பொருள்



தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்

ஸ்டீபன் ஹாக்கிங் பற்றிய தியரி ஃஆப் எவரிதிங்(Theory of everything) திரைப்படத்தில் அவர் இறுதி காட்சியில் தன் மனைவி மக்களுடன் அரண்மனைக்கு சென்று ராணியை சந்தித்த பின்னர் தோட்டத்தில் தன் குழந்தைகள் தொலைவில் விளையாடிக்கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்தவாறு தன் மனைவியிடம் பார், நாம் உருவாக்கியவற்றை என்று கூறுவார்.மிகவும் அபாரமான காட்சி.

ஸ்டீபன் ஹாக்கிங் தன் பொருள் என்று தன் மக்களை கூறுகிறார்.மேலே உள்ள குறள், தம் புதல்வரைத் தம் பொருள் என்று சொல்லுவர் அறிந்தோர்.அந்த புதல்வரின் பொருள் அவர் அவரின் வினையான் வரும் என்று கூறுகிறது.

தன் குழந்தைகளின் அறிவுச்செல்வம், பொருட்செல்வம், மக்கள் செல்வம் எல்லாம் அவர் அவரின் வினையால் வருவது.அது வாழையடி வாழையாக வருவது அன்று.இதுவும் பெளத்தம் , சாங்கியம் கூறும் காரண - காரிய அடிப்படையையே குறிக்கிறது.அதே நேரத்தில் கர்மவினை என்று பெளத்தம் எதையும் சுருக்குவதில்லை.தற்செயல் என்று எதையும் தனித்து பார்ப்பதுமில்லை.காரணங்களையும், சூழ்நிலைகளையும் , ஆதரவுகளையும் சார்ந்து ஒவ்வொன்றும் எவ்வாறு மாறுகின்றது, மறைகிறது, தோன்றுகிறது என்பதை நிர்னயிக்கும் இயற்கை விதிகளின் தொகுப்பே தர்மம்.கர்மவினை ஒருவரின் தனிப்பட்ட செயல்களை மட்டுமே சுட்டுகிறது.ஆனால் பெளத்தம் எதையும் தனித்த ஒன்றாக பார்ப்பதில்லை.அது ஆன்மைவை மறுக்கிறது.அதனாலேயே அதை அனான்மவாதம் என்கிறார்கள்.எதுவும் மாற்றத்திற்கு உட்படாத வகையில் இருக்க இயலாது என்பதே பெளத்தத்தின் அடிப்படை.

இதுவரையான காரணங்களின் வழி இனியான காரியங்கள் இருக்கிறது.அதில் உங்களின் பங்கும் இருக்கிறது.உங்களின் பிரக்ஞையின் துணைக்கொண்டு இருக்கும் சூழமைவில் நீங்கள் எவ்வாறு தேர்கிறீர்கள் என்பதையே பெளத்தம் பேசுகிறது.அந்த வகையில் இந்தக் குறள் தந்தை வழி மகன் எந்த பொருளையும் பெறுவதில்லை, மாறாக அது அவனின் வினை வழி வருவது என்று கூறுகிறது.அப்படியே அவன் பெறும் மக்களும் அவன் வினை வழி வருவது என்றே கூறுகிறது.ஒரு கருவில் உருவாகும் குழந்தையின் எண்ணத் தொகுப்பு அவரின் வினையாலும் தேர்வாகிறது என்பதாக கூட இதைக் கொள்ள முடியும்.

திருக்குறளில் பெளத்தத்தின் தாக்கம் வலுவாக உள்ளது.இதை குறித்து பல அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள்.தனித்த சுயம்பு என்று எதுவும் இல்லை.ஒன்றின் சாத்தியம் அந்த சூழமைவில் தான் இருக்கிறது.ஐன்ஸ்டீன் அவர் உருவான காலத்தில் தான் உருவாகியிருக்க முடியும்.Positive unconsciousness என்று ஃபூக்கோ தன் The order of things புத்தகத்தில் இதை குறிப்பிடுகிறார்.இது முக்கியமான ஒன்று.

இது யுகபுருஷர்களை , பிம்பங்களை, அறிவுஜீவிதனத்தை உடைக்கிறது.எனக்கு இந்த தேர்தெடுக்கப்பட்டவர்கள், ஆசிர்வதிக்கப்பட்டவர்கள், பீடிக்கப்பட்டவர்கள் போன்றவற்றில் நம்பிக்கை இல்லை.எழுத்து, கலை , விஞ்ஞானம், ஆன்மிகம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த நம்பிக்கை உள்ளது.அவர்கள் பெரும்பாலும் உலக மனிதர்களை இரண்டாக வகுக்கிறார்கள்.சாமானியர்கள் மற்றும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் அல்லது வேறு ஏதோ பட்டவர்கள்.ஜெயமோகன் இதை பலமுறை எழுதியிருக்கிறார். இந்த ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் தான் இந்த சாமானியர்களின் வாழ்க்கையின் விடிவெள்ளி மற்றும் சனியும் கூட.அவர்கள் இவர்களுக்காக புதிய உலகை உருவாக்குவர்கள்.அதன் பொருட்டு அவர்களின் சிறுமைகள், மீறல்கள் உலகத்தால் பொறுத்தக்கொள்ளப்பட வேண்டும்.குற்றமும் தண்டனையும் நாவலில் இதைத்தான் ரஸ்கோல்நிகோவ் சொல்கிறான்.

ஆனால் ஒருவன் ஒரு இருட்குகையில் சிறு ஒளியை உருவாக்குவது கூட அந்த சூழமைவிலிருந்து பெறும் ஒன்றே.அங்கு அதை செயல்படுத்தும் அவன் ஒரு நிமித்தம் மட்டுமே.அவன் கடவுளோ, ஆசிர்வதிக்கப்பட்டவனோ அல்ல.ஐன்ஸ்டீன் தன் அறிதல்களை பற்றி சொல்லும் போது தான் நியூட்டன் , கலீலியோ போன்றோரின் தோள்களில் ஏறி அதை அறிந்ததாக கூறுகிறார்.அவர் ஏன் அறிந்தார் பிறர் ஏன் அறியவில்லை என்ற கேள்விக்கு நாம் Resonance என்பதை பற்றி யோசிக்கலாம்.சூழமைவில் உள்ள ஒரு அறிதலை அதன் அலைவரிசையில் வந்து சேரும் ஒரு மனம் அறிந்துகொள்கிறது.அவ்வளவுதான்.அதற்கு அப்பால் அந்த மனம் செய்யக்கூடியது ஒன்றுமில்லை.

நான் பெரும்பாலும் இலக்கிய கூட்டங்கள் , விவாதங்கள், உரையாடல்களில் , குழுக்களில் , ஜெபங்களில் பங்கு கொள்வதில்லை.அது ஏதோ ஒரு வகையில் அறிந்தோர் சபை என்ற எண்ணத்தை கொண்டுள்ளது.எனக்கு அப்படியான இடங்களில் என்னை பொருத்துக்கொள்வதில் தயக்கம் உள்ளது.நீங்கள் புதிதாக படைக்க ஒன்றும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.இன்றைய மனிதன் நேற்றைய மனிதனை விட பண்பானவன் , நாகரீகமானவன், அறிந்தவன் என்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை.அவர் அவர் தன் பிரக்ஞையின் வழி இந்த வாழ்க்கையில் தேர்கிறார்கள்.அதற்கு அப்பால் இதைப்பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.சென்று சேர்வதற்கும் அழைத்துக்கொள்வதற்கும் எந்த இஷ்டலோகமும் இல்லை. 

No comments: