பெளத்தமும் ஸ்பினோஸாவும்


பெளத்தத்தையும் ஸ்பினோஸாவின் தத்துவத்தையும் ஒப்பீடு செய்து ஓ.ரா.ந.கிருஷ்ணன் ஆங்கிலத்தில் எழுதியுள்ள Buddhism and Spinoza புத்தகம் பெளத்த சிந்தனைகளையும் ஸ்பினோஸாவின் சிந்தனைகளையும் பல தளங்களில் ஒன்று போல இருப்பதை  இரண்டையும் ஒப்பிட்டு சொல்கிறது.ஸ்பினோஸாவின் Ethics நூலை முதன்மையானதாக கொண்டுள்ளார் நூலாசிரியர்.முக்கியமாக எப்படி இரண்டு சிந்தனைகளும் தர்க்கத்தை அடிப்படையாக கொண்டு வாழ்வை நோக்கச் சொல்கிறது என்பதை நிறுவுகிறார்.நாம் நமது சுயம் என்று கொள்வது எந்தளவு நமதற்றது என்று இரண்டு சிந்தனை பள்ளிகளும் நிறுவுகிறது என்று சொல்கிறார்.மறுபிறப்பு குறித்து ஸ்பினோஸாவும் பெளத்த சிந்தனைகளும் ஒன்று போல இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.

இருத்தலியத்தின் முதல் விஷயமான சுதந்திர இச்சை (Free will) என்ற ஒன்று உண்மையில் இல்லை.இரண்டு சிந்தனை தளங்களுமே பிரபஞ்ச நியதியை (Universal determinism) ஏற்பவை.மனிதன் எந்த வகையிலும் தனியானவன் அல்ல.அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருக்கிறது.இங்கு ஒரு கல் ஒரிடத்தில் இருப்பதற்கு அது அங்கு இருக்க வேண்டும் என்ற இச்சை அதனுள் இருக்கிறது.அனைத்து உயிரினங்களுக்குள்ளும் தன்னை நிறுவிக் கொள்வதற்கான இச்சை இருக்கிறது.பசி பசி என்று அது ஓலமிடுகிறது.(ஜெயமோகனின் நினைவின் நதியில் வரும் வரி).

இங்கு மனிதன் பல்வேறு எண்ணில் அடங்கா காரண காரியங்களுக்கு ஆட்பட்டு வாழ்கிறான்.இங்கு அனைத்தும் திட்டமிட்ட கணித கோட்பாடுகளாக இயங்குகின்றன.அதனால் தான் ஸ்பினோஸா Ethics நூலை கணித நூல் போல எழுதுகிறார்.ஸ்பினோஸா நமது அறிவை மூன்றாக பிரிக்கிறார்.முதலாவது ஊக அறிவு.இரண்டாவது தர்க்க அறிவு.மூன்றாவது உள்ளுணர்வு.இரண்டாவது அறிவை கொண்டு நாம் புரிந்து கொள்பவை காலப்போக்கில் ஒருவனது உள்ளுணர்வாக மாற வாய்ப்பு உண்டு என்கிறார்.பிரக்ஞைபூர்வமாக வாழ்வை எதிர்கொள்வதன் வழி மனிதன் தன் அகங்காரத்திலிருந்து விலகி நடப்பவற்றை காரண காரிய ரீதியில் புரிந்தும் வாழலாம் என்கிறார்.அவர் நமது இச்சைகளை பல்வேறாக பட்டியல் போட்டு பிரித்திருப்பது பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.இதை பெளத்தத்தோடு ஒப்பிடுகிறார் கிருஷ்ணன்.

இந்த கணித கோட்பாடான பிரபஞ்சமே கடவுள் என்கிறார் ஸ்பினோஸா.அங்கு உணர்வுகளுக்கு இடமில்லை.சொர்க்கம் நரகம் இல்லை.பிரபஞ்ச நியதி படி இயங்கும் உலகில் மனிதன் தன் பிரக்ஞையின் துணைக்கொண்டு தேர்கிறான்.இங்கு உண்மையில் நண்மை தீமை என்று எதுவும் இல்லை.பெளத்தம் முன்வைக்கும் விபஸ்ஸானா தியானம் போலவே இருக்கிறது ஸ்பினோஸாவின் உளச்சிகிச்சை முறைகள் என்கிறார் கிருஷ்ணன்.

மேலும் மஹாயான பெளத்தமும் நாகார்ஜூனரின் சூனியாவாதமும் ஸ்பினோஸாவின் சிந்தனைகளோடு சரியாக பொருந்துகின்றன என்று நிறுவுகிறார்.பொருளும் எண்ணமும் வெவ்வாறானவை என்று இரண்டு சிந்தனைகளும் ஏற்கின்றன.இதன் மூலம் இரண்டு சிந்தனைகளும் எப்படி மறுபிறப்பை முன்வைக்கின்றன என்கிறார்.

ஸ்பினோஸா குறித்து தமிழில் ஏதேனும் புத்தகம் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை.இதை  மொழியாக்கம் செய்தால் நன்றாக இருக்கும்.

Buddhism and Spinoza - O.N.Krishnan - Metta Publications.

No comments: