தஸ்தாயெவ்ஸ்கியும் காஃப்காவும்


எம்.டி.முத்துக்குமாரசாமி தஸ்தாயெவ்ஸ்கியியையும் காஃப்காவையும் ஒப்பிட்டு , முன்னர் தஸ்தாயெவ்ஸ்கி சிறந்த எழுத்தாளர் என்ற எண்ணம் இருந்தது என்றும் இப்போது அப்படியான எண்ணம் இல்லை என்கிறார்.மேலும் காஃப்காவே சிறந்த எழுத்தாளர் என்கிறார்.என்.டி.ராஜ்குமாரின் கருடக்கொடி தொகுப்பில் உள்ள ஒரு கவிதையில் "ஆளற்ற ஒரு கூட்டம் துரத்திக்கொண்டு வருகிறது" என்ற வரி வரும். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகள் வந்த பின்னர் எல்லோரையும் ஆளற்ற ஒரு கூட்டம் துரத்திக்கொண்டுதான் இருக்கிறது. பெளதீகமான ஸ்திரமான தன்னால் கண்டு உணர முடிந்த ஒரு எதிரி இன்று யாருக்கும் இல்லை.இதை நீங்கள் காஃப்காவை வாசித்து தான் அறிய வேண்டும் என்றில்லை.இன்றைய சூழலில் வேலை அல்லது தொழிலில் இருந்தால் போதும். நிலப்பிரபுத்துவ காலத்தில் காஃப்காவிற்கு வேலை இல்லை.

ஆனால் இவை அமைப்பின் சிக்கல்கள். அதுவும் ஒரு தரப்பு மட்டுமே.ஒரு சின்ன கூறு.அவ்வளவுதான். இவற்றை புரிந்து கொள்ள நமக்கு காஃப்கா தேவை இல்லை. தரவுகள் கொண்ட கட்டுரை இன்னும் நிறைய கற்றுத்தரும். தஸ்தாயெவ்ஸ்கியின் உலகம் அமைப்பின் உலகம் இல்லை.அவரின் உலகம் காலத்தில் நடப்பது அல்ல.வெளியில் நிகழ்வது.ஒரு பிரச்சனையின் போது அந்த பிரச்சனையில் சிக்கிய பத்து பேர் மேடையில் நின்று ஒன்றாக பேசினால் அது தஸ்தாயெவ்ஸ்கியின் உலகம்.அவர் தீர்வுகளை கொடுக்கவில்லை.அந்தப் பிரச்சனையின் பல பரிமாணங்களை பேசுகிறார்.கரமசோவ் சகோதரர்கள் நாவலில் இறுதியாக தீர்வு என்று எதுவும் முன்வைக்கப்படுவதில்லை. அவர் அடிப்படையில் ரஷ்ய மக்களுக்காக எழுதினார்.ரஷ்ய மக்கள் மரபான ரஷ்ய கிறிஸ்துவத்தை ஏற்று புதிய கோட்பாடுகளில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்றார்.சிதைவுண்ட ஒரு ஆளுமை அதிகாரத்தை அவாவுகிறது.பின்னர் அதற்கு ஒரு கருத்தியல் , கோட்பாடு கிடைத்துவிட்டால் அது உலகத்தை அழிக்க இயலும். அவர் மனிதனின் பிறழ்வை பற்றிக் கவலைப்பட்டார்.அமைப்பின் சிக்கலை அல்ல.

மிக தூய்மையான , பிசிறுகள் அற்ற அமைப்பை உருவாக்கினாலும் மனிதன் பிறழ்வான்.அது அவனுள் இருக்கிறது. There is disorder in man. அதனால் அவன் தன் எல்லைகளை அறிந்து தன்னை கட்டுக்குள் வைக்க மரபான ரஷ்ய கிறுத்துவத்தை ஏற்க வேண்டும் என்றார்.சோஷியலிசம், நாத்திகம், மறுப்புவாதம் , விஞ்ஞானம் ஆகியவற்றை அஞ்சினார்.அவை அவனை மேலும் பிறழ்வானவாக மாற்றும் என்றார்.அன்பு வழி என்பதை ஜோசிமா, மிஸ்கின், சோனியா, பதின் நாவலில் அர்காடியின் தந்தையான மகர் இவானோவிச் ஆகியோர் வழி அவர் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்.அந்த அன்பு வழி என்பது மரபான ரஷ்ய கிறுஸ்துவம்.

பீடிக்கப்பட்டவர்கள் என்ற நாவலில் ஒரு சிதைவுற்ற மனிதன் ஒரு புரட்சிக்கான கோட்பாட்டை பற்றிக்கொண்டால் அவன் எத்தகைய பாதிப்புகளை உருவாக்குவான் என்பதை மிகத்தீவிரமாக சொல்கிறார்.பதின் நாவலில் சுய மதிப்பீடு, சுயம் அற்று பிறரது ஆளுமையின் முன் தன்னை ஒன்றுமில்லாதவராக மாற்றிக் கொள்ள முயலும் போது ஏற்படும் குழப்பங்களை சொல்கிறார்.தஸ்தாயெவ்ஸ்கியின் உலகில் அமைப்பின் , இயற்கையின் பகுதி குறைவுதான்.

கோட்பாடுகளை முன்வைத்து அமைப்பை உருவாக்காதீர்கள்.இதை ஏற்றால் மகிழ்ச்சி கிடைக்கும் என்று சொல்லாதீர்கள்.ஏனேனில் மனிதன் மகிழ்ச்சியை முன்னிட்டு மட்டும் செயலாற்றுபவன் அல்ல.அவன் தன் சுதந்திர விருப்புறுதியை முன்னிட்டு செயலாற்றுபவன்.அதுவே அவனுக்கு முக்கியம்.அதன் பொருட்டு சிதைவை கூட ஏற்பான் என்று நிலவறையாளின் குறிப்புகள் நாவலில் நிலவறையாளன் சொல்கிறான்.இதுதான் தஸ்தாயெவ்ஸ்கியின் உலகம்.Existence precedes Essence.அமைப்புகள் மாறிக்கொண்டே இருக்கும்.நிலப்பிரபுத்துவ மனிதனும் , நகரத்து மனிதனும் கொள்ளும் வேறுபாடு கலாச்சார வேறுபாடுகள்.ஆனால் அவனின் ஆதார பிறழ்வு எப்போதும் உள்ளது.தஸ்தாயெவ்ஸ்கி அந்த பிறழ்வை பற்றி மட்டுமே பேசினார்.அது பெரிய அளவில் பாதிக்காமல் இருக்க தேவையான அமைப்பை பற்றி கனவு கண்டார்.காஃப்கா இருக்கும் அமைப்பை பார்த்து வீடியோ கேம்களை உருவாக்கினார்.இன்றைய மனிதன் தன்னை ஒரு பூச்சியாக உணர்கிறான்.இதை உணர ஒருவர் காஃப்காவை படிக்க வேண்டியதில்லை.தன் தினசரி நாளை பார்த்தாலே போதும்.

No comments: