சுயமும் ஆளுமையும்


ஆங்கிலத்தில் Enmeshment என்ற சொல் இருக்கிறது.இந்தியக் குடும்பங்களில் அதிகம் காணப்படும் ஒன்று தான்.பிறரில் நம்மை காண்பது என்று இதைச் சொல்லலாம். எனது உடல், எனது மனம் , எனது விருப்பு வெறுப்புகள் , எனது அடையாளம் என்ற எல்லைகளை வகுத்துக்கொள்ளாமல் பிறருடன் நமது ஆளுமையை இணைத்துக் காண்பது Enmeshment என்று சொல்லலாம்.அந்த பிறர் தந்தை, தாய், சகோதரன், ஆசிரியர், தலைவர் என்று யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.பொதுவாக Enmeshment குடும்பச் சூழலுக்கு பயன்படுத்தப்படும் வார்த்தை.இதனுடன் தொடர்புடைய மற்றொரு சொல் ஆளுமைக் குறைபாடு, ஆளுமைச்சிக்கல்(Underdeveloped Self).

சிலர் பன்னிரண்டு வயதிலேயே தனி ஆளுமைகளாக முகிழ்ந்து விடுகிறார்கள்.தங்களுக்கு எது பிடிக்கும் , பிடிக்காது என்பதிலிருந்து தங்கள் வேலைகளைத் தாங்களே பார்த்துக்கொள்வது வரை அவர்கள் முழுமையான தனிமனிதர்களாக வளர்ந்து விடுவார்கள்.சிலர் பதினெட்டு இருபது வயதில் அந்த முதிர்ச்சியை அடைவார்கள்.சிலர் முப்பது வயதில் கூட அத்தகைய தனி மனிதர்களாக ஆளுமைகளாக மாறாமல் குறைப்பட்ட ஆளுமைகளாகவே இருப்பார்கள்.இதற்கு பெரும்பாலும் தாய் அல்லது தந்தையின் வளர்ப்பு முறை ஒரு காரணமாக இருக்கும்.அல்லது அவர்கள் சிறு வயதில் பதின் பருவத்தில் எதிர்கொண்ட சிக்கல்களால் கூட இவை நிகழலாம்.ஆனால் குடும்பம் இதில் முக்கிய பங்காற்றுகிறது.உங்களுக்கு உடல் வலி என்றால் நீங்கள் துடிக்கலாம்,உங்களுடன் சேர்ந்து உங்களின் தாயும் தந்தையும் துடித்தால் அங்கே வெவ்வேறு உடல்கள் என்ற எல்லைகள் இல்லாமல் போகின்றன.தன் தந்தையில் தன்னைக் காண்பது , தாயில் காண்பது என்று அந்தக் குழந்தை வளர்கிறது.அங்கே தாய் தந்தையர் செய்ய வேண்டியது உங்களுக்கான சிகிச்சையை அளிப்பது தான்.

இப்படி வளரும் குழந்தைகள் - பதின் பருவத்தில் இளைஞனாக வெளி உலகிற்கு வரும் போது பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கிறார்கள்.காபி வேண்டுமா டீ வேண்டுமா என்று கேட்டால் அவர்களால் சட்டென்று பதில் சொல்ல முடியாது.பிறர் என்ன சொல்கிறார்கள் என்று கவனிப்பார்கள்.சிலர் தங்கள் அனுபவங்களின் வழி இதிலிருந்து விடுபடலாம்.சிலர் தங்கள் வாழ்நாள் முழுதும் இந்த ஆளுமைச்சிக்கலூடே வாழ நேரலாம்.

இத்தகையோர் தாங்கள் எதிர் கொள்ளும் பேராளுமைகளுக்கு முன் தங்களை முழுமையாக ஒப்புக்கொடுக்கிறார்கள்,சரணடைகிறார்கள். அவர்களால் எந்த ஒன்றிலும் தெளிவான முடிவை நோக்கி எளிதில் நகர முடிவதில்லை.இத்தகையோர் தான் பெரும்பாலும் சுரண்டப்படுகிறார்கள்.பொருளாதார ரீதியில், உடல் அளவில் , உளவியல் ரீதியில் என்று இந்தச் சுரண்டல் அவர்கள் யாரிடம் சிக்குகிறார்கள் என்பது பொருத்து மாறுபடலாம்.வெகு சிலரே இந்த அனுபவங்கள் வழியாக தங்களை உடைத்துக்கொண்டு வெளியே வந்து புதிய வாழ்க்கை வாழ்கிறார்கள்.பலர் சிதறிப்போகிறார்கள்.

தன்பால் விழைவு கொண்டோரில் சிலர் இத்தகைய இளைஞர்களைத்தான் தங்கள் இலக்காக கொள்கிறார்கள்.அவர்களை இவர்களால் எளிதில் குழப்ப முடிகிறது.தன்பால் விழைவு கொண்டோரில் சிலர் இரண்டு வழிகளை கடைப்பிடிக்கிறார்கள்.ஒன்று தாங்கள் பரிதாபத்திற்கு உரிய ஜீவன் என்றும் கருணை காட்டப்பட வேண்டும் என்றும் கெஞ்சுவார்கள்.மற்றொரு முனையில் தாங்கள் எத்தனை பெரிய ஆளுமை என்றும் தன் அதிகாரம் எத்தகையது என்றும் வேஷம் கட்டுவார்கள்.அவர்கள் இந்த இருவேறு நிலைகளை மாறிமாறி நடிப்பார்கள்.தங்களுக்கு இரை சிக்குமா என்று பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.அதே நேரத்தில் இத்தகையோர் சற்று தெளிவுடனும் இருப்பார்கள்.அந்த இரையை ஒன்றும் செய்ய முடியாது என்று புரிந்து விட்டால் அந்த இரையை விட்டுவிட்டு அடுத்த தேர்வுக்கு போய்விடுவார்கள்.

தன்பால் விழைவு கொண்டு பிறரை சுரண்ட முயல்வோர் பெரும்பாலும் பதினைந்து வயதிலிருந்து இருபத்தியைந்து வயதுக்குள் இருப்போரைத்தான் தங்கள் இலக்காக கொள்கிறார்கள்.தன்பால் விழைவு பிழையல்ல என்று தான் இன்றைய சட்டமும் , விஞ்ஞானமும் சொல்கிறது.ஆனால் உங்களுக்கான இணையை நீங்கள் தான் தேடிப் பெற வேண்டும்.இணை வேறு இரை வேறு.

இப்போது தமிழ் நவீன இலக்கிய சூழலில் வந்து கொண்டிருக்கும் புகார்கள் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் அதிர்வையும் ஏற்படுத்துவதாக உள்ளது.பிறரைச் சுரண்டும் அதிகாரம் யாருக்குமில்லை.எங்கெல்லாம் Cult குழுக்கள் உருவாகுகின்றனவோ அங்கெல்லாம் சுரண்டல்கள் நிகழ்கின்றன.நீங்கள் எந்த அமைப்பில் , குழுவில், மடத்தில் வேண்டுமானாலும் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.அந்த குழுவின் பேராளுமையை விதத்தோதுங்கள்.அவரே உலகை உய்விக்க வந்த தூதன் என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள்.ஆனால் எல்லாவற்றிற்கும் அப்பால் நீங்கள் ஒரு தனிமனிதன் என்பதையும் உங்களுக்கு என்று ஒரு ஆளுமை உண்டு என்பதையும் உணருங்கள்.உங்களுக்கான எல்லைகளை வகுத்துக் கொள்ளுங்கள்.இந்த எல்லைக்கு மேல் ஒருவர் என்னை மனதளவில் ,உடல் அளவில் நெருங்க அனுமதிக்க இயலாது என்று உறுதி கொள்ளுங்கள்.கடவுளே என்றாலும் நான் அந்த கடவுளின் பகுதி அல்ல என்பதை மனதில் நிறுத்துங்கள்.

பிறரைச் சுரண்டுவோர் வெகுளிகள் அல்ல.அவர்கள் நீங்கள் யார் , உங்கள் பெற்றோர் என்ன வேலை செய்கிறார்கள், உங்களின் சமூக அந்தஸ்து என்ன , திருப்பி அடிக்கும் சாத்தியம் கொண்டவரா என்பதை கவனிக்கிறார்கள்.உங்கள் உடல்மொழியை அவர்கள் மிகத் தீவிரமாக கண்காணிக்கிறார்கள்.நீங்கள் மிகவும் கூச்சப்படக்கூடியவரா, அச்சப்படுபவரா, அதிர்ந்து பேசாதவரா என்று அனைத்தையும் அவர்கள் அளக்கிறார்கள்.அதன் பின்னர் தான் தங்கள் தந்திரங்களை துவங்குகிறார்கள்.அவை வெறும் Trial & Error அல்ல. கணக்கிடப்பட்ட Trial & Errors.

காரல் மார்க்ஸ் சமூகத்தில் மூலதனம்(சொத்து) மட்டுமே ஒருவனின் நிலையை தீர்மானிக்கிறது என்றார்.All relations are essentially financial relationships என்று சொன்னார்.ஆனால் மாக்ஸ் வெபர் சமூக அந்தஸ்து , சொத்து , அதிகாரம் ஆகியவைதான் சமூகத்தின் ஒருவனின் நிலையை தீர்மானிக்கின்றன என்று சொன்னார்.மாக்ஸ் வெபர் சொல்வது தான் சரி. இன்று நாம் எதிர்கொள்ளும் இந்த அவச் சூழல் இந்த பண்பாட்டு அதிகாரத்தின் வழியாக நிகழ்த்தப்பட்டுள்ளது.வெறும் தனி மனிதனாக இவர்கள் தங்கள் இரையை அடையவில்லை.அதற்கு பின்னால் அவர்கள் உருவாக்கிக்கொண்ட பண்பாட்டு அதிகாரம் அவர்களுக்கு உதவியிருக்கிறது.

இன்றைய சூழலில் உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ள உடல் ரீதியிலும் மன ரீதியிலும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.ஸ்வதர்மம் முக்கியமானது.நம்மை நாம் தான் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

முடிந்தால் தஸ்தாயெவ்ஸ்கியின் The Adolescent நாவலை வாசிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்.Underdeveloped Self பற்றி புரிந்துக்கொள்ள உதவும் நாவல்.


No comments: