நகுலனின் தனிமொழி

 



நகுலனின் மூன்று , ஐந்து ஆகிய கவிதைத் தொகுப்புகள் இராமயணத்தை அடிப்படையாக கொண்டவை.ஐந்து கவிதைத் தொகுப்பில் குகன், விராதன், சவரி, சடாயு, வீடனன் ஆகியோரைப் பற்றியே எழுதியிருக்கிறார்.இவர்கள் எவருமே இராமயணத்தின் மையக் கதாபாத்திரங்களோ எதிர் கதாபாத்திரங்களோ அல்லர்.ஆனால் இந்தப் பாத்திரங்கள் அனைத்திற்கும் மையச்சரடு ஒன்றுண்டு.தன்னையழித்தல்.மூன்று தொகுப்பில் உள்ள உறங்குகின்ற கும்பகர்ணன் பகுதியும் ஐந்து தொகுப்பில் உள்ள வீடனன் தனிமொழியும் நகுலனின் உலகை நமக்கு ஒளிபுக உணர்த்துபவை.நகுலனின் நினைவுப்பாதை நாவல், ஐந்து , மூன்று , மழை மரம் காற்று,கோட்ஸ்டாண்ட் ஆகிய கவிதைத் தொகுப்புகள் அவரின் தத்துவத்தை இன்னும் தெளிவாக கூறுபவையாக அமைந்திருக்கின்றன.

ஒரு வகையில் வீடனனின் தனிமொழி தான் நகுலனின் தரிசனம் என்று சொல்லிவிடலாம்.பிரத்யட்சமாக காண்பதையே மனிதன் உண்மை என்று எண்ண விரும்புகிறான்.அனைத்து தத்துவங்களும் அறிதல் முறைகள் பற்றி பேசுகின்றன.பிரத்யட்சம், அனுமானம், ஊகம்,தர்க்கம், ஸ்ருதிகள் என்று ஒவ்வொரு தத்துவமும் தனக்கான அறிதல் முறைகளை வரையறுக்கிறது.பிரத்யட்சத்தை கடந்து அருவத்தை உணர்வதை நகுலன் தன் புனைவுகளில் கவிதைகளில் தொடர்ந்து முன்வைக்கிறார்.

கும்பகர்ணன் நான் அரக்கன் என்கிறான்.வீடனன் தன் தனிமொழியில் அந்த நாம-ரூபத்தைத்தான் கேள்வி கேட்கிறான்.என்னை நான் என்று நான் ஒரு போதும் மயங்குவதில்லை என்று மறுபடி மறுபடி சொல்கிறான். பிறப்பால் இனத்தால் உருவாகும் அடையாளங்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளுதல் தான் நகுலன் முன்வைக்கும் உலகம். வீடனன் தான் பிறப்பாலோ இனத்தாலோ கட்டுண்டவன் அல்ல என்கிறான்.கும்பகர்ணன் வீடனனிடம் அடிப்படையில் நான் ஒரு அரக்கன் , ஸ்தூலத்தைச் சூக்குமாக்கும் வித்தையை நாங்கள் வெறுக்கிறோம்,ரத்தமும் சதையுமாகத்தான் நாங்கள் இந்த உலகைத் தரிசிக்கிறோம்.நாங்கள் அரக்கர்கள், எங்களுக்குக் கனவுகள் பலிக்க வேண்டும், காமம் தீர வேண்டும் , இங்கு நம் வழிகள் பிரிகின்றன என்று தன் உரையை முடிக்கிறான்.

கும்பகர்ணன் தன் செயல்களை நியாயப்படுத்திச் சொல்ல அரக்கர்களின் உலகப் பார்வை அவர்களின் குணங்கள் ஆகியவற்றையே பயன்படுத்திக் கொள்கிறான்.இந்த அடையாளங்கள் இந்த செயல்களை அங்கீகரிக்கின்றன என்று கும்பகர்ணன் சொல்கிறான். இவை சரியானவை தவறானவை என்ற தர்க்க விவாதத்திற்குள் அவன் செல்லவில்லை.கும்பகர்ணன் தாங்கள் சூடிக்கொள்ளும் அர்க்கர்கள் என்ற அடையாளத்தின் வழி தங்கள் செயல்களுக்கான நியாயங்களை உருவாக்கிறான்.அந்த அடையாளங்களை அழித்து விட்டால் அவனால் அவர்களது செயல்களை தர்க்கப்படுத்தி ஒரு வரிக் கூட சொல்ல இயலாது.

வீடனன் இதைத்தான் கேள்வி கேட்கிறான்.விகுதியை பகுதியாக எண்ணிக் கொள்கிறார்கள் என்று சொல்கிறான். ஏதோ ஒன்று நாம-ரூபமாகத் தன்னை கிளை பரப்பிக் கொண்டு இவ்விகலம் முழுவதும் வியாபகமுற்று இருக்கிறது என்று கொள்வதும் அந்த ரூபம் தான் மூல தத்துவம் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று வீடனன் எண்ணிக்கொள்கிறான்.தன் பெரிய அண்ணாவாலும் இளைய அண்ணாவாலும் நாம ரூபத்தை தாண்டிய ஏதோ ஒன்று தங்களைச் சூழ்ந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவில்லை என்று கவலைப்படுகிறான்.தன்மையிலிருந்தே உருவம் என்று சொல்கிறான்.

சித்தாந்தம், சாதி, இனம், சமயம், மொழி, உடல், நினைவுகள் ஆகியவற்றின் வழி நாம் நமக்கான அடையாளங்களை சூடிக்கொள்கிறோம்.சித்தாந்தத்தின் தர்க்கங்கள் நம்முடைய தர்க்கங்கள் ஆகின்றன.உருவத்திலிருந்து தன்மை உருவாகிறது.நாம் நமது என்றும் என்னுடையது என்றும் சொல்லிக்கொள்வது அந்த சித்தாந்தத்தின் வழி உருவான தத்துவத்தைத்தான்.அதுவே ஒருவனின் பிரத்யட்ச உலகமாக ஆகிறது.உருவம் கொண்டு ஒருவன் அடையும் அருவம் அந்த சித்தாந்தத்தின் தன்மையில்தான் இருக்கிறது.இவற்றை தாண்டிய ஒரு அருவம் உள்ளது என்றும் அந்த அருவத்திலிருந்து தனக்கான உருவத்தை அடைய முடியும் என்றும் மனிதன் எண்ணும் போது அடையாளங்களிலிருந்து விடுபடலாம் என்பது நகுலன் முன்வைக்கும் தர்க்கம்.

முன்னர் குறிப்பிட்டது போல ஐந்து கவிதைத் தொகுப்பில் அவர் குகன் , சடாயு, சவரி, விராதன் , வீடனன் ஆகியோர் பற்றி எழுதியிருப்பதில் இருக்கும் இணைக்கும் சங்கலி அவர்கள் தங்களை இழப்பது தான்.காத்திருத்தல்,பணிதல்,தன்னுயிர் நீத்தல்,சாபத்திலிருந்து விடுபடுதல், தன் அடையாளத்தை களைந்து வெளியேறுதல் என்று அவை மற்றமை பற்றிய அக்கறையை முதன்மைப்படுத்துகிறது.நகுலன் தன் படைப்புகளில் மூன்று விஷயங்களை செய்கிறார்.ஒன்று அடையாளம் களைதல் என்னும் நிலை.இரண்டாவது மற்றமை குறித்த உணர்வு.மூன்றாவது அடையாளம் களைந்து இரண்டறக் கலத்தல்.பிறிதாகுதல்.

அடையாளம் களைய நமக்கு தடையாக இருப்பவை பால், உடல், நினைவு, இனம் , சாதி, மதம், சமூக அடுக்கு, சித்தாந்தங்கள் ஆகியவை.திரெளபதி அவள் வந்து போகும் அர்ச்சுனன் என்ற கவிதையில் வந்து போகும் அர்ச்சுனன் என்ற வரி ஒரு நிலையற்றத் தன்மையை குறிக்கிறது.திடமான ஸ்திரமான ஒரு அடையாளத்திலிருந்து விலகி ஒரு பாயம்(flux) நிலையை நோக்கிச் செல்கிறது வந்து போகும் அர்ச்சுனன் கவிதை.மற்றமையை வேண்டி நிற்கிறது.அதே போல கோட்ஸ்டாண்ட் கவிதைகளில் அடையாளத்தை சுமக்கும் உடல் இல்லாமல் போதல் என்ற நிலையைப் பற்றி பேசுகிறார்.

இந்த அடையாளங்களிலிருந்து விடுவித்துக்கொள்ளுதல் என்பது உலகு நீக்கிய ஒரு தரிசனத்தை முன்வைப்பதற்காக அல்ல.அல்லது உலகு கடந்த நிலையை அடைவதற்காக அல்ல.அவை மற்றமை குறித்த அக்கறையை உள்ளடக்கியவை.வீடனன் பிறப்பென்ற பேதைமை நீங்கி ராமனுக்கு நான் ஆட்பட்டேன் என்கிறான்.கும்பகர்ணன் இராவணனிடம் வீடனன் பற்றி சொல்லும் போது அவன் தன் பிள்ளைத்தன்மை நீங்கிவிட்டான் என்கிறான்.பிள்ளைத்தன்மை என்பது பிறப்பின் பால் வரும் பேதைமை.வீடனன் அந்த பிள்ளைத்தன்மை நீங்கி இராமனிடம் சென்று சேர்கிறான்.நகுலன் மற்றமை குறித்த அக்கறையோடு நின்றுவிடுவதில்லை.மற்றமையோடு ஒன்றாகுதல் என்பது நகுலன் படைப்புகளில் தொடர்ந்து வரும் மற்றொரு எண்ணம்.

தான் இராமனைக் கைகூப்பித் தொழுதது பற்றிச் சொல்லும் போது , உண்மையில் யார் யாரைத் தொழுதார்கள் , நான் இராமனிடமிருந்து என்னை வேறாகத் கருதவில்லை, கைகூப்பித் தொழுதல் என்பது யோக முத்திரை , இது தான் கடைசி வார்த்தை என்கிறான்.வீடனன் தன்னை மற்றமையில் கண்டுகொள்கிறான்.மற்றமையாகவே ஆகிறான்.இதுதான் நகுலன் முன்வைக்கும் தரிசனம்.இது அவரது அனைத்துப் படைப்புகளிலும் இருக்கிறது.வீடனன் தனிமொழியில் தெளிவாக பதிவாகியிருக்கிறது.

கோட்ஸ்டாண்ட் தொகுப்பில் எல்லைகள் என்ற கவிதை


..காலக்கறையான்
தின்று கொண்டிருக்கும் மேதை
களின் சிற்ப-சிதலங்கள் , இறந்த
வர்களின் சாந்நித்தியம் இருப்ப
வர்களின் மிரட்டல் – இவை
யெல்லாம் பின்தங்க அவன்
எல்லைகளைக் கடந்து கொண்
டிருந்தான்.


அவன் பயணம் இன்னும்
தொடர்ந்து கொண்டுதான்
இருந்தது.நடுவில் யாரோ
ஒருவர் அவனை நோக்கி
“நீங்கள்? ” என்று உசாவ
அவனுக்கு அவன் பெயர்
கூட மறந்துவிட்டது.

மேதைகளின் சிற்ப சிதலங்கள் ,இருப்பவர்களின் மிரட்டல் ஆகிய இரண்டையும் அவன் கடக்கிறான்.மேதைகளின் சிற்ப சிதலங்கள் என்பவை சித்தாந்தங்களும் , கோட்பாடுகளும், மதங்களும் அன்றி வேறென்ன.நம்மை இந்த சிற்ப சிதலங்களின் வரையறைகள் கட்டுப்படுத்துகின்றன.நகுலன் அவற்றை மீறுவது குறித்து பேசவில்லை, மாறாக அதைக் கடப்பதை பற்றியே தன் படைப்புகளில் பேசுகிறார்.அவனுக்கு அவன் பெயர் கூட மறந்துவிட்டது என்பது அவன் தன் அடையாளங்களிலிருந்து முழுக்க வெளியேறிவிட்டான் என்பதையே குறிக்கிறது.

கோட்ஸ்டாண்ட் கவிதைகளில் வரும் புகழ்பெற்ற ராமச்சந்திரன் கவிதை நாம-ரூபங்கள் சூட்டும் அடையாளங்களிலிருந்து விடுபடுதல் என்பதைப் பற்றிதான் பேசுகிறது.யாருமில்லாத பிரதேசத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது / எல்லாம் என்பது மனிதனை மையப்படுத்தும் பார்வையை கேள்விக்கு உட்படுத்துகிறது.மனிதன் அனைத்தையும் மாற்றும் வல்லமை உள்ளவன் என்பது இருபதாம் நூற்றாண்டில் வலதுசாரி இயக்கங்களும் இடதுசாரி இயக்கங்களும் ஏற்றுக்கொண்ட எண்ணம்.அதை நகுலன் தொடர்ந்து தன் படைப்புகளில் மறுக்கிறார்.மேலும் மனிதன் முழுமையானவன், ஸ்திரமான அடையாளங்களைக் கொண்டவன் என்பதையும் நகுலன் ஏற்கவில்லை.

இவர்கள் என்ற கவிதையில்

 

…எதிரில் இருப்பவன்
பிரக்ஞையின்றித் தங்களைப் பற்றியே
பேசிக் கொண்டிருக்கிறார்கள்

என்று எழுதுகிறார்.இந்த தான் என்ற பிரக்ஞையிலிருந்து எப்படி நழுவுவது விடுபடுவது என்பதை பற்றி மழை மரம் காற்று கவிதைத் தொகுப்பில் விரிவாகச் சொல்கிறார்.

…பல விஷயங்களிலிருந்து

விடுபட்டாலொழிய
காற்றுச் சலிப்பது
இலை அசைவது
திடீரென்று சூரியப்பிராகசத்தில்
இலைகள்
வாடித் தவழ்வது
நமக்குத் தெரியாது

                                            என்கிறார்.மேலும்

..விறகு வெட்டி!

என் நிழலை வெட்டு;
எனக்கு
நானே ஒரு மலடியாகப் போகும்
நிலைமையைப் பார்த்துக் கொண்டிருக்கும்
அவஸ்தையிலிருந்து
என்னை விடுவி!!

என்கிறார். நகுலன் இங்கு என் நிழலை வெட்டு என்று குறிப்பிடுகிறார்.என்னை வெட்டு என்றல்ல. நிழல் என்பதை ஆனவம் , அகங்காரம், அடையாளம்,தர்க்கம்,பிரக்ஞை என்று அர்த்தப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.மேலும் தன்னிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் சொரூப நிலையை பற்றி மழை மரம் காற்று தொகுப்பில் இறுதியில் இப்படி சொல்கிறார்.

 

நான்
என்னை விட்டுச் செல்லும்
நழுவல்
விடிந்தால்
உலகம் நமக்குக் காத்துக்
கொண்டிருக்கிறது;
அதிலிருந்து
இப்படிக் கழன்று கொள்வதில்
                           தான் நமது
விமோசனம்

அடுத்த நாள் விடிந்தால் தன் லெளகீக பரபரப்புகளுக்குள் நம்மை அமிழ்த்த உலகம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதும் அதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள இந்த சொரூப நிலை அவசியம் என்பதையும் தொடர்ந்து தன் படைப்புகளில் முன்வைக்கிறார். அந்த விடுபடுதல் பால் திரிந்து , நினைவுகளிலிருந்து தப்பி, உடலைக் கழற்றி, பிரக்ஞையிலிருந்து நழுவி என்ற பல்வேறு நிலைகளில் நகுலன் படைப்புகளில் வருகின்றன. இந்த விடுபடுதல் வழி அவர் ஒரு ஆன்மிக நிலையை அத்வைத தத்துவத்தை சொல்லவில்லை என்பதே என் எண்ணம்.அவர் சக மனிதனை மட்டுமே இங்கு மற்றமையாக கூறுகிறார்.

மழை மரம் காற்று தொகுப்பில் இறுதியில் தன் கூற்றை மேலும் வலுவாகச் சொல்ல “இவனும் வெகுதூரம் சென்று திரும்பி வந்தவன் தான் சொல்கிறான்” என்று திருமூலரைப் பற்றி சொல்லிவிட்டு திருமந்திரத்தின் கீழ்கண்ட பகுதியை சுட்டுகிறார்.


கொழுந்தினைக் காணிற் குவலயத் தோன்றும்
எழுந்திடங் காணில் இருக்கலுமாகும்
பரந்திடங்காணில் பார்ப்பதி மேலே
திரண்டெழக் கண்டவன் சிந்தையுளானே.

கொழுந்தன் – சுடர் , குவலயம் – உலகம்

பரம் – தத்துவங்களை விட்ட ஆன்மா
பார்ப்பதி – சக்தி

ஞானலிங்கமாகிய ஒளி மயமான சுடரைக் கண்டால் உலகம் தோன்றும்.எழக்கூடிய வல்லமை இருக்குமாயின் இவ்வுலகில் இருத்தலும் கைகூடும், தத்துவங்களை விட்ட ஆன்மாவை உறுதியாகப் பற்றின் – சக்தி உருவில் அமைந்த சிவம் சிந்தையுள் விளங்கும்.1

இந்த மந்திரத்தை நகுலன் கூறும் நிழலை வெட்டு என்பதுடன் பொருத்திப் பார்க்கலாம்.மேலும் நகுலன் தொடர்ந்து உருவத்திலிருந்து அருவம் நோக்கிய பயணத்தைப் பற்றி தன் நினைவுப்பாதை நாவலில், வீடனனின் தனிமொழியில் எழுதுகிறார்.மனிதன் உருவத்தை கடந்து அருவத்தின் உண்மையை அறிய வேண்டும் என்று நகுலன் தன் படைப்புகளில் தொடர்ச்சியாக பதிவுசெய்கிறார்.

நகுலனின் அருவம் உலகம் பொய் என்ற நிலையை நோக்கி பேசவில்லை.அது மற்றமையில் இரண்டறக் கலக்கும் ஒரு அவாவுதலை பற்றியே பேசுகிறது.பெளதீகமான உலகம் இல்லாமல் ஆகிறது என்ற கருத்தை நகுலன் சொல்வதில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.நகுலனின் ஸ்டேஷன் கவிதையை நான் இந்தப் பொருளில் புரிந்து கொள்கிறேன்.

ஸ்டேஷன்

ரயிலை விட்டிறங்கியதும்

ஸ்டேஷனில் யாருமில்லை
அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும் யாருமில்லை
என்பதை;
ஸ்டேஷன் இருந்தது,
என்பதை
“அது ஸ்டேஷன் இல்லை”
என்று நம்புவதிலிருந்து
அவனால் அவனை
விடுவித்துக் கொள்ள
முடியவில்லை
ஏனென்றால்
ஸ்டேஷன் இருந்தது.

இந்தக் கவிதையையும் யாருமில்லாத பிரதேசத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற கவிதையையும் நாம் கவனித்தால் அதில் அவர் மனிதர்களை மட்டுமே குறிப்பிடுகிறார் என்பதை உணரலாம்.பெளதீகமான புற உலகை இல்லாமல் செய்யும் அத்வதை நோக்கிலிருந்து விலகி பிறிது என்ற எண்ணம் அற்ற ஓர் பக்தி நிலையை பற்றி நகுலன் கவனம் கொள்கிறார்.

என்னைப் பார்க்க வந்தவர்

தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்

என்ற கவிதையில் பிறிரை புரிந்து கொள்ளவும் பிறரை அறியவும் விடாமல் தன்னையே ஸ்தாபித்துக்கொள்ள மனிதன் எந்தளவு பிரயத்தனப்படுகிறான் என்பதை கூறுகிறார்.

இந்த நான் என்ற பிரக்ஞையிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்வதையும் உருவங்களிலிருந்து அருவங்கள் நோக்கிய பயணத்தையும் முன்வைப்பவை நகுலனின் படைப்புகள்.நகுலனின் கவிதைகள் பக்திக் கவிதைகளும் கூட.இங்கு மற்றமை கடவுளாக இல்லாமல் மற்றொரு மனிதனாக இருக்கிறது.மற்றமை குறித்த அக்கறை தான் அனைத்து பொதுநல செயல்களுக்குமான முதல் படி. நகுலன் அதை நோக்கி நம்மை அழைத்துச்செல்கிறார்.நாம் செல்வோம்.

1 - திருமந்திரம் விரிவுரை – ஜி.வரதராஜன்

ஷங்கர் ராமசுப்ரமணியன் தொகுத்த நகுலன் 100 அருவம் உருவம் நூலில் இடம்பெற்ற கட்டுரை.



சட்டமும் இலக்கியமும்

 

நான் PG Diploma in Human Rights Law படித்து வருகிறேன்.எழுதுபவனாக சட்டம் பற்றிய பொது அறிவு இருந்தால் நல்லது என்ற எண்ணம் எப்போதும் இருந்தது.சட்டமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று பல நிலைகளில் பிணைப்பு கொண்டவை.

1. ஒரு வகுப்பில் ஆசிரியர் மரண தண்டனை பற்றி விளக்கினார்.மரண தண்டனை ஏன் கூடாது என்று சொல்லிக்கொண்டிருந்த போது எவன் ஒருவனும் அவன் செய்த குற்றச்செயல் மட்டுமே அல்ல என்ற காரணத்தையும் சொன்னார்.A man can't be defined by his crime.அவன் வாழ்க்கையில் அவன் செய்த ஒரு செயல் அந்தக் குற்றம்.அவன் அது அல்ல.மரண தண்டனை மாறாக அவன் அந்தக் குற்றமே என்று சொல்கிறது என்றார்.எனக்கு அந்த வாதம் பிடித்திருந்தது.மரண தண்டையிலிருந்து விலக்கிக்கூட நாம் இதை பார்க்கலாம்.எவர் ஒருவரும் அவர் செய்த குற்றம் மட்டும் அல்ல.

2. நான் இந்த வகுப்பில் சேர்ந்த பின்னர் அடிக்கடி இந்திய அரசியலமைப்பை படிக்கிறேன்.முக்கியமான நமது அடிப்படை உரிமைகள் பகுதி.அதில் பிரிவு 20 குற்றச் சாட்டப்பட்டவருக்கான உரிமைகளைப் பற்றிய பிரிவு.அதில் ஒரு வரி இருக்கிறது.

"எவர் ஒருவரும் ஒரு குற்றத்திற்காக ஒரு முறைக்கு மேல் தண்டிக்கப்படக் கூடாது."

அதாவது ஒரு குற்றத்திற்கு ஒரு முறை தான் தண்டனை அளிக்க வேண்டும் என்று இந்தப் பிரிவு சொல்கிறது.எத்தனை அற்புதமான வரி.விவிலயத்தின் வரி போன்ற ஒலியை எழுப்பும் வரி.

நாம் மேலே சொன்ன இரண்டையும் பொதுவாக நமது தனிப்பட்ட வாழ்க்கையில் பின்பற்றுவது இல்லை.ஒருவர் குற்றம் நிகழ்த்திவிட்டால் அந்த குற்றத்திலிருந்து நீக்கி அவரை நாம் அதன் பின் பார்ப்பதில்லை.அதே போல ஒரு முறை அவர் தண்டிக்கப்பட்டுவிட்டால் அந்தக் குற்றத்தை அதன் பின் சுட்டிக்காட்டமால் நம்மால் இருக்க முடிவதில்லை.இந்த இரண்டு பண்புகளும் நமது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது.இதனால் தான் இலக்கியம் போல சட்டமும் பல அறிதல்களை அளிக்கக்கூடிய ஒன்றாக எனக்குத் தோன்றுகிறது.


சுயமும் ஆளுமையும்


ஆங்கிலத்தில் Enmeshment என்ற சொல் இருக்கிறது.இந்தியக் குடும்பங்களில் அதிகம் காணப்படும் ஒன்று தான்.பிறரில் நம்மை காண்பது என்று இதைச் சொல்லலாம். எனது உடல், எனது மனம் , எனது விருப்பு வெறுப்புகள் , எனது அடையாளம் என்ற எல்லைகளை வகுத்துக்கொள்ளாமல் பிறருடன் நமது ஆளுமையை இணைத்துக் காண்பது Enmeshment என்று சொல்லலாம்.அந்த பிறர் தந்தை, தாய், சகோதரன், ஆசிரியர், தலைவர் என்று யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.பொதுவாக Enmeshment குடும்பச் சூழலுக்கு பயன்படுத்தப்படும் வார்த்தை.இதனுடன் தொடர்புடைய மற்றொரு சொல் ஆளுமைக் குறைபாடு, ஆளுமைச்சிக்கல்(Underdeveloped Self).

சிலர் பன்னிரண்டு வயதிலேயே தனி ஆளுமைகளாக முகிழ்ந்து விடுகிறார்கள்.தங்களுக்கு எது பிடிக்கும் , பிடிக்காது என்பதிலிருந்து தங்கள் வேலைகளைத் தாங்களே பார்த்துக்கொள்வது வரை அவர்கள் முழுமையான தனிமனிதர்களாக வளர்ந்து விடுவார்கள்.சிலர் பதினெட்டு இருபது வயதில் அந்த முதிர்ச்சியை அடைவார்கள்.சிலர் முப்பது வயதில் கூட அத்தகைய தனி மனிதர்களாக ஆளுமைகளாக மாறாமல் குறைப்பட்ட ஆளுமைகளாகவே இருப்பார்கள்.இதற்கு பெரும்பாலும் தாய் அல்லது தந்தையின் வளர்ப்பு முறை ஒரு காரணமாக இருக்கும்.அல்லது அவர்கள் சிறு வயதில் பதின் பருவத்தில் எதிர்கொண்ட சிக்கல்களால் கூட இவை நிகழலாம்.ஆனால் குடும்பம் இதில் முக்கிய பங்காற்றுகிறது.உங்களுக்கு உடல் வலி என்றால் நீங்கள் துடிக்கலாம்,உங்களுடன் சேர்ந்து உங்களின் தாயும் தந்தையும் துடித்தால் அங்கே வெவ்வேறு உடல்கள் என்ற எல்லைகள் இல்லாமல் போகின்றன.தன் தந்தையில் தன்னைக் காண்பது , தாயில் காண்பது என்று அந்தக் குழந்தை வளர்கிறது.அங்கே தாய் தந்தையர் செய்ய வேண்டியது உங்களுக்கான சிகிச்சையை அளிப்பது தான்.

இப்படி வளரும் குழந்தைகள் - பதின் பருவத்தில் இளைஞனாக வெளி உலகிற்கு வரும் போது பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கிறார்கள்.காபி வேண்டுமா டீ வேண்டுமா என்று கேட்டால் அவர்களால் சட்டென்று பதில் சொல்ல முடியாது.பிறர் என்ன சொல்கிறார்கள் என்று கவனிப்பார்கள்.சிலர் தங்கள் அனுபவங்களின் வழி இதிலிருந்து விடுபடலாம்.சிலர் தங்கள் வாழ்நாள் முழுதும் இந்த ஆளுமைச்சிக்கலூடே வாழ நேரலாம்.

இத்தகையோர் தாங்கள் எதிர் கொள்ளும் பேராளுமைகளுக்கு முன் தங்களை முழுமையாக ஒப்புக்கொடுக்கிறார்கள்,சரணடைகிறார்கள். அவர்களால் எந்த ஒன்றிலும் தெளிவான முடிவை நோக்கி எளிதில் நகர முடிவதில்லை.இத்தகையோர் தான் பெரும்பாலும் சுரண்டப்படுகிறார்கள்.பொருளாதார ரீதியில், உடல் அளவில் , உளவியல் ரீதியில் என்று இந்தச் சுரண்டல் அவர்கள் யாரிடம் சிக்குகிறார்கள் என்பது பொருத்து மாறுபடலாம்.வெகு சிலரே இந்த அனுபவங்கள் வழியாக தங்களை உடைத்துக்கொண்டு வெளியே வந்து புதிய வாழ்க்கை வாழ்கிறார்கள்.பலர் சிதறிப்போகிறார்கள்.

தன்பால் விழைவு கொண்டோரில் சிலர் இத்தகைய இளைஞர்களைத்தான் தங்கள் இலக்காக கொள்கிறார்கள்.அவர்களை இவர்களால் எளிதில் குழப்ப முடிகிறது.தன்பால் விழைவு கொண்டோரில் சிலர் இரண்டு வழிகளை கடைப்பிடிக்கிறார்கள்.ஒன்று தாங்கள் பரிதாபத்திற்கு உரிய ஜீவன் என்றும் கருணை காட்டப்பட வேண்டும் என்றும் கெஞ்சுவார்கள்.மற்றொரு முனையில் தாங்கள் எத்தனை பெரிய ஆளுமை என்றும் தன் அதிகாரம் எத்தகையது என்றும் வேஷம் கட்டுவார்கள்.அவர்கள் இந்த இருவேறு நிலைகளை மாறிமாறி நடிப்பார்கள்.தங்களுக்கு இரை சிக்குமா என்று பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.அதே நேரத்தில் இத்தகையோர் சற்று தெளிவுடனும் இருப்பார்கள்.அந்த இரையை ஒன்றும் செய்ய முடியாது என்று புரிந்து விட்டால் அந்த இரையை விட்டுவிட்டு அடுத்த தேர்வுக்கு போய்விடுவார்கள்.

தன்பால் விழைவு கொண்டு பிறரை சுரண்ட முயல்வோர் பெரும்பாலும் பதினைந்து வயதிலிருந்து இருபத்தியைந்து வயதுக்குள் இருப்போரைத்தான் தங்கள் இலக்காக கொள்கிறார்கள்.தன்பால் விழைவு பிழையல்ல என்று தான் இன்றைய சட்டமும் , விஞ்ஞானமும் சொல்கிறது.ஆனால் உங்களுக்கான இணையை நீங்கள் தான் தேடிப் பெற வேண்டும்.இணை வேறு இரை வேறு.

இப்போது தமிழ் நவீன இலக்கிய சூழலில் வந்து கொண்டிருக்கும் புகார்கள் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் அதிர்வையும் ஏற்படுத்துவதாக உள்ளது.பிறரைச் சுரண்டும் அதிகாரம் யாருக்குமில்லை.எங்கெல்லாம் Cult குழுக்கள் உருவாகுகின்றனவோ அங்கெல்லாம் சுரண்டல்கள் நிகழ்கின்றன.நீங்கள் எந்த அமைப்பில் , குழுவில், மடத்தில் வேண்டுமானாலும் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.அந்த குழுவின் பேராளுமையை விதத்தோதுங்கள்.அவரே உலகை உய்விக்க வந்த தூதன் என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள்.ஆனால் எல்லாவற்றிற்கும் அப்பால் நீங்கள் ஒரு தனிமனிதன் என்பதையும் உங்களுக்கு என்று ஒரு ஆளுமை உண்டு என்பதையும் உணருங்கள்.உங்களுக்கான எல்லைகளை வகுத்துக் கொள்ளுங்கள்.இந்த எல்லைக்கு மேல் ஒருவர் என்னை மனதளவில் ,உடல் அளவில் நெருங்க அனுமதிக்க இயலாது என்று உறுதி கொள்ளுங்கள்.கடவுளே என்றாலும் நான் அந்த கடவுளின் பகுதி அல்ல என்பதை மனதில் நிறுத்துங்கள்.

பிறரைச் சுரண்டுவோர் வெகுளிகள் அல்ல.அவர்கள் நீங்கள் யார் , உங்கள் பெற்றோர் என்ன வேலை செய்கிறார்கள், உங்களின் சமூக அந்தஸ்து என்ன , திருப்பி அடிக்கும் சாத்தியம் கொண்டவரா என்பதை கவனிக்கிறார்கள்.உங்கள் உடல்மொழியை அவர்கள் மிகத் தீவிரமாக கண்காணிக்கிறார்கள்.நீங்கள் மிகவும் கூச்சப்படக்கூடியவரா, அச்சப்படுபவரா, அதிர்ந்து பேசாதவரா என்று அனைத்தையும் அவர்கள் அளக்கிறார்கள்.அதன் பின்னர் தான் தங்கள் தந்திரங்களை துவங்குகிறார்கள்.அவை வெறும் Trial & Error அல்ல. கணக்கிடப்பட்ட Trial & Errors.

காரல் மார்க்ஸ் சமூகத்தில் மூலதனம்(சொத்து) மட்டுமே ஒருவனின் நிலையை தீர்மானிக்கிறது என்றார்.All relations are essentially financial relationships என்று சொன்னார்.ஆனால் மாக்ஸ் வெபர் சமூக அந்தஸ்து , சொத்து , அதிகாரம் ஆகியவைதான் சமூகத்தின் ஒருவனின் நிலையை தீர்மானிக்கின்றன என்று சொன்னார்.மாக்ஸ் வெபர் சொல்வது தான் சரி. இன்று நாம் எதிர்கொள்ளும் இந்த அவச் சூழல் இந்த பண்பாட்டு அதிகாரத்தின் வழியாக நிகழ்த்தப்பட்டுள்ளது.வெறும் தனி மனிதனாக இவர்கள் தங்கள் இரையை அடையவில்லை.அதற்கு பின்னால் அவர்கள் உருவாக்கிக்கொண்ட பண்பாட்டு அதிகாரம் அவர்களுக்கு உதவியிருக்கிறது.

இன்றைய சூழலில் உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ள உடல் ரீதியிலும் மன ரீதியிலும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.ஸ்வதர்மம் முக்கியமானது.நம்மை நாம் தான் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

முடிந்தால் தஸ்தாயெவ்ஸ்கியின் The Adolescent நாவலை வாசிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்.Underdeveloped Self பற்றி புரிந்துக்கொள்ள உதவும் நாவல்.


குற்றங்களும் பிம்பங்களும்

 

பொதுவாக குற்றவாளிகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையில் ஏன் பல வருட நட்பு இருந்தது அல்லது தொடர்பு இருந்தது என்ற கேள்வி  அனைத்து வகை சுரண்டல் சார்ந்த குற்றங்களிலும் முன்வைக்கப்படுகிறது.பொருளாதாரச் சுரண்டல், பாலியல் சுரண்டல் , உணர்வுச் சுரண்டல் என்று பல வகையான சுரண்டல்களில் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.உண்மையில் குற்றவாளிகளுக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையில் உருவாகும் உறவும் ஆழமான பிணைப்பு கொண்டது தான்.காதல் போன்ற பந்தம்.அந்தப் பிணைப்பு பல நேரங்களில் வலுவானதாகவும் அமைகிறது.அந்த உறவு ஒரு விஷ சுழற்சி போல இயங்குகிறது.அதில் சில நேரங்களில் குற்றவாளியும் மகிழ்ச்சியின்றி பயணிக்கிறார்,குற்றமிழைக்கப்பட்டவரும் பயணிக்கிறார்.காதல் கொண்ட இருவர் ஒருவரை ஒருவரை அறிந்துக் கொள்வது போலவே இது போன்ற துர் உறவுகளிலும் அறிதல் நிகழ்கின்றது.

நாம் யார் என்பது குறித்து நம்மிடையே ஒரு பிம்பம் இருக்கிறது.நான் சர்வோத்தமன் , நெய்வேலியில் வளர்ந்தேன், பொறியியல் படித்தேன், கணினித்துறையில் வேலை செய்கிறேன்,  மனைவி குழந்தைகளுடன் பெங்களூரில் வாழ்ந்து வருகிறேன், கதைகள் கட்டுரைகள் எழுதுவேன் என்று ஒரு பட்டியல் கொண்ட பிம்பத்தை நான் என்னில் சேகரித்து வைத்திருக்கிறேன்.இவற்றுடன் நான் கொண்ட விழுமியங்களும் நம்பிக்கைகளும் அதில் இருக்கும்.ஆங்கிலத்தில் Spirit என்று சொல்லலாம்.ஆனால் இது ஆன்மா அல்ல.ஆடி பிம்பம்.இது தான் ஒரு மனிதன் தனது நேற்றையும் நாளையையும் இன்றையும் இணைத்து ஓர் இணைவை உருவாக்கிக் கொள்ள உதவுகிறது.இதுதான் ஒரு அறுபடாத தொடர்ச்சியை தக்க வைக்க உதவுகிறது.

இந்த பிம்பத்தில் ஒருவன் சிறுவனாக பவுடர் பூசி தலை வாரி மிட்டாய் மென்றவாறு தன் தாய் தந்தையருடன் அமர்ந்திருக்கிறான்.அங்கு அவன் மிக பாதுகாப்பாக இருக்கிறான்.இந்த பிம்பம் உடைபடாத வரை மனிதனுக்கு பிரச்சனையில்லை.ஆனால் அந்த ஆடியில் அவன் காணாமல் போய்விட்டால் அவன் சிதறுகிறான்.காவல் நிலையங்களில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் போது சில நேரங்களில் உடைகள் அற்று நிர்வாணமாக நிறுத்தப்படுகின்றனர்.அது அவனை அவமானம் கொள்ளச் செய்வதற்காக மட்டும் நிகழ்த்தப்படுவது அல்ல.அவன் தன்னுள் கொண்டுள்ள அந்த பிம்பத்தை உடைப்பதற்காகவும் தான்.அதனால் தான் காவல் நிலையங்களிலிருந்து பின்னர் வெளிவரும் பலர் சில காலத்திற்கு எந்தச் செயலிலும் ஈடுபட முடியாமல் பரிதவித்து நிற்கின்றனர்.ஒருவன் தன்னைப்பற்றி கொண்டுள்ள சமூக மதிப்பீடு , பிம்பத்தை நொறுக்குவது தான் இத்தகைய தண்டனைகளுக்கு பின்னால் உள்ள உளவியல்.அவன் வெளியே சென்று தன் பழைய செயல்களை செய்யக்கூடாது என்பதற்காக நிகழ்த்தப்படும் திட்டமிட்ட வன்முறை.

பெண்களும் ஆண்களும் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவதற்கும் சில நேரங்களில் இது காரணமாக அமைகிறது.அவனது ஆன்மாவை (ஸ்பிரிட்) கொன்று இனி நீ ஒன்றுமில்லை  , நீ ஒரு சக்கை என்று சொல்வது தான் இந்தச் செயலுக்கு பின்னால் உள்ள காரணம்.பெரும்பாலான சுரண்டல்களும் இதைத்தான் செய்கின்றன.ஆனால் அதை பெளதிகமான பருப்பொருளாக நம்மால் சில நேரங்களில் காண இயலாது.சுரண்டல்களின் ஆதார விசை பிம்ப வழிபாடும், நம்பிக்கையும் , எதிர்பார்ப்பும் தான்.சில நேரங்களில் சிலர் வேலையின் பொருட்டு , ஒரு வாய்ப்பின் பொருட்டு சுரண்டலை பொறுத்துக்கொள்ளலாம். சில நேரங்களில் அது நம்பிக்கையால் நிகழலாம்.பொருளாதாரச் சுரண்டல்கள் அப்படித்தான் நிகழ்கின்றன.வேறு சில தந்தை , குரு , ஆசிரியர் போன்ற பிம்ப வழிபாட்டால் நிகழ்பவை.

இதில் சுரண்டுபவர் முதலில் செய்வது சுரண்டுபவரை ஆராய்வது தான்.பின்னர் தன் சுரண்டலை மெல்லத் துவங்குகிறார்.பாதிக்கப்படுபவர் தன் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாரா என்பதை கவனிக்கிறார்.எதிர்ப்பு இல்லாத போது அதை தொடர்கிறார்.இதில் பாதிக்கப்படுவர்களுக்கு தாங்கள் எதையோ இழக்கிறோம் என்ற எண்ணம் இத்தகைய உறவின் துவக்கத்திலேயே இருக்கும்.ஆனால் அது இன்னது என்று அவர்களால் சொல்ல இயலாது.குழப்பம் அடைவார்கள்.எப்போதும் இந்தச் சுரண்டும் நபரை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.குற்றவாளியின் தரப்பு நியாயத்தை தங்களுக்குள் விளக்கிக்கொள்வார்கள்.தர்க்கப்படுத்தி எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது , நாம் தான் தேவையின்றி அலட்டிக்கொள்கிறோம் என்று சமாதானம் கொள்வார்கள்.ஆனால் அவர்களால் அந்த உறவு தொடங்குவதற்கு முன்னர் இருந்தது போல மகிழ்ச்சியாக இருக்க இயவவில்லை என்பதையும் அவர்கள் உணர்வார்கள்.மன அழுத்தம் கொள்வார்கள்.எப்போதும் அவர்களுக்குள் ஓர் உரையாடல் இருக்கும்.அவர் தான் அணிந்திருக்கும் உடைகளை யாரோ தனக்குத் தெரியாமல் திருடுகிறார்கள் என்ற எண்ணத்தை அடைவார்.ஆனால் உண்மையில் அப்படித்தானா என்ற குழப்பமும் அவருக்கு இருக்கும்.மேலே சொன்ன நம்பிக்கை போன்ற காரணங்களால் அந்த உறவு நீடிக்கவும் செய்யும்.

உடல் அளவில் நிர்வாணப்படுத்தி தண்டிப்பது , வன்புணர்வு செய்து தண்டிப்பது போன்றது தான் சுரண்டலும்.இது போன்ற சுரண்டல்களால் பாதிக்கப்பட்டவர் மனச்சோர்வு , தனிமை, குற்றவுணர்வு , அவமானம் , தற்கொலை உணர்வு, உடல் வலி , வன்மம்  ஆகியவற்றை அனுபவக்கின்றனர்.இதில் உளவியல் ரீதியில் அவரது பிம்பம் உடைக்கப்படுகிறது.சிலர் இத்தகைய உறவில் ஈடுபடத்துவங்கிய ஆரம்ப நாட்களில் வெகுவாக எடை இழப்பார்கள்.தங்களை சுருக்கிக்கொள்வார்கள்.நண்பர்களுடன் பேசுவதை நிறுத்துவார்கள்.உடைக்கப்பட்ட ஆடியில் அவர் கேலிச்சித்திரமாகிறார்.ஏதோ ஒரு தருணத்தில் பாதிக்கப்பட்டவருக்கு தான் பாதிக்கப்படுகிறோம் என்று புரியத் துவங்கும்.இந்த உறவில் சிக்கல் இருக்கிறது என்று உணர்வார்கள்.ஆனால் பாதிக்கப்பட்டவரின் பிம்பம் உடைந்துவிட்டது.அதை மறுபடியும் கட்டியெழுப்பதற்கான கச்சாப்பொருட்கள் சுரண்டப்பட்டவரிடம் இருப்பதாக அவர் நம்புகிறார்.கிட்டத்தட்ட தன் உடலை மறைக்க தேவையான உடை தன்னைச் சுரண்டியவரிடம் மட்டுமே இருப்பதாக அவர் நம்பத் தலைப்படுகிறார்.அது வெளியில் கிடைக்காது என்கிற வகையிலேயே அவரின் உரையாடல்கள் அமையும்.அவர் தன்னைச் சுரண்டியவரிடம் இறைஞ்சுவார்.மிரட்டுவார்.தன்னால் இயன்ற அனைத்து வழிமுறைகளையும் செய்துப் பார்ப்பார்.சுரண்டுபவர் அவரைப் பார்த்து இளித்தப்படியே இருப்பார்.அல்லது மேலும் குழப்புவார்.உடையை கொடுப்பது போல கொடுத்து பிடுங்கிக் கொள்வார்.அது ஒரு விஷச் சுழற்சி போலச் சுழன்றபடியே இருக்கும்.பின்னர் ஏதோ ஒரு கட்டத்தில் இருவரும் உறவை முறித்துக்கொள்வார்கள்.பெரும்பாலும் சுரண்டுபவர் தான் உறவை முறிப்பார்.ஏனேனில் அவருக்கு அடுத்த இரை கிடைத்திருக்கும்.இந்த விடைபெறுதலுக்குப் பிறகும் இந்த உறவுகள் இருவர் நினைவிலும் நீடிக்கும்.

பாதிக்கப்பட்டவர் அந்த உறவின் முடிவில் தான் முழுமையற்றவராக மாறிவிட்டோம் என்பதை உணர்வார்.கண்ணாடியில் முகம் பார்க்கும் போது தன்னில் ஏதோ ஒன்று குறைகிறது என்று கவலை கொள்வார்.அவர் கோபம், அவமானம், துயரம் , குற்றவுணர்வு என்று பல்வேறு உணர்வு நிலையில் தகித்தப் படியே இருப்பார்.ஓர் இடத்தில் அமர இயலாமல் தவிப்பார்கள்.ஏனேனில் அவரது பிம்பம் உடைக்கப்பட்ட நிலையிலேயே நொறுக்கப்பட்ட நிலையிலேயே தான் இருக்கிறது.அதை அவரால் மீட்க இயலவில்லை.மெல்ல தன்னைச் சுரண்டியவரை எப்படி பழிவாங்கலாம் என்று எண்ணத் துவங்குவார்.

1. உடல் அளவில் பாதிப்பை ஏற்படுத்துவது.

2. பொருளாதாரத் தளத்தில் பாதிப்பை ஏற்படுத்துவது. வேலையில் இருந்து நீக்க வைப்பது அல்லது தொழிலை முடக்க முனைவது.

3. சுரண்டியவருக்கு தெரிந்த நபர்களுக்கு அவரைப்பற்றிய சுய ரூபத்தை தெரியப்படுத்துவது.

4. பொதுவில் முன்வைப்பது.

5. புறக்கணித்து முன்செல்வது.

6.  மன்னிப்பை கோருவது.

இதில் பாதிக்கப்பட்டவர் தன்னால் இயன்ற வகையில் ஒன்று பழிவாங்குவார் அல்லது புறக்கணித்துச் செல்வார் அல்லது மன்னிப்பை கோருவார்.இதனால் தான் பல நேரங்களில் பத்து வருடங்கள் இருபது வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்தவை சட்டென்று வெளியில் வருகின்றன.பாதிக்கப்பட்டோரை பொறுத்தவரை அவை எப்போதோ நிகழ்ந்தவை அல்ல , அவர்களுக்கு அது முந்தைய நாள் நடந்த நிகழ்வு போல இருக்கும்.அந்த உரையாடல்கள் அவர்களுக்குள் நிகழ்ந்தபடியே இருக்கும்.சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர் கோருவதெல்லாம் எந்த ஆனாலும் இல்லாத ஒரு எளிய மன்னிப்பை மட்டுமே.ஏனேனில் அது பாதிக்கப்பட்டவரை ஒரு மனிதராக பொருட்படுத்துகிறது.அவரின் கேலிச்சித்திரம் நேர் செய்யப்படுகிறது.அவர் தன் ஆடி பிம்பத்தை மறுபடியும் பெறுகிறார்.

ஒரு காலகட்டத்திற்கு பிறகு சிலர் தங்கள் முந்தைய பிம்பத்தை திரும்ப பெறுகின்றனர்.அவர் தன் தாய் தந்தையருடன் அமர்ந்து மிட்டாய் மென்றவாறு பேராக்கு பார்க்கத் துவங்குகிறார்.மனம் அந்த ஏகாந்த நிலையை அடையும் போது அவர் தன் வேலைகளை முன் போல செய்யத் தொடங்குவார்.சிலர் ஒரு போதும் முன் போல் இயங்க இயலாத வகையில் முழுமையாக சிதறிப்போய் விடுகின்றனர்.சிலர் தன்னைச் சுரண்டியவரிடமே சென்று சேர்ந்துவிடுகிறார்கள்.ஜெயகாந்தனின் கதை ஒன்றில் பாதிக்கப்பட்ட பெண் தன்னை பாதித்தவனிடமே சென்று சேர்கிறார்.

ஆனால் எப்போதும் சுரண்டியவருக்கும் பாதிக்கப்பட்டவருக்குமான அந்த உறவு ஒரு பிணைப்பு நீடித்துக்கொண்டே தான் இருக்கும்.சுரண்டியவரின் துணை அறியாத சில இரகசியங்களை பாதிக்கப்பட்டவர் அறிவார்.சிலர் சில காலம் கழித்து அணைத்தையும் மறந்து எளிமையாக உரையாடக் கூடியவர்களாகவும் மாற்றம் கொள்வார்கள்.காலம் சிலரை கனிய வைக்கும்.மறக்க வைக்கும்.சுரண்டுபவரும் எல்லா நேரங்களிலும் திட்டமிட்டு இவற்றை நிகழ்த்துவதில்லை.அது நிகழத் துவங்குகையில் அவர் திட்டமிடத் துவங்கிறார்.ஆனால் பல நேரங்களில் சுரண்டுபவர்களிடம் ஒரு Pattern இருக்கும் என்றே உளவியலில் சொல்லப்படுகிறது.அனைத்தையும் கறுப்பு வெள்ளையில் நம்மால் அடைக்க முடியாது என்பதும் உண்மைதான் .உறவுகள் அது அப்படித்தான் என்ற சுந்தர ராமசாமியின் கவிதை ஒன்று இருக்கிறது.அது இத்தகைய விஷச் சுழற்சி கொண்ட உறவுகளுக்கும் பொருந்தும்.

இத்தகைய விஷயங்களை சரியாக சொல்வதற்கு புனைவு தான் சரியான வாகனம் என்று இதை எழுதும் போது உணர்கிறேன்.உளவியலாளர்களால் இன்னும் நன்றாக விளக்க முடியும்  என்று நினைக்கிறேன்.