தி மிரர்




ஒரு வகையில் தி மிரர் தார்கோவ்ஸ்கியின் சுயசரிதை.ஒரு கவிதை போன்ற திரைப்படம்.அலெக்ஸிதான் படத்தின் மைய கதாபாத்திரம்.இந்த அலெக்ஸியை நாம் தார்கோவ்ஸ்கியாக கொள்ளலாம்.ஒரு கதை என்கிற எதுவுமே இல்லாத திரைப்படம்.இந்தப் படம் ஏதோ ஒரு வகையில் வாழ்க்கை மரம் (The Tree of life) படத்தை நினைவு படுத்துகிறது.அலெக்ஸி மரணப்படுக்கையில் இருக்கும் போது எல்லாம் சரியாகிவிடும் என்கிறான்.மூன்று தலைமுறைகளின் தொடர்ச்சி.அலெக்ஸியின் தந்தை 1935 வாக்கில் அவர்களை விட்டு பிரிந்துவிடுகிறார்.அலெக்ஸியும் அவளது தங்கையும் அன்னையின் அரவணைப்பில் வளர்கிறார்கள்.அவனின் அன்னை பதிப்பகத்தில் வேலை செய்கிறாள்.வளர்ந்த அலெக்ஸிக்கும் அவனது மனைவிக்கும் கருத்து வேறுபாடு.இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.அவர்களின் மகன் இக்னாத் நன்றாக வளர வேண்டும் என்று இருவரும் ஆசைப்படுகிறார்கள்.அலெக்ஸி உடல் நலம் குன்றி படுக்கையில் கிடக்கிறான்.அவனின் மனைவி ஒரு எழுத்தாளனை திருமணம் செய்துகொள்ள இருப்பதை சொல்கிறாள்.இறுதி காட்சியில் அவனுடைய இளவயது அன்னை தன் கணவரோடு புல்வெளியில் படுத்து பேசிக்கொண்டிருக்கும் காட்சியும் மறுபுறம் வயோதிக அன்னை இரு குழந்தைகளையும் அதே புல்வெளியில் அழைத்து செல்லும் காட்சியும் மாறி மாறி வருகிறது.இங்கே ஒரு உயிர் தொடர்ச்சி இருக்கிறது.எனக்கு பிறகு என் மகன்.ஆனால் அது நானே தான்.படத்தில் அலெக்ஸியின் இள வயது அன்னையாகவும் மனைவியுமாக வருபவர் ஒருவரே.அவர் நிஜ வாழ்வில் தார்கோவ்ஸ்கியின் மனைவி.சிறுவயது இக்னாத்தும் அலெக்ஸியும் ஒருவரே.அலெக்ஸி மரண படுக்கையில் இருக்கும் போது ஒரு சிட்டுக்குருவியை பறக்க விடுகிறான்.அவன் சொல்கிறான் எல்லாம் சரியாகிவிடும் என்று.இங்கு எதுவும் நிற்கப் போவதில்லை.எதுவும் தொடர்ச்சி அற்று நின்றுவிடப் போவதில்லை.அலெக்ஸியின் தந்தை, அலெக்ஸி,அலெக்ஸியின் மகன் இக்னாத்.அந்த தொடர்ச்சி ஏதோ ஒரு வகையில் வாழ்க்கை மரம் படத்தை நினைவுப்படுத்துகிறது.

பீடிக்கப்பட்டவர்கள் நாவல்களில் வரும் மரியா என்ற நிகோலய் திருமணம் செய்து கொள்ளும் மனப்பிறழ்வு அடைந்த பெண்ணுடன் ஒப்பிட்டு அலெக்ஸியின் அன்னையை உடன் வேலை செய்யும் பெண் பேசுவார்.நாம் தார்கோவ்ஸ்கியை எந்தளவு அறிகிறோமோ,எந்தளவு நம்மை அறிகிறோமோ அந்தளவு மிரர் படத்தை அறிந்து கொள்ளலாம்.படத்தின் துவக்கத்தில் வரும் மருத்துவர் அலெக்ஸியின் அன்னையிடம் செடிகளை பற்றி பேசுவார்.அது தார்கோவ்ஸ்கி தன்னைப் பற்றி கொள்ளும் எண்ணம்.நான் பார்த்தவரையில் இங்கார் பெர்க்மனை விட சிறந்த இயக்குனர் தார்கோவ்ஸ்கி.இப்படி ஒரு திரைப்படத்தை ஒருவரால் எடுத்துவிட முடியும் என்றால் வாழ்க்கையில் வேறு ஒன்றுமே வேண்டாம்.இந்தப் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.படத்தை பார்த்து முடிக்கும் போது ஒரு கனவிலிருந்து மீண்டு வந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.



No comments: