இந்துத்துவ அரசியலின் வீழ்ச்சி



இந்துத்துவ இயக்கங்கள் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு சில விஷயங்களை முக்கியமாக வலியுறுத்தி வருகிறது.கஷ்மீர் பிரச்சனையில் அதன் நிலைப்பாடு, பொது சிவில் சட்டம் போன்றவை அதில் முக்கியமானவை.வலதுசாரி இயக்கங்கள் எப்போதும் தங்கள் பொற்காலத்தை இறந்தகாலத்தில் தேடுகிறார்கள்.அதனால் அவர்கள் எப்போதும் வரலாற்றை திருப்பி எழுதுவதில் முனைப்புடன் இருக்கிறார்கள்.1984யில் இரண்டு இடங்களில் மட்டும் வென்ற பாரதிய ஜனதா கட்சி 1998யில் ஆட்சியை பற்றியது.பிறகு 2014யில் பத்து வருடங்கள் கழித்து மறுபடியும் ஆட்சிக்கு வந்தார்கள்.வலதுசாரி இயக்கங்கள் உலகம் முழுதும் என்ன செய்வார்களோ அதையே இங்குள்ள வலதுசாரி இயக்கங்களும் செய்துள்ளது.ஒரே மொழி,ஒரே ஜனசக்தியாக ஒன்றிணைவதன் அவசியம் போன்றவை அதில் முக்கியமானவை.கஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புரிமை தரும் இந்திய அரசியல் அமைப்பின் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது.பொது சிவில் சட்டம் இன்னும் கொண்டு வரப்படவில்லை என்றாலும் முத்தலாக் தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அயோத்தியில் இதுவரை சர்ச்சைக்குரிய இடமாக கருதப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.மசூதி இடிக்கப்பட்டது தவறு என்று நீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அதனால் தான் வேறு இடத்தில் மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.இந்த தீர்ப்பு சமூக நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்பாகவே பலராலும் பார்க்கப்படுகிறது.

இதில் உள்ள முக்கிய விஷயம் இனி இந்துத்துவ அரசியல் எங்கும் செல்ல இயலாது என்பதுதான். ராம ஜென்ம பூமிக்கான போராட்டம் தான் பாரதிய ஜனதா கட்சி தேசிய அரசியலில் ஒரு வலுவான கட்சியாக உயர்வதற்கான வழியை வழங்கியது.இனி இப்படியான ஒரு போராட்ட களத்தை கண்டுபிடித்து அதன் அடிப்படையில் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று யாத்திரை செல்வதும் மக்களை திரட்டுவதும் சாத்தியமில்லாதது.குறியீட்டு தளத்தில் இந்துத்துவ அரசியில் அதன் எல்லையை தொட்டு விட்டது.இனி அந்த இயக்கத்திற்கு செல்வதற்கு வழி இல்லை.அது கீழே சரிந்துதான் ஆக வேண்டும்.பண்பாட்டு தளத்திலான அடையாள அணித்திரள்வு இனி வேறு ஒரு விஷயத்தை முன்வைத்து உருவாக்க முடியாது.அதனால் தான் எப்போதும் வெற்றியின் களிப்பில் இயக்கங்கள் சோர்வும் கவலையும் கொள்கின்றன.

திராவிட இயக்கங்களுக்கு இந்தி எதிர்ப்பு ஒரு பெரிய வரமாக அமைந்தது.அப்படியான ஒரு எதிர்ப்பை உருவாக்குவதற்கான வாய்ப்பு அமைந்திருக்காவிட்டால் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைத்திருக்க முடியாது.இப்போது எவ்வளவு முயன்றாலும் அப்படியான ஒரு இந்தி எதிரப்பு அலை உருவாக வாய்ப்பில்லை.அதே போல இந்துத்துவ அரசியலுக்கும் இனி தன்னை முழுமையாக திரட்டிக்கொள்ள வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை.என்பதுகளின் இறுதியில் உருவான இந்துத்துவ அலை மெல்ல இந்த முப்பது வருடங்களில் அதன் உச்சத்தை அடைந்துள்ளது.மலை உச்சிக்கு செல்லும் ஒருவன் கீழே இறங்கி வருகிறான்.மலை ஏறும் எவரும் எவரேஸ்ட் சிகரங்களில் குடியிருப்பதில்லை.இனி காங்கிரஸ் கட்சி அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்குள் ஒரு தலைவரை கண்டுபிடிக்க வேண்டும்.அவர் தான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க வேண்டும்.இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.இரண்டு கட்சிகள் இருக்க கூடாது.ஒரு கம்யூனிஸ்ட் கட்சியாக மாற வேண்டும்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி - 1 போன்ற அரசாங்கம் மறுபடி அமைய வேண்டும். அதை நோக்கி இந்துத்துவம் தவிர்த்த மாற்று அரசியல் கட்சிகள் பயணிக்க வேண்டும்.மண் பயனுற வேண்டும்.

No comments: