மற்றமை - சில குறிப்புகள்

தீபன்  என்கிற பிரஞ்சுப் படம் பார்த்தேன்.2015யில் வெளிவந்த திரைப்படம்.எழுத்தாளர் ஷோபா சக்தி நடித்திருக்கிறார்.கான் தங்கப்பனை விருது பெற்றிருக்கிறது.அகதிகளாக பிரான்ஸூக்கு செல்லும் மூன்று பேர் ஒரு குடும்பமாக மாறும் சித்திரத்தை தீபன் திரைப்படம் அளிக்கிறது. தீபன், யாழினி, இனியாள் ஆகிய மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று போலியான ஆவணங்களைத் தயாரித்து பிரான்ஸ் செல்கிறார்கள். அங்கு தீபனுக்கு ஒரு அடுக்ககத்தின் காப்பாளராக வேலை கிடைக்கிறது.அங்கே நிகழும் பிரச்சனைகளின் ஊடே மெல்ல அந்த மூவருக்கு மத்தியில் உருவாகும் பற்று, நேசம் மிக அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. தீபன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷோபா சக்தி ஒரு வித அயர்ச்சியை படம் முழுக்க உடலில் முகத்தில் கொண்டு வருகிறார். அந்தக் குழந்தை கதாபாத்திரமாக நடித்தவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். மிகத் தேர்ந்த நடிப்பு. அவரின் நடிப்பில் இருக்கும் முதிர்ச்சி ஆச்சரியம் அளித்தது.அந்த மூவரும் பிரிந்து போகாமல் ஒன்றாக இணைந்து குடும்பமாக முகிழ வேண்டும் என்று படம் பார்க்கும் போது மனம் அவாவியது. மனிதன் தன்னை மிகவும் வருத்திக்கொள்வது குடும்பத்தை உருவாக்கத்தான். பின்னர் அந்த குடும்பமே இன்னல்களும் வன்முறையும் நிரம்பியதாக இருக்கலாம். ஆனால் குடும்பம் என்கிற அமைப்பு இன்றும் மனிதனுக்கு மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது. ஷோபா சக்தியின் நடிப்பை பார்த்த போது 96 திரைப்படத்தில் இவர் நடித்திருந்தால் விஜய் சேதுபதியை விட நன்றாக நடித்திருப்பார் என்று தோன்றியது.

*

பி.ஏ.கிருஷ்ணன் தொடர்ந்து திராவிட இயக்கங்களின் பிராமண வெறுப்பை பற்றி எழுதுகிறார். இந்துத்துவ இயக்கங்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் போது திராவிட இயக்கினத்தினரும் இது போல நிறைய செய்திருக்கிறார்கள் என்று எழுதுகிறார். அவர் இந்துத்துவ இயக்கங்களையும் திராவிட இயக்கங்களையும் ஒன்றாக பாவிக்க விரும்புகிறார்.இரண்டிலும் மற்றமை மீது வெறுப்பு கட்டமைக்கப்படுகிறது, இது தவறு , பிழையானது, கண்டித்தால் இரண்டையும் கண்டிக்க வேண்டுமே தவிர ஒன்றை சரியாக்கி மற்றதை பிழையாக கொள்ள இயலாது என்கிறார். அவருடைய ஆவேசம் பல நேரங்களில் இந்துத்துவ இயக்கங்களை விட திராவிட இயக்கங்கள்  மீது தான் உள்ளது. அவர் தன்னை மார்க்ஸியர் என்று சொல்லிக் கொள்கிறார்.மார்க்ஸியமும் ஒரு மற்றமையை உருவாக்கியது. அதன் பொருட்டு கம்யூனிஸக் கட்சிகள் எங்கெல்லாம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதோ அங்கெல்லாம் மிகப்பெரிய அழித்தொழிப்புகள் நிகழ்ந்தன. ஒரு லட்சியவாதத்தின் துணைக்கொண்டு அவை நிகழ்த்தப்பட்டன.ஸ்டாலினை விதந்தோதும் பி.ஏ.கிருஷ்ணனுக்கு சோவியத் ரஷ்யாவில் நிகழ்ந்த மற்றமை உருவாக்கமும் கொலைகளும் பிரச்சனைகளாகத் தெரியவில்லை போலும். 

இங்கே மற்றொரு விஷயத்தை நாம் இணைத்துப் பார்க்க வேண்டும்.வர்க்கத்தையும் அடையாளத்தையும் இணைத்தே  இன்று நாம் மற்றமையை அணுக இயலும். இரண்டில் ஒன்றை விடுத்து ஒன்றை கொண்டால் பிழை தான் நிகழும். இந்துத்துவம் கொள்ளும் மற்றமை அடையாளத்தின் அடிப்படையில் சிறுபான்மையினர். வர்க்க அடிப்படையில் பெரும்பாலான இந்திய முஸ்லிம்களின் பொருளாதார நிலை தலித்துகளின் பொருளாதார நிலையை போலவே உள்ளது என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.எந்த பெருநகரத்தின் சேரிப்பகுதிகளுக்குச் சென்றாலும் அங்கே இஸ்லாமியர்களை பெருமளவில் பார்க்க இயலும்.வர்க்க அடிப்படையில் அவர்கள் ஏழைகள்.தலித் முஸ்லிம் என்ற புத்தகத்தை ஹெச்.ஜி.ரசூல் எழுதியிருக்கிறார்.திராவிடர்களின் மற்றமை பிராமணர்கள். தமிழ் பிராமணர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினர் என்றாலும் அவர்கள் அரசியலில் ,கலையில் அன்று முதன்மையானவர்களாக இருந்தார்கள். பல பிராமணர்கள் நிலச்சுவான்தார்களாக இருந்தார்கள். 

சிறுபான்மை + எளியோர் என்ற இந்துத்தவ மற்றமையும் பெரும்பான்மை + வலியோர் என்ற திராவிட மற்றமையும் நேர் எதிரானவை. இரண்டும் ஒன்றல்ல.ஆனால் திராவிடத்தின் அப்படியான மற்றமை பிழையானதா என்றால் பிழையானது தான். ஆனால் அது அரசியல் அதிகாரத்தை அடைய உருவாக்கப்பட்ட ஒரு கதையாடல்.இன்று திராவிட இயக்கங்கள் எதன் பொருட்டோ உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது. இன்று தமிழகத்தில் இடைநிலை சாதியினர் தான் அரசியலில் , கலைத்துறைகளில்,அதிகாரத்தில் முதன்மையான பங்கை வகிக்கிறார்கள்.இனி அந்த கதையாடல் தேவையற்ற ஒன்று என்று திராவிட இயக்கங்களுக்கே தெரியும். அது பி.ஏ.கிருஷ்ணனுக்கும் தெரியும்.இரண்டையும் இணைத்துப் பேசி இந்துத்துவத்தின் மற்றமைகளோடு திராவிட மற்றமைகளை கலப்பது பிழையானச் செயல்.இந்துத்துவ எதிர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் செயல்.ஒரு மார்க்ஸியர் இப்படிச் செய்ய மாட்டார்.

*

No comments: