அருண்மொழி


அருண்மொழி இறந்துவிட்டார் என்ற செய்தியை படித்தேன்.மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.மிக நல்ல மனிதர்.அவர் எத்தனையோ பேருக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறார்.அவருக்கு திரைத்துறையில் , அரசியலில், இலக்கிய, நாடகத்துறையில் இருக்கும் பலரை நன்கு தெரியும்.சென்னையின் எந்தப் பகுதிக்கும் கூகிள் மேப்பை விட சிறந்த வழி சொல்வார்.சென்னையில் எங்கு சென்றாலும் அங்கு சென்று சந்திக்க ஒரு நண்பர் இருப்பார்.

நான் அவரை அவர் பிரசாத் ஸ்டுடியோவில் வேலை செய்து கொண்டிருந்த போது சந்தித்தேன்.அவர் தான் நான் இயக்கிய ராவ் சாஹிப் என்ற குறும்படத்திற்கு பல உதவிகள் செய்தார்.அவரின் உதவி இல்லாதிருந்திருந்தால் அந்த குறும்படத்தை எடுத்திருப்பேனா என்று தெரியவில்லை.யாரையும் சுரண்டாதவர்.சென்ற வருடம் சென்னை புத்தக கண்காட்சியில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன்.சில மாதங்களுக்கு முன்னர் ஏதோ விடுமுறைக்கு சென்னைக்கு சென்றிருந்த போது , மகனுக்கு பேராக்கு காட்ட சாலிக்கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் சுற்றிக்கொண்டிருந்த போது அவரும் இரு சக்கர வாகனத்தில் எதிரில் வந்தார்.பார்த்து பேசினேன்.அது தான் கடைசியாக பேசியது என்று நினைக்கிறேன்.சென்னை செல்லும் போது அவர் நடத்தி வரும் நடிப்பு பள்ளிக்கு சென்று அவரை சந்திக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.அது இனி நடக்காது என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.மூன்று முழு நீளத் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.ஏழாவது மனிதன் படத்திற்கு அவர் வசனம் எழுதினார்.திருநங்கைகளின் பிரச்சனைகள் பற்றி உண்மையான அக்கறை அவருக்கு இருந்தது.அதை சார்ந்து சில படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கிறார்.ஆவணப்படங்கள் இயக்கியிருக்கிறார்.சமீபத்தில் நடிப்பு பள்ளி நடத்தி வந்தார்.அவர் நாளை காலை பத்து மணிக்கு வருகிறேன் என்று பத்து பேரிடம் சொல்வார்.இறுதியில் பதினொராவதாக ஒருவரை பார்க்க சென்று விடுவார்.அவருக்கு என் அஞ்சலி.

(நவம்பர் 9ஆம் தேதி பேஸ்புக்கில் எழுதிய பதிவு)

 

 

No comments: