சட்டமும் இலக்கியமும்

 

நான் PG Diploma in Human Rights Law படித்து வருகிறேன்.எழுதுபவனாக சட்டம் பற்றிய பொது அறிவு இருந்தால் நல்லது என்ற எண்ணம் எப்போதும் இருந்தது.சட்டமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று பல நிலைகளில் பிணைப்பு கொண்டவை.

1. ஒரு வகுப்பில் ஆசிரியர் மரண தண்டனை பற்றி விளக்கினார்.மரண தண்டனை ஏன் கூடாது என்று சொல்லிக்கொண்டிருந்த போது எவன் ஒருவனும் அவன் செய்த குற்றச்செயல் மட்டுமே அல்ல என்ற காரணத்தையும் சொன்னார்.A man can't be defined by his crime.அவன் வாழ்க்கையில் அவன் செய்த ஒரு செயல் அந்தக் குற்றம்.அவன் அது அல்ல.மரண தண்டனை மாறாக அவன் அந்தக் குற்றமே என்று சொல்கிறது என்றார்.எனக்கு அந்த வாதம் பிடித்திருந்தது.மரண தண்டையிலிருந்து விலக்கிக்கூட நாம் இதை பார்க்கலாம்.எவர் ஒருவரும் அவர் செய்த குற்றம் மட்டும் அல்ல.

2. நான் இந்த வகுப்பில் சேர்ந்த பின்னர் அடிக்கடி இந்திய அரசியலமைப்பை படிக்கிறேன்.முக்கியமான நமது அடிப்படை உரிமைகள் பகுதி.அதில் பிரிவு 20 குற்றச் சாட்டப்பட்டவருக்கான உரிமைகளைப் பற்றிய பிரிவு.அதில் ஒரு வரி இருக்கிறது.

"எவர் ஒருவரும் ஒரு குற்றத்திற்காக ஒரு முறைக்கு மேல் தண்டிக்கப்படக் கூடாது."

அதாவது ஒரு குற்றத்திற்கு ஒரு முறை தான் தண்டனை அளிக்க வேண்டும் என்று இந்தப் பிரிவு சொல்கிறது.எத்தனை அற்புதமான வரி.விவிலயத்தின் வரி போன்ற ஒலியை எழுப்பும் வரி.

நாம் மேலே சொன்ன இரண்டையும் பொதுவாக நமது தனிப்பட்ட வாழ்க்கையில் பின்பற்றுவது இல்லை.ஒருவர் குற்றம் நிகழ்த்திவிட்டால் அந்த குற்றத்திலிருந்து நீக்கி அவரை நாம் அதன் பின் பார்ப்பதில்லை.அதே போல ஒரு முறை அவர் தண்டிக்கப்பட்டுவிட்டால் அந்தக் குற்றத்தை அதன் பின் சுட்டிக்காட்டமால் நம்மால் இருக்க முடிவதில்லை.இந்த இரண்டு பண்புகளும் நமது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது.இதனால் தான் இலக்கியம் போல சட்டமும் பல அறிதல்களை அளிக்கக்கூடிய ஒன்றாக எனக்குத் தோன்றுகிறது.


No comments: