தலைமையாசிரியரின் காதல்கள்










தலைமையாசிரியர் சுப்பையா பிள்ளை
கல்லூரிப்பருவத்தில்
நூறு ஏக்கர் நிலமும் இரண்டு வீடுகளும்
வீட்டின் ஒரே பெண்ணுமான
சுதந்திராவை தீவிரமாக காதலித்தார்.

ஒரு டஜன் வாழைப்பழங்களை ஒரே மூச்சில் விழுங்கும்
சுப்பையா பிள்ளையை
சுதந்திராவும் தீவிரமாக நேசித்தார்.

ஒரு நாள் நள்ளரிவில் தன் கனவில்
சுப்பையா பிள்ளை வந்ததை
தன் தோழிகளிடம் சொல்லி உடல் சிலிர்த்தார் சுதந்திரா.
ஆனால் அந்தப் பெண் ஒரு காலைப் பொழுதில்
தலைமையாசிரியரை சந்திக்க விரைந்தோடி வந்த போது
சுப்பையா பிள்ளை சாப்பிட்டு வீசிய
வாழைப்பழத் தோல் வழுக்கி விழுந்து
சுப்பையா பிள்ளையின் மடியில் அகால மரணமடைந்தார்.
தாடி வளர்த்த தலைமையாசிரியர்
வாழ்க்கை என்பது சூன்யம்
என்று அறிவித்தார்.

இலக்கிய புத்தகங்கள் வாசித்தார்.
சுப்பையா பிள்ளையின் தந்தை சிவிலிங்க பிள்ளைக்கு
செலவு கூடாது என்பதற்காக இலக்கிய புத்தகங்களை
இரவல் வாங்கி வாசித்தார்.
வாசித்த புத்தகங்களை திரும்ப கொடுக்காமல் பாதுகாத்தார்.
சிறந்த வாசகரான தலைமையாசிரியர்
கவிதைகள் எழுத துவங்கினார்.
அவை பிரசுரமாயின.
இருத்தலிய அவதியை கவிதையில் சிறப்பாக
கொண்டுவந்துவிட்டதாக
பெண் விமர்சகர் பூக்குட்டி அவரை பாராட்டினார்.

வேலைக்கு சேர்ந்த இடத்தில்
மறுபடியும் ஒரு பெண்னைப் பார்த்தார்
சுப்பையா பிள்ளை.
தாடியை மழித்த சுப்பையா அந்தப் பெண்ணும்
எழுத்தாளர் என்பதை புரிந்துகொண்டார்.
பெண்ணின் உண்மையான பெயர் அமலா என்பதும்
அவளிடம் இரண்டு மாற்றுத் துணிகள்தான் உள்ளது என்பதையும்
அறிந்த சுப்பையா பிள்ளை
மறுபடியும் தாடி வளர்த்தார்.

சிவிலிங்க பிள்ளை 
இருநூறு ஏக்கர் நிலமும் மூன்று வீடுகளும் உள்ள
முத்துலிங்க பிள்ளையின் ஒரே பெண்னை
தலைமையாசிரியருக்கு பேசி முடித்தார்.
பெண் பார்க்கும் படலத்தில்
தன்னை கவிஞர் என்று சொல்லிய
தலைமையாசிரியர் தாடியை மழித்திருந்தார்.

வாழைப்பழ வீரன் சுப்பையா பிள்ளை 
கிடைக்காததால்
அமலா தற்கொலை செய்துக்கொண்டார்.

அதுவரை 
கவிதைகள் மட்டுமே எழுதிக்கொண்டிருந்த
தலைமையாசிரியர் அன்று
இரண்டு டஜன் வாழைப்பழங்களை முழுங்கி
பெரும் சங்கல்பத்துடன்
தன் முதல் நாவல் தலைமையாசிரியரின் காதல்களை
எழுதத் தொடங்கினார்.ஓரிரவில் நாவலை முடித்தவர் அதை
அமலாவுக்கு சமர்பித்தார்.

தமிழ் கூறும் நல்லுலகு 
இருத்தலிய அவதியின் கோட்பாட்டை
சிறப்பாக முன்வைக்கும் நாவலை பெற்றது அதன் நல்லூழ்
என்று
நவீன பெண் விமர்சகர் பூக்குட்டி 
புத்தக வெளீயிட்டு விழாவில்
சிறப்பாக பேசினார்.

தலைமையாசிரியர் தன் மனைவியுடன்
வந்து விழாவை சிறப்பித்து
நன்றாக பேசிய பூக்குட்டிக்கு
இரண்டு டஜன் வாழைப்பழங்களை வழங்கினார்.
பின்னர் தன் "தலைமையாசிரியரின் காதல்கள்" நாவல்கள் 
ஏன் ஒருமுன்னோடி நாவல் 
என்று பேச துவங்கினார்
சுப்பையா பிள்ளை.
கூட்டம் ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தது.

வைகோ

 
வைகோவை போல தனக்கான எல்லா வெற்றி வாய்ப்புகளையும் எப்போதும் இழக்கும் ஒரு அரசியல்வாதி தமிழ்நாட்டில் இல்லை.இந்தியாவில் கூட இருக்க முடியாது.அவரின் அரசியல் வாழ்க்கை திராவிட முன்னேற்றக் கழகத்தில் அண்ணாதுரை காலத்தில் துவங்குகிறது.ஐம்பது வருடங்களாக அரசியலில் இருக்கிறார்.தி.மு.கவில் இருந்த போது எம்.பியாக இருந்திருக்கிறார்.தொண்ணூறுகளில் அவர் திமுகவிலிருந்து நீக்கப்படுகிறார்.அது அவருக்கு ஆழமான காயத்தை ஏற்படுத்திவிட்டது என்று அவருடைய மகன் வையாபுரி சொல்லியிருக்கிறார்.வைகோவால் அந்த துரோகத்தை தாங்கிக் கொள்ளவே இயலவில்லை.அவர் வேறு வழியில்லாமல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்குகிறார்.பல மாவட்ட செயலாளர்கள் வைகோவுடன் செல்கிறார்கள்.குடையை சின்னமாக தேர்வு செய்கிறார்.மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தின் முதல் தலைப்பு மஞ்சள்குடை.குடை ஈழத்தமிழர்களுக்கு ஒரு நிழலாக இங்கும் அங்கும் இருக்கும் என்ற எண்ணத்தில் அவர் அதை உருவாக்கியிருக்கலாம்.அவருக்கு 2009வரை பிரதான அக்கறையாக ஈழம்தான் இருந்தது.அதுவும் மதிமுக பெரிய அளவில் வளராமல் போனதற்கு முக்கிய காரணம்.தொண்ணூற்றியாறு தேர்தலில் திமுக த.மா.காவுடன் கூட்டனி வைத்தது.ரஜினிகாந்த் அந்த கூட்டணியை ஆதரித்தார்.வைகோ படுதோல்வி அடைந்தார்.அதன்பின் அணைத்து சட்டமன்ற தேர்தல்களிலும் அவர் தவறான முடிவையே எடுத்திருக்கிறார்.அவரால் ஒரு போதும் திமுகவுடன் இயல்பாக இருக்க முடியவில்லை.அது அவரை வெளியேற்றிய கட்சி.அங்கு அவரின் இருப்பு மறுக்கப்பட்டது.அதற்கு விசேஷமான காரணங்கள் ஒன்றுமில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.அதிமுகவில் அவருக்கு பெரிய அளவில் ஓட்டு வங்கி இல்லை என்பதால் கடந்த தேர்தலில் அதிக இடங்கள் மறுக்கப்பட்டது.அவருடைய கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.உண்மையில் மதிமுக ஆரம்பிக்கப்பட்ட போது அவருக்கு நல்ல ஆதரவு இருந்தது.தொண்ணூற்றியாறு தேர்தலுக்கு பிறகு குடை சின்னத்தை அவரால் தக்கவைக்க முடியவில்லை.அவருக்கு பம்பரம் சின்னம் வழங்கப்பட்டது.

பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையில் கழித்தார்.அப்படிப்பட்டவர் மறுபடியும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார்.ஒரு பேட்டியில் சொல்லும் போது எங்கள் கட்சியினர் இதையே இயல்பான கூட்டணியாக எண்ணுகிறார்கள் என்று சொல்லியிருந்தார்.திமுகவில் இன்று பெரிய அளவில் இருக்கும் அனைவருடன் அவருக்கு நல்ல பழக்கம் இருந்திருக்க வேண்டும்.அங்கே கூட்டணிக்காக செல்லும் போது அவர் நுட்பமான அவமானங்களை தொடர்ந்து சந்திந்திருக்க வேண்டும்.அல்லது சாதாரண விஷயங்களை கூட அவர் மிகப் பெரிய அவமானமாக நினைத்து புழுங்கியிருக்க வேண்டும்.அவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியில் கூட்டணி சேர்ந்து இறுதியில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

அவர் தனியாக கட்சி தொடங்கிய இந்த இருபது வருடங்களில் அவர் மிகச்சரியான முடிவை இந்த சட்டமன்ற தேர்தலில்தான் எடுத்தார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மக்கள் நல கூட்டு இயக்கம் என்பதின் எண்ணத்தை உருவாக்கினாலும் அதை ஒரு மாற்று கூட்டணியாக மாற்றியவர் வைகோ.நான்கு கட்சிகளை இணைத்தார்.விஜயகாந்தை கூட்டனிக்கு கொண்டு வந்தார்.அதற்காக மிகப்பெரிய சமரசத்தை செய்துக்கொண்டார்.த.மா.காவை இணைத்தார்.உண்மையில் ஒரு கட்டத்தில் அந்த கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெறக்கூடும் என்பது சாத்தியமே என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்தது.தேதிமுகவிலிருந்து சிலர் விலகிச்சென்ற போது வைகோ அதீதமாக உணர்ச்சிவசப்பட்டு மிகவும் தரக்குறைவாக பேசினார்.மிக குறைந்த நேரத்தில் மன்னிப்பு கேட்டார்.இது தன் வாழ்நாளில் செய்த பெரும் தவறாக கருதுவதாக சொன்னார்.ஒரு அரசியல் தலைவர் தான் செய்த தவறுக்கு வருந்தலாம் , மன்னிப்பு கேட்கலாம் ஆனால் அழ வேண்டியதில்லை , கதற வேண்டியதில்லை.வைகோ கிட்டத்தட்ட கதறினார்.நம்மை அவமானப் படுத்தியவர்கள் மீது நமக்கு வெறுப்பு இருப்பது இயல்பு.சந்தர்ப்பம் அமைந்தால் நாமும் அவர்கள் பழிவாங்க துடிக்கிறோம்.அவமானம் ஆழமான மன உரையாடல்களை உருவாக்க வல்லது.வைகோ ஸ்டாலின் ஒரு போதும் முதலமைச்சர் ஆகக்கூடாது என்று விரும்பினார்.திமுக கட்சி வலுவிழந்து தோல்வி அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டார்.ஒரு வகையில் அவரை இயக்கும் சக்தியே அந்த வெறுப்புதான்.அந்த வெறுப்பில் அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.பின்னர் வருந்தினார்.செய்தியாளர்களிடம் பேசும் போது நான் பேசியதற்கு ஆழி செந்தில்நாதன் , ரவிக்குமார் போன்ற அறிவுஜீவிகள் அளித்த கண்டனத்தை வாசித்தேன் என்றார்.உண்மையில் ஒரு அரசியல்வாதி அறிவுஜீவிகளை பொருட்படத்துக்கூடாது.அறிவுஜீவிகள் களத்தில் இல்லை.மேலும் வைகோவின் பிரச்சனை இந்த தேர்தல் மட்டும் இல்லை.இருபது வருட பகை.மிகவும் தாழ்ந்து மன்னிப்பு கேட்கும் போது மறுபடியும் வெறுப்பு அதிகமாகிறது.ஏனேனில் உண்மையான பிரயமும் அன்பும் இருக்கும் இடத்தில் மட்டுமே மன்னிப்பு கேட்கும் போது நீங்கள் அதை அவமானமாக உணர்வதில்லை.

பின்னர் அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய செல்கிறார்.திடீரென்று ஏதோ சதி நடக்கிறது ,நான் இந்த தேர்தலில் நிற்க போவதில்லை என்று சொல்லி தன் கட்சியை சேர்ந்தவரை நிற்க வைக்கிறார்.அவருக்கு தான் பதவிக்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்று நிறுவ வேண்டும்.தன் நோக்கம் சமூக நீதியை நிலைநிறுத்துவதுதான் என்று அறிவுஜீவிகளிடம் சொல்ல வேண்டும்.தன் எண்ணம் பதவியோ பணமோ அல்ல என்று சொல்ல நினைத்தார்.அவர் திமுகவினரை விமர்சித்து உணர்ச்சிவசப்பட்டு பேசியதற்கும் இந்த முடிவுக்கும் நிச்சயமாக தொடர்பு உள்ளது.அவர் தன்னை மிகவும் நல்லவராக காட்டிக் கொள்ள முயல்கிறார்.அதை செய்ய பலதையும் செய்து பரிதாபமாக தோற்கிறார்.உண்மையில் மிஷ்கின் படங்களில் மைய கதாபாத்திரங்களை பார்த்து ஒரு உதிறி கதாபாத்திரம் நீ போலீஸ் ,நீ டாக்டர் என்று சொல்லும்.அப்போது தான் அந்த கதாபாத்திரம் தன்னை உணரும்.அதுபோல யாராவது வைகோவிடம் நீங்கள் அரசியல்வாதி அரசியல் செய்யுங்கள் என்று சொல்ல வேண்டும்.அவருக்கு திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஆசை.சரி.அதற்கான வேலைகளை நிதானமாக வலுவாக செய்ய வேண்டும்.சரியான நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.அதுவரை உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும்.அதை வைகோவால் செய்ய முடியவில்லை.அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்யாமல் விட்டது அவருடைய கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னகர்வை உருவாக்கியிருக்கிறது.தேர்தல் முடிந்தபின் அவருடைய கூட்டணி தலைவர்களே இதை சொல்வார்கள்.வெறுப்பு ஒரு ஆழமான விசை.சரியாக பயன்படுத்தினால் நல்ல ஆற்றல் சக்தியாக இருக்க வல்லது.வெறுப்பை கடக்க மூன்று வழிகள் உண்டு.ஒன்று பழிவாங்குவது.மற்றது முற்றிலுமாக புறக்கணிப்பது ,மூன்றாவது அவர்களை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் எல்லாவற்றையும் மறந்து நம் மகிழ்ச்சியை முதன்மையாக்கி வாழ்வது.இந்த மூன்றில வலுவானது மூன்றாவது வழி.

ஆனால் தனிப்பட்ட வாழ்க்கைக்கு வேண்டுமானால் அது பொருந்தும்.வைகோ தன் வெறுப்பை நல்ல ஆற்றல் சக்தியாக மாற்ற இயலாமல் தோற்றுபோய்விட்டார் என்பதே உண்மை.அவர் இறுதிவரை அரசியல்வாதியாக மாறவில்லை.நான் அரசியல் செய்கிறேன்.முடிந்தால் உன்னை தோற்கடிப்பேன்.இல்லையென்றால் உன்னுடன் இணைந்து என்னை வலுப்படுத்திக்கொள்வேன்.சந்தர்ப்பம் அமையும் போது முதுகில் குத்துவேன் என்று ஒரு சாதராணமான அரசியல்வாதியாக இருக்க வைகோவிற்கு தெரியவில்லை.மக்கள் நலக் கூட்டணி பெரிய அளவில் இடங்களை பெறப்போவதில்லை.அவர்களின் பெருந் தோல்விக்கு வைகோ தேர்தலில் நிற்காதது முக்கிய காரணமாக இருக்கும்.தன்னை நிராகரித்தவர்களின் முன் அவமானத்தை பெருந்தீயாக்கி வெற்றி பெறுவது எல்லோரும் விரும்பும் கதை.நம்மை அவமானப்படுத்தியவர்கள் அப்போது வயிறு எரிவது பார்ப்தற்கு சுவாரசியமான விஷயம்.நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம்.வைகோவிற்கு அது சாத்தியப்படவில்லை.அதற்கு காரணம் அவர்தான்.வைகோ திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டது , அதை புறவயமாக புரிந்து கொள்ள முயலாமல் தனிப்பட்ட அவமானமாக அவர் கருதியது,அதை நினைத்து புழுங்கியது, மதிமுகவை பெரிய கட்சியாக மாற்ற முடியாமல் தோற்றது, எப்போதும் சட்டமன்ற தேர்தல்களில் தவறான முடிவை எடுப்பது,மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி வலுவானதாக மாற்றி பின்னர் தன் பாவனைகளால் அதை பெருந்தோல்விக்கு ஈட்டுச்சென்றது என வைகோவின் வாழ்க்கை காவியசோகம் நிரம்பியது.ஆனால் நம்மால் அவரை பார்த்து பரிதாபப்பட முடியவில்லை.ஒரு பெரும் வேடிக்கை நிகழ்வாக அது மாறியுள்ளதை பார்த்து சிரிக்கிறோம்.வாழைப்பழத் தோல் வழுக்கி கீழே விழுபவரை பார்த்து சிரிப்பது மனித இயல்பு தானே.

இலக்கியத்தின் ஊற்று





இன்று பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் எழுதுவதில்லை என்று போகன் சங்கர் எழுதியிருந்தார்.இலக்கிய ஆக்கங்கள் அடிப்படையில் பிறழ்வு,சிதைவு மற்ற நெருக்கடிகளால் மட்டுமே உருவாகுகிறது.அல்லது அப்படியான அனுபவங்கள்தான் ஒருவரை அந்த காலகட்டத்திற்கு பிறகு எழுத வைக்கிறது.இந்த சிக்கல்கள் இல்லாதவர்கள் எழுத முடியாது.பிராமண சமூகம் அந்த நெருக்கடிகளை இன்று கடந்து விட்டது என்றுதான் தோன்றுகிறது.ஒவ்வொரு காலகட்டத்திலும் நம் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்தான் பெரிய அளவில் வழக்குரைஞர் துறையில் பணிபுரிகிறார்கள்.இன்று பிராமண சமூகத்தினரில் பெரும்பாலானோர் வழக்குரைஞர் துறையில் இல்லை.சைதாப்பேட்டை , எழும்பூர் நீதிமன்றங்களுக்கு சென்றால் இளைஞர்களில் பிராமண வழக்குரைஞர்களை காண்பது அரிது.ஒரு சமூகம் அரசியல் சக்தியாக அதிகாரத்தை நோக்கி மேலெழுந்து வரும் போது அந்த சமூகத்தினர் இலக்கியத்தில் ஈடுபடுகிறார்கள்.வழுக்குரைஞர்கள் ஆகிறார்கள்.இவைகளுக்கு இடையில் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது.
இன்று பெருநகரங்களில் பணிபுரியும் பிராமணர்களில் அநேகரின் பாட்டனார் அல்லது தந்தை ஒன்பது மணிக்கு ஆரம்பித்து மாலை ஐந்து மணிக்கு முடியும் வேலையை பெருநகரங்களில் செய்திருக்கிறார்கள்.காலையிலிருந்து மாலைவரை அலுவலகத்திலிருந்து பின்னர் வீடு திரும்பி வார இறுதிகளில் அடுத்த வாரத்திற்கான தயாரிப்புகளை செய்துகொள்வதும்,கலை சார்ந்த துறைகளில் மிக மேலோட்டமாகவோ அல்லது தீவிரமாகவோ தங்களை ஈடுபடுத்திக்கொள்வதுமான நெகிழ்வு தண்மை கொண்ட வாழ்வை அவர்களின் பிள்ளைகள் இன்று பெருநகரங்களில் வாழ்கிறார்கள்.இன்று இடைநிலை சாதிகளில் கூட இரண்டாம் தலைமுறையினர் தங்களுக்கு இடையில் பெரிய தொடர்பு வைத்துக் கொள்வதில்லை.ஆனால் பிராமண சமூகத்தில் அவர்கள் தங்கள் சமூகத்திற்குள் எப்போதும் தொடர்பிலேயேதான் இருக்கிறார்கள்.தங்கள் சாதி சார்ந்த சடங்குகளை செய்கிறார்கள்.சுயசாதியில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.உலகமயமாக்கல் சூழலில் அலுவலகத்தில் எந்த வித பண்பாட்டு சுமைகளும் இல்லாத ஒற்றை பரிமாண மனிதனாகவும், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தங்கள் பண்பாட்டு அடையாளங்களை தக்க வைத்துக் கொள்பவர்களாகவும் பிராமணர்கள் தங்களை வெற்றிகரமாக தகவமைத்துக் கொண்டார்கள்.அவர்கள் தங்கள் பண்பாட்டு அடையாளங்களையும் இழக்கவில்லை.இன்றைய உலகமயாமாக்கல் சூழலில் வெற்றி பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.இந்த இரட்டை வாழ்க்கை அவர்களின் வாழ்வை நெருக்கடி அற்றதாக மாற்றியிருக்கிறது.அதே நேரத்தில் வாழ்க்கை,சடங்குகள் சார்ந்த ஒரு மெல்லிய கேலியும் அவர்களிடம் இருக்கிறது.அந்த கேலியை தாண்டிய புகார்கள் எதுவும் இன்று அவர்களிடம் இல்லை.முகுந்த் நாகராஜன் கவிதைகளில் நாம் இதைப் பார்க்கிறோம்.
வா.மணிகண்டனின் என்னை கடவுளாக்கிய தவிட்டுக்குருவி பெருநகர வாழ்வின் அவதியை பேசும் கவிதை தொகுப்பு.தன் தனிப்பட்ட அவதியை மானுடம் சார்ந்த அவதியாக அவர் அதில் விரித்திருக்கிறார்.ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில் வெந்நீர் கொதிப்பது போல பெருநகர வாழ்க்கையின் இரைச்சல் உருவாக்கும் அவதி அந்த தொகுப்பில் இருக்கிறது.ஆனால் இன்று அவர் அந்த அவதியிலிருந்து விலகிவிட்டார்.இந்த பெருநகர வாழ்க்கை சார்ந்த நெருக்கடிகளை அவர் வெற்றிகரமாக கடந்துவிட்டார்.அவர் அதன்பின் கவிதை தொகுப்புகள் வெளியீடவில்லை.ஆனால் அவர் இன்று எழுதும் போதும் ஈரோடு குறித்தும் பவானி குறித்தும் கோபி குறித்தும் தான் அதிகம் எழுதுகிறார்.கவலைப்படுகிறார்.வா.மணிகண்டன் பெங்களூர் வீதிகளில் இருந்தாலும் அவருடைய அக்கறை அவரின் பால்ய கால உலகில் இருக்கிறது.இந்த இடப்பெயர்வு சார்ந்த நெருக்கடிகளும் இன்று பிராமண சமூகத்தினருக்கு இல்லை.ஏனேனில் பெருநகரத்திற்கு வந்து வாழும் முதல் தலைமுறை பிராமணர்கள் இன்று பெரிய அளவில் இல்லை.அவர்களின் தந்தையோ,மாமாவோ,பெரியப்பாவோ முன்பே அங்கு இருந்திருப்பார்.ஆக இந்த இடப்பெயர்வு சார்ந்த கவலைகளும் பெரிய அளவில் அவர்களுக்கு இல்லை.
அபிலாஷ் நாகர்கோயிலை சேர்ந்தவர்.ஆனால் அவரிடம் நாம் நாகர்கோயிலின் வீதிகள் குறித்தோ மனிதர்கள் குறித்தோ நினைவேக்கம் சார்ந்த ஒரு வரியை கூட பார்க்க முடியாது.அவருக்கு இயல்பாகவே பெருநகரங்களும் இயந்திரங்களும் வாகனங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது.அவருக்கு அதுசார்ந்த நெருக்கடிகள் இல்லை.ஆனால் மனித உறவுகள் சார்ந்து , லட்சியவாதமின்மையின் வெறுமை சார்ந்து, அதிகார தளங்களில் நம்மை பொருத்திக் கொள்வது சார்ந்து , பெருநகர வாழ்வின் கலாச்சார செயல்பாடுகள் சார்ந்து கேள்விகளும், விமர்சனங்களும் , ஆச்சரியங்களும் , சிக்கல்களும் அவருக்கு இருக்கிறது.கால்கள் நாவல் போலியோவால் பாதிக்கப்பட்ட பெண் தனிமனுஷியாக இருசக்கர வாகனத்தை கற்றுக் கொள்வதுதான் பிரதானமாக வருகிறது.அவர் அந்த நகர்வை ஒரு coming of age வாக பார்க்கிறார்.ரசிகன் நாவலில் வரும் சாதிக் லட்சியவாதம் தோற்று போன சூழலில் வாழ்கிறான்.எனக்கு பரிச்சயமான அபிலாஷிற்கும் சாதிக் கதாபாத்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ஆனால் இன்று ஒரு அதிகார தளத்தில் தன்னை பொருத்திக் கொள்வது சார்ந்து , மகிழ்ச்சி என்பதன் கருத்து சார்ந்து அவருக்கு சில கேள்விகளும் குழப்பங்களும் இருக்கிறது.அதை சாதிக்குடன் ஒப்பிட்டு பார்க்க முடியும்.இத்தகைய சிக்கல்களும் இன்றைய பிராமண இளைஞர்களுக்கு இல்லை.அவர்கள் ஒரு அதிகார தளத்தில் அடிபடும் போது பின்வாங்கி சாத்தியப்படும் போது முன்னோக்கி பாயும் நெகிழ்வு தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.ஏதோ ஒரு வகையில் லட்சியவாதமின்மையின் வெறுமையை , அபத்த வாழ்வின் சிக்கல்களை ,தனிமையை அவர்களால் கலையின் மூலம்(இலக்கியம் அல்ல) கடந்துவிட முடிந்துவிட்டது.அதற்கான கருத்துகளை உருவாக்க வேண்டிய இடத்தில் அவர்கள் இன்று இல்லை.அது அவர்களின் முன்னோர்களால் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
தனிப்பட்ட வாழ்வின் பிறழ்வும் சிதைவும், நம்மை ஒரு அமைப்பில் பொருத்திக் கொள்ள இயலாமல் தவிக்கும் நெருக்கடிகளும்தான் நம்மை எழுத வைக்கிறது.நான் பதினொரு ஆண்டுகளாக வேலை செய்கிறேன்.இன்றும் வேலையில் என்னை பொருத்திக் கொள்வது எனக்கு சிக்கலாகவே இருக்கிறது.ஒரு வகையில் எங்கள் தலைமுறையில் முதல்முறையாக காலை அலுவலகம் சென்று மாலை வீடு திரும்பும் வாழ்வை நான் வாழ்கிறேன்.இது எனக்கு வழங்கப்படவில்லை.அதற்கு என்னை தகவமைத்துக் கொள்திலேயே நான் அதிக மன உரையாடல்களை நிகழ்த்த வேண்டியிருக்கிறது.எனக்கு எப்போதுமே இருக்கும் கேள்வி நாம் ஏன் சும்மா இருக்கக்கூடாது என்பதுதான்.ஏன் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதுதான் என் சிக்கல்.ஒரு வேளை சென்னை போன்ற பெருநகரத்தில் நல்ல வாடகை கிடைக்கக்கூடிய இரண்டு வீடுகள் எனக்கு இருந்தால் நான் வேலைக்கே சென்றிருக்க மாட்டேன்.இது ஒரு நெருக்கடி.இதை கடக்க சிலவற்றை புரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன்.என் முப்பது வயதில் பெங்களூரில் தனிமையில் டி.ஆர்.நாகராஜை வாசித்த போதுதான் இங்கே பெருநகரத்தில் குப்பை போடுவதற்கு ஒருவரும் அதை எடுப்பதற்கு ஒருவரும் இருக்கிறார்கள் என்பதே புரிந்தது.குப்பை போடுவர்கள் என்ன சாதியாக இருப்பார்கள், எடுப்பவர்கள் என்ன சாதியாக இருப்பார்கள் , நான் ஏன் சும்மா இருக்க விரும்புகிறேன் என்பது சார்ந்த சில எண்ணங்கள் அப்போதுதான் புலப்பட்டது.
பெரும்பாலும் வேலையும்,காதலும்,திருமணமும், குடும்ப அமைப்பும்,சமூக அமைப்பும் அது சார்ந்த சிக்கல்களும் கேள்விகளும்தான் நம்மை எழுத வைக்கிறது.இதை சார்ந்த எந்த சிக்கலும் இன்றைய பிராமண இளைஞர்களுக்கு இல்லை.சின்னச்சின்ன நெருக்கடிகளை அவர்கள் தங்களுக்கு சாத்தியமான கலைகள் மூலம் கடந்து செல்கிறார்கள்.ஒருவர் எல்லா வகையிலும் செளகரியமாக மகிழ்ச்சியாக இருந்துக்கொண்டு இலக்கிய நூல்களை உருவாக்க முடியுமா.முடியாது என்று தான் நினைக்கிறேன்.