மஞ்சுநாதா பார் ஷாப்

 




நான் பொதுவாக மதுபானக்கடைகளுக்கு செல்வதில்லை.அதாவது பார்களுக்கு.மது விற்பனையகங்களுக்கு சென்று பாட்டில்களை வாங்கி வந்து ஃபிரிட்ஜில் அடுக்கிவிடுவேன்.என் வீட்டின் அருகில் மதுலோக்கா என்ற ஒரு கடை இருக்கிறது.எல்லாவித அயல்நாட்டு சோமபானங்களும் கிடைக்கும்.பெரும்பாலும் அங்கு தான் வாங்குவேன்.மாலையில் வீடு திரும்பிய பின்னர் ஒன்று அல்லது இரண்டு பேக் அருந்துவேன்.பெரும்பாலும் சிங்கிள் மால்ட் ஸ்காட்ச் விஸ்கி.சில நேரங்களில் ரம்.சற்று மகிழ்ச்சியாக இருந்தால் வைன்.என்னுடன் யாருமில்லை.நான் காலை எழுந்தவுடன் பிரேட் ஆம்லேட் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் சென்றுவிடுவேன்.மதியத்திற்கு அலுவலகத்தில் எதாவது உட்கொள்வேன்.மாலை பைக்கில் வீடு திரும்புகையில் சிறிது நேரம் வீட்டின் அருகிலிருக்கும் லக்ஷ்மி தேவி பூங்வாகவில் அமர்வேன்.பலரும் வேகமாக நடைச் செல்வார்கள்.சிலர் கைகளில் ஸமார்ட் வாட்ச் அணிந்திருப்பார்கள்.கார்ன் , ஐஸ்கிரீம் , காபி கடைகள் பார்க்கின் வெளியே இருக்கும்.குழந்தைகளுக்கு சருக்கு மரம், சீஸா , ஊஞ்சல் , கயிறு ஏறுதல் போன்ற விளையாட்டுகள்.பெரியவர்கள் கூட சில உடற்பயிற்சிகளை செய்வார்கள்.அவர்கள் மெய்வருத்தி நம்மை வதைப்பதை ஒரு நொடி கூட பார்க்க மாட்டேன்.அடர்ந்த மரங்கள் இருப்பதால் அந்தியில் விளக்குகளின் வெளிச்சத்திலும் சற்று இருண்டு காணப்படும்.அது சோபையான ஓர் உணர்வை அளிக்கும்.அப்போது அங்கிருந்து வெளியேறிவிடுவேன்.

நான் ஐந்து மணி வாக்கில் சென்றால் ஆறு ஆறரை வரை அமர்ந்திருப்பேன்.அப்போது நான் பாட்டு கேட்க மாட்டேன்.அலைபேசியை எடுத்துப் பார்க்க மாட்டேன்.யார் அழைத்தாலும் எடுக்க மாட்டேன்.வெறுமன இருப்பேன்.பேராக்குப் பார்ப்பேன்.யுவதிகள் செல்லும் போது கண்கள் அவர்களையே தொடர்வதை கவனித்திருக்கிறேன்.எப்போதாவது வெளியில் பில்டர் காபி வாங்கி குடிப்பேன்.அந்தி சாய்ந்த பின் வெளியே வந்து பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்வேன்.சமீபத்தில் கார் வாங்கினேன்.மாலைகளில் இங்கு சட்டென்று மழை பெய்வதால் அலுவலகம் செல்லும் போது சில நாட்கள் காரிலும் செல்கிறேன்.மூன்றாவது மாடியில் பால்கனியை கொண்ட ஒரு படுக்கையறை வீடு.மாலையில் பெரும்பாலும் வெளியே செல்ல மாட்டேன்.தோசை அல்லது இட்லி உடன் ஏதேனும் ஒரு தொக்கு வைத்துக்கொண்டு இரவு உணவை முடித்துவிடுவேன்.பொதுவாக தொக்குகளை ஃபோரம் மாலில் ஏதாவது படம் பார்த்து விட்டு வீட்டுக்குத் திரும்பும் போது அடையார் ஆனந்த பவனில் வாங்கி விடுவேன்.

மாலையில் ஒரு மதுக்கோப்பையை எடுத்துக் கொண்டு போய் பால்கனியில் அமர்வேன்.அந்தச் சாலையில் பெரிதாக வாகனங்கள் செல்லாது.சில நாட்கள் வீடு திரும்பும் போது சிக்கன் வாங்கி வருவேன்.கபாப் செய்து உண்டுவிடுவேன்.சாப்பிட்ட பின்னர் சிறிது நேரம் சாலைகளில் உலாவுவேன்.இரவுகளில் கதவைத் திறந்து இல்லத்திற்குள் புகும் போது வெறுமை ஒரு பூதம் போல சோபாவின் மேல் வியாபித்திருக்கும்.அதற்காகவே பேச்சரவம் இருக்கட்டும் என்று தொலைக்காட்சியை ஒலிக்க விடுவேன்.

அன்று வழக்கம் போல் சாயுங்காலத்தில் வீடு திரும்பிய பின்னர் பிரட்ஜை திறந்த போது பாட்டில்கள் தீர்ந்து விட்டன என்பதை கவனித்தேன்.என்னால் குடிக்காமல் இருக்க முடியாது.வண்டியை எடுத்துக்கொண்டு வெளியில் செல்ல விருப்பம் இருக்கவில்லை.அருகில் நடந்து போகும் தொலைவில் மஞ்சுநாதா பார் இருக்கிறது.தமிழ்நாட்டில் செந்தில் போல கர்நாடகாவில் மஞ்சு என்ற பெயர் பிரபலம்.அது வெள்ளிக்கிழமை.வாரயிறுதியில் அடுத்த வாரத்திற்கான போத்தல்களை வாங்கி நிரப்பிவிடலாம்.இன்று ஒரு நாள் மட்டும் கடைக்குச் சென்று அருந்தலாம் என்று தோன்றியது.

வெளியிலிருந்து பார்க்கும் போது எப்போதும் ஒரு சலிப்பான மஞ்சள் ஒளி அந்தக் கடை முழுதும் பரவியிருப்பதை பார்த்திருக்கிறேன்.மலிவானக்கடை.பலரும் குவார்ட்டர்கள் வாங்கி சாலையை வேடிக்கை பார்த்தவாறு அங்கிருந்த ஒரு திட்டில் வைத்து நின்றவாறே அருந்திவிட்டுச் சென்றார்கள்.அழகற்ற பிளாஸ்டிக் மேஜைகள் , நாற்காலிகள். நான் சென்று ஒரு காலியான இடத்தில் அமர்ந்தேன்.ஏப்ரல் மாதம் என்பதால் வெம்மையாக இருந்தது.வெளியிலிருந்து பார்க்கும் போது தான் கூட்டமாக இருந்தது.உள்ளே அதிக மக்கள் இல்லை.நான் ஒரு குவார்ட்டர் ரம்மும் சிக்கன் பேப்பர் ப்ரையும் ஆர்டர் செய்தேன்.

ஏதோ ஒரு கன்னடப் பாடல் ஓடிக்கொண்டிருந்தது.முதல் மடக்கில் உண்டான வெதுமையை போக்க சிக்கனை எடுத்து ஒரு கடி கடித்தேன்.மெல்ல படபடப்பு குறைந்து உடல் சமநிலைக்கு வந்து கொண்டிருந்தது.அப்போது என் மேஜை அருகில் ஒருவன் வந்தான்.உயரமாக பருமனாக இருந்தான்.பல டேபிள்கள் காலியாக இருந்த போது என் மேஜையின் எதிரில் அமர்ந்தான்.அவன் என்னைப் பார்த்துப் புன்னகைத்தான்.நான் யாரைப் பார்த்தும் புன்னகைப்பதில்லை.எனக்கு தெரிந்த யாராவது சாலையில் என் எதிரில் வந்தால் தலையை கவிழ்த்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிடுவேன்.எனக்கு யாருடனும் உரையாடப் பிடிக்காது.பெண்களைப் பிடிக்கும்.அவர்கள் பெண்கள் என்கிற அளவில்.ஆனால் அலுவலகத்தில் கூட பெண்களுடன் அலுவல்கள் தாண்டி பேச மாட்டேன்.ஆண்களோடு பேச எனக்கு ஒன்றுமிருக்காது. குழந்தைகளை நான் தூக்கியதே இல்லை.ரயிலில் , பேருந்தில் குழந்தைகள் என்னைப் பார்த்து சிரித்தால் நான் முகத்தை திருப்பிக் கொள்வேன்.

உண்மையில் இந்த உலகத்தில் மனிதர்களுக்கு பேச என்ன இருக்கிறது என்பது எனக்கு பல காலமாகவே புதிர்தான்.அலுவலகத்தில் காபி அருந்த உணவு சாப்பிட என்று பல காரணங்களுக்காக என் அணியில் இருப்பவர்கள் ஒன்றாகச் செல்வார்கள்.நான் யாருடனும் செல்ல மாட்டேன்.அவர்களும் என்னை சட்டை செய்ய மாட்டார்கள்.அரசியல் , சினிமா, விளையாட்டு, தட்பவெட்பம், டிராபிக், அலுவலகத்தில் புதிதாக வந்துள்ள சட்டங்கள், மேனேஜர் என்று எதை பற்றியாவது இவர்கள் கதைப்பதை பார்த்திருக்கிறேன்.இதைப் பற்றியெல்லாம் எதற்கு பேசுகிறார்கள் என்று நினைத்துக்கொள்வேன்.உரையாடி என்ன ஆகப்போகிறது.

அலுவலகத்தில் தொலைபேசி உரையாடல்களில் கூட தொடக்கத்திலேயே விஷயத்திற்கு வந்து விடுவேன்.நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் , உங்கள் ஊரில் என்ன வெயில் அடிக்கிறதா , ஓலிம்பிக் போட்டிகளை பார்த்தீர்களா என்பது போன்ற சல்லித்தனமான கேள்விகளை கேட்க மாட்டேன்.அவர்கள் கேட்டாலும் சடசடவென்று பதில் சொல்லிவிட்டு பணி குறித்து பேச ஆரம்பித்து விடுவேன்.

இந்த வேலை கூட அவசியம் கருதித் தான் செய்கிறேன்.எனக்கு பெரிதாக சொத்தெல்லாம் ஒன்றமில்லை.என் தந்தை பார்கின்ஸன் நோய் முற்றி நிமோனியா வந்து இறந்தார்.தாயார் சகோதரனுடன் சென்னையில் இருக்கிறார்.சகோதரனுக்கு திருமணமாகிவிட்டது.என் அம்மா எப்போதாவது போன் செய்து என் கல்யாணம் குறித்து பேசுவார். எனக்கு முப்பத்தியைந்து வயதாகிவிட்டது என்பதில் அவருக்கு வருத்தம்.முடி கூட நரைக்க ஆரம்பித்துவிட்டது என்று சொல்லி அழுவார். மனைவி , மக்கள் என்றாலே எனக்கு எரிச்சல் வந்துவிடும்.எங்கள் தொலைபேசி உரையாடல் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நீளாது.நானும் என் சகோதரனும் பேசி எப்படியும் ஐந்து வருடங்கள் இருக்கும்.சண்டை எல்லாம் ஒன்றுமில்லை.எனக்கு அவனோடு பேச ஒன்றுமில்லை.அவனும் அதைப் புரிந்துகொண்டு ஒதுங்கிவிட்டான்.

பள்ளி நண்பர்கள் , கல்லூரி நண்பர்கள் , அலுவலகத்தில் பணிபுரிந்தோர் , பணிபுரிவோர் என்று யார் அழைத்தாலும் பெரும்பாலும் எடுக்க மாட்டேன்.எதாவது கூடுகைகளுக்கு அழைத்தால் செல்லமாட்டேன்.எனக்கு இந்த வேலையில்லை என்றால் மாத வாடகை , சாப்பாடு இவைகளுக்கு அதிகப்பட்சம் ஒரு வருடம் தான் தாக்குப் பிடிக்க முடியும்.அதன் பின் கடினம்.எனக்கு யாரையும் அண்டிப் பிழைக்க பிடிக்காது.அதன் காரணமாக பணிக்குச் செல்கிறேன்.மேலும் அலுவலகம் சென்று வந்தால் அந்த நாள் முடிந்துவிடுகிறது என்பதால் எனக்கு வேலைக்குச் செல்லப் பிடிக்கும்.

வாரயிறுதிகளில் நான் எதையாவது சமைத்து உண்பேன்.சமைக்க பிடிக்கவில்லை என்றால் வெளியில் சென்று உட்கொள்வேன்.தமிழகத்தில் சைவ உணவகங்களில் பெயருக்கு பின் பவன் என்ற ஒட்டு சேர்த்துக் கொள்வது போல இங்கே சாகர் என்று முடியும் நிறைய ஹோட்டல்கள் உண்டு.உடுப்பி சாகர், சாந்தி சகார், சூக் சாகர் இப்படி நிறைய இருக்கும்.மெனுவை பார்த்து மோவாயைத் தடவி என்று இங்கு நிறைய மெனக்கெடுக்க வேண்டியதில்லை.நாம் போய் எதையாவது சொல்லி நின்றவாறே உண்டுவிட்டு வந்துவிடலாம்.பெரும்பாலும் இந்த நாட்களில் நான் ஐந்தாறு வார்த்தைகள் பேசினால் அதிகம்.எஷ்டோ , ஏனு போன்ற கன்னட வார்த்தைகளைத் தாண்டி பெரிதாக எதையும் பேசமாட்டேன்.சில நேரங்களில் சென்னையில் கூட கடைகளில் எவ்வளவு என்று கேட்பதற்கு பதிலாக எஷ்டோ என்று தவறுதலாக கேட்டிருக்கிறேன்.என் குடியிருப்பில் மொத்தம் ஆறு வீடுகள்.ஒன்றிரண்டு வீடுகளில் குடும்பங்கள் இருந்தன.என் பக்கத்து வீட்டில் இரண்டு பெண்கள் வாடகைக்கு குடியிருக்கிறார்கள்.அதில் ஒருத்தி ஒரு நாள் என்னைப் பார்த்து ஏதோ கேட்க முனைந்த போது நான் பார்க்காதது போல நடந்து சென்றேன்.அதன் பின் அவர்கள் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.தண்ணீர் வரவில்லை , கரண்ட் கட் எதுவாக இருந்தாலும் அதுவாக சரியாகும் என்பது என் எண்ணம்.அதைக் குறித்தும் பெரிதாக யாரிடமும் கேட்டதில்லை.என் ஓனருக்கு நான் ஐந்தாம் தேதியானால் வாடகை கொடுத்து விடுவேன் என்பதால் அவரும் என்னை தொந்தரவு செய்வதில்லை.

அவன் வந்து அமர்ந்த போது புன்னைகத்தது எனக்கு எரிச்சலைத் தந்தது.நான் பதிலுக்கு சிரிக்கவில்லை.நான் வேறு எங்கோ வெறித்துப் பார்த்தேன்.அவன் கையில் பியர் நிரப்பப்பட்ட கிளாஸ் இருந்தது.

“என் பெயர் யாசர்” என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான்.

எனக்கு தூக்கிவாரி போட்டது.நீ யாராக இருந்தால் எனக்கென்ன,என்னை என் தொந்தரவு செய்கிறாய் என்று எண்ணிக்கொண்டேன்.நான் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சரி என்று தலையாட்டி விட்டு அமைதியாக இருந்தேன்.

“உங்கள் பெயர் ரகுநந்தன் தானே”

இப்போது என் கைகால்கள் எல்லாம் மரத்துப்போவது போல ஆகிவிட்டன.வயிற்றில் பெரிய வெற்றிடம் உருவானது.என்னை இந்த நகரத்தில் யாருக்கும் தெரியாது.நான் பேஸ்புக் உட்பட எந்த சமூக வலைத்தளத்திலும் இல்லை.உலக நடப்பை செய்தித்தாள்கள் வழி அறிவேன்.அதுவும் மேம்போக்காக படிப்பேன்.மற்றபடி வேறு எவற்றிடனும் எதனுடனும் எனக்குத் தொடர்பில்லை.

“ஆமாம்”.

எனக்கு ஒரு சிக்கல் இருக்கிறது.யாருடனும் உரையாட பிடிக்காது என்றாலும் யாரையும் புண்படுத்தவும் பிடிக்காது.முகத்தில் அடித்தால் போல பேச விரும்ப மாட்டேன்.நாம் எந்த கேள்வியையும் கேட்காவிட்டால் அந்த உரையாடல் நீடிக்காது என்பது என் திண்ணம்.நான் யாசரை எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

“என்னை உனக்கு அடையாளம் தெரிகிறதா”

அதற்கு முன்னர் அந்த முகத்தை எங்கும் பார்த்ததாக எனக்கு நினைவில்லை.அப்படியே நினைவில் வந்தாலும் அதையெல்லாம் சொல்லக்கூடிய எண்ணத்திலும் நானில்லை. இப்போது அவன் அடுத்த அஸ்திரத்தை வீசினான்.

“நீங்கள் நெய்வேலிதானே.”

இப்போது நான் உண்மையில் பதற்றம் கொள்ள ஆரம்பித்தேன்.கால்கள் அப்படியே தரைக்குள் சென்று விடும் என்று தோன்றியது.இவனுக்கு என் பெயர் தெரிந்திருக்கிறது, என் ஊரை அறிந்திருக்கிறான்.நான் இந்த நகருக்கு வந்து பத்தாண்டுகள் கழிந்துவிட்டன.எனக்கு இந்த நகரில் நண்பன் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை.இந்த நகரத்தின் அந்நியத்தன்மை தான் எனக்கு மிகவும் உவப்பாக இருக்கிறது.இந்த யாசர் அதை உடைக்க பார்க்கிறான்.

“ஆமாம்”

“நானும் நெய்வேலிதான்”

இருண்ட வீட்டின் சிறு மூலையிலிருந்து மஞ்சள் ஒளி படர்வது போல இப்போது எனக்கு யாசர் என்ற பெயர் லேசாக நினைவுக்கு வந்தது.நாங்கள் சிறு வயதில் ஒரு லைன் வீட்டில் வாழ்ந்தோம்.அப்போது அதே லைன் வீட்டில் வாழ்ந்த எனது நண்பர்கள் சாகுல், உமர், பஷீர், ஹாஜா, யாசர்.சாகுலும் உமரும் சகோதரர்கள்.போலவே பஷீரும் ஹாஜாவும்.சாகுலின் தந்தை மரக்கடை வைத்திருந்தார்.ஹாஜாவின் வாப்பா கடிக்காரக் கடை வைத்திருந்தார்.யாசரின் தந்தை மகாலட்சுமி திரையரங்கில் கேண்டீன் எடுத்து நடத்திக்கொண்டிருந்தார்.

யாசருக்கு இரண்டு சகோதரிகள் பானு , சுபைதா.எங்களுக்கு மூத்தவர்கள்.அதில் பானு மிக நன்றாக வரைவார்.அவர் நீல வண்ணத் தாவணியில் ஸ்கூலுக்கு சைக்கிளில் சென்ற சித்திரம் நினைவில் நிற்கிறது.பன்னிரெண்டாம் வகுப்புக்கு பிறகு அவர் படிக்கவில்லை.நாங்கள் தமிழ்நாடு லைனிலிருந்து பின்னர் வீடு மாறி பெரியாகுறிச்சி சென்றோம்.பெரிய தூரம் ஒன்றுமில்லை.ஐநூறு மீட்டர் தொலைவு இருக்கும்.ஆனால் அதன் பின் என் நண்பர்கள் மாறிவிட்டார்கள்.யாசரை நான் அதன் பின் அதிகம் பார்க்கவில்லை.எப்போதாவது மகாலட்சுமி திரையரங்கு சென்றால் அங்கு இருப்பான்.அவன் நல்ல சிவப்பு.குழந்தை போல சிரிப்பான்.அப்போதே சற்று குண்டாக இருப்பான்.இப்போது மிகவும் பெரிதாக இருக்கிறான்.வெள்ளை நிற டீசர்ட் அணிந்திருந்தான்.அநேகமாக அது டபுள் எக்ஸலாக இருக்க வேண்டும்.அவனுக்கு எப்படி என் முகம் நினைவிலிருந்தது என்று எனக்குத் தெரியவில்லை.நாங்கள் நெய்வேலியிலிருந்து பின்னர் சென்னையில் குடியேறிவிட்டோம். அவனைப் பார்த்தே எப்படியும் பதினைந்து இருபது வருடங்கள் இருக்கும்.

ஒரு முறை நான் பள்ளி முடிந்து நெய்வேலி டவுன்ஷிப் சிபிஎஸ் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன்.நான் எப்போதும் வீடு திரும்பும் பாலாஜி பஸ் வந்தது.அது சிதம்பரம் வரை செல்லும்.நான் பேருந்தில் பையை வைத்து விட்டு பஸ் ஸ்டாண்டுக்கு பின்னே இருக்கும் சாலையில் சிறுநீர் கழிக்கச் சென்றேன்.வந்து பார்த்தால் பஸ்ஸைக் காணோம்.அடுத்து வந்த பெரியார் வண்டியில் ஏறி மந்தாரக்குப்பம் சென்று அங்கிருந்து இன்னொரு கடலூர் பேருந்தைப் பிடித்து வீட்டுக்குச் சென்றேன்.எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.அந்த வருடத்தின் ரெகார்ட் நோட்டுகள் பையில் இருந்தன.இதை எப்படி வீட்டில் சொல்வது, பள்ளியில் சொல்வது என்று எனக்குப் புரியவில்லை.கிடைக்குமா என்றும் தெரியவில்லை.பேருந்து நடத்துனர் பையை எடுத்துவைத்தால் சரி.தொலைந்து போனால் என்ன செய்வது.இரவு நைனாவை அழைத்துக்கொண்டு சிதம்பரம் டிப்போ சென்று விசாரிக்கலாமா என்றும் யோசித்தேன்.அச்சம் வயிற்றை கவ்விக்கொண்டது.எனது கம்யூட்டர் சயின்ஸ் வாத்தியார் எதையாவது சொல்வதற்குள்ளாகவே பட்டென்று கன்னத்தில் அடித்து விடுவார்.வீடு திரும்பினால் யாசர் வாசலில் இருந்த பேஞ்சில் அமர்ந்திருந்தான்.அவன் தோளில் என் பையும் சாப்பாட்டுக் கூடையும்.தேவதை ஒன்று இறங்கி வந்தது போல இருந்தது அந்தத் தருணம்.அவனும் அப்போது தான் வந்திருப்பான் போல.இவனுக்கு எப்படி இவை கிடைத்தன என்று எண்ணிக்கொண்டேன்.அவன் சிபிஎஸ்ஸூக்கு அடுத்திருந்த தொமுச நிறுத்தத்தில் ஏறியிருக்கிறான்.பையின் வெளியே என் பெயரை பார்த்து உள்ளே டயரியில் அது நான் தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டு எடுத்து வந்திருக்கிறான். வீட்டினுள் வந்து காபி குடித்து விட்டு போனான்.அவன் என்னை விட ஒரு வயது மூத்தவன்.பள்ளிப் படிப்பு முடிந்து ஒன்றும் செய்யாமல் இருந்தான்.மருத்துவம் படிக்க விருப்பம் என்றும் அதனால் இம்ப்ரூமண்ட் எழுதப் போவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தான்.தேவிரத்னா திரையரங்கிலும் அவனது வாப்பா கேண்டீன் நடத்திவந்தார்.அங்கு சென்று திரும்பிய போது தான் பையை பார்த்து கண்டக்டரிடம் சொல்லி எடுத்து வந்திருக்கிறான்.

அது தான் யாசரை கடைசியாக பார்த்தது.அதன் பின் அவன் எங்கோ உத்தர பிரதேசம் சென்று விட்டதாகவும் மருத்துவம் படிக்கப்போவதாகவும் அம்மா ஒரு முறை சொன்னார்.நெய்வேலியிலிருந்து உத்தர பிரதேசம் எத்தனை தூரம் இருக்கும் அதற்கு எத்தனை நாள் பயணிப்பார்கள் என்று எண்ணிக்கொண்டேன்.பானு அக்கா, சுபைதா அக்காவின் திருமணங்களுக்கு சென்று வந்த ஞாபகம் இருக்கிறது.பானு அக்காவின் நிக்காஹ் வேலூரில் நடந்தது.அவை எல்லாம் நடந்து பதினைந்து இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன.எல்லாம் எங்கோ எப்போதோ யாரோவாக எனக்குத் தோன்றின.எனக்கு அவர்களின் முகங்கள் கூட மங்கலாகத்தான் நினைவில் இருக்கிறது.

இதோ இப்போது என் சதைத்துண்டின் ஒரு பகுதி போல யாசர் அமர்ந்திருக்கிறான்.அவன் முழுப் பெயர் யாசர் அராபத்.எத்தனை அழுத்தமான அழகான பெயர்.அந்தப் பெயரை உச்சரிக்கும் போது அது உருவாக்கும் ஒலியும் லயமும் அழுத்தமும் எனக்கு மிகவும் பிடிக்கும்.நான் சில நேரங்களில் அந்தப் பெயரை தனியாக இருக்கும் போது சிறு வயதில் உச்சரித்துக் கொண்டதுண்டு.

எனக்கு அவனிடம் கேட்க மிக முக்கியமான வினா ஒன்று இருந்தது.என் முகத்தை எப்படி இந்த மாலைப் பொழுதில் மங்கலான மஞ்சள் ஒளியில் அடையாளம் கண்டு கொண்டாய் என்று கேட்டேன்.அவன் நீ உன் தந்தை போலவே இருக்கிறாய் என்றான்.நான் மெளனமானேன்.எனக்கு மேற்கொண்டு அவனிடம் என்ன கேட்க என்று தெரியவில்லை.என் தந்தை இறந்தப் பின்னர் ஒரு திருமணத்திற்கு நெய்வேலிக்கு செல்ல வேண்டியிருந்தது.நான் பொதுவாக எந்த நிகழ்வுக்கும் செல்வதில்லை.அவை இறப்போ பிறப்போ திருமணமோ எதுவாக இருந்தாலும்.இந்தத் திருமணத்திற்கு பெண்ணின் தந்தை பெங்களூர் வீட்டுக்கே வந்து அழைத்திருந்தார்.நான் நெய்வேலியிலிருந்த போது அவரின் பெல்ட் கடையில் அடிக்கடி சென்று அமர்ந்து கொள்வேன்.திண்பண்டங்கள வாங்கி கொடுப்பார். எதாவது பேசிக்கொண்டிருப்பார்.கேட்டுக்கொண்டிருப்பேன்.அவருக்கு என் நைனாவிடம் அதிக ஸ்நேகம்.மேலும் என்னை அவருக்கு ஏனோ பிடிக்கும்.அந்த உரிமையில் வந்து அழைத்தார்.நல்ல மனிதர்.நான் சென்றேன்.கஸ்தூரி திருமண மண்டபம் என்று நினைக்கிறேன்.திருமணச் சடங்குகள் எரிச்சலைத் தந்ததால் நான் வெளியே வந்து சாலையில் சிறிது நேரம் நின்றேன்.ஊரே திரிந்துவிட்டது.சாலையை விரித்திருந்தார்கள்.நிறைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டிருந்தன.சற்று நேரம் நடந்தேன்.நான் வாழ்ந்த தமிழ்நாடு லைன் , எதிரிலிருந்த கடைகள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.ஏதோ ஒரு துணுக்குறல்.என் தந்தை நினைவுக்கு வந்து விட்டார்.அவர் அந்தச் சாலையில் என்னை அழைத்துச் செல்வது , அவர் எல்.எம்.எல் வேஸ்பாவில் தனியாகச் கோர்ட்டுக்குச் செல்வது என்று ஏதேதோ நினைவுகள்.என்னால் என்னைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.மனதில் ஏதேதோ ஓலங்கள்.அதன் பின் அங்கே இருக்கவே பிடிக்கவில்லை.உடலை நினைவுகளால் உலுக்க முடியும் என்பதை அன்று தான் உணர்ந்தேன்.நான் சாலையில் நடப்பதை நிறுத்திவிட்டு மண்டபத்திற்குள் சென்று அமர்ந்து கொண்டேன்.இப்போது இங்கு யாசர் என் முகத்தில் என் தந்தை இருக்கிறார் என்று சொல்கிறான்.நான் மிகவும் இலகுவாக உணர்ந்தேன்.என்னுள் ஏதோ விலகிக்கொண்டது.நான் புன்னைகைத்தேன்.

“யாசர் அராபத்.” என்று என்னுள் சொல்லிக் கொள்ளும் லயத்துடன் கூப்பிட்டேன்.

“ம்.”

“எப்படி இருக்க”

“நல்லாயிருக்கேன்.நீ எப்படி இருக்க”

“நானும் நல்லா இருக்கேன்.”

அவனுடைய குரல் சன்னமாக இருந்தது.ஊற்று பெருக்கெடுப்பது போல நினைவுகள் திரள்வதும் மதகில் மோதி நிற்கும் வெள்ளம் போல உணர்வுகள் குழம்பி நிற்பதுமாக சலனத்திருந்தேன்.சொல் கனத்து மொழி அற்றுப் போனேன்.குடிப்பதை நிறுத்தினேன்.

வெளியே போவோம் என்றேன்.அவன் தலையசைத்தான்.சிறது நேரம் எதுவும் பேசாமல் நடந்து சென்றோம்.எங்கும் உணவு விடுதிகள்.சிறிதும் பெரிதுமாக.மக்கள் தின்றுகொண்டே இருந்தார்கள்.வீதி விளக்குகளும் கடைகளின் எல்ஈடி வெளிச்சமும் நடந்து சென்ற மாதர்களும் அவர்களின் உடைகளும் சாலையின் இரைச்சலும் போதையும் என்னை வெகுமாக சுழற்றி அடித்தன.மாமோஸ் கடை, பானி பூரி கடை , சமோஸா கடை , சிக்கன் கடை , காபி கடை , சின்ன பிரியாணி கடைகள், பெரிய பிரியாணி கடைகள் ,சஹார்கள், பார்கள், ஜூஸ் கடைகள், ஐஸ்கிரீம் கடைகள் , இத்தாலிய உணவுக் கடைகள் , அராபிய உணவுக் கடைகள், தலைச்சேரி உணவகம் ,குட்டநாடு உணவகம்,ஆந்திரா மீல்ஸ், தமிழ்நாடு சாப்பாடு, ஸ்வீட் கடைகள்,கேக் கடைகள், நூறு வகை தோசைக் கடைகள், லக்னோ ஸ்ரீரீட், வடக்கன் கபே , பேக்கரிகள் என்று எத்தனை எத்தனை அங்காடிகள்.எங்கும் கூட்டம்.இப்படியே உண்டு உண்டு எல்லோரும் ஒரு நாள் வயிறு வெடித்து இறக்கப் போகிறார்கள்.மனிதர்கள் ஏன் இப்படி சாப்பிடுகிறார்கள்.உண்டு உண்டு எதை தீர்த்துக் கொள்ளப் போகிறார்கள்.நிரப்ப முடியாத எது அவர்களுக்குள் இருக்கிறது.அப்படியே ஓடிச்சென்று சமோசா கடையில் விரல்களை வழித்துக் கொண்டிருந்தவனின் புட்டத்தில் உதைக்க வேண்டும் என்பது போல இருந்தது.

கடைகள் இருந்த தெருவை கடந்து நான் வாழும் பகுதியை நோக்கி நடந்தோம்.இரைச்சல் குறைந்தது.சிந்தை எல்லாம் எங்கோ தொலைந்து போய் மனம் இனிமை கொண்டது.யாசர் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்திருக்கிறான்.சிறிது காலம் அலிகரிலும் பின்னர் டெல்லியிலும் பணிபுரிந்திருக்கிறான்.வாணியம்பாடியை சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறான்.மனைவியின் பெயர் வஹீதா.முதலில் ஒரு பெண் குழந்தை.அதன் பெயர் நாஸியா.பின்னர் ஒரு ஆண் குழந்தை.அதற்கு தாரீக் என்று பெயர் வைத்திருக்கிறான்.மூன்றாவதாக அவன் மனைவி கருவுற்ற போது தான் 2019யில் அங்கே சிஏஏவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்திருக்கின்றன.அவர்கள் டெல்லியில் தென் கிழக்கு பகுதியில் மதன்பூர் காதர் கிராமத்தில் சரிதா விஹார் என்ற பகுதியில் வாழ்ந்திருக்கிறார்கள்.அதன் அருகில் இரண்டு கீலோ மீட்டார் தொலைவில் தான் தான் ஷாகின் பா போராட்டங்கள் நடந்திருக்கின்றன.டெல்லி முழுதும் பல இடங்களில் இது போன்ற போராட்டங்கள் நிகழ்ந்திருக்கின்றன.2020 பிப்ரவரி மாதத்தில் வட கிழக்கு பகுதியில் கலவரங்கள் மூண்டிருக்கின்றன.இவன் வாழ்ந்த பகுதியில் குழப்பங்கள் எதுவும் முதல் நாள் இருக்கவில்லை.வன்முறைகள் தொடங்கிய அடுத்த நாள் மனைவியை பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறான்.வீடு திரும்பிய போது பிறழாட்டங்கள் குறித்த வதந்திகள் பரவியிருக்கின்றன.மக்கள் பதறியபடி ஓடியிருக்கிறார்கள்.அந்தப் பகுதியில் தள்ளுமுள்ளு நிகழ்ந்திருக்கிறது.ஆட்டோவிலிருந்து இறங்கிய அவனது மனைவி கிழே விழுந்திருக்கிறார்.அன்றிரவு அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது.பல முறை டெல்லியை விட்டு வேறு எங்காவது சென்று விடலாம் என்று மனைவி மன்றாடியும் யாசர் அதை பொருட்படுத்தவில்லை.இவ்வாறு நிகழ்ந்த பின் கருச்சிதைவுக்கு அவன் தான் காரணம் என்று சொல்லி டெல்லியிலிருந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவரது சொந்த ஊரான வாணியம்பாடிக்கு சென்று விட்டார்.பின்னர் டெல்லியை விட்டு வந்தால் தான் திரும்புவேன் என்று அவர் பிடிவாதம் கொண்டார்.

அப்போது கோவிட் காலம் என்பதால் இவனால் எங்கும் மாற முடியவில்லை. கொரோனா கட்டம் முடிந்து ஒரு வருடம் கழிந்து இவன் டெல்லியிலிருந்த வேலையை உதறவிட்டு பெங்களூரில் புதிதாக பணியாணை பெற்று வந்திருக்கிறான்.மனைவியிடம் பல முறை மன்னிப்பு கேட்டு சமாதானப் படுத்தியிருக்கிறான்.

நாங்கள் பேசிக் கொண்டே வந்த போது யாசர் சட்டென்று நின்றான்.ஏன் என்பது போல நான் அவனைப் பார்த்தேன்.இது தான் நான் தற்போது குடியிருக்கும் வீடு என்றான்.இப்ராஹிம் மன்ஸில் என்று பெயர் பொரிக்கப்பட்டிருந்த இல்லம்.முதல் மாடியில் வாடகைக்கு குடியிருக்கிறான்.அவனது மனைவியின் உறவினர்கள் வீடு.அடுத்த நாள் தன் இல்லாள் வந்துவிடுவாள் என்றான்.வாழ்வை புதிதாக தொடங்க வேண்டிய இடத்தில் நின்றான் யாசர்.புதிய ஊர்.கோரமங்களாவிலேயே அக்கூரா மருத்துவமனையில் பொது மருத்துவராக பணியில் சேர்ந்திருப்பதாகச் சொன்னான்.

தன் வீட்டுக்கு அழைத்தான்.இன்று இராப் பொழுது இங்கே இரு என்றான்.நான் என் இருப்பிடம் தவிர வேறு எங்கும் தங்குவதில்லை.அவன் அழைப்பை நிராகரிக்கவும் முடியவில்லை.நான் டீசர்ட்டும் ஷார்ட்ஸூம் அணிந்திருந்ததால் அங்கேயே உறங்குவதில் அத்தனை சிக்கல் இல்லை என்று தோன்றியது.இரவு உணவுக்கு இருவருக்கும் தோசையும் உடன் சிக்கன் கறியும் சமைத்தான்.அவன் தன் மனைவி குழந்தைகளுடன் டெல்லியில் காந்தி நினைவகத்தின் முன் நின்று எடுத்துக்கொண்டிருந்த புகைப்படத்தை பெரிதாக மாட்டியிருந்தான்.அரபியில் எழுதப்பட்ட ஒரு சட்டகம் இருந்தது.பிபிசியில் காஸாவில் நிகழும் அவலங்களைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார்கள்.சிறிது நேரம் பார்த்தோம்.

அவன் தன் வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றான்.ஒரு பெரிய பிளாஸ்டிக் பாய் அதன் மேல் படர்த்த ஒரு விரிப்பு , இரண்டு தலையனைகள் , போர்வைகள் எடுத்து வந்தான்.ஒரு பாட்டிலில் தண்ணீர்.பெளர்ணமிக்கு முந்தைய நாள்.இன்றிரவு நிலவின் கீழ் நாம் உரையாடலாம் என்றான்.வீட்டின் முன் ஒரு பூவரச மரம் இருந்தது.காற்று லேசாக வீசியது.கொஞ்சம் குளிர்.அவன் கொண்டு வந்த போர்வைகள் கனமாக இருந்தன.என்னைக் குறித்து கேட்டான்.நான் என்னைக் குறித்து சொல்ல ஒன்றுமில்லை என்றேன்.

“ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல”

“பிடிக்கல”

“ஏன் பிடிக்கல”

எனக்கு அவன் கேட்டதில் உவப்பில்லை என்றாலும் எரிச்சலும் இல்லை.அவன் மேற்கொண்டு ஒன்றும் கேட்கவில்லை.உடல் தீண்டல் உயிர்களுக்கு அவசியமானது என்றான்.ஒரு மருத்துவனாக நான் அதை மேலும் வலியுறுத்துவேன் என்றான்.

நான் விலைமாதுகளுக்கு மாதம் ஒன்றுக்கு முப்பதாயிரத்திலிருந்து நாற்பதாயிரம் வரை செலவு செய்கிறேன்.ஒரு திங்களுக்கு இரண்டு அல்லது மூன்று பெண்கள்.இன்று இணையம் வந்து விட்டப் பின்னர் இவை எல்லாம் மிக எளிதாகி விட்டது.வீட்டு வாடகைக்கு தரகர் இல்லா தளங்கள் இருப்பது போல இவற்றிற்கும் தளங்கள் இருக்கின்றன.இதை முழு நேரத் தொழிலாக செய்யும் பெண்கள் மட்டுமல்லாமல் பகுதி நேரமாக செய்யும் கல்லூரிப் பெண்களும் திருமணமான பெண்களும் இருக்கிறார்கள்.நான் எட்டு மணி நேரத்திற்கு அவர்களை பதிவு செய்வேன்.நான் சந்தித்த பெண்கள் அனைவரும் மிகுந்த கரிசனத்தோடே என்னோடு நடந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் என் உடலைத் தீண்டும் போது அதில் பரிவு இருக்கும், பரிகாசம் இருக்காது.

எனக்கு அவர்கள் மீது ஒரே ஒரு புகார் தான்.அவர்கள் பெரும்பாலும் நான்கு மணி நேரத்திற்கு பிறகு புறப்படுகிறேன் என்பார்கள்.இரவு இன்னும் முடிந்திருக்காது.அவர்களுக்கு அடுத்த கஸ்டமர் கூட பல நேரங்களில் கிடைத்திருக்க மாட்டான்.ஆனால் அவர்கள் கிளம்ப யத்தனிப்பார்கள்.இனி புணர்தல் வேண்டாம் , தொடுகை கூட வேண்டாம் ,ஏன் உரையாடல் கூடத் தேவையில்லை வெறுமன உடன் இருந்து போகலாமே என்று கெஞ்சுவேன்.என்னால் ஒரு கட்டத்திற்கு பிறகு அவர்களை கட்டாயப்படுத்த முடியாது.அவர்கள் ஏதாவது காரணம் சொல்லி தப்பித்துவிடுவார்கள்.போகும் போது இதெல்லாம் எல்லா காலத்துக்கும் சரிபட்டு வராது , விரைவில் திருமணம் செய்து கொள் என்று அறிவுறுத்துவிட்டு போவார்கள். அவர்களின் ஸ்பரிசம் ,கொஞ்சல், வாசனை,உடை, குரல்,உடல் வாகு என்று எண்ணியவாறே தூங்கிவிடுவேன்.ஒரு முறை புணர்ந்தால் அடுத்த ஒரு வாரம் தாக்குப் பிடிப்பேன்.இரண்டு மூன்று வருடங்களாக இப்படித்தான் இருக்கிறேன்.

நான் இதைச் சொன்ன போது யாசர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.சிறிது நேரம் அவன் ஒன்றும் சொல்லவில்லை.இப்படி எல்லாம் உன்னைச் சீரழித்துக்கொள்ள உனக்கு யார் உரிமை கொடுத்தார்கள் என்று கேட்டான்.இதில் என்ன சீரழிவு இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.திருமணம் செய்வது , குழந்தைகள் பெறுவது , அவர்களை வளர்ப்பது , மனைவியிடம் இனிமையாக நடந்து கொள்வது என்பதை எல்லாம் நினைத்தால் சலிப்பாக இருக்கிறது என்றேன்.மேலும் இன்று எல்லாமே பிளாஸ்டிக்காக மாறிவிட்டது.யாரிடமும் அறியாமை இல்லை,எல்லாமே கணக்குகள் தான், எனக்கு இவை எல்லாம் போரடிக்கிறது என்று சொன்னேன்.

நாங்கள் இருவரும் பாயில் அமர்ந்தவாறு பேசிக்கொண்டுருந்தோம்.அவன் முன் தலையில் வழுக்கை ஏறியிருந்தது.தாடி வைத்திருந்தான்.அவனது ஒவ்வொரு கையும் தும்பிக்கை போல இருந்தன.உண்மையில் அவன் ஒரு வெள்ளை நிற குட்டி யானை போல இருந்தான்.அந்த முகத்தில் இருந்த சலனமின்மை எனக்கு வியப்பூட்டியது.அவன் சினம் கொண்டிருக்கிறானா அல்லது மகிழ்ந்திருக்கிறானா என்பதை கண்டு கொள்ள இயலாத ஒரு முக அமைப்பு.

“நீ தப்பான பாதையில ரொம்ப தூரம் போயிட்ட டா”

“இதுல என்ன தப்பு இருக்கு”.

“நீ இன்னும் எத்தனை ஆயிரம் பெண்களை புணர்ந்தாலும் உன்னால் ஒரு போதும் இந்த சூன்யத்தை கடக்க முடியாது”

“ஒரு மனைவியுடன் இருந்தால் இந்த சூன்யத்தை கடந்து விட முடியுமா”

அவன் சிரித்தான்.

“எதாவது வெரினியல் டிசிஸ் வந்துடப் போவுது”

“இதுவரைக்கும் இல்ல”

“இதை நான் எதிர்பாக்கல”

“எதை”

“நீ இப்படி.ஒண்ணுமில்ல”

“நானும் உன்னைய பார் ஷாப்புல பாப்பேன்னு நினைக்கல”

“அது வந்து , நாளைக்கு வைஃப் வராங்க. இனிமே புதுசா எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதுன்னு ஒரே பதற்றம்.ஒரு மாதிரி மனசு தொந்தரவா இருந்துச்சு.அதான்”.

“ம்.”

“சரி. நான் உனக்கு அட்வைஸ் பண்ணல.இதை விட்டுவிடுவோம்”

“ரெயிட்”

டெல்லியில் பல காலம் இருந்துவிட்டு பெங்களூரு வந்திருப்பது , இங்கே புது ஊரில் பொருந்திக் போவது கடினமாக இருக்கிறதா என்று கேட்டேன்.நான் டெல்லியில் நிகழ்ந்த கலவரத்தை எதிர்பார்க்கவில்லை என்றான்.அது சட்டென்று நிகழ்ந்துவிட்டது.அலிகரில் சிறிதும் பெரிதுமாக கலவரங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.ஆனால் டெல்லியில் தலைநகரில் அது நிகழும் என்று நான் நினைக்கவில்லை.என் மனைவி அங்கிருந்து கிளம்பிவிடலாம் என்று எவ்வளவோ சொன்ன போதும் நான் அதைச் சட்டை செய்யவில்லை.நாங்கள் ஒரு இந்துப் பெண்ணின் வீட்டில் தான் குடியிருந்தோம்.அவர் எங்களோடு நன்றாகத்தான் பழகினார்.அந்தப் பகுதியிலிருந்த சிலர் எங்களை சிலேடையாக கிண்டல் செய்தாலும் பெரிய தொந்தரவு என்று எதுவும் இருந்ததில்லை.

சிஏஏவிற்கு எதிரான போரட்டாங்கள் நிகழ்ந்த போது கூட மக்கள் அமைதியாகத்தான் இருந்தார்கள்.அதனால் இது இவ்வளவு பெரிய வன்முறையாக மாறும் என்று நாங்கள் எண்ணவில்லை.அன்று மாலை மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது ஊர் அமைதியாகத்தான் இருந்தது.வரும் போது தான் நகரம் பற்றிக் கொண்டது.அப்போது தான் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டது.என் மனைவியால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

அதன் பின் உடனடியாக கோவிட் வந்துவிட்டது.இரண்டு வருடங்கள் அப்படியே சென்றுவிட்டன.அதன் பின் நான் அடிக்கடி வாணியம்பாடி செல்வதும் வருவதுமாக இருந்தேன்.வஹீதா கண்டிப்பாக டெல்லிக்கு வர மாட்டேன் என்று சொன்னாள்.பிறகு தான் இங்கு பெங்களூரில் சில தொடர்புகள் மூலம் வேலை வாங்கினேன்.வந்து சில மாதங்கள் ஆகின்றன.

அவன் தொடர்ந்து பேசினான்.இந்த மூன்று வருடங்கள் தனியாக இருந்தது மிகுந்த சோர்வை அளித்துவிட்டது.நாளை அவள் வருகிறாள்.எனக்கு ஏனோ மனம் நிலைகொள்ளாமல் இருக்கிறது.குழந்தைகளின் இருப்பும் இனிமையும் நாளை எனக்கு கிடைக்கப் போகிறது.அதனுடன் எங்களின் மூன்றாவது குழந்தையின் இன்மையும் திரும்ப எங்கள் முன் வரும்.இனி எந்த அசம்பாவிதமும் வாழ்வில் நிகழக்கூடாது.அமைதியான மகிழ்வான வாழ்க்கை சாத்தியமாக வேண்டும்.தெற்கில் இருப்பவர்களுக்கு இந்து மூஸ்லீமகளுக்கு இடையிலான இந்தப் பிரச்சனையை புரிந்து கொள்வதில் குழப்பங்கள் இருப்பதை கவனிக்கிறேன்.இந்தச் சிக்கலுக்கு பல்வேறு பரிமாணங்கள் இருக்கின்றன.உயர் குடி இந்துக்களுக்கும் உயர் குடி இஸ்லாமியர்களுக்கும் இடையிலான ஓர் அதிகாரப் போட்டியாகவும் இவை ஒரு காலத்தில் இருந்தன.ஆனால் இன்று இந்த வேறுபாடுகள் புதிய தளத்தை அடைந்துவிட்டன.நிலம் , சொத்து ,வரலாறு, தேசம், தேசக் கடவுள், தொழில், எண்ணிக்கை, உணவு , கலாச்சாரம், உடை, மற்றமையின் அரசியல் தேவை,முதலாளித்துவம் உருவாக்கும் பதற்றமும் அச்சமும் என்று பல்வேறு வகையிலும் இன்று இது ஊடுபாவுகிறது.இதற்கு தீர்வெல்லாம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.அவரவர் முடிந்தவரை பாதுகாப்பாக வாழ வேண்டியது தான்.ஆனால் ஒன்று.இங்கு உண்மை என்று எதுவும் இல்லை.எல்லாமே கதையாடல்கள் தான்.எண்பதுகளில் இங்கு சீக்கியர்கள் எப்படிப் பார்க்கப்பட்டார்கள்.யூதர்கள் ஐரோப்பா முழுவதும் இருபதாம் நூற்றாண்டில் வெறுக்கப்பட்டார்கள்.அறுபது லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள்.இன்று இவை எல்லாம் மாறிவிட்டன.யார் மாற்றியது.ஐரோப்பிய மக்கள் சட்டென்று யூதர்களை ஏற்றுக்கொண்டு விட்டார்களா?.இல்லை.கதையாடல்கள் மாறிவிட்டன.இன்று எங்கள் மீது எண்ணற்ற புனைவுகள் கட்டமைக்கப்படுகின்றன.பின்னர் இந்தப் புனைவகளுக்குள் இருக்கும் கதாபாத்திரங்களாக நாங்கள் மாறுகிறோம்.மாற்றப்படுகிறோம்.கதையாடல்கள் நம்மை கட்டுப்படுத்துகின்றன.இன்று நமக்கு தேவைப்படுவது புதிய கதை.அதை நிகழ்த்த தேவை ஒரு நிமித்தம்.ஒரு தருணம்.ஒரு சாத்தியம்.அவை உருவாக வேண்டும்.அதற்கு காலம் எடுக்கும்.பேசிக்கொண்டு இருக்கும் போதே அவன் முகம் கூர் கொண்டு சிந்தையில் ஆழ்ந்தது.விரிப்பில் விரல்களால் எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தான்.

நான் யாசரிடம் ஆறுதலாகவோ மறுப்பாகவோ எதையும் சொல்லவில்லை.எனக்கு உண்மையில் இவை குறித்தெல்லாம் எந்த அறிவும் இல்லை.ஆனால் யாசர் இதனால் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறான்.அவன் கூற்றில் ஏதோ ஒரு மெய்மை இருக்கும் என்று தோன்றியது.நான் எந்தக் கேள்வியும் கேட்காமல் இருப்பதே சரியாக இருக்கும் என்று நினைத்தேன்.அவன் கரங்களை மட்டும் பற்றினேன்.அதன் பின் நாங்கள் அதைக் குறித்து அதிகம் பேசவில்லை.

“ரஜினிகாந்த் படமெல்லாம் இன்னும் பாக்குறீயா”

“ஏன்”

“சின்ன வயசுல , உள்ளே ஒரு டீசர்ட் போட்டுக்கிட்டு மேலே உங்க நைனா சட்டையை பட்டன் போடாம மாட்டிக்கிட்டு வந்து நிப்பியே, ஞாபகம் இருக்கா”

நான் சிரித்தேன்.நாங்கள் பேசிக்கொண்டே உறங்கிப்போனோம்.மறுநாள் சனிக்கிழமை.எனக்கு அலுவலகம் இல்லை.ஏழு ஏழரை மணிக்கு நல்ல வெயில்.நான் எழுந்து கொண்டேன்.யாசர் என்னருகில் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தான்.வாய் விரித்து நன்றாக குறட்டை விட்டுக்கொண்டிருந்தான்.நான் எழுந்து சோம்பல் முறித்தேன்.பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து கொப்பளித்தேன்.அவன் கண் விழித்து என்னைப் பார்த்தேன்.

“மணி என்ன”

“எட்டு”

அவனும் எழுந்து கொண்டான்.

“எப்போது வருகிறார்கள்”

“இன்னைக்கு சாய்ந்திரம் மைசூர் எக்ஸ்பிரஸூல ஆம்பூர்ல ஏறுவாங்க.ராத்திரி எட்டு மணிக்கு கண்டொண்மண்டுல நிக்கும்.போய் கூப்பிட்டு வரனும்”

“உன்கிட்ட கார் இருக்கா”

“இல்ல.ஓலா தான் புக் பண்ணணும்”

“நான் கார் எடுத்து வரவா”

“உன்கிட்ட கார் இருக்கா.”

“ஆமா.இப்போதான் ஒரு மாசத்துக்கு முன்னாடி கார் வாங்கினேன்.அடிக்கடி மழை பெய்யறதால ஆபிசுக்கு பைக்குல போறது சிரமமா இருக்கு.”

“ஓ”

“நான் கார் எடுத்து வரட்டுமா”

“உனக்கு எதாவது வேலை”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல”

“ஆர் யூ சூவர்”

“நான் வந்தா உனக்கு எதாவது தொந்தரவா”

“இல்ல.நீ சும்மா கேக்குனுமேன்னு கேக்குறியான்னு”

“எனக்கு அப்படியெல்லாம் கேக்க தெரியாதுடா.சரி.ஏன் நீயே ஆம்பூர் போயி கூட்டிக்கிட்டு வரல”

“அவ நீ ஒண்ணும் வரத் தேவையில்லனு சொல்லிட்டா”

“ஓ,அப்படி”

“ஆமாம்.அவளுக்கு எதையும் தனியா அவளே செய்யப் பிடிக்கும்.”

“ம்.ஸ்டாரங் லேடி”

அவன் இளித்தான்.

நான் இரவு ஆறரைப் போல வருவதாகவும் ஒன்றாகச் செல்வோம் என்று யாசரிடம் கூறிவிட்டு வீடு திரும்பினேன்.யாசர் மொட்டை மாடியிலிருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான்.நான் தனியாக நடக்க ஆரம்பித்தேன்.அவன் இருந்த தெருவிலிருந்து நடந்து பார்க்கை கடந்து இடது பக்கம் திரும்பினால் வீடு.வழியில் மைதானத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.நான் அங்கேயே நின்று வெகு நேரம் அவர்களின் ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்.

மணல் வீடு இதழில் பிரசுரமான சிறுகதை

நகர்வு

 



பிதாமகன் திரைப்படம் வெளியாகியிருந்தது.தேவிரத்னா திரையரங்குக்கு சென்றிருந்தேன்.மதியக் காட்சி.பொறியியல் படித்து விட்டு மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த காலம்.கல்லூரியில் என்ன படித்தேன் என்று எண்ணிய போது பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதை உணர்ந்தேன்.நண்பர்கள் பலரும் சென்னை பெங்களூரு என்று வேலை தேடிச் சென்றனர்.சிலருக்கு ஐடித் துறையில் பத்தொன்பதாயிரம் சம்பளத்தில் வேலையும் கிடைத்தது.எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.சினிமா முடிந்து வெளியே வந்த போது உடனே வீட்டுக்கு சென்று என்ன செய்யப் போகிறோம் என்று எண்ணம் உதித்தது.நடந்து மெயின் பஜாரிலிருந்த இந்தியன் காபி ஹவுஸூக்கு சென்றேன்.ஒரு பிளேட் வெஜிடபிள் கட்லெட்டும் காபியும் சொன்னேன்.என் தந்தை என்னை சிறு வயதில் இங்கே அடிக்கடி அழைத்து வருவார்.இந்த ஹோட்டலின் சூழல் ,சுத்தம் , வெள்ளை பிங்கான் கோப்பைகள் , சர்வர்களின் வெண்ணிற உடை, நீள் தொப்பி எனக்கு எப்போதும் பிடித்தமானது.

என்ன நிவாஸ் எங்களை விட்டுட்டு சாப்படுறீங்க என்று ஒரு குரல் கேட்டது.குரல் வந்த திசையில் பார்த்தால் பரதன் நின்று கொண்டிருந்தார்.எப்போதும் போல நன்கு சவரம் செய்த முகம்.நில நிறச்சட்டை அணிந்து இன் செய்திருந்தார்.தங்க நிற பிரேமில் கூலிங் கிளாஸ் போன்ற பவர் கிளாஸ்.முழுக்கை சட்டையை முட்டி வரை மடித்து விட்டிருந்தார்.அவருடன் ஒருவர் அமைதியாக நின்றிருந்தார்.இவர் தான் முரளிகிருஷ்ணன் என்று சொல்லி அறிமுகப்படுத்தினார்.இவர் நிவாஸ் , வக்கீல் பாஷ்யத்தின் மகன்.நான் எழுந்து கை குலுக்கினேன். அவர் புன்னகைத்து கைகுலுக்கி மறுபுறம் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.பரதன் இருவருக்கும் காபி சொன்னார்.

பரதன் எங்கள் வீட்டின் அருகிலிருந்த காம்ப்ளக்ஸில் மெடிக்கல் ஷாப் வைத்திருந்தார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். நைனா சில நேரங்களில் அவரைச் சென்று சந்திப்பார்.எங்களுக்கு ஏதோ ஒரு வகையில் உறவு.அவர் மனைவி பத்மாவும் வழக்கறிஞர் தான்.முரளிகிருஷ்ணன் சென்னையில் குழந்தைகள் நல மருத்துவராக இருக்கிறார் என்று சொன்னார் பரதன்.

எனக்கு வியப்பாக இருந்தது.மருத்துவர் என்பதற்கான எந்த அறிகுறியும் அவரிடம் இல்லை.அவர் அணிந்திருந்த செருப்பு கிழிந்திருந்தது.தோளில் ஒரு ஜோல்னாபை.அதில் நிறைய காகிதங்கள்.கையில் ஒரு பச்சை நிற டயரி.விரிந்த முகம் , அகன்ற நெற்றி.சரியாக கோதாத சிகை.அரைக்கைச் சட்டை.கறுப்பு நிற தடித்த சட்டகத்தில் ஒரு கண்ணாடி.அவர் ஒன்றும் பேசாமல் இருந்தார்.மெல்ல காபி பருகினார்.சிதம்பரத்தில் நடந்த ஒரு லாக்கப் மரணத்தை பற்றி இருவரும் உரையாடிக் கொண்டனர்.அதைப்பற்றி விசாரிக்கவும் அறிக்கை தயாரிக்கவும் வந்திருந்தார் முரளிகிருஷ்ணன்.அவர் மனித உரிமைகள் அமைப்பு ஒன்றை நிர்வகித்து நடத்தி வருவதாக பரதன் என்னிடம் கூறினார்.பரதன் எதிரில் இருப்பவர் யார் , என்ன படித்திருக்கிறார் , அவருக்கு என்ன புரியும் என்பதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அப்போது என்ன பேசப்படுகிறதோ அதில் அனைவரையும் இணைத்துக்கொள்வார்.என் சிறு வயதிலிருந்தே எப்படி இருக்கிறீர்கள் என்று தான் கடைக்கு செல்லும் போது விசாரிப்பார்.நீ வா போ என்று யாரையும் சொல்லி பார்த்ததில்லை.அவர்கள் இல்லாத போதும்.

முரளிகிருஷ்ணன் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று வினவினார்.பொறியியல் படித்திருக்கிறேன்.வேலை தேட வேண்டும் என்றேன்.பாடப்பிரிவு பற்றி கேட்டார்.மின்னியல் என்று கூறினேன்.உணவகத்திலிருந்து வெளியே வந்த போது கல்லாவின் அருகில் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தைப் பார்த்து இது யார் என்று கேட்டேன்.இவர் தான் ஏ.கே.கோபாலன்.இந்தியன் காபி ஹவுஸ் உருவாக காரணமாக இருந்தவர்.முக்கிய இடதுசாரித் தலைவர்.மலையாளத்தில் இந்தியன் காபி ஹவுஸ் பற்றி புத்தகம் கூட வந்திருக்கிறது. முரளிகிருஷ்ணனை சிபிஎஸ் பஸ் ஸ்டாண்டுக்கு அழைத்துச் சென்று சென்னைக்கு பஸ் ஏற்ற வேண்டும் , நீங்களும் வாங்களேன் என்றார் பரதன்.

பரதன் ஆர்.எக்ஸ் 100 வைத்திருந்தார்.மூவரும் அவரின் இரு சக்கர வாகனத்தில் பஸ் நிலையம் சென்றோம்.முரளிகிருஷ்ணன் உணவகம் ஒன்றிற்கு சென்று தான் வைத்திருந்த பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக்கொண்டார்.பரதனை பார்த்து யாரோ இருவர் சலாம் வைத்து அருகில் வந்து பேசிக்கொண்டிருந்தனர்.முரளிகிருஷ்ணன் தன் சகோதரன் சென்னையில் ஒரு மின்னணுவியல் நிறுவனத்தை நடத்திவருவதாகவும் அவனிடம் சொல்வதாகவும் சொன்னார்.வேலையில் சேர விருப்பம் இருக்கிறதா என்றும் கேட்டார்.அவர் இதை சிரிக்காமல் தான் கேட்டார்.எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.பிறகு சற்று சுதாரித்து விருப்பம் தான் , ஆனால் எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது என்றேன்.வேலையில் சேர்ந்தால் கற்றுக் கொள்ளலாம் , நான் சொல்கிறேன் என்று கூறி என் வீட்டுத் தொலைபேசி எண்ணை வாங்கினார்.தன் டயரியில் குறித்துக் கொண்டார்.அவர் ஒரு பேஜர் வைத்திருந்தார்.

பரதனிடமும் என்னிடமும் விடைபெற்று ஒரு பெரியார் வண்டியில் ஜன்னல் ஓரத்தில் ஏறி அமர்ந்தார்.நாங்கள் இருவரும் எங்கள் இல்லம் நோக்கி வண்டியில் திரும்பினோம்.மாலையின் செந்நிறக் கதிர்கள் எங்கும் வியாபிக்க சீரான வேகத்தில் வண்டியை செலுத்தினார் பரதன்.தெர்மல் சாலையில் செல்லும் போது குளிர்ந்த நீர் முகத்தில் பட்டது.முரளிகிருஷ்ணன் அழைப்பார் என்று நான் நினைக்கவில்லை.ஏனேனில் அவர் என் ரெஸ்யூமை கூட அனுப்பச் சொல்லி கேட்கவில்லை.

இரண்டு மூன்று நாட்களில் நான் அதைப்பற்றி மறந்தும் விட்டேன்.ஒரு நாள் மதியம் தொலைபேசி ஒலிக்கவும் என் அப்பா எடுத்து பேசினார்.எனக்குத் தான் அழைப்பு என்று சொல்லி  கொடுத்தார்.மறுமுனையில் முரளிகிருஷ்ணன் தன் சகோதரனிடம் பேசிவிட்டதாகவும் அடுத்த நாளே கிளம்பி வருமாறும் சொன்னார்.நான் உண்மையில் அந்த வாய்ப்பை மறுத்து விட விரும்பினேன்.எனக்கு பணியில் சேர அச்சமாக இருந்தது.

என் அம்மாவின் சொந்த ஊர் எழும்பூர் என்பதாலும் என் அம்மா வழி உறவினர்கள் பலர் கோடம்பாக்கம், பெசன்ட்நகர்,எக்மோர் பகுதிகளில் வாழ்ந்ததாலும் நான் தொடர்ந்து கோடை விடுமுறைகளுக்கு என் அம்மாவுடன் சென்னை சென்றதுண்டு.அதனால் மெட்ராஸ் பரிச்சயமான நகரம் தான்.அடுத்த நாள் கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்திலிருந்த என் பெரியம்மாவின் வீட்டில் சென்று தங்கினேன்.முரளிகிருஷ்ணன் சொன்ன நிறுவனம் தாம்பரம் மெப்ஸில் இருந்தது.கோடம்பாக்கம் ரயில் நிலையம் சென்று ரயில் ஏறி தாம்பரம் சானடோரியத்தில் இறங்கி வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து நிறுவனத்திற்கு சென்றேன்.ரயில் கட்டணம் ஏழு ரூபாய்.ஆட்டோகாரர் இருபது ரூபாய் கேட்டார்.

என்னை நேர்காணல் எடுப்பார்கள் என்று பார்த்தேன்.இவர் தான் வீராசாமி.மின்னியல் துறையின் தலைவர்.இவரிடம் தான் நீங்கள் வேலை செய்வீர்கள் என்று சொன்னார்கள்.சில படிவங்களை நிரப்பக் கொடுத்தார்கள்.பணி ஒப்பந்தக் கடிதத்தில் கையெழுத்து வாங்கினார்கள்.வங்கிக் கணக்கு இருக்கிறதா என்று கேட்டார்கள்.இல்லை என்றேன்.ஒரு எண்ணைக் கொடுத்து இவரைத் தொடர்பு கொள்ளுங்கள் ,தொடங்க உதவுவார்கள் என்றார்கள்.முதல் ஆறு மாதங்கள் பயிலுனராக வேலை செய்ய வேண்டும்.எட்டாயிரம் சம்பளம்.வேலை உறுதி செய்யப்பட்டால் பதினைந்தாயிரம் ஊதியமும் வருடாந்திர போனஸூம் தரப்படும் என்றார்கள்.வீராசாமி என்னை உற்பத்தி யூனிட்டுக்கு அழைத்து சென்று இங்கு தான் உங்களுக்கு அடுத்த ஆறு மாதத்திற்கு வேலை என்று சொல்லி கிளம்பிவிட்டார்.எனக்கு என்ன வேலை என்பதே விளங்கவில்லை.நான் ஓரிடத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன்.யாரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை.அப்படியே எழுந்து ஓடிவிடலாம் என்று கூடத் தோன்றியது.உணவுக்கூடம் எங்கே இருக்கிறது என்று கூட தெரியவில்லை.நான் மதியம் வெளியே சென்று உணவருந்தி வந்தேன்.மாலை கோடம்பாக்கம் திரும்பிய பின்னர் ஓர் அலைபேசியை வாங்கினேன்.நோக்கியா 1100.

அடுத்த நாள் சென்ற போது எனக்குத் தொழிற்கூடத்தில் அணிந்து கொள்ள நில நிற ஓவர்கோட் கொடுத்தார்கள்.செய்யக்கூடியவை , செய்யக்கூடாதவை என்ற சின்ன வகுப்பு எடுத்தார்கள்.எத்தனை மணிக்கு வர வேண்டும் , எப்போது செல்லலாம் என்பதை சொன்னார்கள்.நான் யாரிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்பதை தெரிவித்தார்கள்.அது மின்னணுவியல் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம்.மின்னியல் துறை உற்பத்தித் துறையையும் உள்ளடக்கியது.இந்தத் துறையில் மின்னணுவியல் உதிரிப் பாகங்கள் தயாரிப்புக்கு தேவையான இயந்திரங்களை உற்பத்தி செய்வதையும் அவற்றை பராமரிக்கும் வேலையையும் செய்வார்கள்.அதே போல சில தொடர் செயல்பாடுகளை இயந்திரப்படுத்தும் பணியையும் செய்தார்கள்.நியூமேடிக் சிலிண்டர்களை அங்கு தான் முதல் முறை பார்த்தேன்.அதற்கான கம்ப்ரஸர் கீழ் தளத்தில் இருந்தது.அதைப் பல இயந்திரங்களில் பயன்படுத்தினார்கள்.

நேதாஜி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஒருவன் அவனாக வந்து பேசினான்.ஒல்லியாக பள்ளிச் சிறுவன் போல இருந்தான்.என்னை மதிய உணவகத்திற்கு அழைத்துச் சென்றான்.எப்போதும் துள்ளிக் கொண்டே இருந்தான்.யாரைப் பார்த்தாலும் அவர்களிடம் எதாவது பேசினான்.பெண்களிடம் நிறைய அளாவினான்.அவர்களும் அவனிடம் நிறைய கதைத்தார்கள்.அங்கு மூன்று வருடங்களாக வேலை செய்வதாக கூறினான்.அவன் தான் என்னை பிறருக்கு அறிமுகம் செய்தான்.நிறுவனத்தைப் பற்றிய சித்திரத்தை அளித்தான்.அன்பு ஈனும் ஆர்வமுடைமை அது ஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு என்கிறது குறள்.நாடாமல் கிடைத்த நண்பன் நேதாஜி.அவன் இல்லாமல் போயிருந்தால் நான் ஒரு வேளை அந்த நிறுவனத்தை விட்டு ஓடிப் போயிருப்பேன்.வீராசாமி சின்னச் சின்ன வேலைகளை பணித்தார்.நேதாஜி எனக்கு உதவினான்.ரிலே என்றால் என்ன , டயோட் என்றால் என்ன , டிரான்ஸ்ஸிஸ்டர் என்றால் என்ன என்று முதல் முறை அறிந்தேன்.அவைகளை எதற்குப் பயன்படுத்துவார்கள் என்பதும் எனக்கு மெல்ல புரிய ஆரம்பித்தது.மைக்ரோ கண்டோரலர் , பிஎல்சி போன்றவற்றை உபயோகப்படுத்த ஆரம்பித்தேன்.எனக்கு என்னை குறித்த ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது.என்னை ஒரு அணியில் இணைத்தார்கள்.அதில் நேதாஜி இருந்தான். தினமும் கோடம்பாக்கம் சென்று திரும்புவது கடினமாக இருந்தது.கிழக்கு தாம்பரத்தில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினேன்.

சாலிகிராமத்தில் அருணாச்சலம் சாலையில் கிளினிக் வைத்து நடத்தி வந்தார் முரளிகிருஷ்ணன்.ஒரு நாள் நன்றி தெரிவிக்க மாலை அவரின் மருத்துவகம் சென்றிருந்தேன்.நிறைய கூட்டம்.குழந்தைகள்.அன்னையர்கள்.இஸ்லாமியப் பெண்கள் அதிகம் இருந்தனர்.பலரும் வறியவர்களாக தெரிந்தார்கள்.குறைவான எண்ணிக்கையிலேயே ஆண்களை பார்க்க முடிந்தது.கிளினிக்கின் வெளியே பச்சை நிறக் கூரை வேய்ந்து பிளாஸ்டிக் நாற்காலிகள் போட்டிருந்தார்கள்.கூட்டம் ஓயட்டும் என்று வெளியில் காத்திருந்தேன்.இரவு பத்து மணி ஆகிவிட்டது.நான் அதற்குள் அருகிலிருந்த அக்ஷ்யா என்ற ஹோட்டலில் இரண்டு முறை டீ குடித்து பின்னர் இட்லியும் சாப்பிட்டு விட்டேன்.

நோயாளிகள் சென்றப் பின்னர் நான் உள்ளே சென்றேன்.எப்போது வந்தீர்கள் என்று மலர்ச்சியுடன் கேட்டார்.சொன்னேன்.அவர் தலையசைத்துவிட்டு அமரச் சொன்னார்.வேலை குறித்து விசாரித்தார்.பணியில் சில மாதங்களில் அனைத்தையும் கற்றுக் கொள்ளலாம்.கூர்மையாக கவனியுங்கள்.அவமானப் படுவதை குறித்து கவலை கொள்ளாதீர்கள் என்றார்.எனக்கு வேலை மகிழ்ச்சியை அளித்திருக்கிறது என்றேன்.அதைத் தான் மார்க்ஸூம் சொல்கிறார்.படைப்பூக்கமான வேலை மகிழ்ச்சியை அளிக்கும்.இயந்திரத்தனமான செயல்களும் மிகவும் பகுக்கப்பட்ட பணிகளும் தான் சோர்வைத் தரும் என்றார்.நாங்கள் மருத்துவகத்திலிருந்து வெளியே வந்தோம்.சிறிது நேரத்தில் அலுவலர் கிளினிக்கை பூட்டிவிட்டு தன் ஸ்கூட்டரில் சென்றுவிட்டார்.நான் கிளம்புகிறேன் என்று விடைபெற்றேன்.நீங்கள் என்னிடம் நன்றியுணர்வு கொள்ளத் தேவையில்லை.இது சமூக மூலதனம் மூலம் உங்களுக்கு கிடைத்த சாத்தியம்.அதில் நான் ஒரு நிமித்தம்.நான் இல்லை என்றால் வேறு யாராவது உங்களுக்கு இதைச் செய்திருப்பார்கள்.ஆனால் இப்போது நீங்கள் பார்த்த குழந்தைகளுக்கு இத்தகைய வாய்ப்புகள் கிடைக்காது.அது தான் சமூக யதார்த்தம் என்றார்.எனக்கு அவர் சொன்னது பெரிதாக விளங்கவில்லை.வெறுமன தலையாட்டி வைத்தேன்.

நான் பெத்தம்மாவின் கோடம்பாக்கம் வீட்டுக்கு செல்லும் நாட்களில் சில முறை முரளிகிருஷ்ணனையும் சென்று சந்தித்து வந்தேன்.அவரிடம் பேச பெரிதாக ஒன்றும் இருக்காது.வேலை குறித்து எதாவது சொல்வேன்.அவரும் கேட்டுக் கொள்வார்.உண்மையில் எனக்கு அவரைப் பிடித்திருந்தது என்பது தான் முக்கிய காரணம்.மிக மெதுவாக மீன் அலசுவது போல ஒவ்வொரு சொல்லாக எடுத்து பேசுவார்.இரவு ஒன்பது ஒன்பதரை போல செல்வேன்.அப்போதும் சிலர் காத்திருப்பார்கள்.அவர் மிகக் குறைந்த கட்டணத்தை தான் பெறுகிறார் என்பதை கவனித்தேன்.சிலர் வெறும் பத்து ரூபாய் இருபது ரூபாய் கொடுத்துவிட்டு போனார்கள்.இதை வைத்துக்கொண்டு இவர் எப்படி இந்தப் பெருநகரத்தில் சமாளிக்கிறார் என்று நினைத்துக்கொள்வேன்.ஒரு முறை சென்ற போது கிளினிக் மூடப்பட்டிருந்தது.அருகிலிருந்த ஆப்டிக்கல்ஸில் விசாரித்த போது அவர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்று சொன்னார்கள்.எதற்கு என்று கேட்ட போது ஈழத்தில் நிகழும் இனப்படுகொலைகளுக்கு எதிராக அனுமதியின்றி பேரணி நடத்தியதற்காக என்றார்கள்.

அப்போது தான் எனக்கு முரளிகிருஷ்ணனின் மற்றொரு முகம் நினைவுக்கு வந்தது.அவர் இதைக் குறித்தெல்லாம் என்னிடம் பேச மாட்டார்.பெரும்பாலும் அவரைச் சந்தித்து சில வார்த்தைகள் பேசிவிட்டு கிளம்பிவிடுவேன்.கிளினிக் அருகிலிருந்த கடையில் டீ குடித்துவிட்டு அவர் தசரதபுரத்திலிருந்த அவர் வீட்டுக்கு செல்வார் , நான் கோடம்பாக்கம் திரும்பிவிடுவேன்.ஒரு முறை அவர் இல்லத்திற்கு அழைத்து சென்றார்.அவர்கள் வீட்டில் தெலுங்கில் பேசினார்கள்.எனக்குத் தெலுங்கு புரியும் என்றாலும் நான் பேசுவதில்லை.அவருக்கு ஒரு மகன்.அப்போது அவனுக்கு மூன்று வயது இருந்திருக்கும்.அவர் மனைவி சாலிகிராமத்தில் இருந்த கிளை நூலகத்தில் நூலகராக பணி புரிந்தார்.அவர் வீட்டின் வெளியே ஒரு பெரிய பால்கனி இருந்தது.அங்கே ஒரு நாற்காலியும் மேஜையும் போட்டிருந்தார்.அதன் மீது ஒரு ஸ்டடி போர்ட்.வீட்டில் நிறைய கேஸ் கட்டுகள் இருந்தன.சட்ட நூல்கள் , தத்துவ நூல்கள்.இவர் என்ன வக்கீல் மாதிரி நிறைய கேஸ் கட்டுகள் வைத்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டேன்.

முரளிகிருஷ்ணன் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் பிறந்தவர்.அவருக்கு ஒரு சகோதரன்.பெயர் வேங்கடகிருஷ்ணன்.அவர் சென்னை ஐஐடியில் படித்துவிட்டு அமெரிக்காவில் பணிபுரிந்தார்.பின்னர் அந்த நிறுவனத்தின் கிளையை சென்னையில் தொடங்கினார்.அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.அங்கு தான் நான் வேலைக்குச் சேர்ந்தேன்.முரளிகிருஷ்ணன் திருப்பதியில் மருத்துவம் படித்துவிட்டு முதுநிலை குழந்தை மருத்துவம் படிக்க சென்னை வந்தார்.பின்னர் இங்கேயே தங்கிவிட்டார்.அவர் கல்லூரியில் படிக்கும் போது இடதுசாரி மாணவர் இயக்கத்தில் இருந்திருக்கிறார்.இங்கே வந்தப் பின்னர் தன்னை மனித உரிமைகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார்.

காலை எட்டு மணிக்கு அலுவலகம் சென்றால் இரவு ஆறு மணி போல திரும்புவேன்.விடுதிக்கு திரும்பிய பின்னர் செய்ய ஒன்றும் இருக்காது.ஒரு முறை ஜிஎஸ்டி சாலையிலிருந்த ஜிகே உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டு சானடோரியம் ரயில்வே கிராஸிங்கை தாண்டி நடந்து வந்தேன்.அங்கே ஒரு நாளிதழ் கடையில் சே குவேராவின் அட்டைப்படத்துடன் புகைப்படம், பதிப்புரிமை , உலகமயமாதல் என்று தலைப்பிடப்பட்ட சஞ்சிகையை பார்த்தேன்.எனக்கு சே குவேரா எப்படியோ அறிமுகமாகியிருந்தார்.மோட்டார் சைக்கிள் டயரீஸ் என்ற திரைப்படத்தை பார்த்திருந்தேன்.அந்த இதழின் பெயர் உயிர்மை என்றிருந்தது.எடுத்து புரட்டினேன்.எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன் , ரவிஸ்ரீநிவாஸ் என்று யார் யாரோ ஏதேதோ எழுதியிருந்தார்கள்.வாங்கினேன்.பெரிதாக ஒன்றும் புரியவில்லை என்றாலும் முழுதும் படித்தேன்.எஸ்.ராமகிருஷ்ணனின் பெயர் முன்னரே ஆனந்த விகடனில் துணையெழுத்து என்ற பத்தித் தொடரில் அறிமுகமாகியிருந்தது.தொடர்ந்து இதழ்கள் வாங்கினேன்.உயிர்மை போன்ற வேறு பத்திரிக்கைகளையும் வாசித்தேன்.பின்னர் நூல்கள் வாங்கலாம் என்ற எண்ணம் வந்தது.நெடுங்குருதி என்ற நாவல் படித்தேன்.வேறு பல எழுத்தாளர்களின் நூல்களை வாங்கிப் படித்தேன்.அங்கே கார்முகில் என்ற லெண்டிங் லைப்ரரி இருந்தது.அதில் இணைந்து வாசித்தேன்.சென்னை புத்தக கண்காட்சிக்கு செல்லத் தொடங்கினேன்.இடதுசாரி நூல்கள் அறிமுகமாகின.மார்க்ஸியம் இந்தச் சமூகத்தை மிக கச்சிதமாக விளக்க பயன்படும் ஒரு தத்துவமாக எனக்குத் தோன்றியது.எவரையும் ஈர்க்கக்கூடிய சிந்தனை.முரளிகிருஷ்ணன், பரதன் சொன்ன சில விஷயங்கள் புரிய ஆரம்பித்தன.

ஓரிரு வருடங்களில் நான் கோடம்பாக்கம் செல்வது குறைந்தது.என் பெரியம்மா வீட்டினரும் வீட்டை இடித்து அடுக்குமாடி குடியிருப்பு கட்ட முடிவு எடுத்தனர்.அவர்கள் நெல்சன் மாணிக்கம் சாலையிலிருந்த வீட்டுக்கு வாடகைக்கு குடிபுகுந்தனர்.நான் முரளிகிருஷ்ணனை சந்திப்பதும் அருகிப் போனது.வேலையில் பதவி உயர்வு பெற்றேன்.நிறுவனங்கள் மாறினேன்.ஊதியம் உயர்ந்தது.திருமணம் நிச்சயமானது.அப்போது திருமணப் பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு முரளிகிருஷ்ணனை சந்திக்க போயிருந்தேன்.சாலிகிராமம் அருணாச்சல சாலை முழுவதுமாக மாறியிருந்தது.அக்ஷ்யா என்ற ஹோட்டலைக் கானோம்.பார்வதி பவன் என்ற பெரிய உணவகம் வந்திருந்தது..அடுக்குமாடி குடியிருப்புகள் முளைத்திருந்தன.சாலையில் அதிக வாகனங்கள்.ஆனால் அவரின் கிளினிக்கில் எந்த மாற்றமும் இல்லை.அதே கூட்டம்.குழந்தைகள்.ஏழைப் பெண்கள்.நான் எப்போதும் போல காத்திருந்தேன்.கூட்டம் கலைந்த பின்னர் அவரைச் சென்று சந்தித்தேன்.அவரைச் பார்த்து ஏழேட்டு ஆண்டுகள் கடந்திருந்தன.அவர் அப்படியே இருந்தார்.சற்றே சோர்வும் புத்துணர்வும் இணைந்த முகம்.

நான் பத்திரிக்கையை கொடுத்தேன்.என்னால் திருமணத்திற்கு நெய்வேலி வர இயலுமா என்று தெரியவில்லை , என் வாழ்த்துகள் என்றார்.நீங்கள் கட்டாயம் வர வேண்டும் என்றெல்லாம் நான் சொல்லவில்லை.அவரின் நாள் அலுவல்கள் நிரம்பியது என்பதை நான் அறிந்திருந்தேன்.சில நாட்கள் வழக்கு விசாரணை, உண்மை கண்டறிதல் என்று சென்று விடுவார்.வேறு மாவட்டங்களுக்கு , மாநிலங்களுக்கு பயணிப்பார்.அதனால் அவரைத் தொந்தரவு செய்ய எனக்கு விருப்பமில்லை.எதிரில் ஒரு கேக் ஷாப் இருந்தது.அழைத்து போய் கேக் வாங்கி கொடுத்தார்.திருமணம் ஒரு சமூக ஒப்பந்தம்.இப்படி நமக்கு பல சமூக ஒப்பந்தங்கள் இருக்கின்றன.நமது அரசியலமைப்பு கூட சமூக ஒப்பந்தம் தான்.நாம் தான் எதையும் பின்பற்றுவதில்லை என்றார்.இப்போது அவர் பேசுவது சற்று புரிந்தது.நான் ரூசோவை பற்றிய அறிமுகத்தை பெற்றிருந்தேன்.அவர் நான் நூல்கள் வாசிக்கிறேன் என்பதை அறிந்து உவகை கொண்டார்.

உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சைக் கொடியைப் போல இருப்பாள்.உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமர கன்றுகளைப் போல இருப்பார்கள்.சாலையை பார்த்தபடி முறுவலுடன் கைகளை விரித்து பாடுவது போல இதைச் சொன்னார்.என்னிடம் திரும்பி எத்தனை அழகான வரிகள் , உங்களுக்கு அப்படியான வாழ்க்கை அமையட்டும் என்றார்.எனக்கு அந்தச் சொற்கள் மதுரமாக ஒலித்தன.இது என்ன என்று கேட்டேன்.ஓர் ஆற்காடு லுத்தரன் தேவயாலத்தில் நடந்த திருமணத்திற்கு சென்றிருந்த போது அங்கே இவை இசைக்கப்பட்டன.இவற்றை பாடும் போது எங்களை எழுந்து நிற்கச் சொன்னார்கள்.மனமக்கள் முழுங்கால் படியிட்டு இருந்தார்கள்.வரிகள் மனதில் பதிந்து போயிற்று என்றார்.இவருக்குள் இதெல்லாம் இருக்கிறதா என்று எண்ணிக்கொண்டேன்.பரதனைப் பார்த்து நாட்கள் ஆகின்றன என்றார்.நானும் பரதனைப் பார்த்து பல வருடங்கள் கடந்துவிட்டன.இப்போது திருமணத்தின் போது அவரை சந்திக்க இயலும்.நான் வருகிறேன் என்றேன்.மஞ்சிதி என்று சொல்லி விடை கொடுத்தார்.எப்போதாவது தெலுங்கு வார்த்தைகளை உதிப்பார்.

திருமணம், முதல் வருடத்தில் ஒரு ஆண் குழந்தை , அடுத்த இரண்டு வருடங்களில் ஒரு பெண் குழந்தை , மேலும் புதிய நிறுவனங்கள் என்று வாழ்க்கை ஸ்திரப்பட்டது.பல வாடகை வீடுகள் மாறினேன்.என் மனைவி போரூர் டிஎல்எப்பிலிருந்த ஒரு ஐடி நிறுவனத்தில் வேலையில் இருந்தார்.நான் நுங்கம்பாக்கத்தில் ஒரு மோட்டார் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பணி புரிந்து வந்தேன்.வடபழனி குமரன் காலனியில் ஐந்து வருட பழைய வீட்டை வாங்கினேன்.ஒரு கோடி ஆனது.ஆறு வீடுகள் கொண்ட அடுக்ககம்.

நேதாஜி கோவிட்டின் போது இறந்து போனான்.என் வாழ்வில் நான் ஒரு நிலையை அடைய காரணமானாக இருந்தவர்களில் முதன்மையானவன்.நட்பு என்பது அளிப்பது என்பதை அவன் மூலம் தான் அறிந்தேன்.அவனுக்கு இரண்டு ஆண் குழந்தைகள்.அவன் மனைவி தனித்து நின்றாள்.அப்போது அவள் பணியில் இல்லை.எப்படி வாழ்வை எதிர் கொள்ளப் போகிறாள் என்று கலங்கினேன்.ஆனால் அவள் அடுத்த சில மாதங்களிலேயே வேலைக்கு செல்லத் தொடங்கினாள்.வண்டி ஓட்ட கற்றுக் கொண்டாள்.யாரையும் சார்ந்து இருக்காமல் தனித்து வீடு எடுத்து தங்கினாள்.அவளது தாய் தந்தையரின் உதவியை எதிர்பார்க்கவில்லை.எனக்கு அவளை பார்க்க வியப்பாக இருந்தது.

என் தந்தையும் அப்போது மரணமடைந்தார்.அவருக்கு அது விடுதலையாக அமைந்தது.நெய்வேலியுடனான என் உறவும் அவருடன் முடிந்தது என்றும் தோன்றியது.நான் என் தந்தையின் மரணத்தின் போது அதிகம் அழவில்லை.பின்னரும் இல்லை.ஆனால் நேதாஜியின் இன்மை , தந்தையின் இன்மை என்னை வெகுவாக பாதித்தது.

நான் வடபழனியில் தங்கத் தொடங்கியப் பின்னர் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முரளிகிருஷ்ணனை சென்று சந்திப்பேன்.அருணாச்சல சாலை மேலும் மாறிவிட்டது.எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் தியேட்டர் இடிக்கப்பட்டு சின்னச் சின்ன உணவுக் கடைகள் , காஸ் நிலையம் என்று அந்த இடமே புதிதாக இருந்தது.மிகவும் விரிந்திருந்த அந்தச் சாலை குறுகிப் போயிருந்தது.ஷோபா திருமண மண்டபத்தில் ரிலையன்ஸ் டிரண்ட்ஸ் கடை வந்திருந்தது.மேலும் நிறைய உணவகங்கள்,அங்காடிகள்.முன்னர் மாலையில் அந்தச் சாலையில் வண்டியில் சொல்லும் போது தென்றல் வீசும்.இப்போது வெம்மையை உணர்ந்தேன்.உயர் கட்டிடகங்கள் காற்றை மறித்துவிட்டன.பாலு மகேந்திரா இறந்தப் பின்னர் அவர் நடத்திய சினிமாப்பட்டறை மழலையர் பள்ளியாக உருமாறியிருந்தது.பிரசாத் நிறுவனத்தின் வளாகத்திலிருந்த இளையராஜாவின் ரிக்கார்டிங் ஸ்டுடியோ கோடம்பாக்கத்திற்கு இடம் பெயர்ந்திருந்தது.அங்கு முதலில் எம்.எம். என்ற திரையரங்கம் இருந்தது.அருணாச்சல சாலையின் முனையில் போலீஸ் பூத் இருந்த இடத்தில் அடிக்கடி அரசியல் கூட்டங்கள் நடந்தன.ஆற்காடு ரோட்டில் காவேரி மருத்துவமனையை தொடங்கியிருந்தார்கள்.மெட்ரோ ரயில் பணிகளால் ஆற்காடுச் சாலை போரால் பாதிக்கப்பட்ட இடம் போல காட்சியளித்தது.

ஒரு முறை அவரின் கிளினிக் போன போது அனைவரும் சென்றிருந்தனர்.உதவியாளரும் தான் புறப்படுவதாக சொல்லி கிளம்பிவிட்டார்.அவரின் அறை தானாக மூடிக்கொள்ளக்கூடிய வகையில் ஸ்பிரிங் டோர் கொண்டிருந்தது.அவரைச் சென்று சந்திக்கலாம் என்று உள்ளே போனேன்.அவரைக் காணவில்லை.அப்போது வரை அங்கு தான் இருந்தார்.கழிப்பறைக்கு சென்றிருப்பார் என்று பார்த்தால் அது வெளிப்பக்கமாக மூடியிருந்தது. இதென்ன மாயம் என்று வெளியில் வந்து பார்த்தேன்.அங்கும் இல்லை.பின்னர் மறுபடி உள்ளே சென்றேன்.அவர் பக்கத்திலிருந்த ஆப்டிகல்ஸின் சுவரிலிருந்து வெளிவந்தார்.எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.என்னைப் பார்த்து அமரச் சொன்னார்.இதென்ன சுவரிலிருந்து வருகிறீர்கள் என்று வியப்பாக கேட்டேன்.நான் ஒன்றும் மாயாவி இல்லை என்று சிரித்தவர் எழுந்து அங்கிருந்த தீரைச்சீலையை அகற்றினார்.சுவற்றோடு பதிந்த நிலையில் ஒரு கதவு இருந்தது.அது கதவு என்பதே கூர்ந்து பார்த்தால் தான் தெரிந்தது.லேசாகத் தள்ளினால் திறந்தது.அந்தப் பக்கம் சென்று தள்ளிவிட்ட போது சரியாக மூடிக் கொண்டது.அந்தப் பக்கமும் திரைச்சீலை இருந்தது.அந்தக் கதவு ஆப்டிகல்ஸின் உள் அறை ஒன்றுக்கு கொண்டு சென்றது.அங்கிருந்து பங்கஜம் சாலைக்கு செல்ல மற்றொரு வாசல் இருந்தது.அந்த அறையில் ஒருவர் அமர்ந்து உணவு உட்கொண்டிருந்தார்.

ஏதேதோ காரணங்களுக்காக போலீஸ்காரர்கள் வருவார்கள்.திடீரென்று கைது செய்வார்கள்.அல்லது வேறு ஆபத்துகள் வரலாம்.அப்போதைய சூழ்நிலைகளில் அதிலிருந்து தப்பிக்க செய்து கொண்ட ஏற்பாடு.தேவைப்பட்டால் மறு வாசல் வழியாக அப்படியே வெளியேறி விடலாம்.ஒரு பதுங்கு குழி போல என்று சொல்லி சிரித்தார்.உள்ளே சாப்பிட்டு கொண்டிருந்தவரைப் பற்றி கேட்டேன்.அவர் தெலுங்கானாவைச் சேர்ந்தவர்.அவருக்கு தண்ணீர் கொடுக்கத்தான் போயிருந்தேன்.வழக்கு ஒன்றில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.முன் ஜாமீன் வழக்கு நாளை நடைபெறுகிறது. கிடைத்தவுடன் போய் விடுவார் என்றார்.அப்போது தான் அந்த ஆப்டிகல்ஸில் இருப்பவர்கள் அவரின் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்து கொண்டேன்.மனித உரிமைகள் என்பது இத்தனை சாகசங்கள் நிரம்பியதா என்று ஆச்சரியம் கொண்டேன்.அவருடன் அத்தனை காலம் பழகியிருந்தாலும் அவருக்கு இத்தனை நெருக்கடிகள் ஆபத்துகள் இருக்கின்றன என்பதை அறியாதிருந்தேன்.

தொடர் வாசிப்பாலும் எப்போதும் எனக்குள் இருந்த சலிப்பின் காரணமாகவும் எதாவது எழுதலாம் என்று எண்ணி கட்டுரைகள் எழுதத் தொடங்கினேன்.கதைகள் எழுதத் தொடங்கியப் பின்னர் கட்டுரைகளை விட அவை எளிதாக தெரிந்தன.பிள்ளைகள் சற்று வளர்ந்தார்கள்.அவர்களை அண்ணா நகரிலிருந்த பள்ளியில் சேர்த்தேன்.வேலை , மனைவி , மக்கள் என்று வாழ்க்கை ஒரு அட்டவணைக்குள் பொருந்திக்கொண்டது.இலக்கியத் துறையில் நான் நண்பர்களை உருவாக்கிக் கொள்ளவில்லை.யாருடனும் தொடர் உரையாடலில் இல்லை.மூத்த எழுத்தாளர்கள் யாரையும் சென்று சந்திக்கவும் இல்லை.கூட்டங்களுக்கு அதிகம் போனதில்லை.அப்படி செய்யக்கூடாது என்று தீர்மானித்து செய்யவில்லை.ஆனால் நாம் அறிவுத்தளத்தில் செயல்படுகிறோம் , அதன் பொருட்டு கூடுகிறோம், உரையாடுகிறோம் என்ற எண்ணம் எனக்கு அசெளகரியத்தை அளித்தது.அது முதன்மையான காரணமாக இருந்தது.

ஒரு முறை பரதன் சென்னை வந்திருந்தார்.கிளினிக்கில் இருக்கிறேன்.அருகிலிருந்தால் வரவும் என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.அவரை சந்தித்து பல வருடங்கள் ஆகியிருந்ததால் சென்றேன்.அப்போது எனது முதல் சிறுகதைத் தொகுப்பு பிரசுரமாகியிருந்தது.எடுத்துக் கொண்டு போனேன்.சில மாதங்களுக்கு முன்னர் முரளிகிருஷ்ணனுக்கு ஒரு பிரதி கொடுத்திருந்தேன்.அவர் படித்தாரா என்று நான் கேட்கவுமில்லை.அவர் சொல்லவுமில்லை.

பரதன் பத்து வருடங்களுக்கு முன்னர் திருமணத்தின் போது பார்த்தது போலவே இருந்தார்.தலை மயிர் சற்று நரைத்திருந்தது.வாங்க நிவாஸ் , எப்படி இருக்கீங்க என்று கேட்டார்.அவரின் கைகளைப் பற்றிக் கொண்டேன்.நான் புத்தகம் எழுதியிருப்பதை கூறிய போது மிகவும் மகிழ்ந்தார்.சற்று வியப்பும் அடைந்தார்.உங்க அப்பா பாஷ்யம் இருந்தா ரொம்ப சஷ்தோஷப்பட்டிருப்பார் என்றார்.நல்ல விஷயம் நல்ல விஷயம் என்று பல முறை கூறினார்.மெடிக்கல்ஸ் குறித்து கேட்டேன்.அதைத் தன் கடையில் பணிபுரிந்த ஒருவருக்கு மாற்றி கொடுத்து விட்டதாகவும் தற்சமயம் முழு நேர கட்சிப் பணியாளர் என்றும் சொன்னார்.நெய்வேலி நிறைய மாறிப் போயிவிட்டது , கடலூர் விருத்தாசலம் சாலையை விரிவுப் படுத்தியதில் பெரியாக்குறிச்சி, கங்கைகொண்டான் பகுதிகள் முழுதும் திரிந்துவிட்டன , மந்தாரக்குப்பம் பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு கொண்டு சென்று விட்டார்கள் என்றார்.நான் போய் சில வருடங்கள் ஆகிவிட்டதால் எனக்கு அவை செய்தியாக இருந்தன.

அன்று மருத்துவகத்தில் அதிக கூட்டம் இல்லை.உதவியாளரும் சென்றுவிட்டார்.மூவரும் அருகிலிருந்த ஹோட்டலுக்கு சென்று உணவு உண்டோம்.சாலையின் முனையில் மேடை அமைக்கப்பட்டு கலியபெருமாள் என்பவருக்கான இரங்கல் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.பேச்சு அதைக் குறித்து திரும்பியது.கலியபெருமாள் கட்சிப் பிரமுகர்.ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.ஓரிரு திரைப்படங்களும் தயாரித்திருந்தார்.அந்தப் பகுதியில் செல்வாக்கான மனிதர்.அவரது வாகனம் செல்லும் போது ஆட்டோகாரர்கள் எழுந்து நிறப்தை பார்த்திருக்கிறேன்.தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது பலர் அவர் வீட்டின் முன் கூடுவார்கள்.பணமும் பொருட்களும் அள்ளித் தருவார்.படாடோபான ஆள் என்ற பிம்பம் எனக்கு இருந்தது.வடபழனியிலும் சாலிகிராமத்திலும் அவருக்கு சில வணிக வளாகங்கள் இருந்தன.அதில் நிறைய கடைகள் இயங்கிவந்தன.விருகம்பாக்கத்தில் அவர் ஓர் அடுக்ககத்தை கட்டிக் கொண்டிருந்தார்.அதற்காக கொண்டு வந்து இறக்கப்பட்ட கம்பிகள், சிமெண்ட் மூட்டைகள் , பிளாக்குகள் கணிசமான அளவு காணாமல் போயின.அந்தத் தெருவில் டீக்கடை வைத்து நடத்தி வந்த பத்தொன்பது வயது இளைஞன் நந்தனுக்கு அந்தத் திருட்டில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டான்.லாக்கப்பில் அவன் குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டான்.முரளிகிருஷ்ணன் நந்தனை பிணையில் கொண்டு வந்தார்.அவன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.அந்த விசாரணை நிலுவையில் இருந்தது.

இது நிகழ்ந்த மூன்றாவது மாதத்தில் கலியபெருமாள் சில அடையாளம் தெரியாத நபர்களால் அவர் கட்டிட வேலைகளை மேற்பார்வையிட சென்றிருந்த பொழுதில் கொல்லப்பட்டார்.நந்தனும் இதில் உடந்தையாக இருக்கலாம் என்று கலியபெருமாளின் ஆட்கள் சந்தேகித்தனர்.அவன் தலைமறைவாகியிருந்தான்.முரளிகிருஷ்ணன் அவனை சில காலம் திருப்பதியில் தனக்குத் தெரிந்தவர்கள் வீட்டில் சென்று தங்கியிருக்க சொல்லியிருந்தார்.இந்த நிலையில் தான் இரங்கல் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.பரதன் முரளிகிருஷ்ணனை எச்சரித்தார்.நீங்கள் இங்கே இன்றிரவு இருப்பது அத்தனை நல்லதல்ல.என்னுடன் கட்சி அலுவலகம் வந்துவிடங்கள்.சென்றுவிடலாம் என்றார்.முரளிகிருஷ்ணன் மறுத்துவிட்டார்.அவர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள்.அதெல்லாம் ஒன்றும் ஆகாது என்றார்.பரதன் பலமுறை வற்புறுத்தியும் அவர் கேட்கவில்லை.பரதன் ஓலா புக் செய்து தி.நகரிலிருந்த பாலன் இல்லம் சென்றார்.

நீங்கள் எதற்கும் பத்திரமாக இருங்கள் என்று சொல்லி நானும் புறப்பட போனேன்.உங்கள் புத்தகத்தைப் படித்தேன் என்று கூறினார் முரளிகிருஷ்ணன்.எனக்கு அவை குறித்து சொல்ல சில எண்ணங்கள் உண்டு.வாங்களேன் , நடந்து கொண்டே பேசலாம் என்றார்.இப்போதா, அங்கே கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்றேன்.நான் சொன்னதை சட்டை செய்யாமல் வாருங்கள் என்று கூறி நடக்க ஆரம்பித்தார்.அவர் எந்தப் பதற்றமும் இல்லாமல் இருந்தார்.சிறிது நேரத்திற்கு பிறகு பேசத் தொடங்கினார்.உங்கள் நூலில் பல கேள்விகள் இருக்கின்றன.விடைகள் இல்லை.விஞ்ஞானம் , தொழில்மயம், அதனால் உருவாகும் நகரமயம், அங்கே சமூகமற்று போகும் தனிமனிதன் , தனிமனிதனாக மாறுவதால் ஏற்படும் பிறழ்வுகள் , இந்த அமைப்பை எதிர்க்க இயலாத அவனது கையறு நிலை, இவற்றுக்கு மத்தியில் நிலப்பிரபுத்துவ காலத்தின் எச்சங்களான சாதிய படிநிலைகள் என்று உங்கள் சிறுகதைகள் இன்றைய சூழலை நன்கு பிரதிபலிக்கின்றன.ஆனால் கலையின் நோக்கம் அது மட்டும் அல்ல.கலையின் மையத் தளம் மறுதலிப்பது தான். The Purpose of art is to negate.

உங்கள் கதை ஒன்றில் ஒருவன் மனப்பிறழ்வு அடைகிறான்.மற்றொரு கதையில் ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான்.சிலர் வேலையை விட்டுவிட்டு அலைந்து திரிகிறார்கள்.அவை தனிப்பட்ட துயரத்தின் காரணமாக அல்ல.அவை பணி அல்லது சூழல் ஏற்படுத்தும் அறச்சிக்கலால் அல்லது நெருக்கடியால்.அது மறுதலிப்புதான்.ஆனால் அது மட்டுமே தீர்வு அல்ல.மாற்றுத் தளத்தை குறித்த கனவும் Negation தான்.நான் கற்பனாவாதம் குறித்து பேசவில்லை.மறுப்பதின் பல்வேறு சாத்தியங்களை குறித்து பேசுகிறேன்.எதிர்ப்பதும் ,போராடுவதும் ,குரலை உயர்த்துவதும், சண்டை போடுவதும் , கூட்டம் சேர்ப்பதும் , கோஷமிடுவதும் , மற்றமையோடு நம்மை இணங்கொண்டு கொள்வதும் , மற்றமையோடு இரண்டறக் கலப்பதும் மறுதலிப்பு தான்.

முதலாளித்துவம் உருவாக்கிய ஒரு வாழ்க்கைப் பார்வை தான் இருத்தலியம்.பொதுவாக நாம் பேசும் பல இடர்கள் தனிப்பட்ட வாழ்வின் சிக்கல்கள் அல்ல.அவை அமைப்பின் பிரச்சனைகள்.உதாரணமாக உங்கள் கண் முன்னே ஒருவன் கொல்லப்படுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.நீங்கள் உடனே காவல் நிலையம் சென்று புகார் அளிக்க மாட்டீர்கள்.அரசியல் அல்லது சேவைத் தளத்தில் இருப்பவர்கள் அதை செய்ய வாய்ப்பு உண்டு.ஆனால் பிறர் அதை செய்வதற்கான சாத்தியங்கள் அதிகமில்லை.உடனே நாம் அவனை கோழை என்று முத்திரை குத்தலாம்.ஆனால் அதே தனிமனிதன் இந்த அமைப்பு அவனை பாதுகாக்கும் என்று உணர்ந்தால் தனக்குத் தெரிந்தவற்றை கூறுவான்.

அதற்காக தனிமனிதன் இல்லை என்று நான் சொல்லவில்லை.உங்களுக்கும் எனக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன.வாழ்க்கை பார்வையில் வித்யாசங்கள் உண்டு.ஒரு பிரச்சனையை கையாள்வதில் அணுகுமுறைகள் மாறலாம்.தனிமனிதர்கள் அமைப்பாக திரள்வதின் வழி பல இறுகிப்போன சாஸ்திரங்களை உடைக்கலாம்.இன்று அரசியலமைப்பு பிரிவு பதினேழின் படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது.ஆனால் நம் சமூகத்தில் தீண்டாமை இன்றும் உள்ளது.இந்த இரண்டுக்கும் இடையில் முரண் இருக்கிறது.இந்த முரண் வழி ஒரு இயக்கம் சாத்தியமாகிறது.இன்று வன்கொடுமை தடுப்புச் சட்டம் உருவாகியிருக்கிறது.இட ஓதுக்கீடு இருக்கிறது.சாதி மாற்று திருமணங்கள் நிகழ்கின்றன.உரையாட ஒரு வெளி இருக்கிறது.அதற்கு காரணம் இந்த முரணியக்கம் தான்.தனிமனித விடுதலை அகவழிப்பயணத்தின் வழி மட்டும் தான் சாத்தியம் என்று நான் எண்ணவில்லை.அதை புறவயமாக திருப்பியும் தீர்வை கண்டடைய முடியும்.

இன்று துரதரிஷ்டவசமாக வேலை வாழ்க்கை என்று ஒரு வலையத்துக்குள் இருக்கிறீர்கள்.இதைத் தவிர்ப்பது கடினம் தான் என்பதை ஓப்புக் கொள்கிறேன்.ஆனால் உங்கள் வாழ்வை மேலும் விரித்துக்கொள்வதற்கான வழிகளை கண்டுபிடியுங்கள்.மனிதர்களை தொடர்ந்து சந்தியுங்கள்.இணைந்து பணிபுரியுங்கள்.புத்தகங்கள் ஒரு போதும் மனிதர்களுக்கு ஈடில்லை.இலக்கியம் என்பது அடிப்படையில் மானுட உரிமைகளுக்கான ஒரு பிரதி தான்.பலர் அதை மறுக்கலாம்.ஆனால் அதில் உண்மை இருக்கிறது.வேறு எதற்காக இலக்கியம் உருவாக்கப்படுகிறது.கண்ணாடியை பார்த்து ஆடைகளை சரி செய்து கொள்வதற்காகவா? பண்பாட்டை பதிவு செய்வதற்காகவா? பண்பாட்டை ஏன் பதிவு செய்ய வேண்டும்.பண்பாடு மறைந்து போகட்டுமே.ஓடுக்கப்பட்ட மனிதனின் ஓலம் தான் உலக அளவில் மானுட உரிமைகளுக்கான அவசியத்தை உருவாக்கியது.இந்தியாவில் நெருக்கடிக் காலத்திற்கு பிறகு தான் மனித உரிமைகள் பற்றிய சொல்லாடல்கள் அதிகரித்தன.

அந்தக் கூட்டம் நிகழ்ந்துகொண்டிருந்த இடத்தை நோக்கி நடந்தோம்.பலரும் கலியபெருமாளை வானாளவ புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.அவரைப் போலவே அவருக்கான இரங்கலும் பகட்டாக இருந்தது.நான் திரும்பி விடலாம் என்று சொன்ன போது அவர் அந்த முனையிலிருந்த காமராஜர் சாலை வழியாக குமரன் காலனி மெயின் ரோடு சென்று திரும்பலாம் என்றார்.நாங்கள் கூட்டத்தை நெருங்கிய போது அங்கே பலர் எங்களை கூர்மையாக நோக்குவதாக எனக்குத் தோன்றியது. அதில் ஒருவனை நான் முன்னர் எங்கோ பார்த்திருக்கிறேன் என்றாலும் எங்கே என்று சரியாக நினைவு கூர முடியவில்லை.அவர்களை கடந்த போது என் முதுகில் அவர்களின் கண் பார்வை பதிந்திருப்பதை உணர முடிந்தது.சில காவலாளிகள் முரளிகிருஷ்ணனை பார்த்து வணக்கம் வைத்தார்கள்.அவர்கள் கூட தங்களுக்குள் ஏதோ குசுகுசு என்று பேசிக் கொண்டார்கள்.எனக்கு ஏதோ நிகழப் போகிறதோ என்று எண்ணம் வலுப்பெற்றது.அடிக்கடி நெற்றியில் படிந்த வியர்வையை துடைத்துக் கொண்டேன்.

நான் என் பார்வையை உங்கள் மீது திணிக்கிறேனா என்று தெரியவில்லை.நான் இதுவரை உங்களிடம் இப்படி பேசியதில்லை.ஆனால் இப்போது உரையாடலாம், ஏனேனில் நீங்கள் அதை நோக்கி நகர்ந்து வந்திருக்கிறீர்கள் என்று சொல்லி நிறுத்திக்கொண்டார்.நான் மெளனமாக அவர் சொல்வதை கேட்டுக் கொண்டு வந்தேன்.அவரை எனக்கு இருபது வருடங்களாக தெரியும்.ஆனால் அதுவரை பேசியதை தொகுத்தாலும் அன்று சொன்னது அதிகம்.

மானுட உரிமைகள் என்பதை எவ்வாறு வரையறை செய்வீர்கள் என்று கேட்டேன். இந்திய அரசியலமைப்பின் பிரிவு இருபத்தி ஓன்று மனித உரிமைகள் பற்றிய எளிய ஆனால் முழுமையான வாசகம் என்றார்.No person shall be deprived of his life or personal liberty except according to procedure established by Law.ஒருவரின் உயிரும் தனிப்பட்ட சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும்.நமது உயிரையும் சுதந்திரத்தையும் பறிக்கும் உரிமை யாருக்குமில்லை.இதில் சட்டத்திபடி ஒருவரின் உயிரை எடுக்கலாம் என்பதையும் நாங்கள் எதிர்க்கிறோம்.மேலும் இதை நமக்கு அரசியலமைப்பு வழங்கவில்லை.மாறாக உறுதி மட்டுமே செய்கிறது.இதை விரித்துக் கொண்டே செல்லலாம்.ஆனால் அடிப்படை இதுதான்.

நாங்கள் அருணாச்சல சாலையிலிருந்து ஜெனரல் கரியப்பா ஸ்கூலை கடந்து காமராஜர் சாலை வழியாக குமரன் காலனி மெயின் ரோடு சென்று பின்னர் எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் சாலை வழியாக மறுபடியும் அருணாச்சல சாலை வந்து கிளினிக்கை அடைந்தோம்.நிறைய நேரம் நடந்திருந்தோம்.இரங்கல் கூட்டம் முடிந்திருந்தது.எல்லோரும் கலைந்து சென்று கொண்டிருந்தார்கள்.நான் புறப்படுகிறேன் என்றேன்.அவர் மஞ்சிதி என்று சொல்லி உள்ளே போனார்.அவர் தன் அறையினுள் சென்றபின் கதவு தானாக மூடிக்கொண்டது.அலுவலர் முன்பே கிளம்பியிருந்தார்.ஆப்டிகல்ஸின் ஊழியர் என் அருகில் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்.இரவு மணி பத்தாகியிருந்தது.சாலையில் கூட்டம் குறைந்திருந்தது.சில கடைகளை அடைத்துவிட்டார்கள்.நான் வண்டியில் ஏறி அமர்ந்தேன்.சட்டென்று மோட்டார் சைக்கிளில் ஆறேழு பேர் வந்தனர்.என்னைக் கடந்து சென்றார்கள்.கிளினிக்குள் புகுந்தார்கள்.அவர்கள் அனைவரும் முகத்தில் கர்சீப் அல்லது மூகமுடி அணிந்திருந்தார்கள்.கைகளில் அருவாள் இருந்தது.இருபதிலிருந்து முப்பது வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள். என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்வதற்குள் அனைவரும் வெளியே வந்தார்கள்.ஒருவன் எங்கடா அந்த டாக்டரு என்று கேட்டான்.என்னிடம் பதில் எதுவும் எதிர் நோக்காமல் சிதறி பக்கத்திலிருந்த பங்கஜம் சாலைக்குள் சென்றார்கள்.அங்கிருந்த ஆட்டோகாரர்களும் பிறரும் என்ன நிகழ்கிறது என்று கூடினார்கள்.

சென்றவர்களில் ஒருவன் மட்டும் திரும்ப வந்து அவரது கதவை உதைத்து மறுபடியும் உள்ளே புகுந்தான்.நான் ஐயோ என்று கத்திக்கொண்டு கிளினிக்குள் ஓடினேன்.அவர் அறையில் இல்லை.அவன் சட்டென்று முரளிகிருஷ்ணனின் அறையிலிருந்த திரைச்சீலையை விலக்கி அங்கிருந்த கதவைத் தள்ளி ஆப்டிகல்ஸூக்குள் சென்றான். அவர் உள் அறையில் பதுங்கியிருந்தார்.அவனைப் பார்த்ததும் மற்றொரு வாசல் வழி தப்ப முயன்றார்.அவன் அவரை அருவாள் கொண்டு முதுகில் வெட்டினான்.அவர் வாசல் அருகே கீழே சரிந்தார்.அவன் இன்னும் இரண்டு மூன்று முறை அவர் மீது அருவாளை வீசினான்.அவன் முகத்தில் அணிந்திருந்த கர்சீப் கீழே விழுந்தது.அதை எடுத்துக் கட்டிக்கொண்டு அங்கிருந்து வெளியே ஓடினான்.நான் அவனை தெளிவாக பார்த்தேன்.அங்கே ஒருவன் மோட்டார் சைக்கிளை கொண்டு வந்தான்.அதில் ஏறி அந்த இடம் விட்டு விரைந்தார்கள்.கூட்டம் முழுதும் முன்பக்கம் இருந்ததால் அவர்கள் தப்பிக்க எளிதாக இருந்தது.அவசர ஊர்தி அழைக்கப்பட்டது.அவர் அதற்குள் மரணமடைந்திருந்தார்.நான் உறைந்து நின்றேன்.போலீஸார் வந்தார்கள்.மீடியாக்கள் குழுமின.

எஸ்.ஐ.வரதராஜன் என்னை விசாரித்தார்.நான் உள்ளே செல்வதற்குள் கொலையாளி ஓடிவிட்டான்.யார் வெட்டியது என்று தெரியாது.கும்பலில் அனைவரும் மூகமுடி அணிந்திருந்ததால் எவரின் முகத்தையும் பார்க்கவில்லை என்றேன்.அங்கிருந்த வேறு யாரும் கொலை செய்தவனை பார்த்திருக்கவில்லை.ஆனால் அவன் யார் என்பது எனக்கு நன்கு புலனானது.நாங்கள் அந்தக் கூட்டத்தில் நடந்து சென்ற போதே அவனைப் பார்த்தேன்.அவனது குழந்தையை சிகிச்சைக்காக முரளிகிருஷ்ணனிடம் ஓரிரு முறை அழைத்து வந்திருக்கிறான்.அப்போது தன் மனைவியை வைதபடியே இருந்தான்.அவனுக்கு எப்படியோ அந்தக் கதவு குறித்து தெரிந்திருந்திருக்கிறது.

நான் அறிந்தவற்றை நான் யாரிடமும் சொல்லவில்லை.பரதனிடமும் என் மனைவியிடமும் சொல்ல நினைத்து பின்னர் முடிவை மாற்றிக்கொண்டேன்.பிரேதப் பரிசோதனை முடிந்து உடல் அளிக்கப்பட்டது.குளிர்பதனப் பெட்டியிலிருந்த அவர் முகத்தை பார்த்த போது நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் அழுதேன்.பரதன் என்னை அணைத்துக் கொண்டார். அரசியல் வாதிகள் , போலீஸ்காரர்கள் , வழக்கறிஞர்கள் ,பொது மக்கள் என்று நிறைய கூட்டம்.பெண்கள் அதிக அளவில் இருந்தார்கள்.சிலர் அவரை மருத்துவராக மட்டுமே அறிந்திருந்தார்கள்.அவரின் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பாடல்கள் பாடினார்கள்.அவரது மகன் சினிமாத்துறையில் ஒளிப்பதிவாளராக இருந்தார்.அவதி உடல் வழி இறங்கி வலியாக மாறுவதை அன்று தான் பார்த்தேன்.அவர் உருக்குலைந்து காணப்பட்டார்.அவரது மனைவி சலனமற்று அவரின் தலைமாட்டின் அருகில் அமர்ந்து அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்.அவரது சகோதரர் வேங்கடகிருஷ்ணனை பல காலம் கழித்து பார்த்தேன்.எந்தச் சடங்கும் செய்யப்படவில்லை.மின் மயானத்தில் அவரை எரியூட்டி அனைவரும் கலைந்து போனோம்.

அன்று நிகழ்ந்தவை தன்னிச்சையாக அரங்கேறின என்றும் அதற்கு பின்னால் சதியோ திட்டமிடலோ இல்லை என்றும் போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்கள்.கலியபெருமாள் மீதிருந்த அன்பாலும் அவரிடமிருந்து பெற்ற உதவிகளாலும் சிலர் உணர்ச்சிவசப்பட்டு முரளிகிருஷ்ணன் மீது வன்முறையை ஏவினார்கள் என்று சொல்லியிருந்தார்கள்.கொலையின் பொருட்டு சிலர் கைது செய்யப்பட்டு பிணையில் வந்தார்கள்.விசாரணை நீதிமன்றத்தில் சாட்சியாக அழைத்து கேட்ட போதும் நான் குற்றம் இழைத்தவனை பார்க்கவில்லை என்றே சொன்னேன்.சிசிடிவியில் சிலரின் முகம் பதிந்திருந்தாலும் கொலை செய்தது யார் என்று அரசுத் தரப்பால் நிறுவ இயலவில்லை.ப்ராஸிக்யூஷன் தரப்பும் அந்த வழக்கு நீர்த்துப் போவதை அனுமதித்தது ,விரும்பியது.

அவரைக் குறித்து புத்தகங்கள் வெளியிடப்பட்டன.ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டன.அவர் எழுதியவற்றை தொகுத்தார்கள்.இணையதளம் தொடங்கி அவரைப் பற்றிய அணைத்து தரவுகளையும் அதில் பதிவேற்றினார்கள்.”இந்தியாவில் மனித உரிமைகள்” என்ற கருத்தரங்கு ஒன்றை எல்எல்ஏ பில்டிங்கில் நடத்தினார்கள்.பல மாநிலங்களிலிருந்து முன்னாள் நீதிபதிகள்,மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், வழக்கறிஞர்கள் அதில் கலந்து கொண்டனர்.

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து நெய்வேலி கிளம்பிச் சென்று பரதனை சந்தித்தேன்.என்னை அறுத்துக் கொண்டிருந்த குற்றவுணர்வை அவரிடம் ஓப்புவித்தேன்.பெருமூச்சு விட்டார் பரதன். குற்றவுணர்வால் ஆகப்போவது ஒன்றுமில்லை.செயலே பிரதானம்.இதை புறவயமாக பாருங்கள்.உங்களால் இதிலிருந்து எப்படி வெளிவர முடியும் என்று பரிசீலியுங்கள்.சமாதானமாக எதையாவது சொல்வது உங்களுக்கும் எனக்கும் எந்தப் பயனையும் தரப்போவதில்லை.மேலும் இருவருக்குமே அது அவமானத்தை அளிக்கும்.இப்போது நீங்கள் புறப்படலாம்.நாம் இனி பேசிக் கொள்ள ஒன்றுமில்லை என்றார்.நான் வடலூர் வந்து சென்னைக்கு பஸ் ஏறினேன்.சிறிது நேரத்தில் கண் அயர்ந்து உறங்கிப் போனேன்.

 

அகழ் மின்னிதழில் பிரசுரமான சிறுகதை

வாழ்வும் மெய்யியலும்



"வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்" நாவல் வாசித்தேன். அமலன் ஸ்டான்லியின் வேறு எந்தப் புத்தகத்தையும் முன்னர் வாசித்ததில்லை. இந்த நாவலில் வரும் ஜெரியை மையமாக வைத்து ஒரு நல்ல வெகுஜன திரைப்படத்தை கூட எடுக்கலாம். ஜெரி எல்லா வகையிலும் ஒரு ஹீரோ. நாவலில் வட சென்னை பற்றிய விவரணைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. சென்னை எனக்குப் பிடித்த நகரம். பாந்தமான ஊர்.சென்னையின் பின் மதியப் பொழுதுகள் அழகானவை. பெங்களூரு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.நெய்வேலி என் சொந்த ஊர்.ஆனால் சென்னை போன்ற நெருக்கத்தை நான் வேறு எங்கும் உணர்ந்ததில்லை. அந்தச் சாலைகளில் , மனிதர்களில் தென்படும் உயிர்ப்பு , சலனம் வேறு எங்கும் பார்த்ததில்லை.

நாவலில் பிரதானமாக வட சென்னை இடம் பெறுகிறது.அதிலும் முக்கியமாக அயனாவரமும் அதைச் சுற்றி உள்ள இடங்களும்.பின் பகுதியில் தாம்பரம், படப்பை , தரமணி, திருவான்மியூர் போன்ற இடங்கள் வருகின்றன.ஆனால் வட சென்னைப் பற்றிச் சொல்லும் போது இருக்கும் உயிர்ப்பு பின்னர் இல்லை.

இந்த நாவலில் நூற்றுக்கணக்கான சிறுகதைகள் கொட்டிக்கிடக்கின்றன. முற்பகுதி ஜெரியின் பால்ய காலம்.அதில் முழுக்க முழுக்க அவனது நண்பர்கள் , சுற்றம் பற்றிய விபரங்கள் தான் தொடர்ந்து இடம் பெறுகின்றன. இன்றைய குழந்தைகள் வளர்ந்து தன் வரலாற்று நாவல் எழுதும் போது இந்தளவுக்கு சுற்றத்தை விவரித்து எழுத இயலுமா என்று தெரியவில்லை.இன்று நமக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவரின் பெயர் கூட தெரியாது.

ஜெரியின் தமக்கை அவனது பத்தொன்பதாம் வயதில் இறந்துவிடுகிறார்.அந்த மரணம் அவனை வெகுவாக பாதிக்கிறது.அவனது இறை நம்பிக்கையை அசைக்கிறது.அவனுள் ஏதோ ஒன்று அறுந்து போகிறது.அது அவனை எதையும் செய்ய இயலாதவனாக ஆக்கவில்லை.அதே நேரத்தில் ஒரு குழந்தைமையின் குதூகலத்தை அவன் இழக்கிறான்.

இந்த நாவல் இரு வேறு தளங்களில் பயனிக்கிறது.ஒன்று அவனது பால்ய காலம், சுற்றம் , நண்பர்கள், அவர்கள் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள், பொழுதுகள், அங்கே நிகழும் கொண்டாட்டங்கள், பள்ளி, பருவ வயதின் காதல்கள், ஜெரியின் தாய் தந்தையர் , சகோதரர்கள்,அவர்களின் வாழ்க்கை , பின்னர் கல்லூரிக் காலம், திருமணம் , பிரிவு , மறுமணம் , குழந்தைகள் , பணியும் அது சார்ந்த சிக்கல்களும் என்று புற விவரிப்புகளின் வழி செல்லும் கதை.

மற்றொன்று ஜெரியின் மெய்யியல் நாட்டம்.அவன் சிறுவயதில் விவிலியத்தை தீவிரமாக படிக்கிறான்.அவனது தந்தை நல்ல வாசிப்பு உள்ளவர் என்பதால் சிறு வயதிலிருந்தே புத்தகங்கள் வாசிக்கிறான்.தந்தை இடதுசாரி சிந்தனையும் திராவிட இயக்க ஆதரவாளராகவும் இருக்கிறார். தாயார் கிறிஸ்தவர். இருவரும் ஜெரியை பாதிக்கின்றனர்.அவன் கல்லூரி காலத்தில் இடதுசாரி அமைப்பில் இணைந்து போராட்டங்களில் கலந்து கொள்கிறான். அவனது சகோதரியின் மரணத்திற்கு பிறகு கடவுள் மீதான நம்பிக்கையை இழக்கிறான்.ரமணர், ஓஷோ, ஜே.கிருஷ்ணமூர்த்தி, பெளத்த தியானம் என்ற தளங்களில் பயனிக்கிறான்.அவனுக்கு தியானம் கைகூடுகிறது.

ஒரு புறம் இச்சைகள் கொண்ட மனிதன் , மறுபுறம் அவனது ஆன்மிக தேட்டம்.மனிதனால் தன் இச்சைகளை வெல்வது அத்தனை எளிதல்ல என்ற எண்ணம் மறுபடி மறுபடி நாவலில் வருகிறது. ஜெரி நச்சுயியல் படித்து ஆராய்ச்சியில் ஈடுபடுவதால் மிருகங்களின் நடவடிக்கைகளை கொண்டு மனித வாழ்வை கவனிக்கிறான்.அதன் வழி அவன் மனிதனின் ஓழுக்கம் சார்ந்த மதிப்பீடுகள் உண்மையில் எத்தனை பலவீனமானவை என்பதை கண்டடைந்தபடியே இருக்கிறான்.காக்கை, வளர்ப்பு மீன் , பூனை என்று அன்றாட வாழ்வின் எளிய பிராணிகள் அவனுக்கு மிகுந்த உற்சாகத்தையும் புத்துணர்வையும் தருபவையாக இருக்கின்றன.

ஜெரி முழுமையாக வளர்ந்த ஓர் ஆளுமை.அதற்கு முக்கிய காரணம் அவனது தந்தை தான்.அவன் பள்ளிப்பருவத்தில் காதலியை சந்திக்க சைக்கிளில் விரைந்து சென்று மோட்டார் வண்டியில் மோதி காலை முறித்துக் கொள்கிறான்.அவனுடைய தந்தை உடனடியாக பதறி அவனை மருத்துவமனையில் சேர்க்கவில்லை.வீட்டில் உள்ளவர்கள் அளிக்கும் சிகிச்சைகள் பலனின்றி போகவும் அவன் மிகவும் அவதிப்படுவதைப் பார்த்தப் பின்னரும் தான் அவர் அவனை ரயில்வே மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்.அவன் நிதானமாக வந்திருக்க வேண்டும் என்று அவர் எண்ணுகிறார்.அதனால் முதலில் அவனுக்கு உதவ அவர் முற்படவில்லை.

ஐஐடியில் படித்த ஜெரியின் சகோதரனை அடித்து வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்.பிடிவாதமும் கோபமும் கொண்டவராக இருக்கிறார்.அவரது இந்த ஆளுமைப் பண்பு அவரது குழந்தைகளை தனித்து நிற்பவர்களாக மாற்றுகிறது.அநேகமாக அனைவரும் காதலித்து தங்கள் துணையை தேர்வு செய்கிறார்கள்.அதற்கு வீட்டில் எந்தத் தடையும் இல்லை.அறிவையும் ஒழுக்கத்தையும் தருவது மட்டும் போதுமானது என்று அவனது தந்தை எண்ணுகிறார்.இப்படியான தந்தை தான் பின்னர் மொபட் ஓட்டிச் சென்று லாரியில் அடிபட்டு இறந்து போகிறார்.

இதில் வரும் மெய்யியல் தளத்திற்குள் என்னால் வெகு தூரம் செல்ல இயலவில்லை.நான் ஒரு காலத்தில் ரமணர், விவேகானந்தர் , ஜெயமோகன் வாசித்திருக்கிறேன். ஓ.ரா.ந.கிருஷ்ணன் வழி பெளத்த நூல்கள் அறிமுகமாகி அவற்றையும் வாசித்தேன்.ஆனால் எனக்கு அவை சலிக்க ஆரம்பித்துவிட். எனக்கு வாழ்வை அர்த்தப்படுத்திக் கொள்ள ஆல்பர் காம்யூவும் , தஸ்தாயெவ்ஸ்கியும் போதுமானவர்களாக இருக்கிறார்கள்.

மறைந்த மனித உரிமை ஆர்வலர் கே.பாலகோபால் மார்க்ஸியம் பற்றிச் சொல்லும் போது அதனால் மனிதனை உற்பத்தியாளனாக மட்டுமே பார்க்க முடிந்தது.ஆனால் மனிதன் பிறழக் கூடியவனும் தான்.அதைப்பற்றி மார்க்ஸியம் ஒன்றும் சொல்லவில்லை என்கிறார்.எனக்கு அந்த இடத்தை தஸ்தாயெவ்ஸ்கி ஈடு செய்தார்.எனக்கு சமூக ஓப்பந்தம் பற்றி பேசும் ரூசோ தான் முதன்மையாகத் தெரிகிறார். இருத்தலியம் மீது எனக்கு முன்னர் இருந்த ஈர்ப்பு இப்போது இல்லை.

மனிதன் அமைப்பின் வழி வருபவன்.அவன் தனிப்பட்ட உலகமும் அமைப்பின் வழி நிர்ணயம் பெறுகிறது என்றே நான் எண்ணுகிறேன்.நமது கையறுப்பு நிலை , அச்சம், அர்த்தமின்மை, இருத்தலியக் குழப்பங்கள் இவைகளைப் பற்றி என்ன சொல்ல முடியும்.இதற்கு ரூசோவிடமோ மார்க்ஸிடமோ பதில் இல்லை.இவை குறித்து நீங்கள் தேட வேண்டும் என்றால் மெய்யியல் வழி சில திறப்புகளை அளிக்கலாம்.நான் அதனுள் செல்ல விரும்பவில்லை.

மரபணு சார்ந்து உருவாகி வரும் குணங்கள் பற்றிச் சொல்லும் போது நீயூரோ பிளாஸ்டிசிட்டி போன்றவற்றால் இவற்றை மாற்ற முடியும் என்று நாவலில் ஜெரி சொல்கிறான்.அவை எனக்குப் பிடித்திருந்தன.ஜெரி நச்சுயியல் ஆராய்ச்சி பற்றிச் சொல்லும் இடங்கள் முக்கியமானவை. பொதுவாக தமிழ் நாவல்களில் பணியும் பணி சார்ந்த விஷயங்களும் அதிகம் பேசுப்படுவதில்லை.அவன் தன் வேலை, அங்கே மிருகங்களை ஆராய்ச்சிக்கு பயன்படுத்துதல், அது ஏற்படுத்தும் அறக்குழப்பங்கள் , தன் டாக்டரேட் படிப்புக்காக கடல் கிராமங்களில் தொழிற்சாலைகளால் ஏற்படும் புளோரைட் பாதிப்புகள் பற்றிய ஆய்வுகளை விரிவாக பதிவு செய்திருக்கும் விதம் ஆகியவை முக்கியமானவை.இந்த நாவலின் முக்கிய வெற்றி இதில் பாவனைகள் இல்லை என்பது தான்.ஜெரி தன்னைப் பற்றிய ஒரு பிம்பத்தை  நிலைநிறுத்த போராடவில்லை.அவன் தன்னை பதிவு செய்தபடியே இருக்கிறான்.

மனிதன் வீட்டில் பிறந்து வீட்டில் மடிவதில்லை.அவன் புறத்தே செல்கிறான்.வேலை செய்கிறான்.அங்கே அவனுக்கு விழுமியங்கள் சார்ந்த கேள்விகள் எழும்.நண்பர்கள் அமைவார்கள்.காதல் கைகூடும்.ஒரு மனிதனின் பெரும்பகுதி வாழ்க்கை தொழில் அல்லது பணியால் முடிவு செய்யப்படுகிறது. அதைக் குறித்து பேச நாம் ஏனோ தயங்குகிறோம். இந்த நாவல் அந்த வகையிலும் நல்ல முயற்சி.

வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம் - வி.அமலன் ஸ்டான்லி - தமிழினி