காங்கிரஸின் எதிர்காலம்

 

ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. உனா நகரில் அவர் மேற்கொண்ட போராட்டமும் அதன் முறைமையும் தலித் போரட்டங்களில் மிகப் புதிதாகவும் படைப்பூக்கத்துடனும் அமைந்திருந்தது என்று ஆனந்த் டெல்டும்டே சொல்கிறார்.அவர் சென்ற முறை சுயேட்சையாக வெற்றி பெற்றார்.இந்த முறை காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.அவரும் கன்னையா குமாரும் சமீபத்தில் காங்கிரஸில் இணைந்தார்கள்.கன்னையா குமார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தது எனக்கு வருத்தத்தை அளித்தது.ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களை எந்த வகையிலும் புதுப்பித்துக் கொள்ள தயாராக இல்லாத சூழலில் இளைஞர்களுக்கு வேறு வழியும் இல்லை.
 
இன்று ஆம் ஆத்மி கட்சி வளர்ந்து வருவது மத்திய தர வர்க்கத்தினரின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது.வளர்ச்சி, வேலைவாய்ப்பு , ஊழல் அற்ற ஆட்சி என்பதற்கு அப்பால் ஆம் ஆத்மி எதையும் சொல்லவில்லை.மத்திய தர வர்க்கத்தினரும் வேறு எதையும் கோரவில்லை.அவர்களுக்கு என்று சித்தாந்தம் இல்லை.காங்கிரஸ் மற்றொரு ஆம் ஆத்மி கட்சியாக தன்னை காண்பித்துக் கொள்வதால் எந்தப் பயனையும் பெறப் போவதில்லை.ஆம் ஆத்மி எந்தளவு விரைவாக வளர்கிறதோ அதே அளவு விரைவாக சரியவும் கூடும்.மத்திய தர வர்க்கத்தினருக்கு பாரதிய ஜனதா கட்சிக்கும் ஆம் ஆத்மிக்கும் பெரிய வித்யாசம் தெரியவில்லை என்பது தான் உண்மை.லிபரல்களுக்கும் வலதுசாரிகளுக்குமான தூரம் குறைவு தான்.
 
காங்கிரஸ் செய்ய வேண்டியது இஸ்லாமிய நிலையையும் தலித் நிலையையும் ஒன்றிணைத்து அதற்கான கதையாடலை உருவாக்குவது தான்.அப்படி செய்யும் போது மட்டுமே காங்கிரஸ் தனக்கான தனித்த அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும்.அத்தகைய கதையாடல் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.எங்கெல்லாம் தலித் நிலை குறித்து பேசுகிறோமோ அங்கு இஸ்லாமியர்களின் நிலை குறித்தும் பேச வேண்டும்.இரண்டையும் ஒன்றிணைக்க வேண்டும்.இன்று சிறைகளில் இருப்பவர்களில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமானோர் இஸ்லாமியர்களாவகவும் பழங்குடிகளாகவும் தலித்துகளாகவும் இருக்கிறார்கள்.தலித்துகளும் பெரும்பான்மையான இஸ்லாமியர்களும் ஒரே போன்ற வசிப்பிடங்களில் வாழ்கிறார்கள்.இவைகள் குறித்து காங்கிரஸ் பேச வேண்டும்.
 
காங்கிரஸ் போன்ற கட்சிகள் வெறும் வேலைவாய்ப்பு , வளர்ச்சி என்பதை கொண்டு மட்டும் வாக்குகளை பெற முடியாது.அத்தகைய வளர்ச்சியை பாரதிய ஜனதா கட்சியும் ஆம் ஆத்மியும் மேலும் திறன்பட செய்யும் என்று இளைஞர்கள் உட்பட பலரும் நினைக்கிறார்கள்.காங்கிரஸ் தாங்கள் மென்மையான வலதுசாரிகள் அல்ல தாங்கள் பாரதிய ஜனதா கட்சி உருவாக்கி உள்ள மற்றமையை நீர்த்துப் போகச் செய்யக்கூடியவர்கள் என்ற நிலைக்கு தங்களை நகர்த்த வேண்டும்.வளர்ச்சி, வேலைவாய்ப்பு , மதச்சார்பின்மை, விளிம்பு நிலையில் உள்ள இஸ்லாமியர்கள், தலித்துகள் , பழங்குடிகளின் நலன்கள் ,இந்திய அரசியலமைப்பை காப்பது ஆகியவை தான் தங்களின் முக்கியமான கொள்கைகள் என்று சொல்ல வேண்டும்.
 
அப்படி செய்தாலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது.ஆனால் காங்கிரஸ் அதன் வழி முக்கிய தரப்பாக இருக்கும்.தன் அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ளும்.இல்லை என்றால் காங்கிரஸின் அவசியம் என்ன.ஒன்றுமில்லை.அந்த இடத்தை ஆம் ஆத்மி நிரப்பிவிடும்.வெற்றிடத்தை காற்று நிரப்புவது போல.ஆம் ஆத்மியின் வளர்ச்சி பாரதிய ஜனதா கட்சிக்கு அதன் சித்தாந்தத்திற்கு மாற்றே இல்லை என்ற நிலைக்கு இந்தியாவை கொண்டு செல்லும்.இரண்டில் எதை தேர்தெடுத்தாலும் ஒன்று தான் என்ற நிலைக்கு வாக்காளர்களும் செல்வார்கள்.இது ஒரு வகையில் இன்றைய நம் வாழ்க்கையின் உள்ளீடற்ற தன்மையின் வெளிப்பாடு தான்.மற்றமை மீதான அக்கறை அற்ற தன்மையின் புறத்தோற்றம் தான் இந்தக் கட்சிகளின் வெற்றிகள்.ஆனால் அது தனிமனிதர்களின் தோல்வி அல்ல.நகரமயமாக்கலும் , தனியார்மயமாக்கலும் உருவாக்கும் வெற்றிடத்தின் புறத்தோற்றம் இவை.ஆம் ஆத்மியும் பாரதிய ஜனதா கட்சியும் அதனால் பயன் அடையும் இரு முகங்கள்.காங்கிரஸ் தன்னை புதுப்பித்துக் கொண்டு இவர்களுக்கு மாற்றான சக்தியாக தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.அதற்கான கதையாடல்களை கண்டடைய வேண்டும்.இடதுசாரிகளையும் மாநிலக் கட்சிகளையும் ஒன்றிணைத்து தேர்தல்களை சந்திக்க வேண்டும்.அவை நல்ல விளைவுகளை உருவாக்கும்.
 
 

No comments: