வருங்கால இணைய இதழ்கள்




தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோட்பாடுகளான அமைப்புவாதம் , பின்அமைப்புவாதம் ஆகியவற்றின் முக்கிய பிரச்சனை அதற்கு முந்திய தளங்கள் இங்கு எதுவுமே பேசப்படவில்லை என்பதுதான்.இங்கு அதற்கான தத்துவ பின்புலமும்,மொழியியல் பற்றிய அறிமுகமும் முன்னர் நிகழ்ந்திருக்க வேண்டும்.

தத்துவம்,மொழியியல்,சமூகவியல்,உளவியல்,வரலாறு,இயற்பியல்,உயிரியல்,நரம்பியல்,பொருளாதாரம் ஆகிய அறிவுத்துறைகள் சார்ந்து இங்கு எந்த அறிமுகமும் முறையாக நிகழவில்லை.அதற்கென்று தனியான இதழ்கள் இங்கு எப்போதும் இல்லை.சட்டென்று சில கோட்பாடுகள் பற்றி மட்டும் பேசப்படுகின்றன.இன்றும் மேற்சொன்ன அறிவுத்துறைகள் பற்றிய அறிமுகமும் தீவிர வாசிப்பும் வேண்டுமென்று ஒருவர் விரும்பினால் அவர் ஆங்கில நூல்களைத்தான் நாட வேண்டும்.தமிழில் சில நூல்கள் அந்த குறிப்பிட்ட ஆசிரியரின் ஆர்வத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.ந.முத்துமோகனின் நூல் முக்கியமான ஒன்று.அவர் எழுதியவை இதழ்களில் வந்து பின்னர் நூலானதா அல்லது நூலாகவே வெளியானதா என்று தெரியவில்லை.காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியிடாக வந்த ஆடம் ஸ்மித் முதல் மார்க்ஸ் வரை முக்கிய புத்தகம்.ஸோபியின் உலகம் முக்கிய அறிமுக நூல்.இன்னும் நிறைய புத்தகங்கள் இருக்கும்.

ஆனால் இதற்கான இதழ்கள் சூழலில் உருவாக வேண்டும்.அப்போதுதான் முறையான அறிமுகங்கள் சாத்தியம்.ந.முத்துமோகன் நூல் மூலமாகத்தான் எனக்கு பிராங்க்பர்ட் சிந்தனை பள்ளி பற்றிய அறிமுகம் கிடைத்தது.அப்படித்தான் அடார்னோ பற்றியும் ஹெர்பர்ட் மார்க்யூஸா பற்றியும் அறிந்தேன்.இதழ்கள் அந்தப் பணியை செய்ய வேண்டும்.நம் சூழலில் தத்துவம்,சமூகவியல்,உளவியல்,வரலாறு,இயற்பியல்,உயிரியல்,நரம்பியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்து தனித்தனி இதழ்கள் வர வேண்டும்.இணைய இதழ்களே கூட போதுமானவை.அவை அந்த துறைகள் பற்றி மட்டுமே பேச வேண்டும்.ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக மாதந்தோறும் அப்படியான இதழ்கள் வந்து அவை நூலாக்கம் பெற்றால் அவை தமிழ் அறிவுச்சூழலில் மிகப் பெரிய பாதிப்பவை ஏற்படுத்த வல்லவை.ஒரு இலக்கிய எழுத்தாளன் இந்த அறிவுத்துறைகள் பற்றிய அறிமுகத்தை கொள்ள வேண்டியது கட்டாயமாக இருக்கிறது.நூல்களாக இல்லாமல் இதழ்களாக வருவது சில உரையாடல்களை உருவாக்கும்.

ஒரு எழுத்தாளன் நீட்ஷே குறித்தும் ஸ்பினோசா குறித்தும் ஐன்ஸ்டீன் குறித்தும் ஆழமான புரிதலை சூழலிருந்து பெற வேண்டும்.அதை கலை இலக்கிய அரசியல் சிற்றிதழ்களும்,இடைநிலை இதழ்களும் செய்ய முடியாது.அல்லது அதற்கு மிகச் சில பக்கங்களை மட்டுமே ஒதுக்க முடியும்.இங்கு எப்போதும் நாம் இருத்தலியத்திலிருந்து ஆரம்பித்து பின் அமைப்புவாதம் வரை சென்று பேசுவதும் மற்றொரு தளத்தில் கீழை மார்க்ஸியம் பேசி தமிழ் தேசியம் நோக்கி வருவதுமாக இருப்பதால் பலனில்லை.

தஸ்தாவெய்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் இவான் கதாபாத்திரம் எழுதப்பட்டு கிட்டத்தட்ட நூற்றி நாற்பது ஆண்டுகள் ஆகின்றன.தமிழில் அப்படியான ஒரு கதாபாத்திரம் ஏன் இன்றைய சூழலில் கூட உருவாகி வர முடியவில்லை.ஏனேனில் தஸ்தாவெய்ஸ்கி வாழ்ந்த அறிவுச்சூழலில் தத்துவம்,விஞ்ஞானம் ஆகிய அறிவுத்துறைகள் பற்றிய ஆழமான விவாதம் நிகழ்ந்திருக்க வேண்டும்.தஸ்தாவெய்ஸ்கி மேதைதான் ஆனால் சுயம்பு அல்ல.பூக்கோ இதைத்தான் The Order of Things நூலில் சொல்கிறார்.

No comments: