இடம் மாறும் கதாபாத்திரங்கள்



ஆரண்யகாண்டம் திரைப்படத்தில் சுப்பு சப்பை என்ற இரு கதாபாத்திரங்கள் இடம் மாற்றப்பட்டு சுப்பு பாத்திரத்தில் சப்பையும் சப்பை பாத்திரத்தில் சுப்புவும் இருந்தால் படத்தை இத்தனை பேர் பாராட்டுவார்களா என்று தெரியவில்லை.சப்பை ஒரு குரூர குணம் கொண்ட பெண்ணை திருமணம் செய்து வாழ்கிறான்.அபலையாக ஏதும் அறியாத அப்பாவி பெண்ணாக சுப்பு வருகிறாள்.அவளை சுரண்டி சப்பை அந்த குரூர பெண்ணிடமிருந்து தப்பித்து இறுதியில் சுப்புவை கொலை செய்து பணத்துடன் தப்பித்து ஒரு ஆணாக இருப்பதன் முக்கிய விஷயமே அதுவே ஒரு பெண்ணின் உலகம் என்றெல்லாம் பேசியிருந்தால் எப்படி எதிர்கொள்ளப்பட்டிருக்கும் என்று புரியவில்லை.

இது தான் மையக் கதை என்றால் ,கதாபாத்திரங்களின் இடங்களை மாற்றினால் அது குரூரமான திரைப்படமாக மாறிவிடுகிறது.வெகுஜன சமூகத்தில் குரூரமாக கருதக்கூடிய ஒரு விஷயத்தை வெறும் கதாபாத்திரங்களை இடம் மாற்றம் செய்வதால் அற்புதமான படமாக , கலைப்படமாக மாற்ற முடிகிறதென்றால் வேடிக்கைதான்.

பேட்ட படத்தில் ஒர் ஆண் முஸ்லிம் கதாபாத்திரம் பெண் இந்து கதாபாத்திரத்தை காதலித்து கர்ப்பம் தரித்து திருமணம் செய்வதாக எடுக்கப்பட்டிருக்கிறது.இது வெறுமன கதாபாத்திரங்களை இடதிலிருந்து வலதுக்கும் வலதிலிருந்து இடத்துக்கும் இடம் மாற்றும் செயல்.அதன் மூலம் முற்போக்கு என்று காட்டிக்கொள்ளும் செயல்.பேட்ட கதாபாத்திரம் ஜித்துவை தன் மகன் என நம்ப வைத்து அவனது உணர்வுகளை சுரண்டி இறுதியில் அவனிடம் அது பொய் என்று சொல்லி ஆர்ப்பரிக்கிறது.இதில் வருவது நாயகன் எதிர் நாயகன் எல்லாம் இல்லை.இதில் வெளிப்படுவது அப்பட்டமான சுரண்டல் , குரூரம்.

ஜிகிர்தண்டா திரைப்படத்தில் மைய கதாபாத்திரமான காரத்திக் தன் திரைப்படத்தின் கதைக்காக ஒரு ரெளடியை பற்றி அறிந்து கொள்ள முற்படுகிறான்.ரெளடி அதை தெரிந்து தன்னை வைத்தே அந்தப் படத்தை எடுக்கச் சொல்கிறான்.கார்த்திக் நடிக்கத் தெரியாத ரெளடியை கோமாளியாக்கி திரைப்படத்தை வெற்றி பெற செய்கிறான்.அதை கேள்வி கேட்கும் ரெளடியை எதிர்க்கிறான்.இதில் கார்த்திக் கதாபாத்திரத்திற்கு தன் கதையை கொடுக்க வேண்டிய அவசியம் எதுவும் ரெளடி கதாபாத்திரத்திற்கு இல்லை.ஆனால் இந்த விஷயம் படத்தில் எங்கும் வரவில்லை.உண்மையில் ரெளடியின் வாழ்க்கைதான் கார்த்திக் எடுக்கப்போகும் படத்திற்கான கச்சாப்பொருள்.தன் போக்கில் தன் வாழ்வை வாழ்பவனை சுரண்டி கோமாளியாக்கி அவனை இறுதியில் நல்வழிபடுத்துகிறான் நாயகன்.இதில் அவனுக்கு எந்த குற்றவுணர்வும் இல்லை.

இதெல்லாம் எப்படி எந்தவித நுண்ணுணர்வும் இல்லாமல் ஏற்கப்படுகிறது பாராட்டப்படுகிறது என்றும் புரியவில்லை.நல்ல விஷூவல் என்பது நல்ல வாக்கிய அமைப்பு போன்றது.அவ்வளவுதான்.

No comments: