அறிதல்


ஒரு குழந்தை முதல் முறை ஒரு பறவையை பார்ககும் போது அதை பறவை என்று அறிவதில்லை.பின்னர் நாம் அதற்கு அதன் பெயர் பறவை என்று சொல்லித்தருகிறோம்.பறவை என்ற சொல்லும் பறவையும் அந்தக் குழந்தையில் இணைகிறது.ஒரு சொல் ஒன்றை குறிப்பதை arbitrary என்கிறார்கள்.ஒரு சட்டகத்திற்குள் ஒரு சொல் அந்தப் பொருளை அந்த சட்டகத்திற்குள் இருக்கும் பிற சொற்களுடன் இருக்கும் ஒப்புமையில் தான் பெறுகிறது என்கிறார்கள்.அப்படி அந்தச் சொல்லை அறிவது தான் அறிதல் ஆகிறது.சொற்களின் வழி நாம் சிந்திப்பதோ , அறிவதோ இல்லை.சொற்களை மொழியை அறிவதே சிந்தனையாகிறது.

பெயர் தெரியாத பறவையை உண்மையில நாம் அறிவதே இல்லை.ஒரு மரத்தை இது ஆலமரம் என்ற சொல்லின் வழி அறியும் போதுதான் உண்மையில் ஒரு குழந்தை அந்த மரத்தை அறிகிறது.இந்த தர்க்கத்தின் வழி பார்க்கும் போது காட்சி ஊடகத்தால் ஒருவர் தன் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் என்ற தர்க்கம் தகர்கிறது.ஒரு குழந்தைக்கு நூறு முறை பசுமாட்டை காட்டி ஆனால் அதனுடன் மாடு என்றோ அல்லது வேறு ஒரு வார்த்தையையோ இணைக்காவிட்டால் அது அந்த பசுமாட்டை அறியாது.அந்த வகையில் காட்சி ஊடகம் உங்களுக்கு உலகின் அணைத்து விஷயங்களையும் காட்சியாக உங்கள் வரவேற்பறைக்கு கொண்டு வந்து கொடுத்தாலும் அதை நீங்கள் உருளைகிழங்கை உண்டவாறு நாள் முழுக்க பார்த்தாலும் உங்கள் அறிவு நிச்சயம் வளரப்போவதில்லை.

காவல் நிலையம் , பொது மருத்துவமனை ,சிறைச்சாலை,ஐடித்துறை,வட சென்னை,முதலிரவு,அரசாங்கத் துறைகள்,சிலை கடத்தல்,விசாரணைகள்,நீதிமன்றம்,ஆண் பெண் உறவு ,கல்லூரி,அமெரிக்க வாழ்க்கை என்ற பல விஷயங்கள் குறித்து நமக்கு இருக்கும் பிம்பம் சினிமாவால் உருவானது.

எழுத்தாளர் நாகார்ஜூனன் ஒரு கட்டுரையில் தமிழ்நாட்டை சேர்ந்த எல்லோரையும் ஒரு எண்ணால் வகுக்க முடியும் என்றால் அது சினமா என்றார்.எல்லோருக்கும் இருக்கும் சில பிம்பங்களில் சரிபாதி சினிமாவால் உருவானது.ஆனால் அது ஒரு போதும் அறிதல் இல்லை.அறிதல் முழுக்க முழுக்க மொழியால் வருவது.நீங்கள் ஒரு விஷயத்தை மொழி கொண்டு சொல்ல முடிகிற போதே அதை அறிந்தவர் என்று சொல்லமுடியும்.

No comments: