சொற்கள்



அபிலாஷ் இந்தக் கட்டுரையில் பிழையான வாதத்தை முன்வைக்கிறார்.முருகனை தரிசித்தேன் என்பதில் உள்ள தரிசித்தேன் என்ற வார்தையை வைத்து தன் வாதத்தை முன்வைக்கிறார்.நாம் உபயோகப்படுத்தும் எல்லா வார்த்தைகளும் சுட்டும் சொற்கள் தான்.மரம் என்ற வார்த்தைக்கும் மரம் என்ற பெளதீக பொருளுக்கும் என்ன உறவு.ஒன்றுமில்லை.அதை Arbitrary என்று தானே மொழியியலில் கூறுகிறார்கள்.அதே தான் இங்கும் பொருந்தும்.நாகார்ஜூனர் அறிபடு பொருள் - அறிவு - அறியும் பொருள் ஆகிய மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்து இயங்குகிறது என்கிறார்.அதாவது எதுவும் தனித்து இல்லை என்று சொல்கிறார்.

மொழியியலில் ஒரு வார்த்தையை நாம் சொல்லும் போது அது இதுவல்ல , அது அதுவல்ல என்றே நாம் புரிந்துகொள்கிறோம் என்கிறார்கள்.அதாவது ஒரு சொல்லின் ,சமிக்ஞையின் பொருள் அதன் சூழமைவால் உருவாகுகிறது.அப்படித்தான் முருகனை தரிசித்தேன் என்பதும் பொருள் படும்.எதையும் தனியாக அர்த்தம் கொள்ள இயலாது என்று தான் நாகார்ஜூனர் சொல்கிறார்.எதுவும் இல்லை என்று சொல்லவில்லை.

அவனுக்கு அதிர்ஷ்டம் ,வேலை கிடைச்சிருச்சு என்கிறோம்.இங்கே அதிர்ஷ்டம் என்பது திருஷ்டம் என்பதன் எதிர் சொல்.திருஷ்டிப்பது என்பது பார்ப்பது, அறிவது, தெரிந்தது என்று பொருள் கொள்ளலாம்.அதிர்ஷ்டம் என்பது பார்க்க இயலாதது, அறிய இயலலாதது, தெரிந்து கொள்ள முடியாதது.அப்படித்தான் இங்கு தரிசித்தேன் என்பதும்.அது பார்த்தேன் , அறிந்தேன், தெரிந்துகொண்டேன்,உள்ளறிதல் என்று பல பொருள்களை கொண்டுள்ளது.அதை நீங்கள் எந்த சூழமைவில் பயன்படுத்துகிறீர்கள் என்பதில் அது தன் அர்த்தத்தை கொள்கிறது.நீங்கள் முருகனை பார்த்தேன் என்று சொன்னால் அது உங்கள் நண்பன் முருகன் என்றே பொருள்படும்.முருகனை அறிந்தேன் என்பது முருகனை உள் அறிந்தேன் என்பதும் அது பெளதீக முருகன் அல்ல என்றும் பொருள் கொள்ள முடியும்.முருகனை தரிசத்தேன் என்பதும் புறக்கண்களால் பார்த்து அகக்கண்களில் அடையும் உள் அறிதலாக கொள்ள முடியும்.அதனால் சொற்கள் தனியாக அர்த்தம் பெறுவதில்லை.இதே முருகனை தரிசித்தேன் என்பதை ஆங்கிலத்தில் I worshipped Murugan என்று மொழிபெயர்த்தால் அதை வாசிப்பவர் தமிழின் அர்த்தத்தை அடைய இயலாது.நீங்கள் கொக்கி கொண்டு நீரில் பாசியை இழுத்தால் மொத்தமாக பாசி வருவது போல மொழி அதன் முழுமையால் அர்த்தம் கொள்கிறது.சொற்கள் தனியாக அலைவதில்லை.

No comments: