்.மீனாவால் பிஸ்வாஸூன் பிரச்சனையை புரிந்துகொள்ள முடியவில்லை.பிஸ்வாஸ் ரீமா என்ற பெண்னோடு திருமணத்திற்கு வெளியே உறவு கொள்கிறான்.தன் துயரத்தை அவளிடம் சொல்லி தன் மீது பச்சாதாபத்தை உருவாக்குகிறான்.அவள் தன்னொடு வைத்துக்கொண்ட உறவை விட அவளிடம் தான் உருவாக்கிய பச்சாதாப உணர்வுதான் தனக்கு மிகுந்த கிளர்ச்சியை ஏற்படுத்தியது என்று பின்னர் பிஸ்வாஸ் ரொமியுடன் நேர்ப்பேச்சில் சொல்கிறான்.ரீமாவுடான உறவு ஏற்படுத்தும் குமட்டல், மறுபுறம் மீனாவின் புரிதலின்மை, வாழ்வின் வெறுமை அவன் காணாமல் போகிறான்.அவன் பழுங்குடி பெண் பிலாசியாவுடன் உடல் உறவு கொள்கிறான்.பின்னர் அவளை திருமணம் செய்துக்கொண்டு அங்கேயே பத்துவருடங்களாக வாழ்கிறான்.

பழங்குடி மக்கள் அவன் வருகைக்கு பின்னரே அந்த மலைப்பிரதேசம் சந்திர ஒளியில் இரவில் பிரகாசிக்கிறது என்று நம்புகிறார்கள்.ஒரு கோயிலை கட்டுவதற்காக தன் வாழ்நாளின் பெரும்பகுதியை செலவிட்ட தங்கள் இனக்குழுவின் மன்னரின் தொடர்ச்சி பிஸ்வாஸ்தான் என்று அந்த மக்கள் நிச்சயமான எண்ணம் கொள்கிறார்கள்.பிஸ்வாஸ் ஒரு முறை புலியை நேருக்கு நேர் சந்திக்கிறான்.புலி அவனை பார்த்த சிறிது நேரத்தில் தன்போக்கில் சென்றுவிடுகிறது.அந்த புலியை அதன் பிறகு அந்த பகுதியில் யாருமே பார்ப்பதில்லை.ஒரு முறை பாம்பு கடிப்பட்டு இறக்கும் தருணத்திலிருக்கும் ஒருவனை பிஸ்வாஸ் காப்பாற்றுகிறான்.இதனால் பிஸ்வாஸை அந்த பழுங்குடி மக்கள் மாந்தீரக சக்தி கொண்ட பூசாரி என்றும் இறந்துபோன மன்னரின் மறுபிறவி என்றும் நம்பிக்கை கொள்கிறார்கள்.

ரொமியின் மனைவி சீது ஒற்றைத்தலைவலியால் துடிக்கும் போது பிஸ்வாஸ் தன் மருத்துவ புரிதல்களை கொண்டு அவளை குணப்படுத்துகிறான்.அதன் பின் அவளுக்கு தலைவலி வருவதே இல்லை.அவன் முற்றிலும் குணமடைகிறாள்.அவள் தன் அறையில் தனியாக உறங்கிக்கொண்டிருக்கையில் யாரோ வந்து சென்றது அவளுக்கு நினைவிலிருக்கிறது.ரொமி சீதுவிடம் யார் வந்து சென்றது என்பதை சொல்லாமல் தவிர்க்கிறான்.ஆனால் பெண்கள்தான் எப்போதும் கண்ணீரை ஆயுதமாக பயண்படுத்தக்கூடியவர்களாயிற்றே.ரொமி ஒரு கட்டத்திற்கு பிறகு பொறுக்க முடியாமல் பிஸ்வாஸ் இறக்கவில்லை மாறாக ஒரு பழங்குடியாக இந்த காட்டில் வாழ்கிறான் , அவனே உன்னை குணப்படுத்தினான் என்ற உண்மையை சொல்கிறான்.

இப்போது சீது இந்த விஷயத்தை மீனாவிடம் சொல்ல ரொமியை வற்புறுத்துகிறாள்.சில நாட்கள் கழித்து ஒரு காலைப்பொழுதில் மீனாவும் அவளுடைய மாமனாரும் ரொமியின் முன் அமர்ந்து தங்கள் மகனை பார்க்க வேண்டுமென்று தங்கள் கோரிக்கையை முன்வைக்கிறார்கள்.அதன் பின்னான தேடுதல் வேட்டையில் பிஸ்வாஸ் துப்பாக்கி குண்டு பட்டு இறந்துபோகிறான்.அவன் இறக்கும் போது போங்கடா தேவிடியாப்பசங்களா என்று ரொமியை கத்தியவாறு இறந்துபோகிறான்.அவன் ரொமியை மட்டும் அப்படி சொல்லவில்லை.

பிஸ்வாஸீன் பிரச்சனை என்ன.அவன் மானுடவியல் படித்தவன்.பேராசியராக இருக்கிறான்.உச்சநீதிமன்ற நீதிபதியின் மகன்.செல்வந்தன்.அழகான அன்பான மனைவி.ஆண் குழந்தை.செளகிரயங்கள்,அதிகாரங்கள் அனைத்தும் அவனுக்கு இருக்கிறது.ஆனால் அவன் கானாமல் போகிறான்.காம்யுவின் சிசிபஸின் தொன்மம் கட்டுரையில் அவர் ஒரு மனிதன் தற்கொலை செய்துகொள்வதற்கு காரணம் நாட்டில் அரசியல் நிலவரங்களை சரியில்லை என்பதாலோ அல்லது சூரியனைத்தான் பூமி சுற்றுகிறது என்பதை நிறுவுவதற்காகவோ அல்ல.அவன் தன் வாழ்வின் வெறுமையாலேயே இறந்துபோகிறான்.ஐந்து வருடங்குளுக்கு முன் இறந்த தன் குழந்தையின் நினைவால் ஒருவர் திடீரென்று தற்கொலை செய்துகொள்கிறார்.மனதின் வெறுமை மனிதனுக்கு ஆதிகாலத்திலிருந்தே இருக்கிறது.இல்லையென்றால் அவன் குகையில் சாற்றைப்பிழிந்து ஒவிங்களை வரைந்திருக்க மாட்டான்.கலைகளே தோன்றியிருக்காது.அவன் ஒரு முறை ரொமியிடம் என் நம் மேல்தட்டு சமூகம் இவ்வளவு உள்ளீடற்று இருக்கிறது என்று புலம்புவான்.ரொமி அவனிடம் உன்னுடைய நோக்கம் பழங்குடியாக மாறுவதா அல்லது அது ஒரு துவக்கம்தானா என்று கேட்பான்.நீ கடவுளை அடைவற்கான வழியாக பழுங்குடி வாழ்வை தேர்வு செய்தாயா என்று மேலும் வினவுவான்.புன்னகைக்கும் பிஸ்வாஸ் கிட்டத்தட்ட அதுபோன்றது தான் என்பான்.

இந்த நாவலின் முக்கிய அம்சம் இது பழங்குடி வாழ்க்கை என்பது கள்ளங்கபடமற்ற வாழ்க்கை என்ற எளிய சித்திரத்தை அளிக்கவில்லை என்பதுதான்.பிஸ்வாஸ் இங்கே இவர்களுக்கும் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றது என்று ஒரிடத்தில் சொல்வான்.ஆனால் நகர தனிமனிதனையும் பழங்குடி மனிதனையும் வேறுபடுத்தும் முக்கிய அம்சம் லட்சிய நோக்கு.பழங்குடி மக்களுக்கு அப்படி எந்த நோக்கமும் இருப்பதில்லை.நகர தனிமனிதன் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குறிக்கோளை உருவாக்கிக்கொள்கிறான்.அதை அடைய துடிக்கிறான்.தேமே என்று இருக்க நகர மனிதனுக்கு தெரியவில்லை.அவன் பேஸ்புக்கில் லேக்கிட்டுக்கொண்டு, டிவி பார்த்துக்கொண்டு , செல்போனில் யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டு , வாயில் எதையோ குதப்பிக்கொண்டு , ஒருவரை புணரும் போது வேறு ஒருவரை நினைத்துக்கொண்டு, பணம் சம்பாதிக்க ஒடிக்கொண்டு, திருமணம் செய்துக்கொள்ள ஒடிக்கொண்டு, பிள்ளைகளை பெற்றுக்கொண்டு என்று அவன் இரவில் காரின் சிவப்பு விளக்கை பார்த்து ஒடும் நாயைப்போல ஒடிக்கொண்டிருக்கிறான்.எனக்கு சமயங்களில் ஒரு சித்திரம் நினைவுக்கு வந்தபடியே இருக்கும்.பன்றியின் மடியில் பாலை குடிக்க முட்டிக்கொள்ளும் பன்றிக்குட்டிகள் போல அல்லவா நாம் முட்டிக்கொண்டிருக்கிறோம் என்று.அந்த வெறுமையின் தீவிரம் தான் பிஸ்வாஸை பழங்குடியாக மாற்றுகிறது.ஆனால் மறுபுறம் நகர்ப்பன்றி தன் மடியில் வந்து பால்குடிக்க முட்டாமல் தப்பித்து சென்றவனை தன் மடியை காட்டி இழுத்துவரை முனைப்பு கொள்கிறது.வர மறுக்கும் பன்றிக்குட்டியை குதறிக்கொல்கிறது.பிஸ்வாஸ் இறந்துபோகிறான்.இப்படியாக பிஸ்வாஸின் விசித்தர வழக்கு முடிவுக்கு வந்ததாக ரொமி நாவலை முடிக்கிறார்.
இந்த நாவலின் காலம் 1950யிலிருந்து நேரு இறந்த ஆண்டான 1964வரை என்று கொள்ளலாம்.பின்னாட்களில் நக்ஸல்பாரி அமைப்புகள் சத்தீஸ்கர் போன்ற பகுதிகளில் உருவானதற்கான காரணங்களின் எளிய சித்திரத்தை இந்த நாவலில் அளிக்கிறது.அருண் ஜோஷி இந்த நாவலை எழுதியிருக்கிறார்.சகாத்திய அகாதெமி விருது பெற்றவர்.எனக்கு இந்த நாவலை வாசிக்கும் போது இவரில் காம்யுவின் பாதிப்பு இருப்பதை உணரமுடிகிறது.அருண் ஜோஷி தன் தனிப்பட்ட வாழ்க்கையின் பல பகுதிகளை இந்த நாவலில் புனைவாக மாற்றியிருக்கிறார்.அருண் ஜோஷி செல்வந்தர்.தொழிலதிபர்.பிஸ்வாஸ் போல அவரும் பழங்குடியாக மாற வேண்டும் என்று விரும்பினாரா அல்லது ரொமி போல இவற்றை பார்த்தவாறு கரையில் மட்டுமே நிற்க விரும்பினாரா என்று நிச்சயமாக யாராலும் சொல்லமுடியாது.உயிரோடு இருந்தால் அவராலேயே கூட அதை சொல்ல முடியாது.அதுதானே மனித மனத்தின் விசித்திர வழக்கு.

கவிஞர் சுகுமாரன் இந்த நாவலைப்பற்றி பல வருடங்களுக்குமுன் உயிர்மையில் எழுதியதால்தான் இதை வாங்கினேன்.அருண் ஜோஷி உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் அவரை சந்திக்க டெல்லி சென்றிருப்பேன்.என்னை பொருட்படுத்தி பேசியிருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

The Strange case of Billy Biswas – Arun Joshi – Library of South Asian Literature. – Orient Blackswan Publications.


தலைமையாசிரியரின் நன்றியுரை






வைத்தியலிங்கம் மிகவும் நல்லவர்
வைத்தியலிங்கமும் நானும் சிறுவயதில்
ஒன்றாக விளையாடியிருக்கிறோம்
வைத்தியலிங்கம் எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்
இந்த தலைப்பாகையை கூட அவர்தான் திருவல்லிக்கேணியில்
தேடிப்பிடித்து வாங்கிகொடுத்தார்.
வைத்தியலிங்கம் என்னை விட உயரமானவர்
வைத்தியலிங்கம் சிறந்த எழுத்தாளராக ஆகியிருக்கக்கூடியவர்
வைத்தியலிங்கம் வாழைப்பழத்தோல் வழுக்கி விழுந்து
இறந்து போனது வருத்தத்துக்குரியது
வைத்தியலிங்கத்தின் தலை வழுக்கை என்பதால்
தர்பூசனி போல
அவர் மண்டை சிதறி மரணித்தது மேலும் கவலையளிக்கிறது
இதற்கு மேல் பேச என்னால் முடியவில்லை
என்று தொண்டை கமறிய தலைமையாசிரியர்
தன் தலைப்பாகையை சரிசெய்துக்கொண்டு நாற்காலியில் அமர்ந்தார்
கூட்டத்தில் வைத்தியலிங்கம் வாழ்க என்று கத்திய மாணவனை
அழைத்த தலைமையாசிரியர் அவனை பிரம்பால் அடித்தார்
பின்னர் தன் அறையில் யாருக்கும் தெரியாமல்
வைத்தியலிங்கத்தின் அகால மரணத்தின் துக்கத்தை அனுஷ்டிக்க
இரண்டு டஜன் வாழைப்பழங்களை ஒரேயடியாக விழுங்கினார்.