முகமூடி





சமீபத்தில் முகமூடி திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்தேன்.இந்தப்படம் வந்த போது பரவலாக எல்லோரும் கிண்டல் செய்தார்கள்.நான் வாசித்தவரை அபிலாஷ் உயிர்மை இதழில் எழுதிய விமர்சனம் அந்த திரைப்படத்தை பொருட்படுத்தி அதன் மெய்யிலை பற்றி ஒரு அற்புதமான பார்வையை அளித்திருந்தது.படத்தை பார்க்கும் போது ஒரு விஷயம் புரிந்தது.இது அடிப்படையில் குழந்தைகளை மனதில் வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்றே தோன்றுகிறது.தற்காப்புக்கலை குறித்த ஒரு ஆர்வத்தை குழந்தைகளின் மனதில் உருவாக்குவது இந்த திரைப்படத்தின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.மிகவும் தீவிரமான ஒரு திரைப்படத்தை எடுக்கத்தெரியாதவர் அல்ல மிஸ்கின்.அவரின் அஞ்சாதே , சித்திரம் பேசுதடி போன்ற திரைப்படங்களோடு ஒப்பிடுகையில் இந்த திரைப்படத்தில் எங்கும் பெண்கள் மீதோ குழந்தைகள் மீதோ வன்முறை நிகழ்த்தப்படவில்லை.கொலைகளும் காட்டப்படுவதில்லை.இரண்டு தாத்தாக்கள்.ஒரு கூன்விழுந்த உதவியாளன்.வேலை இல்லாத இளைஞன்.ஒரு குங்பூ மாஸ்டர்.கொள்ளைகூட்டத்து தலைவன்.இங்கே நரேன் கறுப்பு நிற உடையணிந்து மிகப்பெரிய கறுப்பு நிறத்திலான இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு காட்சி வரும்.அது ஒரு கார்டூன் காட்சியை போலத்தான் இருந்தது.அதே போல நரேன் பேசும் வீடியோ காட்சியும் அப்படியான தோற்றத்தைத்தான் ஏற்படுத்தியது.மேலும் இறுதிக்காட்சியில் தாத்தாக்கள் மாறுவேடத்தில் வரும் காட்சி, கதாநாயகனுக்கு பேட்மேன் போன்ற உடை எல்லாமே ஒரு கேலிச்சித்திரத்தின் தண்மையோடுதான் எடுக்கப்பட்டிருக்கிறது.ஆனால் இந்த திரைப்படத்தின் முக்கிய விஷயம் தற்காப்புக்கலை.தற்காப்புக்கலை என்ற அளவில் மட்டுமே குங்பூவை பற்றி சொல்லாமல் அதில் உள்ளூறைந்திருக்கும் ஆன்மிகத்தையும் இந்த திரைப்படம் பேசுகிறது.லீயின் மாஸ்டர் மிக எளிய வாழ்க்கையத்தான் வாழ்கிறார்.அவர் அந்த கலையை வைத்து எந்த பணத்தையும் சம்பாதிக்கவில்லை.மேலும் லீயின் குரு அவனுக்கு சொல்லிக்கொடுக்கும் வடிவத்தை அவன் இறுதிக்காட்சியில் நரேனுக்கு எதிராக பயண்படுத்துகிறான்.தன் குருவை கொன்றதை , நண்பனை கொன்றதை பற்றி சொல்லி லீயை கோபப்படுத்துகிறான் நரேன்.வன்மம் கொள்ளும் போது சமநிலை குலைகிறது.சமநிலை குலையும் போது எதிரியை எளிதாக வீழ்த்தலாம்.ஆனால் லீ பாலத்தின் மேல் நின்று சமநிலையை அடைகிறான்.அவன் தான் அதுவரை கற்ற கலையின் மூலமாக ஒரு ஆன்மிக மெய்மையை கண்டடைகிறான்.அதுவே இந்த திரைப்படம் அளிக்கும் முக்கிய விஷயம்.அதை குழுந்தைகளுக்கு தற்காப்புகலை குறித்த ஒரு விருப்பத்தை உருவாக்க வேண்டுமென்பதற்காக சற்று கார்டூன் வடிவத்தில் உருவாக்கியிருப்பதாக தோன்றுகிறது.

No comments: