போர் நிறுத்தம்

 

கரமசோவ் சகோதரர்கள் நாவலில் இவான் அல்யோஷாவிடம் நாளையின் பொற்காலத்தை முன்னிட்டு இன்று குழந்தைகள் துயரத்துக்கு உள்ளாக்கப்படலாம் என்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள இயலாது என்பான். புரட்சிகள், வருங்காலத்தின் வசந்தங்களுக்காக இன்று குழுந்தைகள் துயரத்துக்கு உள்ளாக்கப்படுவதை எதிர்க்கிறான் இவான்.

பாலஸ்தீனத்தில் பிறந்த குழந்தைகள் கொல்லப்படுகின்றனர்.வீடுகளை இழந்து தாய் தந்தையரை இழந்து அனாதைகளாகின்றனர்.மிகப்பெரிய வன்முறைக்கான சாட்சியாக இருக்கின்றார்கள்.உயிர் பிழைத்தவர்களில் பலர் உடல் உறுப்புகளை நிரந்தரமாக இழந்து நிற்கின்றனர்.இந்தக் குழந்தைகள் என்ன பிழை செய்தனர். நாளை இஸ்ரேல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தக் குழந்தைகளை கொல்வதை எதன் அடிப்படையிலும் ஏற்க இயலாது.

ஐநா சபையின் பொதுச் செயலாளர் அந்தோணி குத்தேரஸ் ஹமாஸ் நிகழ்த்திய தாக்குதல் வெற்றிடத்தில் நிகழவில்லை என்று சொன்னார்.அவர் அதைச் சொன்னதற்காக கண்டிக்கப்பட்டார்.இஸ்ரேல் அவர் பணியிலிருந்து நீங்க வேண்டும் என்று கூறியது.

இந்தப் போர் நிறுத்தப்பட்டு பாலஸ்தீன மக்களுக்கு அவர்களின் நிலமும் உரிமையும் திரும்ப அளிக்கப்பட வேண்டும்.இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு எட்டப்பட வேண்டும்.பாலஸ்தீனத்தின் மேற்கு கரைப் பகுதிகளில் தங்கியிருக்கும் இஸ்ரேலியர்கள் தங்கள் இடங்களை பாலஸ்தீனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.பாலஸ்தீனத்தின் குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் வாழ்வதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும். பாலஸ்தீனம் இஸ்ரேலின் எந்த தலையிடும் இல்லாத முழுமையான தனி நாடாக அனைத்து உரிமைகளும் கொண்ட தனி நாடாக முகிழ வேண்டும். இவை நிகழ வேண்டும்.

இன்று உலகம் இந்த குரூரத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது.இந்தக் குழந்தைகள் நாளை வளர்ந்து நீங்கள் எல்லோரும் என்ன பிடுங்கிக்கொண்டிருந்தீர்களா என்று கேட்பார்கள்.உங்கள் கைகளில் எங்களின் ரத்தக்கறை படிந்திருக்கிறது என்று கத்துவார்கள்.

அவர்களின் துயரத்தில் அனைவருக்கும் பங்குண்டு. கூட்டுப் பாவம்.நாம் நாகரீகம் அடைந்து விட்டோம் என்றெல்லாம் பலர் பேசும் போது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.நாம் நாகரீக குகைவாசிகள் என்கிறார் ஆத்மாநாம்.ஆத்மாநாம் சொல்கிறார் "நம் சகோதரன் பைத்தியமாக்கப்படுகிறான், நம் சகோதரி நடுத்தெருவில் கற்பிழக்கிறாள், நாம் வேடிக்கை பார்க்காமல் ஏதாவது செய்யலாம், ஆத்திரப்படலாம், கோபப்படலாம், குண்டர்களின் வயிற்றை கிழிக்கலாம்.அல்லது மக்களிடம் விளக்கலாம், அவர்கள் அதை பொருட்படுத்தாமல் கலைவதை பார்த்தபின் அவர்களை வேசியின் மக்களே என்று கூவலாம்.பிச்சைகாரனாய்ப் போய் கத்தலாம்.நம் கத்தல் பெருவெளியைக் கடக்கலாம்.மூக்கணாங்கயிற்றுடன் பிணைத்திருக்கும் கயிற்றை அவிழ்த்து இருப்பிடம் விட்டு நகரலாம்.குறைந்தபட்சம் பேனாவின் முனையின் உரசல் கேட்கும் வகையில் எழுதலாம்."

நாம் என்ன செய்யப் போகிறோம். என்ன செய்ய இயலும்.நாளை மற்றோரு நாளே என்று கடந்து போவோம்.வரும் ஆண்டு பாலிஸ்தீனர்களுக்கு உண்மையான புத்தாண்டாக அமைய வேண்டும்.அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான சாத்தியங்கள் உருவாக வேண்டும்.

தஸ்தாயெவ்ஸ்கியின் ஆக்கங்களில் யூதர்கள் பற்றி எங்கும் நல்ல விதமாக எழுதப்படவில்லை.ஒரு வகை கிண்டல் , கேலி இருக்கும்.ஐரோப்பாவில் பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில் அவர்களுக்கு எதிரான ஒரு மனநிலை இருந்ததை இலக்கியத்தில் அறிய முடிகிறது.அவர்கள் இருபதாம் நூற்றாண்டில் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்தனர்.அந்த துயரத்தை அறிந்தவர்கள் அதே துயரத்தை இன்னொரு இனத்திற்கு அளிக்கின்றனர்.இவை மாற வேண்டும்.

No comments: