இரவாடிய திருமேனி நாவல் படித்தேன்.
ஆறு மாதங்களுக்கு மேலாக கரும்புச் சாறு இயந்திரத்திற்குள் விட்டு எடுப்பது போன்ற
வேலைப்பணி இருந்ததால் அதிகம் வாசிக்க முடியவில்லை. கடந்த மாதத்தில் பணிச்சூழல்
இயல்புக்கு திரும்பியது. முன்னரே பலரும் இந்த நாவலை புகழ்ந்தும் இகழ்ந்தும்
எழுதியிருந்ததால் இதை வாசிக்கலாம் என்று எண்ணியிருந்தேன். சுனில் கிருஷ்ணன்
இதைப்பற்றி காலச்சுவடு இதழில் எழுதிய கட்டுரையையும் வாசித்திருந்தேன். ஏன் இவ்வாறு
எழுதியிருக்கிறீர்கள் , நாவல் நன்றாக
இருக்கிறது என்று தானே பலரும் சொல்கிறார்கள் என்று அவரிடம் கேட்டேன். அவர் நீங்கள்
படித்துப் பாருங்கள் என்று பதில் சொல்லியிருந்தார்.
இந்த நாவலை படித்த போது எனக்குத்
தோன்றியது இது தான். இந்த நாவல் எந்த வித அகக்கேள்வியிலிருந்தும் இன்னலிலிருந்தும்,பிறழ்விலிருந்தும் , சிதைவிலிருந்தும்
தோன்றவில்லை. ஆசிரியருக்கு ஒரு சட்டகம் இருந்திருக்கிறது. அந்தச் சட்டகத்தை கொண்டு
செல்ல ஒரு வரைவை உருவாக்கியிருக்கிறார்.கதாபாத்திரங்களை அதற்குள்
உலவவிட்டிருக்கிறார்.
இந்த நாவலை படிக்கும் போது அடிக்கடி
விஷ்ணுபுரம் நினைவுக்கு வந்தது. ஞானசபை விவாதம், இறுதியில் ஏற்படும் அழிவு, காவியத்தை பாடும்
பாத்திரம் நாவலுக்குள்ளேயே வருவது என்று அந்த நாவலுக்கும் இதற்கும் சில
பொருத்தங்கள் உள்ளன.
ஆனால் விஷ்ணுபுரம் ஓர் அசல்
நாவல்.சங்கர்ஷணனும் , திருவடியும் ,
பிங்கலனும் நாவலின் நாயகர்கள்.அவர்களுக்கு அடிப்படையான கேள்விகள்
இருக்கின்றன.சங்கர்ஷணன் தன் மகன் அணிருத்தன் இறந்த பின்னர் கொள்ளும் துயரம் மெய்த்
தன்மை கொண்டதாக இருக்கிறது.அதனோடு மாறாவர்மனின் துயரத்தை ஒப்பிட்டால் படிக்கும்
நமக்குத்தான் துன்பம் வருகிறது.ஞானசபை விவாதத்தை ஜெயமோகனால் உருவாக்க முடிந்தது.
அதைப் போன்ற ஒன்றைக் கூட போலச் செய்யக்கூட நாவல் முயலவில்லை.
அகக்கேள்வியும் அலைக்கிழப்பும்
இல்லாமல் விஷ்ணுபுரம் போன்ற ஓரு நாவலை உருவாக்க முடியாது. அந்த நாவலில் பெளத்தமும்
வேதாந்தமும் (அத்வைதம்) ஒன்று தான் அல்லது ஒன்றதன் தொடர்ச்சி தான் என்ற சாத்தியம்
முன்வைக்கப்படுகிறது.ஆனால் நாவல் அதை மையமிட்டதல்ல.பெளத்தர்களின் ஆட்சியில் தான்
இரவலர்கள் நகரத்தின் மையப்பகுதிகளுக்கு வர முடிகிறது என்ற பதிவும் உள்ளது.
ஆனால் இரவாடிய திருமேனி போலச்
செய்யும் நாவல் கூட இல்லை. நாவலில் கழுமரக் காட்சி கோபல்ல கிராமத்தை
நினைவுப்படுத்தியது.தீக்கடும்பை என்ற மலருக்காக வனத்திற்கு செல்கிறார்கள், தேடுகிறார்கள், தேடிக்கொண்டே
இருக்கிறார்கள். நாவலில் எதுவும் நிகழ்கிறது.ஓர் உணர்வு நிலையிலிருந்து
மற்றொன்றுக்கு கதாபாத்திரங்கள் சட்டென்று தாவுகின்றன.
இந்த புதினத்தில் தமிழ் தேசியம் வேறு
புகுத்தப்பட்டிருக்கிறது. தமிழ் இனங்கள் வேறு , வடுகர்கள் வேறு என்ற பார்வை வருகிறது. கலையும் தத்துவமும் அறியாத இடையர்
கூட்டம் ஆட்சி செய்வதன் அவலம் பேசப்படுகிறது. ஆனால் அதுவும் கூட தீவிரத்தொனியில்
வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.அப்படியான கோணமும் அழுத்தமாக இல்லை. ஒரு சில
வரிகளில் வந்து போய்விடுகிறது.
நாவலில் அரசருக்கு தீக்கடும்பை மலர்
தேவைப்படுகிறது.அதற்கு நாவிதர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வனத்திற்கு
அனுப்பப்படுகிறார்கள்.மலரை ஒரு கள்வன் இறுதியில் எடுத்து வருகிறான்.ஆனால் நகரம்
அதற்குப்பின் அழிவைச் சந்திக்கிறது. இனி ஞானம் கிழக்கிலில்லை மேற்கில் தான் தோன்றும்
என்றும் வடுகர் ஆட்சி மறைந்து இதுவரை நாம் கற்பனைக் கூட செய்யாதவர்கள் நம்மை
ஆள்வார்கள் என்று நாவல் முடிகிறது.
அர்த்தமற்ற பல உவமைகள், சொற்றொடர்கள் நாவலில் வந்து கொண்டே இருக்கின்றன. இது
தீவிர இலக்கிய நாவலாகவும் இல்லாமல் , ஜனரஞ்சகமான
புதினமாகவும் இல்லாமல் ஒரு சட்டகம் கொடுத்தால் தான்தோன்றித்தனமான வாக்கியங்களை
உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு இயந்திரத்தின் படைப்பு போல இருக்கிறது.இது
காவியமும் இல்லை, எதிர் காவியமும் இல்லை.
வேல்முருகன் இளங்கோவின் மன்னார்
பொழுதுகள் நல்ல நாவல் என்று நாஞ்சில் நாடன் சொன்னதாக படித்தேன். இந்த நாவலை அப்படி
அவர் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.
No comments:
Post a Comment