காப்பி





தமிழகத்தில் தொடர்ந்து தமிழ் தேசியத்தை முன்வைக்கும் பல்வேறு அமைப்புகள் உருவானபடியே இருக்கின்றன.அனைத்து திட்டங்களும் தொழிற்சாலைகளும் ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களும் தமிழகத்திற்கு எதிரான திட்டங்கள்தான் என்று சொல்லப்படுகிறது.
இந்தியா சென்ற ஆண்டு பெற்ற முதலீட்டில் .79% மட்டுமே தமிழகத்திற்கான முதலீடு.இந்நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் படித்து வரும் இளைஞர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்காது.சூழியல் போராட்டங்கள் ஏன் தமிழ் தேசியவாத கோஷங்களை முன்னேடுக்கிறது என்பது முக்கியமானது.நாளை தமிழ் தேசியம் அமையுமெனில் இதே சூழியல் பிரச்சனைகள் அப்போதும் இருக்கும்.தொழிற்சாலைகளுக்கு மண் வேண்டும்.மண் வேண்டுமென்றால் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப் படவேண்டும்.தண்ணீர் வேண்டும்.நிலத்தடி நீர் உறிஞ்சப்படும்.கழிவுகள் காற்றிலும் நீரிலும் கலந்துவிடப்படும்.நீர் மாசடையும்.காற்று மாசடையும்.இவைகளை குறைக்க வாரியங்கள் இருக்கின்றன.வாரியங்கள் திறம்பட செயல்பட்டால் முறையான கழிவு வெளியேற்றத்தை கொண்டு வரமுடியும்.

தொழிற்சாலைகள் வேண்டுமா என்பது வேறு தளத்திலான கேள்வி.நமது பிள்ளைகள் படிக்க வேண்டுமா என்பதும் தொழிற்சாலைகள் வேண்டுமா என்பதும் ஒரே கேள்வி.ராஜாஜி குலக்கல்வியை ஆதரித்தார் என்று அவரை விமர்சிப்பவர்கள் தமிழகத்தில் தொழில்சாலைகள் வருவதையும் விமர்சிக்கிறார்கள்.இரண்டும் முரணானவை இல்லையா.நீங்கள் ராஜாஜியை எதிர்த்தால் தொழிற்சாலைகளை ஆதிரிக்கத்தானே வேண்டும்.நாளை படித்து வரும் இளைஞனுக்கு தொழிற்சாலைதானே வேலை தரும்.தொழிற்சாலைகள் வேண்டாம் என்றால் நாம் ஏன் இத்தனை கல்லூரிகளை தொடங்கிக் கொண்டே இருக்கிறோம்.தந்தை வேலையை மகனும் செய்யாமல் தன் பாதையை தேர்ததெடுக்க கொடுக்கப்படுவது தானே இன்றைய கல்லி.இன்றைய கல்வியின் நோக்கமே வேலையை பெறுவதும் தொழில் தொடங்குவதும் தான்.

இதற்கு மாற்றான சிந்தனையை உருவாக்க வேண்டும் என்றால் காந்தியை நோக்கி நகர வேண்டும்.மார்டின் லூதர் கிங்,நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்கள் அவரை ஏற்றார்கள்.காந்தியை ஏற்றவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.மார்டின் லூதர் கிங்கின் எனக்குண்டு ஒர் கனவு ஒரு நாள் நனவாகும்.அவர் இறந்த இந்த ஐம்பது வருடங்களில் முன்னேற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.ஆனால் தமிழகத்தின் அரசியல் அமைப்புகள்,கட்சிகள் ஈ வே ராமசாமியை தங்களின் தலைவராக அறிவிக்கின்றன.தமிழகத்தி்ன் அறிவுஜீவிகள் பலர் அவரை முக்கியமான சிந்தனையாளராக முன்வைக்கிறார்கள்.பிராமணர்களை தொடர்ந்து வெளிப்படையாக விமர்சித்தவர் ஈவேரா.பிராமணர்கள் எப்போதும் உடல் ரீதி தாக்கப்பட்டதில்லை என்பது ஒர் அதிர்ஷ்டம்.அதற்கு முக்கியமான காரணமாக எனக்கு தோன்றுவது கலைஞர் கருணாநிதி.ஈவேராவை விட அண்ணாதுரையை விட பண்பானவர் , அறிஞர் கலைஞர்.அவர் எப்போதும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதில்லை.திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கூட ஒரே ஒரு பிராமண முதலமைச்சர் தான் இருந்திருக்கிறார்.

அன்று பிராமணர்களிடமிருந்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று திராவிட இயக்கங்கள் முயன்றன.இன்று பிற தென்னிந்திய மொழி பேசுபவர்களை நோக்கி அது நகர்ந்திருக்கிறது.இன்று பிராமணர்கள் அரசியல் அதிகாரத்தில் இல்லை.அதனால் இன்று திராவிடத்திலிருந்து தமிழ் தேசியம் நோக்கி சென்றாகி விட்டது.ஏனேனில் எதிரி இல்லாமல் ஏது தேசியம்.
ஜின்னா என்ற எந்த மக்கள் ஆதரவும் அற்ற ஒரு மனிதர் பிரிவினைவாத்ததை தூண்டி பாகிஸ்தானை உருவாக்கினார்.கல்கத்தாவில் direct action day என்று மிகப்பெரிய கலவரங்கள் அதற்காகவே உருவாக்கபட்டது.ஹேராம் அந்த கட்டத்தை பற்றிய திரைப்படம்தான்.தலைமுறைகளாக மேற்கு பாகிஸ்தானிலும் கிழக்கு பாகிஸ்தானிலும் இருந்த இந்துக்களும் இந்தியாவில் இருந்த இஸ்லாமியரும் செல்வதற்கு இடமற்று புலம் பெயர்ந்தார்கள்.எத்தனை பெரிய துயரம்.

எல்லா பிரிவினை போக்குகளும் வன்முறையை தூண்ட வல்லவை.இன்று தமிழகத்தில் வேலைவாய்ப்பு மிக குறைவாக இருக்கும் சூழலில் வன்முறைகள் எளிதில் பற்றிக்கொள்ளக் கூடியவை.வெற்றிமாறன் போன்று ஓரளவு சிந்திப்பவர் கூட அமீர்,பாரதிராஜா,சீமான் போன்றோருடன் இணைந்திருப்பது ஆச்சிரியம் தான்.மனித மனம் எளிதாக வெறுப்பை உருவாக்கிக் கொள்ளும்.

பாரதிராஜா வேதம் புதிது என்ற திரைப்படம் எடுத்தார்.அந்தப்படத்தில் ஒரு பிராமண பெண்ணுக்கும் தேவர் பையனுக்கும் காதல் மலர்கிறது.ஏன் பாரதிராஜா அதை ஒரு தேவர் பெண்ணுக்கும் தலித் பையனுக்குமான காதலாக வைத்திருக்கலாமே.தேவர் பெண்ணுக்கும் தலித் பையனுக்கும் என்று இல்லாமல் குறைந்தபட்சம் தேவர் பையனுக்கும் தலித் பெண்ணுக்குமான காதலாக அதை உருவாக்கியிருக்கலாமே.பாரதிராஜாவின் சிஷ்யர் பாக்யராஜின் இது நம்ம ஆளு படத்தில் பிராமண பெண்ணுக்கும் தலித் ஆணுக்குமான காதல் கதையை சொல்லியிருப்பார்.ஏன் அதே கதையை கவுண்டர் பெண்ணுக்கும் தலித் ஆணுக்குமான காதலாக முன்வைக்கவில்லை.

இடைநிலை சாதிகளை பற்றிய எந்த சிறு விமர்சனமும் தமிழ் சினிமாவில் வர முடியாது.கமல்ஹாசன் தேவர் மகன் எடுப்பதற்கு பதிலாக தலித் மகன் என்றோ பிராமணன் மகன் என்றோ எடுக்க மாட்டார்.அந்த இரு எல்லைகள் தான் திராவிட இயக்கங்களின் எல்லைகள்.

அசோகமித்திரன் தமிழ்நாட்டில் பிராமணர்கள் யுதர்கள் போல வாழ்ந்தார்கள் என்று சொன்ன நேர்கானல் மிகப் பெரிய சச்சரவை ஏற்படுத்தியது.அவர் அதைப்பற்றி விளக்கமும் கொடுத்தார்.ஆனால் அவர் உளவியல் ரீதியில் பிராமணர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று சொல்ல முற்பட்டதாக அதை எடுத்துக்கொள்ளலாம்.அவருடயை சிறுகதை ஒன்று மஞ்சள் கயிறு என்று நினைக்கிறேன்,அதில் ஒரு ஏழை பிராமணின் சித்திரம் வருகிறது.அவனிடம் கடுமை காட்டப்படும் போது இப்படியான கடுமை இவரை போன்றவர்களிடம் தான் காட்ட முடியும் என்றும் எழுதுகிறார்.இன்று தமிழில் எழுதுபவர்களில் அநேகமாக யாரும் பிராமணர் இல்லை.வழக்கறிஞர்களில் பிராமணர்கள் இல்லை.அரசியல் அதிகாரத்தில் அவர்கள் இல்லை.பி.ஏ.கிருஷ்ணன் தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு பிற தேசங்களுக்கு சென்ற பிராமணர்களின் புள்ளி விபரத்தை முன்வைத்து இந்த புலம் பெயர்தல் மிகப்பெரிய எண்ணிக்கை என்று சொல்லியிருந்தார்.தமிழகத்தில் தமிழ் தேசியவாதம் வளர்ந்தால் பிற தென்னந்திய மொழி பேசுபவர்களுக்கும் அதுவே நடக்கும்.

தமிழகத்தில் நான் தெலுங்கன்.கர்நாடகத்தில் நான் தமிழன்.ஒரு வேளை வெளிநாடு சென்றால் நான் இந்தியன் ஆவேன்.

No comments: