அகப்போராட்டம்





யுத்த காலத்தின் போது ஒருவனுக்கு அறுவைச்சிகிச்சை செய்துக்கொண்டிருக்கும் போது மருத்துவருக்கு கையில் வெட்டுபட்டுவிடுகிறது.அந்த நோயாளியிடமிருந்து மருத்துவருக்கு சிபிலஸ் நோய் தொற்றிக்கொள்கிறது.அந்த மருத்துவர் ஒரு பெண்னை ஆறு வருடங்களுக்கு மேலாக காதலிப்பார்.இருவரும் யுத்தம் முடிந்தப்பின் திருமணம் செய்துக்கொள்ள இருப்பார்கள்.இந்த நிலையில் தனக்கு சிபிலஸ் நோய் வந்துவிட்டதால் அந்த மருத்துவர் அந்தப்பெண்ணிடம் நான் இப்போதைக்கு திருமணம் செய்துக்கொள்ள விரும்பில்லை என்று சொல்லிவிடுவார்.அந்த பெண் எவ்வளவு வற்புறுத்தியும் உண்மையான காரணத்தை சொல்லமாட்டார்.ஏனேனில் தனக்கு சிபிலஸ் நோய் இருக்கிறது என்றும் அதை குணப்படுத்த எப்படியும் மூன்றிலிருந்து ஐந்து வருடங்கள் எடுக்கும் என்று சொன்னால் அந்தப்பெண் நான் அதுவரை காத்திருக்கிறேன் என்று சொல்லிவிடுவார் என்பதை மருத்துவர் அறிந்திருப்பார்.அதனால் உண்மையான காரணத்தை இறுதிவரை அந்தப்பெண்ணிடம் சொல்ல மாட்டார்.அந்த மருத்துவமனையில் அவரது பாதுகாப்பில் இருக்கும் ஒரு பெண் அவருக்கு சிபிலஸ் நோய் இருப்பதை அறிந்துக்கொண்டு அவரை மிகவும் கீழாக எண்ணுவாள்.பின்னர் அவருக்கு அது அறுவைச்சிகிச்சையின் போதான விபத்தால் ஏற்பட்டது என்று அறியும் போதும் அதன் காரணமாகவே அவர் தன் காதலை தியாகம் செய்திருக்கிறார் என்று அறியும் போதும் அந்த பெண்ணுக்கு அவர் மீது மதிப்பும் அன்பும் பெருகும்.

அந்த மருத்துவரின் தந்தையும் மகப்பேறு மருத்துவர்.அவர் முதலில் தன் மகன் இவ்வளவு கீழானவனாக இருக்கிறானே என்று நினைத்து வருந்துவார்.தன் மகனை கடிந்துக்கொள்வார்.பின்னர் உண்மையை அறிந்துக்கொண்ட பின் மன்னிப்பு கேட்பார்.தற்செயலாக தனக்கு இந்த நோயை அளித்தவனை அந்த மருத்துவர் சந்திப்பார்.அவன் சிபிலஸூக்கான எந்த மருத்துவமும் செய்துகொள்ளாமல் இருப்பான்.மேலும் அவன் திருமணம் செய்திருப்பான்.அவனுடைய மனைவி கர்ப்பம் தரித்திருப்பாள்.அந்த நோயாளியிடம் அவனும் அவனுடைய மனைவியும் இதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அந்த மருத்துவர் இறைஞ்சுவார்.மேலும் முறையான சிகிச்சை செய்துக்கொண்டால் பிறக்க போகும் குழந்தையையும் காப்பாற்றலாம் என்பார்.ஆனால் அவன் அதை அலட்சியம் செய்துவிடுவான்.இறுதியில் பிறக்கும் குழந்தை இறந்து பிறக்கும்.கொடூரமாக பிறக்கும் அந்த குழந்தையை பார்க்கும் அதன் தந்தை புத்தி பேதலித்து நிற்பான்.அப்படி ஒரு நிலையில் அந்த குழந்தையை பார்த்ததுதான் அவன் புத்தி பேதலித்து விட்டதற்கு காரணம் என்று மருத்துவர் எண்ணும் போது அவருடைய தந்தை மாறாக சிபிலஸ்  நோயால்தான் அவன் மூளையை பாதித்துவிட்டது என்று சொல்வார்.

மருத்துவரின் காதலி மருத்துவரிடம் எவ்வளவு கெஞ்சியும் அவர் மனதை மாற்றிக்கொள்ளாததால் தன் தந்தை நோய்வாய்பட்டிருக்கும் சூழலில் மாற்று வழியின்றி வேறொருவரை திருமணம் செய்துக்கொள்ள ஒப்புக்கொள்வார்.இறுதியாக மருத்துவரை பார்க்க வரும் அவள் இப்போது கூட அவர் சம்மதம் தெரிவித்தால் எங்காவது ஓடிப்போய்விடலாம் என்பாள்.ஒரு நொடி தடுமாறும் மருத்துவர் பின்னர் சமநிலை அடைந்து அவள் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வாள் என்று சொல்லி விடையளிப்பார்.

அந்த மருத்துவரின் பாதுகாப்பிலிருக்கும் பெண் செவிலியாக தேர்ச்சி பெற்று அந்த மருத்துவமனையிலேயே பணிபுரிவாள்.அவள் உங்களால் உங்களின் உடல் உணர்வுகளை அவ்வளவு எளிதாக கட்டுப்படுத்திக்கொள்ள இயல்கிறதா என்று கேட்பாள்.அப்போது வரை சமநிலையோடு இருக்கும் மருத்துவர் உடைந்து அழுவார்.நான் இதுநாள் வரை என் ஆசைகளை கட்டுப்படுத்தியே வந்திருக்கிறேன்.ஏனேனில் நான் என் காதலியை திருமணம் செய்துக்கொள்ள போகிறேன் என்ற கனவிலிருந்தேன்.ஆனால் இந்த நோய் திடீரென்று வந்துவிட்டது.இப்போது நான் அவளை திருமணம் செய்து கொள்ள இயலாது.இப்போது நான் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொள்வது தவிர வேறு வழியில்லை என்று கதறுவார்.ஆனால் நான் ஏன் இந்த வாழ்க்கையில் இவ்வளவு நேர்மையாக இருந்தேன், நான் என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி என்ன பலனை பெற்றேன் என்று புலம்புவார்.பின்னர் அமைதியோடு , ஆனால் நான் ஒரு மருத்துவன் , நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பார்.அப்போது அந்த பெண் நான் உங்களை திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறேன் என்பாள்.தன் நிலையறிந்து அவர் அதை பொருட்படுத்தாது போல தன் வேலைகளை செய்ய சென்றுவிடுவார்.

அகிரா குரசோவா The Quiet Duel என்ற இந்த திரைப்படத்தில் ஒரு மருத்துவரின் அகப்போராட்டங்களை மிக அற்புதமாக சித்தரித்திருத்திருக்கிறார்.படத்தின் இறுதியில் ஒருவர் அந்த மருத்துவரின் தந்தையிடம் உங்கள் மகன் மருத்துவர்கள் மத்தியல் ஒரு துறவி போல வாழ்கிறார் என்பார்.அதற்கு அந்த தந்தை என் மகன் பெற்ற துன்பமே அவரை அவ்வாறு மாற்றியிருக்கிறது என்பார்.அவன் இந்த துன்பத்தை அனுபவிக்காமல் மகிழ்ச்சியாக இருந்திருந்தால் அவன் உள்ளீடற்ற போலி கெளரவத்தை கொண்டவனாக வாழ்ந்துகொண்டிருப்பான் என்பார்.

அந்த மருத்துவர் துன்பத்தை ஏற்பதன் மூலமே பிறரின் துன்பத்தை புரிந்துக்கொள்கிறார்.அதனாலே அவர் மிகவும் சிறந்த மருத்துவராக மாற்றம் கொள்கிறார்.அவரின் சேவை தூய அன்பின் நிலையை அடைகிறது.அது தன் சேவையின் பலனாக ஒன்றையும் கருதுவதில்லை.மேலும் தன் சேவை எண்ணத்தை எண்ணி அவர் கர்வம் கொள்வதில்லை.துன்பம் அந்த மருத்துவருக்கு மிகப்பெரிய கொடையாக மாறுகிறது.துன்பத்தை ஏற்றுக்கொள்வதற்கு மிகப்பெரிய வலிமை தேவைப்படுகிறது.பெரும்பாலும் துன்பமிகுதியாலேயே நாம் பிறரை துன்பத்திற்கே உள்ளாக்குகிறோம்.துன்பத்தின் போது மனம் ஒருநிலைப்படுகிறது.மனம் ஒரே விஷயத்தில் குவிகிறது.துன்பமற்ற மனம் சிதறுண்டு கிடக்கையில் துன்பப்பட்ட மனம் ஒடுங்குகிறது.ஒடுங்கிய மனம் பிறரின் துன்பத்தில் தன் துன்பத்தை அடையாளம் கண்டுகொள்கிறது.அப்படியாக அந்த மருத்துவர் சிறந்த மருத்துவராக சேவகனாக கர்ம யோகியாக மாறுகிறார்.நாளை அவருக்கு சிபிலஸ் குணமடைந்து திருமணம் செய்துக்கொண்டு இல்லற வாழ்க்கை அமைந்தாலும் இந்த அகப்போராட்டமும் அது அளித்த வலிமையும் அவரை இறுதிவரை பிறரின் துன்பத்தை புரிந்துக்கொள்ளக் கூடியவராக மேண்மையானவராக இருக்கச்செய்யும்.

ஷோபன்ஹர் துன்பமற்ற வாழ்க்கை வெறுமையானது என்கிறார்.அது ஒரு வகையில் உண்மை.துன்பமற்றவனின் மனம் ஒரு போதும் கீழ்மையையும் மேண்மையையும் கண்டுணராது.துன்பப்பட்டவன் தன் மனம் எத்தனை கீழான எண்ணங்களை அடைகிறது என்பதையும் அதே நேரத்தில் தன்னால் எத்தனை மேலான எண்ணங்களையும் அடைய முடிகிறது என்பதையும் புரிந்துக்கொள்கிறான்.ஒரு வகையில் அதன் மூலமாக அவன் மானுடத்தையே புரிந்துக்கொள்கிறான்.துன்பப்படாதவனின் மனம் ஒரு போதும் உக்கிரமான எண்ணங்களால் கொதிப்பதில்லை.துன்பப்பட்டவனின் தலை அவதியால் கிறங்கி அந்த வலி உடல் முழுவதும் பரவி அவன் உருக்குலைகிறான்.தன்னிடம் இவ்வளவு கீழ்மையும் தீமையும் உள்ளதை கண்டுகொள்பவன் பிறரிடத்தில் உள்ள கீழ்மையையும் தீமையையும் பொருட்படுத்த மாட்டான்.அவன் வலியுடன் புன்னகைக்கிறான்.அந்த புன்னகையே மானுடத்தின் மீதான கரிசனமாக விரிவு கொள்கிறது.


1 comment:

shabda said...

அருமை